திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ்-மல்லிகா தம்பதிக்கு ஸ்ரீபதி, சரண்யா, ஜெயசூர்யா ஆகிய மூன்று பிள்ளைகள். ஜவ்வாதுமலை அடி வாரத்தில் செங்கத்துக்கு அருகே குப்பநத்தம் அணை 1990களில் உருவானபோது நீர்ப் பிடிப்புப் பகுதியென பலரின் விவசாய நிலங் களை அரசு கையகப்படுத் தியது. இதனால், விவசாயக் கூலி வேலை செய்துவந்த காளிதாஸ், மனைவியின் பிறந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந் தார். ஏலகிரியில் ஒரு ஹோட் டலில் வேலைக்கு சேர்ந்த காளிதாஸ், தங்கும் விடுதி அறையைச் சுத்தம் செய்பவராக இருக்கிறார். அவரின் மனைவி யும் அங்கேயே சின்னச்சின்ன வேலைகளைச் செய்துவருகிறார். நாம் படிக்காததால்தான் கூலி வேலை செய்கிறோம், நம்முடைய பிள்ளைகளையாவது நன்றாக படிக்கவைக்கவேண்டும் என முடிவு செய்து, ஏலகிரி மலையில் பிரபல மாகவுள்ள டான்போஸ்கோ (செயின்ட் சார்லஸ்) பள்ளியில் சேர்த்து படிக்கவைத் தனர். அப்படிப் படித்த ஸ்ரீபதி, அதன் பின்னர் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.ஏ.பி.எல் முடித்தார். இவர்களது இரண்டாவது மகள் அக்ரி படித்துவருகிறார். மகன் பி.காம் படித்துவருகிறார்.

sr

மூத்த மகள் ஸ்ரீபதி சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே புலியூர் கிராமத்தை சேர்ந்த, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கட் ராமனுக்கு திருமணம் செய்துவைத்த னர். கல்வி மீதான ஆர்வத்தில், திருமணத்துக்குப் பின் மனைவியை கல்லூரிக்கு அனுப்பிப் படிக்கவைத் தார். ஸ்ரீபதி, பி.எல். தேர்ச்சி பெற்ற தும், கடந்த 6 மாதங்களாக செங்கத் தில் உள்ள பிரபல வழக்கறிஞர் மோகன்ராஜ், சதாசிவம் அலுவலகத் தில் ஜூனியராக சேர்ந்து பிராக்டிஸ் செய்யத் துவங்கினார். சென்னை மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு படித்துவந்தார்.

செங்கம் பகுதி வழக்கறிஞர்கள் சிலர் நம்மிடம், "தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 245 சிவில் நீதிபதி இடங்கள் காலியாக இருந் தன. இதற்கான முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெற்று முடிந்தது. பிரதான தேர்வு 2023, நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்வில், குழந்தை பிறந்த மூன்றாவது நாள் ஸ்ரீபதி கலந்துகொண்டு தேர்வெழுதி யுள்ளார். அந்தத் தேர்வுக்கான ரிசல்ட், 2024, ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஜனவரி மாத இறுதியில் நேர்முகத்தேர்வு நடை பெற்றது. இந்நிலையில், எங்கள் விடைத்தாள்கள் முறையாக திருத்தப் படவில்லை. சீருடைப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் ரிசல்ட் வந்தபின் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் கேட்டால் தருவதுப்போல் எங்களுக் கும் தரவேண்டும். அதுவரை நேர்முகத்தேர்வு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வர்கள் சிலர் வழக்குத் தொடுத்தனர். அதற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுத்றுவிட்டது. விளக்கமளிக்க வேண்டுமென டி.என்.பி.எஸ்.சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. நேர்முகத் தேர்வு நடத்தி முடித்து வெற்றி பெற்றவர் களின் ரிசல்ட்டை கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்டது. அதில் பழங்குடியின சாதியிலிருந்து 4 ஆண் வழக்கறிஞர்கள், 2 பெண் வழக்கறிஞர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ரேங்க் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் 23 வயதாகும் ஸ்ரீபதிக்கு நிச்சயம் நீதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது'' என்றனர்.

தமிழ்நாட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன்முதலாக சிவில் நீதிபதியாகவுள்ளதை தமிழ்நாட்டில் பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவிக்க அரசு உயர்அதிகாரிகள், நண்பர்கள், பத்திரிகை, மீடியாக்கள் ஸ்ரீபதியையும், அவரது கணவரையும் தொடர்புகொண்டபோது, அவர்களை லைனில் பிடிக்கவே முடியவில்லை. நாம் ஸ்ரீபதியின் கணவர் வெங்கட்ராம னிடம் பேசியபோது, "இன்னும் சான்றிதழ் வாங்கவில்லை. முறையாக எல்லாம் நடந்தபின் நாங்களே பத்திரிகை, மீடியாக்களை சந்திக்கிறோம், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்'' எனச்சொல்லிவிட்டு லைனை கட் செய்தார்.

இதுகுறித்து அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, "தேர்வு முடிவு மட்டுமே வெளியாகியுள்ளது, இதில் இன்னும் சில படிகள் தாண்டவேண்டியுள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப் பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கவேண்டும் என முதலமைச் சர் ஸ்டாலின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த ஒதுக்கீடு அடிப்படையில் வழக்கறிஞர் ஸ்ரீபதி பணி கேட்டுள்ளார். அதற்கான சான்றிதழ் மற்றும் வேறு சில சான்றிதழ்களையும் தேர்வு வாரியம் கேட்டுள்ளது. இவரைப்போல் 25 பேரிடம் கேட்டுள்ளது. அந்த சான்றிதழ்கள் தரப்பட்டு, அவை பரிசீலனை செய்யப்பட்டு உறுதியான பின்பே நீதிபதிக்கான பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார். அதற்குள் தேர்வில் வெற்றி பெற்றதை யே நீதிபதியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் பரப்பிவிட்டார் கள். இதனால் வெற்றி பெற்றதை கொண்டாடமுடியாத அளவுக்கு பல நெருக்கடிகள் ஸ்ரீபதி குடும்பத்தாருக்கு. அதனால் தான் மீடியாவை சந்திக்காமல் இருக்கிறார்கள்'' என்றார்கள்.

பழங்குடி இனத்தின் பின்னணியிலிருந்து நன்கு படித்து, கடினமான சூழலிலும் தேர்வெழுதி வென்றுள்ள ஸ்ரீபதி, அடுத்தடுத்த படிக்கட்டுகளையும் வெற்றிகரமாகக் கடந்து நீதிபதியாக வாழ்த்துகள்!

-கிங்