ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் இருந்த 6 பேரையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்காக 32 ஆண்டு காலம் சட்டப் போராட்டங்களை நடத்தி, தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். தமிழக ஆளுநரும் இந்திய குடியரசு தலைவரும் எடுத்துக்கொண்ட காலதாமதமே இதற்கு காரணம்.
1991, மே-21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப் பட்டார் ராஜீவ்காந்தி. இது தொடர்பாக 26 பேரை கைது செய்து, கடுமையான விசாரணையை நடத்தியது சி.பி.ஐ. 6 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு சென்னை பூந்தமல்லி தடா நீதிமன்றம், 26 பேருக்கும் 1998, ஜனவரியில் மரண தண்டனை விதித்து தீர்ப் பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி .வாத்வா, சையது ஷா முகமது கத்ரீ ஆகியோர் அடங்கிய அமர்வு, 1999, மே 5-ந்தேதி தீர்ப்பளித்தது. அதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கும் எதிரான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. அதேசமயம், மற்ற 19 பேரில் சண்முகவடிவேலுவை குற்றமற்றவராகவும், மற்ற 18 பேரும் குறைந்த குற்றத்தையே செய்திருப்பதால் அவர்கள் சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாக கருதியும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்.
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவர்களின் கருணை மனுவை அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியும் தள்ளுபடி செய்தார். மாநில அரசிடம் ஆலோசிக்கவும் இல்லை.
ஆளுநரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தை நால்வரும் அணுக, பாத்திமா பீவியின் நிராகரிப்பை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்முறையாக சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
இதனையடுத்துதான், கலைஞர் தலைமையி லான தி.மு.க. அரசு 2000-ஆம் ஆண்டு ஏப்ரலில் தனது அமைச்சரவையைக் கூட்டி, நளினிக்கு விதிக் கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு அதனை ஆளுநர் அனுப்பி வைக்க, அந்த சமயத்தில், சோனியா காந்தியும் நளினியை மன்னித்துவிட்டதாகச் சொல்லவும், நளினிக்கான மரண தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஜனாதிபதிகள் மாறிய போதும், கருணை மனுக்கள் அப்படியே கிடந்தன. பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியானதும் கருணை மனுக்கள் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்திலிருந்து உள்துறைக்குச் செல்ல, 2011, ஆகஸ்டில் தள்ளுபடி செய்தது மத்திய அரசு. இதனையடுத்து, மூவரையும் தூக்கிலிட தேதி குறிக்கும் படலமும் துவங்கியது.
7 பேர் விடுதலைக்காக தமிழகத்தில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் வெடித்தன. கருணை மனுக்கள் மீது குடியரசு தலைவர்கள் முடிவெடுக்க 11 ஆண்டுகள் காலதாமதம் செய்ததால் தாங்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளோம் என்றும், இதனால் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன் றத்தை மூவரும் அணுகினார்கள். இதனையடுத்து தூக்குத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை உச்சநீதிமன்றத் துக்கு மாற்றியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த இரண்டாவது சாதக தீர்ப்பு இது.
இந்த நிலையில் 2014, பிப்ரவரியில் இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட முதல்அமர்வு, மூவரின் (முருகன், பேரறிவாளன், சாந்தன்) கருணை மனுக்கள் எவ்வித காரணங்களு மின்றி நீண்டகாலம் நிலுவையில் இருந்ததால் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்ட னையாகக் குறைக்கிறோம் என்று தீர்ப்பளித்ததுடன், அவர்களின் விடுதலை குறித்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.
சதாசிவத்தின் தீர்ப்பு வந்த மறுநாள், ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வதாக ஜெயலலிதா, தனது அமைச்சரவையில் முடிவெடுத்து அறிவித் தார். அத்துடன், மத்திய அரசுக்கு அதனை தெரியப்படுத்தி 3 நாளில் தங்களின் முடிவை சொல்ல வேண்டும்; இல்லையேல் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார். மத்திய புலனாய்வு அமைப்புகள் வழக்கை விசாரித்திருந் தால் மாநில அரசு எடுக்கும் முடிவுகளை மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டு உடனே விடுதலை செய்திருக்கலாம். அதற்கு மாறாக, 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதால் ஜெயலலிதா அரசின் விடுதலை முடிவுக்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடையாணை பெற்றது அன்றைய காங்கிரஸ் அரசு. இதனால்தான் 7 பேரின் விடுதலையும் தாமதமானது.
இந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று 2018, செப்டம்பர் 6-ந் தேதி தீர்ப்பளித்தனர் ரஞ்சன்கோகாய் தலைமை யிலான 3 நீதிபதிகள். இதனையடுத்து அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையி லான அமைச்சரவை கூடி, 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி அன்றைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பிலேயே வைத்திருந் தார் பன்வாரிலால். அவ ருக்கு எதிராக போராட் டங்கள் நடத்தப்பட்டும் அவர் அசைந்து கொடுக்க வில்லை.
