தமிழக விவசாயிகளின் கைகளுக்குப் போக வேண்டிய பிரதமரின் நிதியுதவி வேறு பலரின் பாக்கெட்டுகளுக்கு முறைகேடாகப் போயிருப்பது தமிழகம் தழுவிய சர்ச்சையாக வெடித்துள்ளது. 110 கோடி ரூபாய் அளவில் நடைபெற்ற நிதிமுறைகேடு தொடர்பாக 37 அதிகாரிகள் சஸ்பெண்ட்டும் 80 அலுவலர்கள் பணிநீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இம்முறைகேட்டை சி.பி.ஐ. விசாரணை செய்யவேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தன்னை விவசாயி என சொல் லிக்கொள்ளும் முதல்வரைப் போலவே, விவசாயிகள் எனச் சொல்லிக் கொண்டு மோசடி செய்தவர்கள்தான் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என விமர்சனம் செய்த பா.ஜ.க., இன்று அதே ஊழல் ஆட்சி செய்யும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அ.தி.மு.வினரின் ஊழலை மறைத்து அரசியல் லாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கிசான் சம்மன் நிதியுதவித் திட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. முதலில் வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்த வந்த நிலையில், பின்பு மாவட்ட, வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது.
அதற்காக அந்தந்தப் பகுதி வேளாண்துறை அதிகாரிகளுக்கு ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது. அதிகாரிகளும் வேறு பலரும் சேர்ந்து விவசாயிகளல்லாத நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பயனாளிகளாக இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 1.79 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் புதிதாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களது வங்கிக் கணக்கிலும் முதல் தவணையாக 2000 ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாக பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுபோன்ற பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து விசாரணைகள் தீவிரப் படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. வருவாய்த் துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டதில் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட 80,752 பேரில் 40 ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என் றும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவள் ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. தமிழக அளவிலான போலிப் பயனாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் கடலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் மட்டுமே உண்மை யான பயனாளிகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளி வந்தது. அதையடுத்து முறைகேடாகச் சேர்க்கப் பட்டவர்களை பட்டியலிலிருந்து நீக்கி அவர்களின் வங்கிக்கணக்குகள் உடனடியாக முடக்கப்பட் டுள்ளன. போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தி லுள்ள 226 வங்கிக் கிளைகளில் தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு போலி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மாவட்ட ஆட்சியரின் பொதுக்கணக்குக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளை தீவிரப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் வழக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மோசடி, தொழில்நுட்பங்களை தவறாகக் கையாளுதல், கூட்டாக இணைந்து மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கணினி மையம் நடத்திவரும் அ.தி.மு.க.வை சேர்ந்த மாத்தூர் வேளாண்மை கூட்டுறவு வங்கிக் கடன் சங்க தலைவர் ஆராஅமுதன், அரங்கநாதன், மனோகரன், அருண்குமார், ராஜசேகர், வெண்ணிலா மற்றும் இருவர் என ஆறு நபர்களை, கடலூர் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி செய்தியாளரிடம் கூறியதாவது:-
பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 80,237 பேர் பயனாளி களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 35,251 பேர் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 43,275 பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். 3,483 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் ஆவர். போலியாக சேர்க்கப்பட்டுள்ள 70,209 பேரிடம் தவணைத் தொகை வசூல் செய்ய வேண்டியுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தமாக கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 14 கோடியே 26 லட்சம் மோசடி நடை பெற்றுள்ளது. இதில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 9.26 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது. போலி பயனாளிகளிட மிருந்து தவணைத் தொகை வசூலிப்பதற்காக வருவாய்த்துறை, காவல்துறை, விவசாய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய 170 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 3 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
கடலூரைப் போலவே விழுப்புரத்திலும் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்று 4 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் விவசாயிகளுக்கான நிதி பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டிருப்ப தால் 10ஆயிரத்து 600 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் நிறைந்துள்ள காவிரி டெல்டா மாவட்டமான திருவாரூரில் 2ஆயிரத்து 383 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டுள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நிதியை மோசடியாகப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டனை தரவேண்டும். இந்த முறைகேட்டுக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, எடப்பாடி அரசுக்கு துணைநிற்கிறதா என எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க தலைவர் கேள்வியெழுப்பிய நிலையில், தமிழக பா.ஜ.க நடவடிக்கை கோரி எல்லா மாவட் டங்களிலும் மனுக்கொடுக்க தொடங்கியுள்ளது.
