பெரியார் பல்கலைக் கழகத்தில் 'பிரைடு' எனப்படும் தொலைதூரக் கல்வித் திட்டத் தில், 3 கோடி ரூபாய் சுருட்டிய தாக துணைப் பதிவாளர் உள்ளிட்ட இருவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இந்த சம்பவம், உயர்கல்வித்துறை வட்டாரத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அண்மைக்காலமாக அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சையில் பெரியார் பல்கலைக்கழகம் சிக்கியபடியே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாய் இந்த விவகாரம் இப்போது பூதாகரமாய் வெடித்திருக்கிறது.

ff

Advertisment

சேலத்தில் இயங்கிவரும் இந்த பெரியார் பல்கலையில், தொலை தூரக் கல்வித் திட்டம் செயல்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தின் இயக்கு நராக கடந்த 2005 முதல் 2012 வரை பேராசிரியர் குணசேகரன் பணி யாற்றி வந்தார். தற்போது இதே பல்கலையில் துணைப் பதிவாளராக பணியாற்றிய ராமன், அப்போது உதவிப் பதிவாளராக இருந்தார். பி.டெக்., எம்.டெக்., ஆகிய தொழிற் படிப்புகளை தபால் வழியில் படிக்கும் திட்டத்தை பெரியார் பல்கலை அறிமுகப்படுத்திய நேரத்தில், இந்தப் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை, ஹைதராபாத் தைச் சேர்ந்த மேக்னஸ் புரவிஷனல் ஸ்டடி சென்டர் என்ற நிறுவனத்துக்கு வழங் கியதாக அப்போது பெரியார் பல்கலை அறிவித்தது.

பல்கலையின் இந்த முடிவுக்கு சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் தனியார் கல்லூரி அதிபர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, நான்கே நாட்களில் மேக்னஸ் ஸ்டடி சென்டருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இங்குதான் பிரச்னை வேறு வடிவத்தில் பூதாகரமாக வெடித்தது. காலங்காலமாக கல்லூரி களில் சேர்ந்து நேரடியாக மட்டுமே பி.டெக்., எம்.டெக்., தொழிற் படிப்புகளைப் படிக்க முடியும் என்ற நிலையில், அந்த ஹைதராபாத் மேக்னஸ் ஸ்டடி சென்டருக்கு இந்தப் படிப்புகளை தபால் வழியில் படிக்க அனுமதித்ததன் மூலம், அந்த நிறுவனத்திடம் இருந்து பிரைடு இயக்குநர் குணசேகரன் 3 கோடி ரூபாய் கையூட்டு பெற்றதாக பகீர் புகார் கிளம்பியது. இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டி.எஸ்.பி. சந்திரமவுலி விசாரணை நடத்தி வந்தார். துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள, 2019ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையின் மாஜி துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் ஒரு நபர் குழுவும் அமைக்கப்பட்டது.

ffff

Advertisment

லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஒரு நபர் குழு விசாரணைகளில், குணசேகரன் கையூட்டு பெற்றது உண்மை எனத் தெரியவர, அதன் அடிப்படையில், துணைப் பதிவாளர் ராமன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தொகுப்பூதியப் பணியாளராகப் பணியாற்றிவந்த அன்பரசி ஆகிய இருவரையும் கடந்த 15 ஆம் தேதி, துணைவேந்தர் ஜெகநாதன் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

துணை பதிவாளர் ராமன், நடப்பு நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். மாஜி பிரைடு இயக்குநர் குணசேகரன் கையூட்டு பெற்ற விவகாரத்தில், அவருக்கு உடந்தையாக இருந்ததற் காக ராமன் மீதும், அன்பரசி மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

இது தொடர்பாக குற்றச் சாட்டுக்கு ஆளான மாஜி பிரைடு இயக்குநர் குணசேகரனிடம் கேட்ட போது....

"தமிழ்நாடு பென்ஷன் விதிகளின்படி, ஒரு ஊழியர் மீதான துறை ரீதியான நடவடிக்கை என்பது, அவர் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்துதான் தொடங்கும். மேலும், ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் கழிந்து விட்டால் அவர் மீது விசாரணையே மேற்கொள்ள முடியாது என்றும் பென்ஷன் விதிகளில் உள்ளது. நான் 2012-ஆம் ஆண்டிலேயே ஓய்வு பெற்றுவிட்டேன். பல்கலை நிர்வாகம் விதிகளை மீறி என் மீது ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்கலையின் துணைவேந்தருக்கு தெரியாமல் ஒரு ஸ்டடி சென்டருக்கு பிரைடு இயக்குநர் மட்டுமே அனுமதி அளித்து விட முடியாது. மேக்னஸ் ஸ்டடி சென்டருக்கு வழங்கப்பட்ட அனுமதி ஆணை, அடுத்த நான்கு நாளில் ரத்து செய்யப்பட்டு விட்டது. அப்படியிருக்கும்போது நான் எப்படி அந்த நிறுவனத்திடம் இருந்து ஆதாயம் அடைந்திருக்க முடியும்? அப்போது துணைவேந்தராக இருந்த முத்துச்செழியன்தான் அந்த ஸ்டடி சென்டருக்கு அனுமதி ஆணையை தன் கையால் வழங்கினார். லஞ்ச ஒழிப்புத் துறையோ, ஒரு நபர் குழுவோ என்னிடம் விசாரணை நடத்தாமலேயே நான் முறைகேடு செய்ததாக அறிக்கை அளித்திருப்பது முரணாக இருக்கிறது'' என்றார் அழுத்தமான குரலில்.

பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தொகுப்பூதியப் பணியாளர் அன்பரசியோ, "பிரைடு இயக்குநர் குணசேகரன் சொன்னதன் பேரில், அலுவலக கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தேன். அலுவலக ஆவணத்தை நகல் எடுத்ததாகக் கூறி, என்னையும் அவர்களுடன் சேர்த்து பணிநீக்கம் செய்துள்ளனர். 18 ஆண்டு களாக தொகுப்பூதியத்தில் வேலை செய்து வந்த எனக்கு, கடைசியில் கிடைத்த மரியாதை இதுதான்'' என்றார் கலக்கத்தோடு.

முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் தலையும் உருளத் தொடங்கியதால், இது தொடர்பாக விசாரிக்க அவருடைய அலைபேசி எண்ணில் அழைத்தோம். அவர் அழைப் பை ஏற்கவில்லை.

துணை வேந்தர் ஜெகநாத னிடம் கேட்டபோது, "இந்த முறைகேடு சம்பவம், 2011 - 2012 காலகட்டத்தில் நடந்துள்ளது. குணசேகரன், மேக்னஸ் ஸ்டடி சென்டரிடம் 3 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உறுதியாகியிருக்கிறது. இந்த வழக்கில், குணசேகரன்தான் முதல் குற்றவாளி. அவர் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு எதிராகப் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்ட ஆலோசகர்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்''’என்றார்.

பிரைடு திட்டத்தில் பிராடு செய்த ஊழல் முதலைகள் சட்டத்தின் சந்துபொந்துகளின் வழியாகத் தப்பிவிடாதபடி, அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.