எம். பானுமதி, கெங்கராம் பாளையம் -விழுப்புரம்

"தமிழக மக்கள் கடவுளை நம்பி ஆன்மிக வாதிகளாக மாறிவிட்டனர்'’என்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கருத்து?

கோயில்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் ஆன்மிக கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்தான். ஆனால், கடவுளின் பெயரை வைத்துக் கலகத்தை உருவாக் கும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் அல்ல. அந்த வகையில், தமிழ்நாட்டு மக்கள் கடவுளை நம்பித்தான் ஆன்மிகவாதிகளாக எப்போதும் இருக்கிறார்களே தவிர, பா.ஜ.க. செய்யும் அரசியலை வைத்து மாறவில்லை என்பதை அண்ணாமலையே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தே.அண்ணாதுரை, புதுப்பட்டி -கம்பம்

Advertisment

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய நுபுர் சர்மாவுக்காக பா.ஜ.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறதே?

போலிக் கண்ணீர் என்பது அதிக நேரம் தாக்கத்தை ஏற்படுத்தாது. நுபுர் சர்மா மீது பா.ஜ.க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், டெல்லி காவல்துறை வழக்கும் பதிவு செய்துள்ளது. இந்த நிலையிலும் பா.ஜ.க. எம்.பி.யும் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வருபவருமான பிரக்யா தாக்கூர், தன் ஆதரவை நுபுர் சர்மாவுக்குத் தெரிவித்திருக்கிறார். இந்தியா என்பது இந்துக்களுக்கான நாடுதான் என்றும், இங்கே சனாதன தர்மம்தான் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆக, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு மட்டுமல்ல, சனாதன தர்மம் என்பதன் மூலம், பிறப்பி லேயே சாதி ஏற்றத்தாழ்வை யும் தீண்டாமையையும் கடைப்பிடித்து, இந்துக் களையும் பிரிவினையுடன் தான் கடைப்பிடிப்போம் என்று வாக்குமூலம் கொடுத் ததுபோல இருக்கிறது பிரக்யா தாக்கூரின் கருத்து.

ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்

Advertisment

எந்த ஒரு கல்வித் தகுதியும் இல்லாத அரசியலில் இருக்கும் தகுதியை வைத்து பலர் அமைச்சர் பதவியைப் பெற்றுவிடுகிறார்களே, அவர்களால் தங்கள் இலாகாவை சிறப்பாக நடத்த முடியுமா?

அரசியல்வாதிகளிடம் மக்கள் எதிர்பார்க் கும் தகுதி, நிர்வாகத் திறன். அந்த நம்பிக்கை யில்தான் அரசியல்வாதிகளைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கிறார்கள். டாக்டராக இருப்பவர்தான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொறியியல் படித்தவர்தான் பொதுப்பணித்துறை-நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றுக்கு அமைச்சராக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால், காவல்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் முதல்வர்கள் ஐ.பி.எஸ். படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க் கிறீர்களா? ஐ.பி.எஸ். படித்த ஒருவர் அரசியலுக்கு வந்து உளறுவதைப் பார்க்கும்போது, துறை சார்ந்து படிக்காத அரசியல்வாதிகள், மக்களின் செல்வாக்குடன் வெற்றி பெற்று அமைச்சராகும் போது, தங்களுக்கு ஒதுக்கப்படும் இலாகாவை, அது பற்றி அறிந்த அதிகாரிகளை, சரியாக வேலை வாங்கிச் சிறப்பாக நடத்தினால் போதும் என்றே தோன்றுகிறது. ஒரு பக்கம், படிக்காத அரசியல்வாதிகளால் எப்படி இலாகாவை கவனிக்க முடியும் என உருட்டுவது, இன்னொரு பக்கம் படிக்காத காமராஜர்தான் தமிழ்நாட்டை சிறப்பாக நிர்வகித்தார் என உருட்டுவது என்பது நமக்கு வழக்கமாகிவிட்டது.

மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஆளும் தி.மு.க. அரசிடம் ஏன் இந்த தடுமாற்றம்? ஒன்றை முந்திக்கொண்டு அறிவிப்பதும் பிறகு அதை வாபஸ் பெறுவதும் தொடர்கிறதே?

எண்ணித் துணிக கருமம் என்கிறது திருக்குறள். ஆழ்ந்து சிந்தித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அன்றாடச் செய்திகளுக் காக அறிவிப்புகளை அவசரமாக வெளியிட்டால், தடுமாற்றங்கள் நீடிக்கவே செய்யும். அதுவும், தொலைக்காட்சிகளிலும் சோஷியல் மீடியாக்களிலும் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் செயல்படுவது என்பது அரசுக்கு சரியாக இருக்காது. செய்திப் பசி என்பது ஊடகங்களுக்கு இருக்கலாம். அதற்குத் தீனியாக அரசின் நட வடிக்கைகள் மாறக்கூடாது. எந்தப் பிரச்சினைக்கும் நிரந்தர-சுமூகத் தீர்வைத்தான் மக்கள் எதிர்பார்க் கிறார்கள்.

nnn

வாசுதேவன், பெங்களூரு

கிருஷ்ண பரமாத் மாவின் பேரன் நான் என்று சீமான் கூறியுள்ளாரே?

முப்பாட்டன் முருகன் என்றதன் மூலம் முருகனுக்கு கொள்ளுப் பேரன் ஆனவர் சீமான். தற்போது கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் என்கிறார். பா.ஜ.க.வின் ஆன்மிக அரசியலுக்குப் பதிலடியாக அதே பாணியில் பதில் தர முயன்றிருக்கிறார் சீமான். சினிமாவில் ராமர், கிருஷ்ணர் வேடங்களில் மக்களைக் கவர்ந்து, அரசியல் கட்சி ஆரம்பித்து முதலமைச்சரான வர் என்.டி.ராமராவ். ஆனால், அந்த மேக்கப் அரசியல்களத்தில் அதிககாலம் நீடிக்கவில்லை. என்.டி.ஆரின் வெற்றி-தோல்வி என்பது அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளால்தான். சினிமா ஹீரோக்களை அரசியல் தலைவராகவோ, அரசியல் தலைவர்களைக் கடவுளாகவோ பார்க்கும் காலம் மாறிவிட்டது.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட குஜராத் பெண் குறித்து?

கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே பார்த்து தன்னம்பிக்கை கொள்வது, முகத்தில் மீசை வரைந்து முறுக்கிவிட்டுப் பார்ப்பது, வீட்டில் உள்ள ஆண்களின் சட்டையை அணிந்து கொள்வது எனத் தங்கள் மீது தாங்களே அன்பு செலுத்துபவர்கள் உண்டு. இது நீண்டகால வழக்கம். தற்போது சோஷியல் மீடியா காலத்தில், அந்த அலங்காரமே சற்று மாறி, தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதாக வெளிப்பட்டுள்ளது. ஆண்கள் கட்டமைத்த உலகில் பெண்களின் செயல்பாடுகள் எப்போதுமே பேசுபொருள்தான்.