2023-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் ஒன்றான மத்தியபிரதேசத்தில் பா.ஜ.க.வின் கவலையை அதிகரிக்கும் நபராக மாறியிருக்கிறார் பிரீத்தம்சிங் லோதி.

பிரீத்தம்சிங் லோதி என்ன எதிர்க்கட்சித் தலைவரா? அவ ருக்கு மாநிலத்தில் அத்தனை பெரிய செல்வாக்கு இருக்கிறதா?

இரண்டுமில்லை. பிரீத்தம் சிங் லோதி பா.ஜ.க.காரர்தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில், பிச்சூர் சட்டமன்றத் தொகுதி யில் வாய்ப்பளிக்கப்பட்டு, 2500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர். பிறகு ஏன் பிரீத்தம் சிங் லோதியை எண்ணி பா.ஜ.க. கவலைப்பட வேண்டும்?

அவந்திபாய் லோதி என்னும் உள்ளூர் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஷிவ்புரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 19-அன்று பள்ளியொன்றில் பேசப்புகுந்த பிரீத்தம்சிங், தன் வரம்பை மீறி பிராமணர்களைக் குறிவைத்து மதத்தின் பேரால் மக்களை ஏமாற்றி துன்புறுத்துவ தாக வெளுத்துவாங்கினார்.

Advertisment

vv

ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில், பிராமணர்களை விமர்சிக்கப் போய் பா.ஜ.க.வுக்கு அவர்களுடைய வாக்கு வங்கி முழுமையாகக் கிடைக்காமல் போன அனுபவம் இருக்கிறது. பிரீத்தம்சிங் பேசிய சூடு ஆறு வதற்குள், பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் பகவானந்த தாஸ், பிரீத்தம்சிங் கருத்தை முழுமை யாக மறுத்ததோடு, பிரீத்தம்சிங் லோதி ஆறு ஆண்டுகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியிலிருந்து நீக்கப் படுவதாக அறிவித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத லோதி அதிர்ந்துபோனார். தன் நலம்விரும்பியும் பா.ஜ.க.வின் பிரபல தலைவருமான உமா பாரதி சிபாரிசுடன், பிராமணர் களின் தலையில் கால்வைத்து மன்னிப்புக் கேட்பதாக எல்லாம் வருத்தம் தெரிவித்தார். எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில்தான் தனது ஆதரவாளர்கள் சகிதம், சம்பல் பகுதியில் மாபெரும் ஊர்வலம் நடத்திக்காட்டியிருக்கிறார் பிரீத்தம்சிங். இந்த ஊர்வலத்தில் 7000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டது பா.ஜ.க.வின் வயிற்றில் புளியைக் கரைத்திருக் கிறது.

இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க.வின் பிராமணத் தலைவர்களான வி.டி.ஷர்மா, நரோத்தம் ஷர்மாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது. இதர பிற்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகையைக் கணக்கெடுக்கவும், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் அழுத்தம் கொடுப்போம் என்றிருக்கும் லோதி, ஆகஸ்ட் 28-ல் பிச்சூரில் மற்றொரு ஊர்வலத்தை நடத்தி னார். இந்த ஊர்வலத்துக்கு முன் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை சந்தித்ததும் பா.ஜ.க.வை அலற வைத்துள்ளது.

2023 தேர்தலுக்குமுன் ஓ.பி.சி. சமூகத்தை ஒருங்கிணைப் பதோடு, தலித்துகளுடனான கூட்டணியையும் பரிசீலிப்பேன் என்கிறார்.

ஓ.பி.சி.யினர் ஒன்றாகக் கைகோர்த்தாலோ, சில தொகுதிகளின் வெற்றிவாய்ப்பை பிரீத்தம்சிங் நாசமாக்கினாலோ பாதகம்தான் என்பதால் பிரீத்தம் சிங்கின் குரலையும் முயற்சியை யும் எப்படி மௌனமாக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறது மத்தியப்பிரதேச பா.ஜ.க.

Advertisment