நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு மாண வர்களைச் சேர்த்ததாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டதோடு, முறை கேடாக சேர்ந்த 37 மாணவர்களும் நீக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நாகையில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப் பட்டது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத பகுதியில் இந்த பல்கலைக்கழகம் துவங்குவதாக அப்போதே சலசலப்பு ஏற்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின்கீழ் நாகப்பட்டினம் அருகேயுள்ள தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு இடங்களில் உறுப்புக் கல்லூரிகளும் தொடங்கப் பட்டு செயல்பட்டுவருகிறது.
இந்த உறுப்புக்கல்லூரிகளில் மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் 120 இடங்கள், மீன்வளப் பொறியியல் பாடப்பிரிவில் 30 இடங்கள், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பாடப்பிரிவில் 20 இடங்கள், மீன்வள உயிர் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் தொழில்நுட்பத்தில் தலா 40 இடங்கள் என 250 இடங்களுக்கு மாணவர் கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக் காக மீன்வளஅறிவியல் பாடப்பிரிவில் 24 இடங் கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பல்கலைக் கழக பாடப்பிரிவில் சேர ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்பிறகு கட் ஆப் மார்க் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் வேதாரண்யம் அடுத்துள்ள தலை ஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 2022- 23 ஆம் ஆண்டு சேர்க்கையில் இளநிலை மீன்வள பட்டப் படிப்புக்கு பொதுப் பிரிவினருக்கு கட் ஆப் மார்க் 190, மற்ற பிரிவினருக்கு 157 ஆக நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் 127 மதிப்பெண்களுக் கும் குறைவாகப் பெற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த 37 மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பல்கலைக் கழகத்தில் சேர்த்திருப்பதும், இந்த முறைகேடு பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜவகர், தட்டச்சர் இம்மானுவேல் ஆகி யோரின் நேரடித் தொடர்பில் நடந்திருப்பதையும் கண்டுபிடித்து, இருவரையும் தற்காலிக பணியிட நீக்கம் செய்ததோடு, முறை கேடாகக் கல்லூரியில் சேர்ந்த 37 மாணவர் களும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பல் கலைக்கழக பேராசிரியர் வட்டாரத்தில் விசாரித்தோம், “இந்த முறைகேடு இப்போது புதிதாக நடக்கவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே குறைந்த கட் ஆப் மார்க் பெற்ற மாணவர்களிடம் ரூபாய் பெற்றுக்கொண்டு, கல்லூரியில் முறைகேடாகச் சேர்த்திருப்பதாக அரசுக்கு புகார் சென்றிருக்கிறது. மீன்வளப் பல்கலைக் கழகத்தை பெருமுயற்சியில் தனது தொகுதிக்கு கொண்டுவந்தார் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால். அரசியலில் அவருக்கு நேர் எதிராக இருப்பவரான முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், நாகை மா.செ.வுமான ஓ.எஸ். மணியன், தான் அமைச்சரானதும் உறுப்புக் கல்லூரியை தனது சொந்த ஊரான தலைஞாயிறுக்கு கொண்டுசென்றார். முறைகேடு நடந்துள்ளதும் தலைஞாயிறு உறுப்புக் கல்லூரியில்தான். ஆக 2019-ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கையில் அரசியல் தலை யீட்டோடு முறைகேடு நடந்துள்ளது. இதில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே சிக்கியுள்ளனர். மீதமுள்ள அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் தப்பியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் எஸ். பழனிசாமி தலைமையில் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத் துள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையில் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள மற்ற உறுப்புக் கல்லூரிகளி லும் இதுபோன்ற முறைகேடுகள் நடந் திருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது” என்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் கூறுகையில், “"இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர் களிடம் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பணம் பெற்றுக்கொண்டு சேர்க்கை நடந்திருப்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி தலைமையில் பல்கலைக்கழகத்தில் குழு அமைத்து விசாரணை செய்துவருகிறோம். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இரண்டு பேர் தவிர மற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. கையூட்டல் எவ்வாறு, யார் மூலம் பெற்றார்கள் என்பது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் அதனடிப்படையில் அவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும்'' என்கிறார்.
நீக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் விசாரணைக் குழு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், குறைவான மதிப்பெண் பெற்ற நீங்கள் எப்படி பட்டப் படிப்பில் சேர்ந்தீர்கள், கலந்தாய்வில் பங்கேற்றீர்களா? கலந்தாய்வுக்காக கட்டணத்தைச் செலுத்தினீர்களா, அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா, சேர்க்கைக் கான அதிகாரப்பூர்வ உத்தரவை பல்கலைக்கழக இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்தீர்களா? கலந்தாய்வின்போது கையெழுத்துப் போட்டீர் களா, உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீக்கப்பட்ட மாணவர் களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என் கிறார்கள் விசாரணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.