தான் தாக்கப்பட்டதாக ஜெ., கொடுத்த புகார்! அதன்பின் நடந்த அரசியல்!

k.p.ramalingam arrest issue

k.p.ramalingam arrest issue

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பதையும், பல்வேறு சர்ச்சைகளையும் உருவாக்கிய ஒரு தருணம் எம்.ஜி.ஆரின் மரணம். கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா எங்கே கட்சியைப் பிடித்துவிடுவாரோ என்கிற சில மூத்த தலைவர்களின் அச்சத்தால் அவரது சொந்த கட்சியினரே அவரை ஒதுக்கிவைக்கும் சூழல் அப்போது உருவாகியிருந்தது. எம்.ஜி.ஆர் உயிரிழந்த செய்தியறிந்து அவரது உடலைப் பார்க்க ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றபோது, ஜெயலலிதாவிற்கு காண முடிந்தது அடைக்கப்பட்ட தனது தலைவர் வீட்டுக் கதவுகளை மட்டுமே.

ஜெயலலிதா ராமாவரம் வீட்டில் எம்.ஜி.ஆர் உடலைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோதே, அவரது உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்து நேராக ராஜாஜி ஹாலுக்கு சென்ற ஜெயலலிதா, இரண்டு நாட்கள் எம்.ஜி.ஆர் உடலின் அருகேயே நின்றார். பின்னர், எம்.ஜி.ஆர் உடல், ஊர்வலத்திற்காக ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டபோது, ஜெயலலிதா அதில் ஏற முற்பட்டார். அப்போது அங்கு நின்ற சிலரால் ஜெயலலிதா வாகனத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டார். ஆனால், அப்போது ஜானகி எம்.ஜி.ஆரின் சகோதரர் மகன் தீபன், மற்றும் ராசிபுரம் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.ராமலிங்கம் ஆகியோர் ஜெயலலிதாவை வேண்டுமென்றே கீழே தள்ளியதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, இறுதி ஊர்வலத்திலிருந்து தனது வீட்டிற்குத் திரும்பிய ஜெயலலிதா, தீபன் மற்றும் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, 1991 தேர்தலில் வென்று ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபின்னர், அப்போது திமுகவில் இருந்த கே.பி.ராமலிங்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக 21-9-1991 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

தி.மு.க.வைத் துரத்தும் திக் திடுக்.!கே.பி.ராமலிங்கம் கைது.

‘‘ஆப்பு அசைத்த குரங்கு கதை’’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆப்பு அசைத்ததுகூட பரவாயில்லை. மரத்தின் இடையில் தன் வால் மாட்டியதுகூட தெரியாமல் ‘ஆப்பைஅசைக்க’ குரங்கின் வால் துண்டானது. அதேபோல் ஒருகூத்தை நடத்தினார் தமிழகமுதல்வர் ஜெயலலிதா.

ஏழைஎளிய மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யவேண்டும் என்றுதான் மக்கள் ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அவரோ பதவி அதிகாரத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களைப்பழிவாங்குவதிலேயே குறியாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாணவர்களுக்கு ஜெயலலிதா ஆற்றிய உரையைக் கண்டித்து கே.பி.ராமலிங்கம் ஜெயலலிதாவுக்கு எதிராக கொஞ்சம் காரசாரமாகவே ஒரு அறிக்கையை விடுத்தார்.

அறிக்கையைப் பார்த்த ‘ஜெ’ கொதித்துப் போனார். அந்த நிமிடமே தடாலடி திட்டம் ஒன்றையும் தயார் செய்தார். ‘‘போலீசார் வேண்டாதவர்களைக் கைது செய்து பழிவாங்கத் தேர்ந்தெடுக்கும் நாள் வெள்ளிக்கிழமைதான். (நமக்கும் இது நன்கறிந்த உண்மை).அதுவும் முதல்வர் உத்தரவுடன் கைது நடவடிக்கை என்றால் சும்மாவா?’’

6.9.91 வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே போலீசார் மூன்றுபிரிவுகளாக இயங்கி கே.பி.ராமலிங்கத்தை பின் தொடர்ந்தார்கள். வழக்கம்போல் அவர் குடியிருக்கும் சா.கணேசன் (திமுக முன்னாள் எம்.எல்.ஏ) வீட்டிலிருந்து காலை பத்துமணிக்குப் புறப்பட்டு அறிவாலயம் சென்றுவிட்டார். மதியம் ஒருமணிக்கெல்லாம் கோட்டூர்புரம் துரைமுருகன் வீடுசென்று அங்கிருந்து மாலை ஐந்துமணிக்கு எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வந்து சலவைக்குப் போட்டிருந்த தனது வேட்டி சட்டைகளை எடுத்துக்கொண்டு நேராக வீடுதிரும்பியபோது மாலை மணி ஏழு.

எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் ஒருவரும் சந்தேகப்படாத வகையில் அவரைக் கைதுசெய்து கொண்டுசெல்ல திட்டமிட்டிருந்த போலீசார்களுக்கு அன்று அதற்கான வாய்ப்பில்லை.

மீண்டும் மறுநாள் சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட கே.பி.ஆரைத் தொடர்ந்து முன்னும்பின்னும் மூன்று அம்பாஸிடர் கார்கள். சற்று தொலைவாக சி.ஆர்.பி.வேன் ஒன்றும் ஃபாலோ செய்தன. ரங்கராஜபுரம் வீட்டுக்குச் சென்று பயணத்துக்கு தயாரானபோது மதியம் மணி 2.40. வீட்டிலிருந்த சா.கணேசனிடம் சொல்லிவிட்டு சுமார் ஒருகிலோமீட்டர் தூரம் வரை செல்வதற்குள் வெஸ்ட் மாம்பலம் ஜூப்ளிசாலையும் ஆர்யாகவுடர் தெருவும் சந்திக்கும் இடத்தில் கே.பி.ஆரின் காரை வழிமறித்து முன்னால் நின்றது டி.எம்.எம்.8789 வெள்ளை நிற அம்பாஸிடர்.

இரண்டு பக்கங்களிலும் வெள்ளை, பச்சை நிற அம்பாஸிடர் கார்கள். பின்னால் சி.ஆர்.பி.வேன்.

இடைத்தேர்தலுக்கு இரண்டுநாள் முன்னதாக சென்னை வந்தவர் திரும்பி நீண்டநாள் கழித்து குடும்பத்தைப் பார்க்க ஆவலுடன் செல்லும்போது இப்படி ஒரு தடையா? தன்னைச்சுற்றி இரண்டுநாளாக நடந்துவந்த இனி நடக்கப்போகும் விபரீதங்கள் எதையும் அறியாத கே.பி.ஆர். காரிலிருந்து கீழிறங்கியதும் போலீசார் அவரைச்சுற்றிவளைத்து தங்கள் காரில் ஏறும்படி சொன்னார்கள்.

நம்மை யாரும் கடத்திச்செல்லத்தான் இப்படி செய்கிறார்களோ! என்று நினைத்த கே.பி.ஆர். பின்னால் போலீஸ்வேன் இருப்பதை பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாகி இருக்கிறார்.

‘‘உங்களை அரெஸ்ட் செய்கிறோம்’’

‘‘என்ன காரணம்? நான் ஒரு தப்பும் செய்யலியே?’’

‘‘அதெல்லாம் அங்கு வந்து சொல்லுங்க’’

‘‘இது அநியாயம்! நான் வரமாட்டேன். அரெஸ்ட் செய்றதுக்கு வாரண்ட்வச்சுருக்கீங்களா? காரணத்தை சொன்னாத்தான் நான் வருவேன்.’’

‘‘நீங்க டீசென்ட்டா நடந்துக்கிட்டா நாங்களும் டீசென்ட்டா நடந்துக்குவோம்.இல்லைனா நாங்களும் கொஞ்சம் கடுமையா நடந்துகொள்ள வேண்டி வரும்’’என்று அறிவுரை கூறினார் இன்பசாகரன் என்ற போலீஸ் அதிகாரி.

நடுரோட்டிலேயே நடந்த இந்தசம்பவத்தை ஏதோ சினிமா படப்பிடிப்பு என்பது போல நினைத்து ஒருகூட்டமே கூடிவிட்டது. அதில் அப்பகுதியிலேயே வசிக்கும் தி.மு.க. தொண்டர ஒருவர் இருந்தார். விபரீதத்தை புரிந்து கொண்ட அவர் உடனே அறிவாலயத்துக்கு போன் பண்ணினார்.

மாவட்ட செயலாளர் டி.ஆர்.பாலு, சீதாபதி, சா.கணேசன், வை,கோபால்சாமி அனைவரும் அறிவாலயத்துக்கு அவசரஅவசரமாக வரவழைக்கப்பட்டனர். மாலை சுமார் மூன்றுமணிக்கெல்லாம் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கே.பி.ஆர். இரவு பத்துமணிவரை அங்கேயே ஒரு அறையில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். ஆனால் டி.ஆர்.பாலு வை.கோ உள்ளிட்ட தி.மு.க. வழக்கறிஞர் குழு இரவு பத்து மணிக்குள் கோர்ட்டில் கொண்டுவந்து ‘ரிமாண்ட்’ செய்வார்கள் என்று ‘பெயில்’ எடுக்கத் தயாராய்இருந்தார்கள்.

