தி.மு.க.வின் கஜானா என வர்ணிக்கப்படும் முன்னாள் அமைச்சரும் தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி கள், நட்சத்திர ஹோட்டல்கள், மதுபான ஆலைகளின் அலுவலகங்கள், ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர், உறவினர்கள், அலுவலக பணியாளர்களின் வீடுகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டுகள் தி.மு.க. அரசியலில் ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை கண்டித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகிறது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையைக் கண்டு பா.ஜ.க.வுக்கு அச்சம்''’என்கிறார்.
ஆனால், இதற்கெல் லாம் அசராத அசகாய சூரர்களாக இருக்கிறார்கள் வருமானவரித்துறையினர். 5 நாள் ரெய்டுகள் முடிந்த நிலையில், ரெய்டில் சிக்கியவைகள் குறித்து 11-ந்தேதி வரை எந்த ஒரு அறிக்கையையும் வரு மானவரித்துறையோ, ஜெகத்ரட்சகன் தரப்போ கொடுக்கவில்லை. இந்த நிலையில், நேரில் ஆஜராகி விளக்க மளிக்க ஜெகத்ரட்சக னுக்கு சம்மன் அனுப்பப் பட்டிருக்கிறது.
வருமானவரித்துறை தரப்பில் விசாரித்த போது,”"ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிஏய்ப்பு செய்திருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு வந்த புகார் களின் அடிப்படையில்தான் இந்த ரெய்டுகள் நடத்தி னோம். டெல்லியிலிருந்து வருமானவரித்துறை ஆணையர் சுனில் குப்தா சென்னை வந்திருந்தார். அவரது தலைமையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. பணம் எண்ணும் மெஷின்களையும் கையோடு கொண்டு சென்றிருந்தனர். புகார்களில் சொல்லப்பட்டது போல நிறைய ஆவணங்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை.
கணக்கில் காட்டப்படாத 4.5 கோடி அளவுக்கு ரொக்கப்பணம், 2.7 கிலோ தங்கம், பலகோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள், வெளிநாட்டு கரன்சிகளைக் கைப்பற்றியதாகச் சொல்கிறார்கள். ரெய்டில் சிக்கியவைகள் ஆராயப்படும். அதில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் உள்ளே நுழையுமாம். ஏற்கெனவே 2016 மற்றும் 2018களில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாம். தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வின் நிதி ஆதார மையங்களை குறிவைத்து ரெய்டின் எல்லை விரிவடையும்'' என்கின்றனர்.
ஜெகத்ரட்சகனுக்கு எதிரான ரெய்டு இது முதல்முறை அல்ல; ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியின்போது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை யமைச்சராக இருந்தபோது எரிசக்தித் துறையும் இவரிடம் இருந்தது.
அப்போது, இவருக்கு சொந்தமான ஜே.ஆர். பவர் ஜெனரேசன் பிரைவேட் லிமி டெட்டுக்கு 2007-ல் ஒதுக்கப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கம் விவகாரத்தில், ஜே.ஆர். பவர் ஜெனரேசனுக்கு சொந்தமான பங்குகளும், அந்த நிலக்கரி சுரங்கமும் கே.எஸ்.கே.எனர்ஜி வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்துக்கு கைமாற்றப் பட்டன. இந்த விவகாரத்தில் சில சட்டவிரோத பரிவர்த்தனை நடந்திருப்பதாக 2012-லேயே சர்ச்சைகள் இருந்தன.
அதேபோல, இலங்கை ஹம்பாந் தோட்டையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று 3.85 பில்லியன் டாலர் மதிப் பில் துவக்கப்படும் என இலங்கை அரசு 2019-ல் அறிவித்திருந்தது. இந்த பிசினஸில் ஜெகத்ரட்சகன் உறவினர்கள் இயக்குநர்களாக இருக்கும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சில்வர் பார்க் இண்டர்நேசனல் என்ற நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார் பிரதமர் மோடி.
மேற்கண்ட இரண்டு விவகாரங்களை உள்ளடக்கி அமலாக்கத்துறை அதிரடியாக கடந்த 2019-ல் ரெய்டுகளை நடத்தியது. இதனையடுத்து, சட்டவிரோதமாக வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக ஜெகத்துக்கு சொந்தமான 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. அந்த சொத்துக்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அது குறித்த வழக்குகளும் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. சென்னை அடையாறு வீட்டில் சோதனையின் போது ஜெகத்ரட்சகன் அங்கு இருந்தார். அவரிடம் மிக மரியாதையாகவே அதிகாரிகள் நடந்து கொண்டனர். கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் குறித்து சில கேள்விகளை அதிகாரிகள் கேட்ட போது, அதற்கான தெளிவான விளக்கத்தை அவர் சொல்ல, அந்த ஆவணங்கள் அவரிடமே திருப்பித் தரப்பட்டுள்ளன.
