தினகரனுக்கு எதிராக திவாகரன் போர்க்கொடி எழுப்பியுள்ள நிலையில்... சொந்தத் தொகுதியான ஆர்.கே. நகருக்கு விசிட்டடித்த இடத்தில் 200-க்கும் அதிகமான பொதுமக்கள் தேர்தலின்போது கொடுப்பதாகச் சொன்ன பணமெங்கே எனக் கேட்டு கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.வின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017, டிசம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் அதிர்ச்சி வைத்தியமளித்து வெற்றிபெற்றார் தினகரன். சுயேட்சை சின்னமான குக்கர் சின்னத்தைப் பெற்ற தினகரன், தொகுதியெங்கும் குக்கர் விநியோகித்ததாக புகார்கள் கிளம்பின. அதேபோல, வாக்களித்துவிட்டு வந்து கறுப்பு மை அடையாளத்தையும், தினகரன் குழுவினர் கொடுத்த 20 ரூபாயையும் காட்டினால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமென்ற பேச்சும் பரபரப்பாகக் கிளம்பியது.
தேர்தல் முடிந்து ஆறுமாதங்களான நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் தண்ணீர்ப் பந்தல் திறந்து வைக்கவும், நேதாஜி நகர் முருகன் கோவிலில் தரிசனம் செய்யவும் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வந்த அ.ம.மு.க. தலைவர் தினகரனை, தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டு "20 ரூபாய் நோட்டு இங்கே, வாக்குறுதி அளித்த பத்தாயிரம் ரூபாய் எங்கே?' என கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் கிளம்பிச்சென்ற தினகரன், காசிமேடு பகுதிக்குச் சென்று தண்ணீர்ப் பந்தலைத் திறந்துவைத்தார். “""தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாத மதுசூதனன் மற்றும் அவரது கையாள் ராஜேஸின் ஏற்பாடு இது''’என விமர்சனம் செய்தார் டி.டி.வி.
மதுசூதனனைத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டபோது, “""நான் எதற்காக இப்படிச் செய்யணும்? விதைத்ததைத்தான் அறுவடை செய்யமுடியும். தேர்தலில் வெற்றிபெற பணம்தருவதாகக் கூறி 20 ரூபாய் நோட்டை தினகரன் கொடுத்தது ஊருக்கே தெரியும். சொன்னபடி கொடுக்காததால் மக்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பதில் சொல்லமுடியாத வெற்றிவேலும் தினகரனும் என்மேல் பழிசுமத்துவது சரியாகாது''’என மறுத்தார்.
அ.தி.மு.க.வின் வடசென்னை, வடசென்னை கிழக்கு கழகச் செயலாளரான ஆர்.எஸ்.ராஜேஸைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ""நான் பொறுப்புக்கு வந்தபிறகு, தினகரன் அணியிலிருந்து பலர் எங்கள் அணியில் இணைந்துவருகின்றனர். அவர்களில் பலர் என்னிடம் வாக்காளர் வரிசை எண் எழுதப்பட்ட அந்த 20 ரூபாயைக் காட்டி என்ன செய்வது எனக் கேட்டனர். "கொடுத்தவர்களிடமே கேளுங்கள்' எனச் சொன்னேன். ஏமாற்றத்தால் நொந்துபோயிருந்தவர்கள் தினகரன் வருவது தெரிந்து நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?''’என்கிறார்.
-அ.அருண்பாண்டியன்