3 ஆண்டுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு பதவிக்கு வந்தது. 7 பேரின் விடுதலை விவகாரத்தில் கவனம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தமிழக கவர்னரை சந்தித்து வலியுறுத்தினார். 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி யாக இருந்த ராம்நாத்கோவிந்துக்கு கடிதம் எழுதினார். அவரும் இதுகுறித்து அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில், தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட, அவரையும் சந்தித்து வலியுறுத்தினார். ஒரு கட்டத்தில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்.
தி.மு.க. அரசு எடுத்த முயற்சிக்கு எந்த பதிலையும் கவர்னரும் ஜனாதிபதியும் சொல்லாத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பேரறிவாளன். அதனை விசாரித்த உச்சநீதி மன்றம், குடியரசு தலைவருக் கும், ஆளுநருக்கும் என்ன அதிகாரமிருந்தாலும் அர சியல் சாசனத்தை யாரும் மீறிட முடியாது. அரசியலமைப் புச் சட்டத்துக்கு மேலே யாரும் கிடையாது. குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால், அரசியல்சாசனத்தின்படி உத்தரவிட முடியும். அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அதன் பரிந்துரையை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்கிறார். இது அரசியலமைப்புப் சட்டத்துக்கு எதிரானது. இதனை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது. பேரறிவாளனை விடுதலை செய்வதில் என்ன பிரச்சனை? நீங்கள் முடிவெடுக்கா விட்டால் நீதிமன்றம் முடிவெடுக்கும்”என்று அழுத்தமாக வலியுறுத்தியது. இவ்வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசுக்கும் கவர்னருக்கும் எதிராகக் கடுமையான சட்ட வாதங்களை முன்வைத்து வாதாடியது தி.மு.க. அரசு.
விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் தண்டனை பெற்றிருப்பதாலும், அந்த சட்டம் பொதுப்பட்டியலில் இருப்பதாலும் பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்கிற வாதத்தை ஏற்கமுடியாது. பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. உச்சநீதிமன்றத் திற்குரிய சிறப்பு அதிகாரமான 142-வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை நேரடியாக விடுதலை செய்கிறோம் என கடந்த மே, 18-ந் தேதி அதிரடி யாக உத்தரவிட்டது உச்சநீதி மன்றம்.
அரசியல் சாசனத்தில் உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்பு அதிகாரம் தான் 142-வது சட்டப்பிரிவு. உச்சநீதி மன்றத்துக்கு இது பிரம்மாஸ்திரம் போன்றது. மத்திய அரசோ, மாநில அரசோ உச்சநீதிமன்றத் தின் உத்தரவை மதிக்கவில்லை என்றாலோ, உத்தரவை நிறை வேற்றவில்லை என்றாலோ, உச்சநீதிமன்றமே நேரடியாக தனது உத்தரவை நிறைவேற்ற வழிவகை செய்கிறது இந்த 142. கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று பலமுறை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் அதனை அலட் சியப்படுத்திய நிலையில்தான் 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை ரிலீஸ் செய்தது உச்சநீதிமன்றம்.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும் என்பதால் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 142-வது சட்டப்பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் உயர்நீதி மன்றத்துக்கு இல்லையென்பதால் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.வி.நாகரத்னா இருவரும், "ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் தீர்மானம் 7 பேருக்கும் பொருந்தும். அதனால், 142-வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது இவர்களுக்கும் பொருந்தும். வேறு எந்த வழக்கிலும் இவர்கள் 6 பேரும் சம்பந்தப்படாத நிலையில் அவர்கள் 6 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’என்று உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு தேசிய அளவில் அதிர்வுகளை உருவாக்கிய நிலையில், பல்வேறு சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 6 பேர்களில் 4 பேர் ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்கள் இலங்கை அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தீர்மானங் களை, முடிவுகளை நியமன பதவியில் உள்ள ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்கிறது. மக்களாட்சியின் கோட்பாட்டுக்கு சிறப்புமிக்க அணிந்துரை யாக அமைந்துள்ளது இந்த தீர்ப்பு''’என்கிறார்.
மகாத்மா காந்தி, இந்திரா காந்தி படுகொலை களுக்கு பிறகு இந்தியாவையே உலுக்கிய சம்பவம் ராஜீவ்காந்தி படுகொலைதான். அந்த வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு பரபரப்பாகியிருக் கிறது. மத்திய அரசும் மாநில கவர்னரும் ஆடிய ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். மாநில அமைச்சரவை பரிந்துரைக்கும் தீர்மானத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக ஒப்புதலளிக்கும் நடைமுறையை இனியாவது கவர்னர் கடைப்பிடிப்பிடிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தையும் கொடுத்துள்ளது இந்த தீர்ப்பு.
____________
இறுதிச் சுற்று!
மூன்றுநாள் பொழிந்த கடும் மழையால் கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதனையறிந்த முதல்வர் ஸ்டாலின், 13-ந் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு பாண்டிச்சேரிக்கு வந்தார். ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் அக்கார்ட் ஹோட்டலில் தங்கியவர், மறுநாள் 14-ந் தேதி திங்கள் காலையிலேயே புறப்பட்டு கடலூருக்கு வந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால நடவடிக்கை போல் விரைந்து சீர்படுத்த வேண்டும் என்றும் உயரதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
-இளையர்