மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்தபோது ஏற்கெனவே நடப்பிலிருந்த விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. தமிழ்நாட்டில் 23.08.2010 முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாய மாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
தமிழகத்தில் ஆசிரியர் பட்ட யப் பயிற்சி (டி.எட்), பட்டப்படிப்பு (பி.எட்) படித்தவர்கள், ஆசிரியர் ஆவதற்கு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) கலந்துகொண்டு தேர்வெழுதி, அதில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே அரசாங்கம் ஆசிரியர் வேலை தரும். அதன்படி ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தகுதித் தேர்வை அரசு நடத்தும். இந்த தேர்வில் தகுதிபெறுபவர்கள் வேலைக்குப் போய்விட்டால் கவலையில்லை. ஒருவேளை அரசாங்கம் வேலை தரவில்லை என்றாலும் 7 ஆண்டுகளுக்கு கவலையில்லை. அந்த 7 ஆண்டுகளுக்குள் வேலைக்குச் செல்லவில்லையென்றால் 7 ஆண்டுகள் முடிந்தபின் மீண்டும் தகுதித்தேர்வு எழுதவேண்டும்.
தமிழகத்தில் 2013-ல் ஒரு தகுதித் தேர்வு நடைபெற்றது, அதில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர். 94,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியது, எஞ்சிய 80 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுபற்றி 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றோர் சங்கத்தின் மாநில தலைவர் வடிவேல்சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை சண்முகநாதன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சிவக்குமார் மூவரும் நம்மிடம், ""2013-ல் தேர்ச்சிபெற்ற 14 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வழங்கியது. இதுபற்றி கல்வித்துறை அமைச்சராக இருந்த மா.பா. பாண்டியராஜன், தற்போது அமைச்சராக உள்ள செங்கோட்டையன் போன்றோரை 50 முறைக்கு மேல் சந்தித்தோம். எதுவும் நடக்கவில்லை.
2013-ல் தேர்வெழுதி தகுதிபெற்றவர்களுக்கே வேலை வழங்கவில்லை. ஆனால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ல் ஒரு தேர்வு நடத்தியது அரசு, அவர்களுக்கும் வேலை வழங்கவில்லை. மீண்டும் 2019-ல் ஒரு தேர்வு நடத்தினார்கள் வேலை தரவில்லை. இந்த இரண்டு தேர்வுகளில் டி.எட், பி.எட் படித்து தேர்ச்சிபெற்றுள்ள 10 லட்சம் பேர் தேர்வெழுதினார்கள். அந்த வகையில் 50 கோடி ரூபாய் வரை சம்பாதித்தது அரசாங்கம். இவ்வளவு சம்பாதித்தும் ஒருவருக்கும் வேலை வழங்கவில்லை.
தற்போது பள்ளிக்கல்வித்துறையில் தேவையை விட 7 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகமாக உள்ளார் கள் என்கிறார்கள் முதலமைச்சரும், அமைச்சரும். தேசியக் கல்வி வாரிய விதி 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்கிறது. தமிழகத்தில் 40 மாணவர் களுக்கு ஒருவர் என்கிற கணக்கில் ஆசிரியர் நியமனம் செய்துவிட்டு தேவையைவிட அதிகமாக இருக்கிறார்கள் என ஏமாற்றுகிறார்கள்.
"நீங்கள் தேர்ச்சி பெற்று 7 வருடம் முடிந்து விட்டது உங்களுடைய தகுதித் தேர்வு சான்றிதழ் இனி செல்லுபடியாகாது, மீண்டும் தேர்வெழுத வேண்டும்' என்கிறது பள்ளிக்கல்வித்துறை. இந்தியாவில் சில மாநிலங்களில் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றால், அது அவரின் ஆயுள் காலத்திற்கும் பொருந்தும், தமிழகத்திலும் அப்படி விதியை மாற்றினால் நன்றாக இருக்கும், அதையும் செய்யமறுக்கிறது. நாங்கள் மீண்டும் தேர்வு எழுத தயங்கவில்லை, தேர்ச்சிபெற் றால் எப்போது வேலை வழங்குவீர்கள் எனக்கேட்கிறோம், அதற்கு பதிலில்லை. அதனால்தான் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம் நடத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் சான்றிதழ்களை ஒப்படைத்தோம்.