""முறைகேடாகப் பயனடைந்தவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது. அரசிடம் அனைத்து விவரங்களும் உள்ளது. அதேசமயம் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட விவசாயிகளின் பெயர்கள் மட்டுமே நீக்கப்படும். உண்மையான விவசாயிகள் கவலைப்படவேண்டாம். மாவட்ட அளவில் கடவுச்சொல் உருவாக்கப்பட்டு அது மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும். தகுதியானவர் களுக்குத் தொடர்ந்து நிதியுதவி கிடைக்கும்''’ என வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
மோசடிகள் பெருமளவில் கணினி வழிப்பதிவுகளிலேயே நடைபெற்றுள்ளது. கம்ப்யூட்டர் சென்டர்களில் இருப்பவர்களின் துணையுடன், ஆளுந்தரப்பினர் லிஸ்ட்டுகளைக் கொடுத்து, பாஸ்வேர்டை பயன்படுத்தி இந்த முறைகேடுகளை செய்திருப்பது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பிரதமரின் வீடுகட்டும் திட் டத்தில் பல மாவட்டங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மோசடி செய்தது டெல்லி வரை அதிர்வை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் பெயர் களில் கணக்குகள் தொடங் கப்பட்டு, கட்டாத வீட்டுக்கு தலா இரண்டரை லட்ச ரூபாய் என டெல்டா ஏரியா வில் மட்டும் 140க் கும் அதிகமான வீடுகளுக்கான பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை மோடி அரசு டீடெய்லாக எடுத்து வைத்திருக் கிறது. அதனைத் தொடர்ந்து, பிரதமரின் விவசாயிகளுக்கான நிவாரணத்திலும் ஆளுங் கட்சியினரும் அதிகாரிகளும் புகுந்து விளையாடியிருப்பதை சீரிய ஸாக கவனிக்கத் தொடங்கியுள்ளது மோடி அரசு.
கடந்த திங்களன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் அழைப்பின் பேரில் ராஜ்பவன் சென் றார் முதல்வர் எடப்பாடி. தமிழக அரசின் குளறுபடி யான பல அறிவிப்புகள் பற்றி விசாரணை நடத்திய கவர்னர், பிரதமரின் விவசாயிகள் நிதி பற்றியும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 110 கோடி ரூபாய் மோசடிக்கு காரணம், அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த பட்டியலை, விவசாயிகளுக்கான நிவாரணத்தில் இணைக்க வேண்டிய நெருக்கடி தரப்பட்டதுதான் என்பதை மாவட்ட ஆட்சியர்களும் வேளாண் அதி காரிகளும் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த்திருப்பதைப் பற்றிய ரிப்போர்ட் டெல்லிக்குப் போனதுபோலவே, கவர்னருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் எடப்பாடியிடம் கோபத்தை வெளிப்படுத்தி வறுத்தெடுத்துள்ளார் பன்வாரிலால். மோசடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
யானை வாயில் போன கரும்பைப் பிடுங்குவதுபோல… போலிப் பயனாளிகளிடமிருந்து பணத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். சக்கையாவது மிஞ்சுகிறதா பார்க்கலாம்.
-சுந்தரபாண்டியன்
ஜீவாதங்கவேல், சுப்பிரமணி
_________________
விவசாயிக்கு விவசாயியே துணை!
திருவண்ணாமலை மாவட் டம் செங்கம் அடுத்த வடமாத்தூர் கிராமத்தில் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் மஞ்சுளா தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி சாலை, திருவண்ணாமலை டூ சேலம் செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுமையாக சேதம் அடைந்த நிலையில் அதனை அகலப்படுத்தி சரிவர சாலை அமைக்காத மத்திய மாநில அரசுகள், விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை மற்றும் பசுமை சாலை என அறிவித்து பசுமையை அழிக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்தும், எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 8 வழிச்சாலை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் னிறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கூட்டத்தில், எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபிராமன் விவசாய சங்கத்தைச் சார்ந்த அழகேசன் மாவட்ட விவசாய சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன், 8 வழிச்சாலை அமைவதால் தாங்கள் பாதிக்கப்படாத சூழ்நிலையிலும் 8 வழிச்சாலையில் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்காக பல விவசாயிகள் கலந்து கொண்ட னர். ஒரு விவசாயியின் வேதனையை உணர்ந்த இன்னொரு விவசாயிதான் துணையாக நின்று போராட முடியும் என்கிறார்கள் மண்ணையும் மக்களையும் காக்கும் மகத்தான பணியை செய்பவர்கள்.
-து.ராஜா