சேலம் டூ சென்னை எட்டுவழிச் சாலை திருவண்ணாமலை மாவட்டத்தின் நீப்பத்துறையில் தொடங்கி செய்யாறு மோப்பறை வரை 124 கி.மீ. தூரத்திற்கு பயணமாகிறது. மணிலா உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம், நெல் மற்றும் கரும்பு உற்பத்தியில் இரண்டாமிடம் என முன்னிலை வகிக்கும் இந்த மாவட்டத்தில், அரசு கணக்குப்படி 1,328 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதில் கணிசமானவை விளைநிலங்கள் என்பதால், விவசாயப்பொருள் உற்பத்தியில் பின்தள்ளப்படுவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட 20 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.
இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட விவசாயத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, “""இங்கு மூன்றுபோகமும் சேர்த்து 5.4 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்கிறோம். இதன்மூலம் தமிழகத்தில் (டெல்டா மாவட்டங்களை தவிர்த்து) நெல் உற்பத்தியில் 2ஆவது இடத்தில் இருக்கிறோம். மணிலா, கரும்பு உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கிறோம். நடுத்தர மக்கள் விரும்பும் சன்னரகம் என்னும் வெள்ளைப்பொன்னி, ஏ.டீ.டி45, களம்பூர் பொன்னி போன்றவை அதிகளவு உற்பத்தி செய்வதும் இங்குதான். களம்பூர், ஆரணி போன்றவை தென்னிந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு பெயர்பெற்ற பகுதிகள். தற்போது 8 வழிச்சாலையால் ஆயிரம் ஹெக்டேர் விவசாயநிலம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. சாலை போடப்பட்ட பின்பு மறைமுகமாக 2 ஆயிரம் ஹெக்டேர் விவசாயநிலம் பாதிக்கப்படும். இதனால் உற்பத்தியே தலைகீழாகும்''’என்று அபாயத்தை உணர்த்துகிறார்.
கரும்பு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் போளூர் கே.வி.ராஜ்குமாரிடம் கேட்டபோது, ""விவசாய உற்பத்தியில் தமிழகத்தில் முக்கியமான மாவட்டமாக திருவண்ணாமலை இருக்கிறது. ஆனால், இங்கு விளைவிக்கப்படும் கரும்பு, மணிலா, நெல் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் சரியான விலை கிடைப்பதில்லை. இருந்தாலும், விவசாயி பயிர்செய்யக் காரணம், அவனுக்கு அதைவிட்டால் வேறெதுவும் தெரியாது என்பதுதான். எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்காக அரசு இழப்பீடு தருவதாகச் சொல்கிறது. அது கைக்கு வருவதற்குள் அடுத்த தலைமுறையே வந்துவிடும். ஆனாலும் கருணை அடிப்படையில் அரசு வேலை, மூன்று மடங்கு இழப்பீடு போன்ற அறிவிப்புகளை நம்பி 70% விவசாயிகள் இந்தத் திட்டத்தை ஆதரிப்பார்கள். ஏற்கெனவே கருணை அடிப்படையிலான அரசு வேலைக்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்க, விவசாயிகளும் அந்த வரிசையில் நிற்கவேண்டியதுதான். விவசாயிகளிடம் ஆசைகாட்டி நிலம் பறிக்கும் அதிகாரிகள், விவசாய உற்பத்தியில் பாதிப்பு இருக்காது என பொய்க்கணக்கு காட்டுகிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் 50 மூட்டைக்கு மேல் நெல் உற்பத்தி செய்யமுடியாது என்பது அவர்களுக்குத் தெரியுமா?''’என கேள்வியெழுப்புகிறார் ஆதங்கத்துடன்.
விவசாயப்பொருள் உற்பத்தி பாதிப்பு ஒருபுறமிருக்க, இந்த சாலை அமைப்பதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான மாற்று வேலைவாய்ப்புக்கு என்ன திட்டம் வைத்துள்ளது அரசு? என்ற கேள்வியுடன் தொடங்கிய தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த அழகேசன் தொடர்ந்து நம்மிடம், ""இங்கு 1,500 குடும்பங்களை வாழவைத்த டான்கப் தொழிற்சாலையையும், அருணாச்சலா சர்க்கரை ஆலையையும் மூடிவிட்டார்கள். 20 ஆண்டுகளாகியும் இந்த ஆலைகளைத் திறக்காத அரசு, சாலை வந்தால் தொழிற்சாலைகள் வரும் என்று சொல்வது வானத்தில் கோட்டை கட்டுவதைப் போன்றது''’என்கிறார் கோபமாக.
""சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 95 கி.மீ. தூரத்திற்கு எட்டு வழிச்சாலை பயணமாகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் 800 ஹெக்டேர் நிலத்தில் விவசாய நிலம் மட்டும் 600 ஹெக்டேர். இப்படி சாலைக்காக அழியப்போவது நிலம் மட்டுமல்ல, எங்கள் விவசாயமும், எதிர்காலமும்தான்'' என்கின்றனர் விவசாயிகள்.
எட்டுவழிச் சாலைக்கு பதில் அழிவுச்சாலை என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!
-து.ராஜா