வேலைக்கேட்டு போராட்டம் நடத்தினால் எங்களைப்போன்ற நிர்வாகிகளை மிரட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது அ.தி.மு.க. அரசாங்கம். தகுதித் தேர்வெழுதி தேர்ச்சிபெற்று இன்று வேலை தருவார்கள், நாளை வேலை தந்துவிடுவார்கள், அடுத்த மாதம் தந்துவிடுவார்கள் என கடந்த 7 ஆண்டுகளாக காத் திருந்து, சமுதாயத்தில் அவமானத்தை சந்தித்ததால், வேலூர் ராஜேஷ், ஜெயப் பிரகாஷ், தமிழரசன், கள்ளக் குறிச்சி மாவட்டம் கச்சிராப் பாளையம் கல்பனா, சென்னை மதுரவாயல் செந்தில்குமாரி என ஐந்துபேர் தற்கொலை செய்துக்கொண்டனர், விழுப்புரம் வானூர் வீரமணி, கடலூர் சக்திவேல் மனவேதனையில் மரணமடைந்தனர். வாழவேண்டிய வயதில் அவர்களை மரணமடையச் செய்தது இந்த அரசு''’என்றார்கள் வேதனையான குரலில்.
கல்வியாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளுக்கு கிடைத்துள்ள இந்த மாணவர் சேர்க்கையை சரியாகப் பயன்படுத்தும் பொருட்டு உரிய ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்கவேண்டும். அப்போது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை பணியில் நியமிக்கவேண்டும் என்பதே எங்கள் சங்கத்தின் கோரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சண்முகநாதன் இதுகுறித்துப் பேசும்போது, “""ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிட வேண்டுமென்னும் தமிழக அரசின் அறிவிப்பானது, ஆசிரியர் பயிற்சி முடித்து பத்தாண்டு காலத்திற்கும் மேலாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் தலையில் இடியை இறக்கியதற்கு ஒப்பானதாகும். ஆசிரியர் பயிற்சி முடித்தும், பி.எட் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பணிநிய மனம் கிடைக்கப்பெறாமல் காத்திருப்போர் குடும் பங்களின் மனநிலையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவினை முற்றிலுமாக திரும்பப்பெறவேண்டும்''’என்றார்.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கருத்தறிய தொடர்பு கொண்டபோது, போனை எடுக்கவில்லை.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், இந்த 80 ஆயிரம் பேருக்காக குரல்கொடுத்தும் அரசு, பிடிவாதமாக இருக்கிறது.
இதற்கிடையில் கடந்த மாதம், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி இனி தேர்ச்சி பெற்றால் அந்த சான்று ஆயுள் வரை செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் தெரிவித்தது. ஆனால் அது தமிழகத்துக்குப் பொருந்துமா?
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு நடத்தபடும் சஊப, நகஊப போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் அச்சான்றிதழ் வாழ்நாள் சான்றிதழாக இருப்பதுபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வழங்கவேண்டும் என்று ஆரம்பகட்டத்தில் இருந்தே தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தேசிய ஆசிரியர் கல்விக் கழகம், கடந்த மாத இறுதியில் தனது 50-வது பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் 7-வது தீர்மானத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றின் காலம் குறித்து தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்று 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதியில் மாற்றம் கொண்டுவந்து. ஆயுள்முழுவதும் அந்த சான்று செல் லும் என்று அறிவித்தது.
இந்த அறிவிப்பு இனிவரும் காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்குதான் என்பதையும் இதற்கு முன்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்ட நடவடிக்கை கருத்துகள் கேட்டபிறகே உறுதிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் அதிகமாக ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாநிலம் கர்நாடகமும், தமிழ்நாடும்தான். அதிலும் தமிழகத்தில்தான் 80 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்று பணி நியமனத்திற்கு காத்துக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில் இச் சட்ட நட வடிக்கை குழு "மத்தியில் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அந்த முடிவு நிச்சயம் தமிழகத்துக்கு சாதகமாக இருக்காது' என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் 7 ஆண்டு காலம் முடியும் நிலையில் , "மீண்டும் ஒரு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று ஆயுள்கால சான்றிதழை பெற்றுக் கொள்ளட்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது . ஆகையால் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாயின் மாற்றம் அடையுமே தவிர, மற்றபடி தமிழகத்துக்கு எதிரான தீர்மானத்தையே நிறைவேற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கழகம்' என பலரும் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் நலன் தொடர்பான விஷயங்களில், மத்திய அரசுக்கு தமிழக அரசு தரும் அழுத்தத்தின் விசையை அறிந்தவர்களோ, "வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் போராடாமல் இப்பிரச்சினையில் உரிய தீர்வு எட்டப்படாது' என்கிறார்கள்.
-து.ராஜா, பகத்சிங், அ.அருண்பாண்டியன்