தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் 20 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இட ஒதுக்கீட்டு உரிமைக்காக நீண்டகாலம் போராடி, 27 உயிர்களைத் தியாகம் செய்து அதனைப் பெற்றது வன்னியர் சமூகம். வன்னியர்களோடு மிக பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளையும் இணைத்து அந்த 20 சதவீத இடஒதுக்கீட்டை 1989-ல் தனது ஆட்சியில் வழங்கியவர் கலைஞர். இந்த 20 சதவீதத்தில் மிக பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையினரான வன்னியர் சமூகத்தினருக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வந்தது பா.ம.க.
எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி சட்டமன்ற நாளில், வன்னியர் சமூகத்திற்கென 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமூகங்கங்களைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 35 வழக்குகள் போடப்பட்டன. அதில்,”"தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். அதனால் அந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'” என கோரியிருந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு, 7 கேள்வி களை எழுப்பியதுடன், ”"எந்த ஆய்வையும் மேற்கொள்ளாமல் தரவுகள் இல்லாமல் ஒரு பிரிவுக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம்'’என்று சொல்லி, சட்டத்தை ரத்து செய்தது. இது வன்னியர் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்தது.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசும், பா.ம.க.வும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்சநீதிமன்றத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர்கள் பலரையும் வைத்து வலிமையாக வாதாடியது தமிழக அரசு.
மார்ச் 31-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் இருவரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த தீர்ப்பினை உறுதி செய்து, இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இந்த தீர்ப்பினை தமிழக அரசும் பா.ம.க.வும் வன்னியர் சமூகமும் எதிர்பார்க்காததால் அவர்களுக்கு அதிர்ச்சி.
இதுகுறித்து தி.மு.க. எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சனிடம் கேட்டபோது, "வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக 7 கேள்விகளை முன்னிறுத்தி அதனடிப்படையில் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. குறிப்பாக, உள் இடஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளதா? ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டாமா? சாதிகளின் சமூகநிலை குறித்த தரவுகள் (புள்ளி விபரங்கள்) இல்லாமல் எப்படி வழங்க முடியும்? என்பது முக்கியமான கேள்விகள்.
இதுகுறித்து ஆராய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது; ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என தெரிவித்துள்ளனர். அதேசமயம், எவ்வித தரவுகளும் இல்லாமல் இடஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்தது தவறு எனச் சொல்லி, இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் (மு.க.ஸ்டாலின்) ஆலோசிப்பார்''’ என்கிறார் வில்சன் எம்.பி.
பா.ம.க.வின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே.பாலுவிடம் நாம் பேசியபோது, "அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் 1994-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட ஷரத்துகளின் அடிப்படையில், ஒரு மாநில அரசு எப்போது விரும்பினாலும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று உரிய மாற்றங்களை செய்துகொள்ளலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், உயர்நீதி மன்றம் எழுப்பிய 7 வினாக் களில் 6 வினாக்களுக்கு சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் சாதகமான பதிலை தீர்ப்பாகத் தந்தி ருக்கிறது உச்சநீதிமன்றம். வன்னியர்களுக்கு மட்டு மின்றி, சமூக நீதியையும் இட ஒதுக்கீட்டையும் விரும்பும் அனைத்து சமூகங்களுக்கும் கிடைத்த நல்ல தீர்ப்புதான் இது. தரவுகள் இல்லாததைச் சுட்டிக்காட்டி சட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும் தீர்ப்பின் 68-வது பாராவில், தணிகா சலம் ரிப்போர்ட், ஜனார்த்தனன் ரிப்போர்ட், அம்பாசங்கர் ரிப்போர்ட் அடிப்படையில் சொன்ன அப்சர்வேசனை எல்லாம் நீங்க பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மாநில அரசு விரும்பினால் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இடஒதுக்கீடு தருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனச் சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் எந்தளவுக்கு பின்தங்கியிருக்கிறார்கள் என்பதற்கான தரவுகள் முழுமையாகத் திரட் டப்பட்டு அதனடிப் படையில் மாநில அரசு ஒரு முடிவை எடுத்துக்கொள்ள லாம் என அழுத்த மாகவும் மிகத் தெளி வாகவும் சொல்லியிருக் கிறார்கள் நீதிபதிகள்.
