நூறுநாள் வேலைத் திட்டம் எனும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கிராமப்புற மக்களின் பட்டினிச்சாவைத் தடுத்து நிறுத்தியது. அதே நேரத்தில், அந்தத் திட்டத்தின் பேரில் கணக்கெழுதி எந்த வேலையும் நடக்காமல் அரசு நிர்வாகம் கொள்ளையடிப்பது பற்றியும் புகார் எழுந்தது. அண்மையில் இது தொடர்பான வழக்கில், 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் நிலையில், தனியார் விவசாய நிலங்களில் ஏன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கிராமங்களில் வாழும் ஏழை, எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்களாவது வேலை கொடுக்கவேண்டும் என நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விவசாய, தொழிலாளர் அமைப்புகள் போராடியதன் விளைவாக, இடதுசாரிகள் துணையுடன் அமைந்த மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்ததுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். தற்போதும் தொட ரும் இந்தத் திட்டத்தில் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், கிராமப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. கிராமப் பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படுதல், கிடைக்கும் ஊதியத்தால் அம்மக்களின் வாங்கும் திறன் அதிகரித்தல், குறைந்தபட்ச வேலைவாய்ப்பால் இடம்பெயரும் அவசியம் தவிர்க்கப்படுதல், குளம் வெட்டுதல்- தூர்வாருதல்- சாலையமைத்தல் போன்ற பணிகளால் கிராமத்தின் உள்கட்டமைப்பும், அதை யொட்டிய பொருளாதார வளர்ச்சி அதிகரித்தல் என பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன.
இத்திட்டத்தைக் குறித்து பாராட்டுகளைப் போன்றே விமர்சனங்களும் உள்ளன. பல மாநிலங்களில் இத்திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு ஊதியம் தர தாமதமாகுதல், முழுமையான ஊதியத்தை அளிக்காமல் ஏமாற்றுதல், வேலைகளை எடுத்துச் செய்ததாகக் கூறி அரைகுறை அல்லது முழுமையாக செய்யாத பணிகளுக்கு நிதியைப் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனினும் அவையெல்லாம் நிர்வாகக் கோளாறுகளே அன்றி, திட்டத்தின் கோளாறுகள் அல்ல. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் ஏழை மக்களின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணமுடிகிறது.
கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் குறிப்பாக பேரூராட்சிப் பகுதிகளில் விவசாயத்தின் துணைத் தொழில்களை நம்பியும், கூலி வேலைக்குச் சென்று குடும்ப கஷ்டத்தை போக்கும் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. ஆகவே பேரூராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல போராட்டங்களைச் செய்துவந்தன. மத்திய அரசும் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இதை கண்டித்தும் உடனடியாக பேரூராட்சி பகுதிகளுக்கு நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி முன்பு இச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் கலந்துகொண்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க.மோடி அரசைக் கண்டித்தும் பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை உடனே நடைமுறைக்கு கொண்டு வரக்கோரியும் கோஷமிட்டனர். பிறகு பேருராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்போராட்டம் நடைபெற்றது.
கடந்த நிதியாண்டில் நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு 71000 கோடி ரூபாய் ஒதுக்கிய பா.ஜ.க. அரசு, நடப்பு நிதியாண்டில் அதில் 13 சதவிகிதத்தைக் குறைத்து வெறும் 61500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது.
கொரோனாவால் மாநிலம்விட்டு மாநிலம் சென்று வேலைபார்த்த லட்சக்கணக்கான பேர் தங்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர். வேலை வாய்ப்பிலும் இந்திய அளவில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் நிதியாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு வழக்கத்தைவிட கூடுதல் நிதியை ஒதுக்கி, கிராமப்புற உள் கட்டமைப்பை பலப்படுத்திக் கொள்ள வும், வேலைவாய்ப்பின்றி இருக்கும் கிராமப்புற ஏழை மக்களுக்கு நூறுநாள் வேலைத் திட்டத்தின் மூலம் வேலையளிப்பதுதான் சரியான வியூகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பேரூராட்சிப் பகுதிகளில் முகம் காட்ட, மோடியின் தலையசைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் காந்தி!
- ஜீவாதங்கவேல்