நூற்றாண்டைக் கடந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் பதவிக்கான விவகாரத்தில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மிரட்டல்கள் சென்றதோடு, அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகளை மிரட்டியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

100

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சிசெய்தபோது திருவண்ணா மலை நகரத்தில் கிறிஸ்துவ அமைப்பால் டேனிஷ்மிஷன் பள்ளி தொடங்கப்பட்டது. அப்பள்ளிக்குப் போட்டியாக இந்துப்பள்ளி ஒன்றைத் தொடங்க முடிவுசெய்தனர் ஊர்ப்பிரமுகர்கள். அப்படி 1902-ல் தொடங்கப்பட்டதுதான் விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளி. முதலில் தொடக்கப்பள்ளியாக இருந்து, தற்போது நடுநிலைப்பள்ளியாக இயங்குகிறது. அரசு நிதியுதவி பெறும் பள்ளியான இதனை கமிட்டியே நிர்வகித்து வருகிறது. இந்த கமிட்டியின் தற்போதைய தலைவராக உடுப்பி ஹோட்டல் ராமச்சந்திர உபாத்யா, துணைத்தலைவராக தனுஷ் உள்ளனர். இந்த பள்ளியின் தாளாளர் மற்றும் கமிட்டி செயலாளர் பதவிக் கான தேர்வுதான் தற்போது பிரச்சனையாக வெடித்துள்ளது.

இதுபற்றி அறக்கட்டளை நிர் வாகக் குழு உறுப்பினர் மாணிக்கவாசகம் நம்மிடம், ""அறக்கட்டளைச் செயலாளர்- தாளாளராக சுப்பிரமணி இருந்தார். அவர் கடந்த ஜூனில் இறந்துவிட்டார். கொரோனா காலம் என்பதால் நேரடியாக கூட்டம் நடத்தமுடியாது என்பதால், கடிதம் வாயிலாக கூட்டம் நடத்த முடிவு செய்தோம். என்னை செயலாளர் - தாளாளராக்க கடிதம் தந்தனர். அதன்படி கூட்டம் நடத்தி என்னை செயலாளர் - தாளாளராக தேர்வு செய்து, கையெழுத்திட்டனர். முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் விஸ்வநாதன் மகன் வழக்கறிஞர் பிரகாஷ்பாபு கிளப்பிய பிரச்சனைக ளால் இப்போது சங்கத்தில் என்னென்னவோ நடக்கிறது'' என்றார்.

Advertisment

மற்றொரு நிர்வாகக் குழு உறுப்பினரிடம் நாம் பேசியபோது, ""பள்ளி அறக்கட்டளைக்குள் சாதிப்பிரச்சனை இருந்து வந்தது. வழக்கறிஞர் விஸ்வநாதன் செயலாளரான போது சாதி ஆதிக்கம் அதிகமானது. இதனால் பள்ளி தரமற்றதாகி மாணவர் சேர்க்கை குறைந்துபோனது. அதனைத் தொடர்ந்து அறக்கட்டளை தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த மாணிக்கவாசகம் செயலாளராக்கப்பட்டார். இதனை மற்றொரு தரப்பு ஏற்றுக்கொள்ளாமல் வழக்கறிஞர் விஸ்வநாதன் மகன் பிரகாஷ்பாபுவைத் தூண்டிவிட்டனர்.

அதிகாரிகளுக்கு எழுதிய புகார் கடிதத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறக் கட்டளையில் 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள். அதில் ஒருவர் மறைவு, மற்றொருவர் விலகிவிட்டார். இப்போது 9 பேர் மட்டுமே உள்ளனர். அப்படியிருக்க இவர் எப்படி தன்னை நிர்வாகக் குழு உறுப்பினர் எனச் சொல்லி கடிதம் அனுப்பினார் எனத் தெரியவில்லை'' என்றார்.

விவகாரம் குறித்து வழக்கறிஞர் பிரகாஷ்பாபுவிடம் நாம் கேட்டபோது, ""நான் 2008-ல் இருந்து உறுப்பினரா இருக்கேன். எங்களுக்குள் (நிர்வாகக் குழு) இப்போ எந்த பிரச்சனையுமில்லை, காம்ப்ரமைஸ் ஆகி, விவகாரம் முடிவுக்கு வந்துடுச்சி. ஆகஸ்ட் 17-ஆம் தேதி நிர்வாகக்குழு கூட்டத்தில் எல்லாமே சரியாகிடும்'' என்றார். நிர்வாகக் குழு உறுப்பினர்களை மிரட்டியதாகக் கூறப்படும் வர்த்தக சங்க பிரமுகர் தனுஷை தொடர்புகொண்டு பேசியபோது, ""பள்ளியில் நான் யாரையும் மிரட்டவில்லை, நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, யாருக்கு சாதகமாகவும் இல்லை'' என்றார்.

Advertisment

இந்த பள்ளியோடு சம்பந்தப்பட்ட, உள்விவகாரம் அறிந்தவர்களோ, ""ஆளும்கட்சியின் மிக முக்கிய பிரமுகரான ஒருவர்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். அந்த முக்கிய அரசியல் புள்ளி இந்த இடத்தின் மீது குறிவைத்து விட்டார். எதிர்கட்சியிலுள்ள சில முக்கிய பிரமுகர்களும் ஆளும்கட்சி புள்ளியோடு கைகோர்த்துள்ளனர்.

கமிட்டி பதவிக்கு முதல் கட்டமாக தங்களுக்கு வேண்டப்பட்டவரை கொண்டுவந்து, நிர்வாகத் தலைமை யைப் பிடித்து பின்னர் நிர்வாகத்தை கைமாற்றுவது. சில காரணங்களை கூறி பள்ளியை இடம்மாற்றிவிட்டு நகரத்தின் மையத்தில் தற்போது பள்ளி செயல்படும் இடத்தை விற்பனை செய்வது என நீண்டகால நோக்கில் திட்டமிட்டு காய்நகர்த்துகிறார்கள்.

இதற்கு மாணிக்கவாசகம் தங்களுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால் நிர்வாகக் குழு உறுப்பினர்களை மிரட்டி, உருட்டி 17-ஆம் தேதி பிரகாஷ்பாபுவை செயலாளராக்கிவிட்டார்கள். நன்கொடை மூலம் கட்டப்பட்ட இந்த பள்ளியின் இன்றைய மதிப்பு 100 கோடி ரூபாய். இந்த இடத்தை அபகரித்து பங்கிட்டுக் கொள்ளவே இத்தனை வேலைகளும் நடைபெறுகிறது'' என்கிறார்கள்.

-து.ராஜா