பத்துமணியாகியும் கே.பி.ஆரை கோர்ட்டுக்குக் கொண்டுவராததால் டி.ஆர்.பாலு. நேராக கமிஷனர் அலுவலகம் சென்று கே.பி.ஆரை. சந்திக்க முயன்றார். ஆனால் அவரை சந்திக்க போலீசார் விடவில்லை.

அங்குள்ள அதிகாரிகளிடம் ‘‘எந்த அடிப்படையில் கைது செய்திருக்கிறீர்கள்? அவர் மீது என்ன புகார் கொடுக்கப்பட்டுள்ளது? ஏன் இன்னும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவில்லை? போன்ற கேள்விகளை முன்வைக்க....எங்களுக்கு எதுவும் தெரியாது.அரெஸ்ட் பண்ணச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. எங்க உயர்அதிகாரிங்க வெளியில் போயிருக்காங்க.அவங்க வந்தவுடன்தான் விவரம்தெரியும்’’ என்றார் ஒரு அதிகாரி.

எது எப்படிஇருந்தாலும் அவரை ஒழுங்கா ‘ட்ரீட்’ பண்ணனும். ஏதாவது ஏடாகூடமா மரியாதை இல்லாம அவர்கிட்ட நடந்துகிட்டீங்கன்னா அப்புறம் நடக்குறதே வேற என்று அங்கிருந்த அதிகாரியிடம் எச்சரிக்கை விடுத்து விட்டு டி.ஆர்.பாலு புறப்பட சா.கணேசன் மட்டும் அங்கேயே இருந்தார். இரவு பத்துமணிக்கு கே.பி.ஆரை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அவரை வேஷ்டி-சட்டையைக் கழட்டச்சொன்னார் போலீஸ்காரர் ஒருவர். ‘‘நான் என்ன கிரிமினல் குற்றவாளியா?ஒரு அரசியல் கைதியை எப்படி ட்ரீட் பண்ணனும்னு உங்களுக்குத் தெரியாதா?’’ என்றவரிடம் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு வந்துள்ள உத்தரவுப்படிதான் நாங்க நடந்துக்க முடியும்’’ என்றனர் போலீசார்.

வேறுவழியின்றி தனது ஆடைகள், அரைஞான் கயிறு உட்பட அனைத்தையும் அகற்றிவிட்டு போட்டிருந்த டிராயருடன் லாக்கப்புக்குள் சென்றார் கே.பி.ஆர். மறுநாள் காலை ஒன்பது மணிவரை அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. பத்து மணிக்கெல்லாம் மீண்டும் போலீஸ்கமிஷனர் அலுவலகம் கொண்டு வரப்பட்டார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை மூன்று மணிக்குத்தான் ‘ரிமாண்ட்கோர்ட்’ நீதிபதி வருவார். அது வரையில் கே.பி.ஆரின் மீது என்னென்ன செக்சனில் கேஸ் போடுவது என்பது குறித்து அதிகாரிகள் பெரிய டிஸ்கசன் ஒன்றை மேலிடத்தில் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாக மாலை மூன்றுமணிக்கு கோர்ர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார் கே.பி.ஆர். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற 25.12.87 அன்று ராணுவ வண்டியின் மீதிருந்த தன்னை தீபன் மற்றும் பலர் தாக்கியதாக 27.12.87 அன்று புகார் தந்தி ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேல்விசாரணை செய்தபோது கே.பி.ராமலிங்கம் தன்னைத் தாக்கியதாக ஜெயலலிதா புகார் செய்ததால் கே.பி.ஆரைக் கைது செய்திருக்கிறோம்.

‘‘தடுத்துநிறுத்தல்,கொடுங்காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்தல், செக்சன் (341,325,354) போன்ற வழக்குகள் கே.பி.ஆர்.மீது போட்டு கைது செய்யப்பட்டிருக்கிறது’’ நீதிபதியிடம் அரசாங்க வக்கீல் இப்படிக் கூறியதும், ‘‘முதலில் எனக்கு இரண்டு விசயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற நீதிபதிசம்பவம் நடைபெற்றது எப்போது?’’ என்று கேட்க, 24.12.87 என்று அரசு வழக்கறிஞர்சொன்னார்.

உடனே அருகிலிருந்த போலீஸ் அதிகாரி 25 ஆம் தேதி என்றதும்

நல்லாபாத்து சொல்லுங்க..இருபத்தி நாலா? இருபத்தி ஐந்தா? என்று அரசு வழக்கறிஞர் படபடப்புடன் போலீஸ் அதிகாரியிடம் கேட்டுவிட்டு, பிறகு 25.12.87 என்றார்.