அந்தவகையில், உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை பாதுகாக்க எப்படி அழுத்தமான வாதங்களை முன்வைத்து சமூக நீதியின் பக்கம் தற்போதைய தமிழக அரசு நின்றதோ அதனை உறுதிப்படுத்த, ஒரு புதிய ஆணையத்தை உடனடியாக அமைத்து, அந்த ஆணையத்திடம் உச்சநீதிமன்ற பரிந்துரைகளைக் கொடுத்து அதனடிப்படையில் 3 மாதத்தில் ஒரு அறிக்கையைப் பெற்று அதனை சட்டப்பேரவையில் வைத்து இடஒதுக்கீட்டிற்கான புதிய சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும்'' ‘’ என்கிறார் அழுத்தமாக.
வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு சாத்தியமில்லை; உள் இட ஒதுக்கீடுதான் சாத்தியம் என்பதை உயர்த்திப் பிடித்து முதன்முதலில் உயர்நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியது வன்னியர் கூட்டமைப்பு. இதன் சார்பில் தீவிரமாக இயங்கிய வர் பத்திரிகையாளர் கண்ணன் ஷத்திரியர். அ.தி.மு.க. ஆட்சியின் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றார். அதன்பிறகே, அ.தி.மு.க. அரசு, உள்ஒதுக்கீடு பற்றி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டது. v தற்போதைய தீர்ப்பு குறித்து கண்ணன் ஷத்திரியரிடம் நாம் பேசியபோது, "பொதுவாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையை வைத்துப் பார்க்கும் போது தனி இடஒதுக்கீடு சாத்தியமில்லை; உள் இடஒதுக்கீடுதான் சாத்தியம் என எங்களுக்குப் புரிந்தது. இதனையடுத்து 2010-ல் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் செயலாளருக்கும் வன்னியர் கூட்டமைப்பு சார்பில் ஒரு கடிதம் எழுதினோம்.
அதில், பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை பகிர்ந்து முறையே அருந்ததியினருக்கும் முஸ்லீம்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கியது போல, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி யிருந்தோம். அதனை ஏற்க இயலாது என கடிதத்தை எங்களுக்குத் திருப்பியனுப்பியது அரசு. உடனே இதனை எதிர்த்து, வன்னியர் கூட்டமைப்பு சார்பில் சி.என்.ராமமூர்த்தியை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.
உள் இடஒதுக்கீடு தொடர்பாக எங்களின் வலிமையான வாதங்களை ஏற்று, இதனை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அப்போது ஜெயலலிதா தலைமை யிலான அரசு வந்து விட்டது. ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. இப்படியே பல ஆண்டுகள் கடந்த நிலையில் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தோம். அதன்பிறகுதான் உள் இடஒதுக்கீடு குறித்த கவனத்தைப் பெற்றது அ.தி.மு.க.
இன்றைக்கு வந்துள்ள தீர்ப்பு ஏமாற்ற மளிக்கவில்லை. பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்திருக்கிறது. உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம். சமூகநீதிக்காக உண்மையாகவும் அழுத்தமாகவும் குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், வன்னியர்களுக்கான உள்இட ஒதுக்கீட்டிலுள்ள சிக்கல்களைக் களைந்து இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவார்னு நம்புகிறோம்'' என்கிறார்.
இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களும் ஆராய்ந்தபடி இருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய சி.வி.சண்முகம், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து வேகமாக இயங்கவேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. இதில் கவனம் செலுத்தாமல் சறுக்கினால் 69 சதவீத இட ஒதுக் கீட்டிற்கே ஆபத்து வந்துவிடும்'' என்கிறார். இதற்கிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் அவசர செயற்குழுவைக் கூட்டி விவாதித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.