ஆடுமலையின் தமிழக வரவு பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக ‘புஸ்...ஸ்’ எனப் போயிருக்கிறது. ஆடுமலை முதலில் அரசியலுக்கு வரும்பொழுது அவரை முன்னிறுத்த மத்திய பா.ஜ.க. சுமார் 150 கோடியை செலவு செய்தது. 25 பாராளுமன்றத் தொகுதிகளை ஜெயிப்போம் என ஆடுமலையும் அவரது பரிவாரங்களும் அறுதியிட்டுச் சொன்னார்கள். அவர் நடத்திய ‘"என் மண் என் மக்கள்!'’ யாத்திரைக்கு மட்டும் 50 கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்தது. பாராளுமன்றத் தேர்தல் செலவுகளுக்காக சென்னை சௌகார்பேட்டை தங்க வியாபாரிகள் மூலம் 1000 கோடி அள்ளிக் கொடுத்தது. அந்தத் தங்க வியாபாரிகள் நயினார் நாகேந்திரனுக்கு கொடுத்த நாலுகோடி பணம் நயினாருக்கும், ஆடுமலைக்கும் இடையே நடந்த அதிகாரச் சண்டையில் தமிழக போலீசில் சிக்கியது. ஆடுமலைக்கென மூன்று தனி ‘வார்’ ரூம்கள் ஏற்படுத்தப்பட்டன. அ.தி.மு.க.வுடனான தேர்தல் உறவை முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி இல்லையென அறிவித்து முறித்துக்கொள்ள ஆடுமலை அனுமதிக்கப்பட்டார். ஓ.பி.எஸ்., சசிகலா, வேலுமணி ஆகியோருடன் கூடிக்குலாவி அ.தி.மு.க.வை சின்னாபின்னமாக்க ஆடுமலை தீவிரமாக செயல்பட பா.ஜ.க. மேலிடம் அனுமதித்தது.
ஆனால் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. பூஜ்யம் தொகுதிகளை மட்டுமே பெற்றது அதிர்ச்சியளித்தது. முடிவுகளைப் பார்த்து அதிர்ந்துபோன பா.ஜ.க., ஆடுமலையை லண்டனுக்கு ‘பேக்-அப்’ செய்து தனது அதிருப்தியை வெளிக்காட்டியது. பா.ஜ.க. டெல்லி தலைமை ஹெச்.ராஜாவை வைத்து தமிழகத்தில் உண்மையில் என்ன நடந்தது என ஒரு ‘ஸ்கேன்’ ரிப்போர்ட்டை எடுத்தது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பா.ஜ.க. ஒன்றுமே இல்லை என ஹெச்.ராஜா தேசியத் தலைமைக்கு அறிவித்து விட்டார். ஆடுமலை இதுவரை செய்தது வெறும் ‘மீடியா கிமிக் மேஜிக்’ என தெரிந்து கொண்ட பா.ஜ.க., அ.தி.மு.க.வை தனது வழிக்குக் கொண்டுவர ‘ரெய்டுகளை ஆரம்பித்தது.
எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் குறிவைக்கப்பட்டார்கள். சேலம் இளங்கோவன், வைத்திலிங்கம் எனப் பாய்ந்த ரெய்டுகள் லேட்டஸ்ட்டாக புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் வீட்டுக்குப் பாய்ந்தது. இவர் எடப்பாடி, வேலுமணி ஆகியோருக்கு மட்டுமல்ல ஆடுமலைக்கும் நெருக்கமானவர். ஆனாலும் விடாமல் அமலாக்கத்துறை இவரைக் குறிவைத்தது என்பது, அ.தி.மு.க.வை வழிக்குக் கொண்டுவர ஆடுமலையை மீறி அமித்ஷா மேற்கொண்ட செயல்கள் என தமிழக பா.ஜ.க.வினரால் உணரப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு வந்த ஆடுமலையை வரவேற்க குறைந்தபட்சம் ஆயிரம் பேர் வரவேண்டுமெனத் திட்டமிடப் பட்டது. ஆனால் வந்தது வெறும் ஐம்பது பேர்தான். பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆடுமலை, நடிகர் விஜய்யை விமர்சித்துப் பேசியது வழக்கம்போல ‘லைம்லைட்டில் இருப்பதற்கான பேச்சு. விஜய் விசயத்தில் ஆடுமலை மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
ஆடுமலை ஓபன் செய்த பா.ஜ.க. சேனல்கள் எதையும் விஜய் மதிக்கவில்லை. அவருக்கென பாண்டி முதல்வர் ரெங்கசாமி மூலம் தனி பா.ஜ.க. சேனல்கள் இருப்பதை அறிந்த ஆடுமலை, நடிகர் விஜய்யை வைத்து தமிழகத்தில் ஒரு ரவுண்டு வரலாம் என்கிற அவரது கற்பனை எடுபடாமல் போனதால் நடிகர் விஜய்யை விமர்சித்தார்.
ஆடுமலை லண்டனில் இருந்து தமிழகம் கிளம்பும்போது, “"எடப்பாடியுடன் இனி கூட்டணி இல்லை. கூட்டணித் தலைமை பா.ஜ.க.தான். தேர்தலுக்குப் பிறகுதான் முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்'’என தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியதைக் கேட்ட எடப்பாடி அதிர்ந்து போனார். சேலத்தில் நடந்த அ.தி.மு.க. கலந்தாய்வுக் கூட்டத்தில் மகராஷ்ட்ராவிலும், ஹரியானாவிலும் தோற்கும் நிலையிலிருந்த பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பூத்கள் அளவில் களமிறங்கி பணம் செலவுசெய்து ஜெயிக்கவைத்தார்கள் என ஆர்.எஸ்.எஸ்.ஸை புகழ்ந்து பேசி, பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை எனச் சுட்டிக்காட்டிய எடப்பாடியின் பா.ஜ.க. ஆதரவு நிலையை நிராகரிக்கும் விதமாக, “திராவிடக் கட்சிகளின் ஓட்டுக்கள் தமிழகத்தில் சிதறுண்டு கிடக்கின்றன’என ஆடுமலை பேசியது அ.தி.மு.க. முகாமை மட்டுமல்ல பா.ஜ.க.வையும் டென்சன் ஆக்கியுள்ளது.
மகராஷ்டிர முதல்வர் தேர்வு முடிந்ததும் அகில இந்திய பா.ஜ.க. தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்குள் புதிதாக பா.ஜ.க.வில் சேர்ந்துள்ள உறுப்பினர்களை வைத்து கிளைத் தலைவர்கள் முதல் மாநிலத் தலைவர் வரை தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதைக் காரணம்காட்டி ஆடுமலையை டெல்லியில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் பொறுப்பாளராக அனுப்பிவைக்கும் வேலைகளை அகில இந்திய பா.ஜ.க. தலைமை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் தேர்ந் தெடுக்கப்படும் மாவட்டத் தலைவர்களில் தங்களது ஆதரவாளர்கள் இடம்பெற வேண்டும் என கேசவவிநாயகம் உட்பட தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. ஆடுமலை டெல்லிக்குச் செல்வாரா, தமிழகத்தில் நீடிப்பாரா தமிழகத்தில் நீடித்தால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டு தி.மு.க. மறுபடியும் வெற்றிபெறும் என்கிற சூழல் உருவாகி விடுமா? என்கிற கவலை பா.ஜ.க.வின் மேலிடத்தை வாட்டி வதக்கி வருகிறது.