தமிழ்நாடு பொதுத்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. க்ரூப்-1 தேர்வில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியது "நக்கீரன்'. அதேபோல், தமிழ்நாடு அரசின் ‘ஆவின்’ நிர்வாகம் நடத்திய தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது நக்கீரனுக்கு புகாராக வர, விசாரணையில் இறங்கினோம்.…
முறைகேடு-1
காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஒன்றிய ‘ஆவின்’ நிறுவன எஸ்.எஃப்.ஏ. (Senior Factory Assistant) பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2018 மார்ச்-25 ந்தேதி நடந்தது. 19 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வில் சுமார் 650 பேர் தேர்வு எழுதினர். ஆனால், செல்போன் பயன்படுத்தி தேர்வு எழுதியதாக சர்ச்சையாகி… மே, 3-ந்தேதி மறுதேர்வு நடந்தது. இந்தத் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. காரணம், செல்போன் பயன்படுத்தி தேர்வு எழுதியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே தேர்வர்கள் தேர்வு எழுதியிருப்பது மட்டுமல்ல,… ஹால் சூப்பர்வைஸராக வந்த டாக்டர் உமாசங்கர்(மேலாளர் திட்டம் மற்றும் விற்பனைப்பிரிவு-பொறுப்பு), திருநாவுக்கரசு என்கிற தேர்வருக்கு விடைகளை சொல்லிக்கொடுத்து உதவியதோடு ஒயிட்னரும் கொடுத்து தவறான விடைகளை அழித்துவிட்டு சரியான விடைகளை அவருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதுவும், தனக்கு தெரியாத பதில்களைக்கூட பக்கத்தில் தேர்வு எழுதுபவர்களிடம் கேட்டு சொல்லிக்கொடுத்திருக்கிறார் டாக்டர் உமாசங்கர்.
இதைவிடக் கொடுமை, எஸ்.எஃப்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில் என்பவருக்கு தமிழே எழுதத்தெரியாது. கே.வி. சி.ஆர்.பி.எஃப் பள்ளியில் படித்ததால் இங்கிலீஷும் ஹிந்தியும்தான் தெரியும். ஆனால், எஸ்.எஃப்.ஏ. தேர்வில் கேட்கப்பட்ட 85 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு தமிழில்தான் விடையளிக்க முடியும். அப்படியிருக்க, செந்தில் எப்படி தேர்ச்சிபெற முடியும்? "விடை தெரியாத கேள்விகளுக்கு டிக்’ பண்ணாம விட்டுடுங்க. நீங்க எக்ஸாம் எழுதின பேனாவை எங்ககிட்ட கொடுத்துடுங்க. நாங்க பார்த்துக்கிறோம்' என்றும் டாக்டர் உமாசங்கர் சொல்லியிருக்கிறார்.
முறைகேடு-2
ஈரோடு கூட்டுறவு பட்டயப்பயிற்சி நிறுவனத்திலிருந்துதான் மூன்றுவிதமான கேள்வித்தாள்கள் தயாரித்து அனுப்பப்பட்டன. யார் யாருக்கெல்லாம் போஸ்டிங் கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதோ அவர்களுக்கு முன்கூட்டியே விடைகளை லீக்-அவுட்’ செய்ய காஞ்சிபுரம், திருவள்ளூர் ஒன்றிய மேலாளர்(நிர்வாகம்) செல்வராஜ் ஈரோட்டிற்கே இரண்டுமுறை நேரில் சென்று வினாத்தாள்களின் நகல்களை வாங்கிவந்துள்ளார். மொத்தம், 19 போஸ்டிங். ஒவ்வொரு போஸ்டிங்கிற்கும் தலா 5 லட்சத்திலிருந்து 7 லட்சம் ரூபாய்வரை லஞ்ச பேரம் நடந்திருக்கிறது. கடந்த 8-ந்தேதி நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. ஆனால், தேர்வுக்கு முன்பே 19 போஸ்டிங்கை முடிவு செய்துவிட்டு தற்போது அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரும் ரெடியாகிவிட்டது. தேர்வில் முறைகேடு நடப்பதாக சர்ச்சை எழும்பியதால் தேர்வுப்பட்டியல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படாமல் உள்ளது.
முறைகேடு-3
ஆவின் எஸ்.எஃப்.ஏ. தேர்வில் இதுபோன்ற முறைகேடு நடந்திருப்பதாக கால்நடை மற்றும் பால்வளத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் கோபால் ஐ.ஏ.எஸ்., ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்த சென்னை- அம்பத்தூரைச் சேர்ந்த பத்மஜா நம்மிடம், ""வேலை தேடிக்கிட்டிருந்தேன். என், ஃப்ரண்டோட தம்பி தனாங்கிறவர், "ஆவின்ல வேலை இருக்கு. சேர்மன் சந்திரன் மூலமா அப்பாயின்ட்மெண்ட் போடுறவனே என் ஃப்ரண்டு கணேஷ்தான். ஆனா, அரசு வேலைங்கிறதால பணம் செலவாகும்'னு சொன்னார். பணம் கொடுத்து வேலைக்கு சேர்றதான்னு தயக்கமா இருந்தது. ஆனா, தனா மூலமா கணேஷ் எனக்கு போன் பண்ணி, "நான் முடிச்சுத்தர்றேன்,… பணத்தை ஏற்பாடு பண்ணுங்க'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். குடும்பச்சூழ்நிலையின் காரணமா, எஸ்.எஃப்.ஏ. வேலைக்காக வட்டிக்கு கடன் வாங்கி மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை கணேஷ்கிட்ட கொடுத்தேன். அதற்கான, எழுத்து தேர்வையும் நல்லாவே எழுதினேன். ஆனா, வேலை கிடைக்கல. என் மதிப்பெண் எவ்வளவுன்னுகூட சொல்லமாட்டேங்குறாங்க. சேர்மன் சந்திரன் சார்கிட்ட கேட்டா, "அவன் உங்ககிட்ட பணம் வாங்கினதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லன்னு சொல்றார். அதெப்படிங்க, 24 மணிநேரமும் அவர் கூடவே சுத்திக்கிட்டிருக்கிற கணேஷு… பணம் வாங்கினதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லமுடியும்?'' என்றவர், கணேஷிடம் பணம் கொடுத்ததற்கான ஆடியோ ஆதாரத்தையும் நம்மிடம் கொடுத்தார்.
