மிழகத்தில் மறைமுக ஆட்சி செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க., நாடாளுமன்றத் தேர்தலின் மூலமாக தமிழகத்தில் நேரடியாக கால்பதிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடக்க ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழலில், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்படுத்த ஜூலை 9-ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார் பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா.

சென்னை -ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “""பத்தாண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு 13ஆவது நிதிக்கமிஷனில் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி வெறும் ரூ.94 ஆயிரத்து 540 கோடி மட்டுமே. ஆனால், 14ஆவது நிதிக்கமிஷன் மூலம் பா.ஜ.க. அரசு ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 996 கோடி ஒதுக்கியிருக்கிறோம். இது முந்தைய அரசைவிட ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி அதிகம் என்பதில் பெருமைகொள்கிறோம்''’ என்றார்.

amitsha

Advertisment

அதேபோல், மத்திய அரசு தமிழகத்திற்காக ஒதுக்கிய நிதி ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி என தொடக்கத்திலேயே கண்ணைக்கட்ட வைத்த அவர், அதற்கடுத்து சொன்ன தொகைகளும், திட்டங்களும் நம்மை அதிரவைத்தன. (விவரங்களை அட்டவணையில் காண்க:)

இவைபோக, அம்ருத் திட்டத்திற்காக 33 நகரங்களுக்கு ரூ.3.300 கோடி. பாரத்மாலா திட்டத்திற்காக ரூ40,500 கோடி, 3,200 கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளம் அமைக்க ரூ.20,000 கோடி, மாநிலங்கள் இணைப்புக்காக ரூ.200 கோடி, மத்தியசாலைத் திட்டத்திற்காக ரூ2,100 கோடி. 17 லட்சம் இலவச க்யாஸ் இணைப்பு தரும் உஜ்வாலா திட்டம் போன்ற சின்னச்சின்ன திட்டங்களுக்காக ரூ.1,700 கோடி என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் கோடி என சுமார் 5 லட்சம் கோடி வரை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக கணக்குக் காட்டியவர், இந்தியாவிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்த பிறகு மத்திய அரசிடம் இணக்கமாகத்தானே இருக்கிறோம் என்கிற மிதப்பில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியை, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தங்களது பினாமிகளுக்கு டெண்டர் கொடுத்து கமிஷன் மூலமும், திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாமலும் கல்லாவை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு எந்தத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குகிறதோ, அந்தத் திட்டத்திற்கு மட்டுமே மாநில அரசு செலவிட வேண்டும். ஆனால் அப்படி செலவாகவில்லை என்றால், நிதியை மத்திய அரசுக்கே திரும்ப அனுப்புவது மாநில அரசின் நடைமுறை. ஆனால், இந்த நடைமுறையை தற்போதைய எடப்பாடி தலைமையிலான மாநில அரசு மூர்க்கத்தனமாக மீறியிருக்கிறது.

Advertisment

இத்தனை நாட்களாக எதையும் கண்டுகொள்ளாததுபோல் இருந்த மத்திய அரசு, ‘"தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதித்தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அவை முறையாக கையாளப்படவில்லை. பல திட்டங்கள் செயல்படுத்தப்படவும் இல்லை'’ என தன் கட்டுப்பாட்டில் உள்ள ஆடிட்டிங் பிரிவை நோட்டீஸ் அனுப்புவதற்காக ஆவணங்களைத் தயார் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. இந்த ஆவணம் தாக்கல் செய்யப்படும்போது நிதி மோசடியில் ஈடுபட்ட 10 அமைச்சர்கள் மீது வழக்குகள் பாயும் என்கிறது டெல்லி தரப்பு.

18 எம்.எல்.ஏ. வழக்கு, ஏற்கனவே நடத்தப்பட்ட ரெய்டுகள், தற்போதைய முட்டை ஊழல் ரெய்டு இவற்றால் எடப்பாடி அரசின் மொத்த கூந்தலும் மோடி அரசின் பிடியில் உள்ளது. அதனால் எடப்பாடி தரப்பால் எகிற முடியவில்லை. "எம்.பி. தேர்தலை நடத்துங்கள்... 10 அல்லது 20 தொகுதிகளை ஒதுக்கி உங்களை ஜெயிக்க வைப்பது எங்கள் கடமை'’என கெஞ்சிக்கொண்டிருக்கிறது மாநில அரசு.

bjp-meet

முதலில் 10 தொகுதிகளைக் குறிவைத்து காய்நகர்த்திய பா.ஜ.க.வுக்கு, இப்போது எடப்பாடி அரசு வசமாக சிக்கியுள்ள நிலையில்... 20 தொகுதி கிடைக்கும் என்பதால், தேர்தல் பணிகளில் பா.ஜ.க.வினரை வேகம்கூட்டச் செய்திருக்கிறது. இதன் செயல்வடிவமே அமித்ஷாவின் சென்னை விசிட். அந்தக் கூட்டத்தில் கூட்டணி பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார் அமித்ஷா.

தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி உள்ளிட்ட தனித்தொகுதிகளைக் குறிவைத்து சக்தி கேந்திரங்கள், மகா சக்தி கேந்திரங்கள் மற்றும் விஸ்தாரங்களை நியமித்து வேலைவாங்குகிறது பா.ஜ.க. சில தொகுதிகளில் மேற்பார்வையாளர்களையும் வேட்பாளர்களையும் நியமித்து ஓராண்டுக்கும் மேலாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது. அதேபோல், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரை தனித்தொகுதிகளில் களமிறக்கி வெற்றிபெற்று விடலாம் என்பது பா.ஜ.க.வின் கணக்கு. அதுமட்டுமின்றி, பாரிவேந்தர் போன்ற சமூகம் சார்ந்த கட்சிகளின் ஜாதிய தலைவர்களையும் லிஸ்டில் வைத்து மூவ் செய்கிறது பா.ஜ.க. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் எடுபடாது என்பதால், சாதி ஓட்டு தொடர்பான புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு மைக்ரோலெவல் பணிகளை பா.ஜ.க. முடுக்கிவிட்டுள்ளது.

என்னதான் தமிழகத்தில் கால்பதிக்க பல்வேறு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், பா.ஜ.க.வின் மொத்த முயற்சிகளையும் சிதறடிக்கும்படியாக இருக்கின்றது அக்கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜாவின் கொச்சையான செயல்பாடுகள். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதுபோல தமிழ்நாட்டில் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற அவரது ட்விட்டர் பிரளயத்தையே உண்டாக்கி, தமிழக பா.ஜ.க.வை அதகளமாக்கியது. சாரணர் தேர்வில் வம்படியாக களமிறங்கி டெபாசிட் பறிகொடுக்கும் அளவுக்கு தோல்வியடைந்து பா.ஜ.க.வுக்கு தேசிய அவமானத்தை உருவாக்கியவர் எச்.ராஜா. அதைத்தொடர்ந்து மூத்த தலைவர்கள் மீதான விமர்சனம், தி.மு.க. எம்.பி. கனிமொழியைப் பற்றிய வசைபாடல் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஏடாகூடமாகப் பதிவிட்டுவிட்டு, தனது அட்மின் தன்னைக் கேட்காமல் பதிவிட்டதாகக் கூறி தப்பிக்கப் பார்த்தார். அன்றிலிருந்து நெட்டிசன்களின் முழுநேர கேலிப்பொருளாகவே அவர் மாறியிருக்கிறார். நீதிமன்றமே அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, மனநல பரிசோதனை செய்யவேண்டும் என்கிற அளவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்துவரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு பலரும் வலியுறுத்த... "அவை அவரது சொந்தக் கருத்துகள்' என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

amitsha

இந்நிலையில்... அமித்ஷாவின் சென்னை வருகையின்போது அவரது உரையை மொழிபெயர்க்கச் சென்ற எச்.ராஜா, தொடக்கத்தில் "பாரத் மாதா கி ஜே' என்ற முழக்கத்திலேயே அமித்ஷாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதோடு நுண்நீர் பாசனத் திட்டத்திற்கு பதிலாக "சிறுநீர் பாசனத் திட்டம்' என்று தவறாக மொழிபெயர்த்தது, ஏர் இஹஸ்ரீந் ஆம்ண்ற்ள்ட்ஹட்-வையும் ஓவர்டேக் செய்து ட்ரெண்டிங்கில் இருந்தது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மோடி தொடங்கி தமிழிசை வரை காணும் கனவைக் கெடுக்க எச்.ராஜாவே போதுமானவர் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

-ஜெ.டி.ஆர்., ச.ப.மதிவாணன்