ஜெகத்தின் மகள் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின்போது கணக்கில் காட்டப்படாத 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப் பட்டிருக்கிறது. அதுகுறித்து எந்த பதிலையும் வீட்டிலிருந்தவர்கள் சொல்லவில்லை.
மேலும் நாம் விசாரித்தபோது, "செந்தில்பாலாஜிக்கு எதிரான ரெய்டின்போது, சட்டவிரோத பார்கள், மதுபான கொள்முதல் விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கியது. அதனை ஆராய்ந்தபோது, ஜெகத் உள்ளிட்ட தி.மு.க.வுக்கு நெருக்கமான மதுபான ஆலை தொழிலதிபர்களின் வரிஏய்ப்பு விவகாரங்களும் தெரிந்தன. இந்த விவகாரத்தில் வெறும் வரிஏய்ப்பு மட்டும் நடந்திருந்தால் அதற்கேற்ப தண்ட கட்டணம் செலுத்திவிட்டு தப்பித் துக்கொள்ள முடியும். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந் திருப்பது கண்டறியப் பட்டால், அமலாக்கத் துறையும் அடுத்த பாய்ச்சலை நடத்தும். அது ஜீரணிக்க முடியா தவையாக இருக்கும்'' என்கிறார்கள் வருமான வரித்துறை வழக்கறிஞர் களுக்கு நெருக்கமான வர்கள்.
ஜெகத் தரப்பில் விசாரித்தபோது, "சட்ட விரோத பணப் பரிவர்த்தனை எதிலும் அவரோ அவரது குடும்பத்தினரோ ஈடுபடவில்லை. வரிஏய்ப்பும் நடக்கவில்லை. முறையாக வரி செலுத்தி சட்டத்திற்கு உட்பட்டுத் தான் பல தொழில்களை நடத்தி வருகிறது ஜெகத்ரட்சகனின் குடும்பம். வருமான வரித்தாக்கலில் சின்னச் சின்ன மிஸ்டேக்குகள் இருக்கலாம். அதெல்லாம் சரி செய்வதற்கு டிசம்பர் வரை கால அவகாசம் இருக்கிறது. கோடிக்கணக்கில் பிசினஸ் செய்யும் போது சில கணக்குகளில் தவறு நிகழ்வது இயல்பானதுதான். அவை சரிசெய்யப் படக்கூடியவை. தி.மு.க.வை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ரெய்டுகளை நடத்துகின்றனர். இதையெல்லாம் சட்டப்படி எதிர்கொள்வோம்''’என்கின்றனர்.
ஜெகத்ரட்சகனைத் தொடர்ந்து முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் சொத்துக்களையும் முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. ஏற்கெனவே 2022-ல் 55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலங்களை முடக்கியிருந்த நிலையில், தற்போது 100 கோடிக்கும் அதிகமான 15 அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. தி.மு.க.வின் முக்கிய கஜானாக்களை குறிவைத்து களமிறங்கியுள்ள வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினர், அமைச்சர்கள் 4 பேருக்கு ஸ்கெட்ச் போட்டுள்ள னர்.
இவர்கள் மீது ஒரு அட்டாக் நடத்தி முடித்துவிட்டு, டிசம்பர் அல்லது ஜனவரியில் முதல்வர் குடும்பத்தினரின் பங்களாக்குள் நுழையக் காத்திருக்கிறது அமலாக் கத்துறை.
-நமது நிருபர்
படங்கள்: குமரேஷ்
_________
திருத்தம்!
வாச்சாத்தி வழக்கின் சி.பி.ஐ. விசாரணை அதிகாரி ஜெகநாதனின் பேட்டியை கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். அந்த பேட்டி அரசியலிலும், ஆட்சி அதிகாரமட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெகநாதனின் பேட்டியில், அடையாள அணிவகுப்பில் குற்றவாளிகள் 269-பேரையும் பாதிக்கப்பட்ட பெண்கள் அடை யாளம் காட்டியதாக பதிவாகியுள்ளது. இதனை, "குற்றவாளிகள் 269-பேரில் தங்களிடம் பாலியல் வன்புணர்வு செய்த 17 நபர்களை பாதிக்கப்பட்ட 18 பெண்களும் அடையாளம் காட்டினர். அந்த 17 பேரின் ஆண்மைத் தன்மையை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது'' என்று திருத்தி வாசிக்கவும்!
(ஆர்)