அந்த ஆடியோவில்...…
பத்மஜாவிடம் பேசும் சேர்மன் சந்திரனின் உதவியாளர் கணேஷோ, "எனக்கு எட்டு வருஷமாக சேர்மனை தெரியும். அவர், சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா? "அவங்களோடது என் பொறுப்பு'. நான் பண்ணித் தர்றேன். அவ்ளோதான், நான் பார்த்துக்கிறேன்'னு சொல்லிட்டாரு'' என்கிறார். ஆனால், பணம் வாங்கிய கணேஷிடம் நாம் கேட்டபோது, ""சேர்மனுக்கும் நான் பணம் வாங்கினதுக்கும் சம்பந்தமில்ல. பணத்தை பத்மஜாவிடம் திருப்பிக்கொடுத்துடுறேன்'' என்கிறார் சேர்மனை காப்பாற்றும் முயற்சியில்.
முறைகேடு-4
520 ரூபாய் சம்பளம் கொடுக்கவேண்டிய காண்டிராக்ட் லேபர்களுக்கு தினக்கூலியாக வெறும் 220 ரூபாய் கொடுத்து மீதமுள்ள தொகையை நிர்வாகத்தினரே பங்கிட்டுக்கொள்ளும் மோசடியும் நடந்திருக்கிறது. மேலும், எஸ்.எஃப்.ஏ. போஸ்டிங்கில் மட்டுமல்ல, 60 மதிப்பெண் எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஈக்காடு பகுதியைச்சேர்ந்த அனிதாவுக்கு வேலையை கொடுக்காமல் 55 மதிப்பெண்கள் எடுத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சண்முகத்தின் மகன் கௌதமிற்கு நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண் கொடுத்து இதே பாணியில் 40,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் ஆவின் மார்க்கெட்டிங் மேனேஜர் போஸ்டிங்கை நிரப்பியிருக்கிறார்கள். டிரைவர் வேலைக்கான தேர்வு இனிமேல்தான் நடக்க இருக்கிறது. ஆனால், சேர்மன் சந்திரனுக்கு வேண்டப்பட்ட பொன்பாடி கிராமத்தைச்சேர்ந்த நவீன் குமார், சேர்மனின் பக்கத்து ஊரைச்சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரிடம் தலா 5 லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு அந்த போஸ்டிங்கையே முடிவு செய்துவிட்டார்கள். வெட்னரி மேனேஜர், ஜூனியர் அசிஸ்டெண்ட், எக்ஸிக்யூட்டிவ் ஆபீஸர் போஸ்டிங்குகளிலும் இதே லஞ்ச ஊழல் முறைகேடுகள்தான். எல்லாவற்றையும் முடிவு செய்தது; செய்வது காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஒன்றிய ஜி.எம். ராமநாதன், மேலாளர் செல்வராஜ், நிர்வாகக்குழு சேர்மன் வேளஞ்சேரி த. சந்திரன் ஆகியோர்தான் என்று பகீரூட்டுகிறார்கள்.
""முதலில் நடந்த தேர்வில் 71 மதிப்பெண் எடுத்த திருநாவுக்கரசுக்கு மறு தேர்வில் நான் எப்படி ஒயிட்னர் எல்லாம் கொடுத்து உதவி செய்து பதில்களை சொல்லிக்கொடுத்திருக்க முடியும்?'' என்று விளக்கமளிக்கிறார் டாக்டர் உமாசங்கர். குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகக்குழு சேர்மன் வேளஞ்சேரி சந்திரனிடம் கேட்டபோது, “""கணேஷ், பணம் வாங்கியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். ""நான், தற்போது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். நான், வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்துவரவில்லை'' என்று மறுக்கிறார் நிர்வாக மேலாளர் செல்வராஜ். ஜி.எம்.ராமநாதனுக்கு கால் செய்தும் மெசேஜ் அனுப்பியும் தொடர்பில் அவர் வரவில்லை.
ஒட்டுமொத்த புகார்களையும் ஆதாரங்களையும் ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ். கவனத்துக்கு கொண்டு சென்றபோது, ""விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாகவும் நம்பிக்கையாகவும்.
ஓர் ஒன்றியத்திலேயே இவ்வளவு கோல்மால்கள் என்றால் தமிழகத்தின் ஒட்டுமொத்த 17 ஒன்றியங்களிலும் என்னென்ன லஞ்ச ஊழல் முறைகேடுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிற விசாரணை தேவை.
-மனோசௌந்தர்