பார்வை இல்லாதபோதும் தீவிர முயற்சியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மதுரை மணி நகரைச் சேர்ந்த செல்வி பூரணசுந்தரி, இப்போது திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணனின் உதவியால், ஒலி வடிவில் உலகை ரசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

poornasundari

அவரை நாம் சந்தித்தபோது... உற்சாகமும் நெகிழ்வுமாகப் பேச ஆரம்பித்த அவர், ’""எனக்கு 7 வயது இருக்கும் போது கண்பார்வை கொஞ்ச கொஞ்சமாக போக ஆரம்பித்தது. என்னை விட எனது அம்மா தான், ரொம்ப மனம் வெதும்பி ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்துச் சென்றார். எங்கள் சக்திக்கு நாங்கள் பார்க்காத மருத்துவர் இல்லை. வேண்டாத கோயில் இல்லை. வறுமையோடு போராடி, ஆங்கிலம் இளங்கலை முடித்தேன். பின்னர் வங்கித் தேர்வில் வெற்றிபெற்று, பணிக்குச் செல்லத்தொடங்கினேன்.

என் அனுபவத்தில், எங்களைப் போன்ற ஏழை எளிய மக்கள் இங்கே ரேஷன் பொருளை வாங்கக்கூட போராடுகிற நிலை இருப்பதை எண்ணிக் கலங்கியிருக்கிறேன். அதனால் அம்மாவிடம் தயங்கித் தயங்கி நான் எப்படியாவது கலெக்டர் ஆகவேண்டும் என்றேன். முதலில் திகைத்தாலும், அம்மாவும் அப்பாவும் என் தோளோடு தோள் நின்றார்கள். இப்போது என் ஐ.ஏ.எஸ். லட்சியம் நிறை வேறியிருக்கிறது. இந்த நிலையில்தான் டாக்டர் சரவணன் அவர்கள், பேருள்ளம் கொண்டு, ஆர்கேம் என்ற டிவைஸ் மூலம், எனக்கு பெரும் நம்பிக் கையை ஏற்படுத்தியிருக்கிறார்'' என்றார் தெளிவாக.

Advertisment

இதுகுறித்து எம்.எல்.ஏ.வான டாக்டர் சரவணனிடம் ‘நாம் கேட்ட போது... ""பார்வையற்ற மாற்றுத்திறனாளியான நம்ம ஊர் பொண்ணு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்று கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்த இலக்கை அடைய எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று நினைத்த போது, எனக்கு தூக்கமே வரவில்லை. அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி, கூகுளில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏதாவது டிவைஸ் இருக்கிறதா என்று தேடினேன். அப்போது தான் இந்த கண்ணாடியுடன் கூடிய டிவைஸ் இருப்பதை அறிந்தேன்.

உடனே களமிறங்கி 3 லட்சம் மதிப்பிலான ஆர்கேம் கண்ணாடியினை என் சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் அவருக்கு வாங்கிக்கொடுத்தேன். எதிரே உள்ளவர்களை அதுவே ஸ்கேன் செய்து கொண்டு, அவர்களின் பெயரைச் சொல்லும் கருவி அது. அதேபோல் புத்தகம் மற்றும் கோப்பு களை வாசிக்கும் திறன் கொண்டது. இதை எனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் வழங்க முடிவு செய்தேன். மேலும் அவருக்கு அதிநவீன ஆர்பிட் ரீடரையும், பிரைலின் கருவியினையும் வழங்க இருக்கிறேன்'' என்றார் உற்சாகமாக.

ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ்.களை அரசியல் சக்திகள் திசை திருப்புகிற காலத்தில், தமிழகத்தின் சாதனை ஐ.ஏ.எஸ்.ஸூக்கு ஓர் அரசியல் வாதி மனமுவந்து உதவி செய்திருப்பது, இந்த பூமியில் இன்னமும் மனிதத் தன்மை ஈரம் காயாமல் இருப்பதைக் காட்டுகிறது.

Advertisment

-அண்ணல்