உடனே தேதியையாவது சரியாகச் சொல்லுங்கள் என்றார் நீதிபதி. தற்போது குற்றவாளியைக் கைது செய்வதற்காக இடையே மாற்றப்பட்ட செக்சனைக் கோடிட்டுக் காட்டி டாக்டர் சர்ட்டிபிகேட் நகலையும் நீதிபதியிடம் காட்டினார் அரசு வழக்கறிஞர்.

அனைத்தையும் பரிசீலித்த நீதிபதி சிரித்துக்கொண்டே, ‘‘சரி... இந்த வழக்கில் குற்றவாளியை ஜாமீனில் விடலாமா?’’ என்றார்.‘‘வழக்கில் செக்சன்களைக் கொடுத்திருக்கிறோம். உங்களுக்குத் தெரியாதா?’’ என்று அரசு வழக்கறிஞர் அசடுவழிய,

இது கடைசிக் கேள்வி, ‘‘ஜாமீனில் விடுவாதா?வேண்டாமா?’’ என்றார் நீதிபதி. ‘‘ஜாமீனில் விடலாம். அதற்கு விதி இருக்கிறது’’ என்று அரசு வழக்கறிஞர் கூறியதும் ஜாமீனில் விடுவித்து மீண்டும் வரும் 2௦ ஆம் தேதி திரும்ப கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றார் நீதிபதி.

மொத்தத்தில் ஜெயலலிதா ஓன்று நினைக்க நடந்ததோ வேறு ஒன்றாகி விட்டது. ஆனால் தானாகவந்த இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஜெயலலிதாவைக் கூண்டில் ஏற்றவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது கே.பி.ஆர்.வட்டாரம்.

k.p.ramalingam arrest issue

வழக்கை சந்திக்க வரட்டும் ஜெயலலிதா! - கே.பி.ராமலிங்கம். பேட்டி.

நக்கீரன்: நீங்கள் ஜெயலலிதாவுக்கு பெரும் காயம் ஏற்படுத்தியிருப்பதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளதே?

கே.பி.ஆர்: ஆமாம். ஆனால் மூன்றுமாதம் கழித்து தனியார் டாக்டர் ஒருவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது.அதையும் நான் கேட்டேன். அதற்கு, தாக்கியபோது உள்காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவு மூன்றுமாதம் கழித்துதான் தெரிந்திருக்கிறது. வயிற்றில் எட்டி உதைத்ததால் கர்ப்பப்பையில்அடிபட்டு கர்ப்பப்பையையே அகற்றும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்’’ என்று டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார். ‘முதுகில் அடித்தான்.பல் போய் விட்டது’ என்பது போல எவ்வளவு அழகாககதையை ஜோடித்திருக்கிறார்கள்? நான் யாரையும் தாக்கவில்லை. எந்தக் குற்றமும் புரியவில்லை.பதினைந்துவருடங்களாக என்னைப் பாசத்துடன் வளர்த்து ஆளாக்கிய என் தலைவருடைய பூத உடல் மீது ஒரு பெண்ணின் செருப்புக்கால் பட்டதைப் பார்த்து மனக்கொதிப்புடன் அவரைக் கீழே இறங்குங்கள் என்றேன். இது தவறா?

அப்படி அவரை நான் தாக்கி இருந்தால் அங்கிருந்த போலீசின் அனைத்துப் பிரிவு அதிகாரிகள் முப்படைத் தளபதிகள் உட்பட பலரும் என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டா இருந்திருப்பார்கள்? எந்தவித சாட்சியும் தேவையின்றி அன்றே நேரடியாக என்னைக் கைது செய்திருக்கலாமே?

நக்கீரன்: உங்களைத் தூண்டி விட்டதாக நீங்கள் குற்றம் சாட்டும் நபர்கள் அனைவரும் தற்போது ஜெயலலிதா பக்கம் இருக்கும்போது நீங்கள் எப்படி அதை நிரூபிப்பீர்கள்?

கே.பி.ஆர்: சம்பவம் முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை இராணுவ வண்டியில் இருந்து அகற்றும் காட்சியின் முன்பாக என்னை ஆர்.எம்.வீயும் முத்துச்சாமியும் அழைத்துப் பேசுவார்கள்.அதேபோல்,ப.சிதம்பரத்திடம் நாவலர் பேசுவார். அந்தக்காட்சிக்கு அடுத்ததாகத்தான் நான், தீபன், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்.

அவர்கள் வேண்டுமானால் மேற்படிக்காட்சிகளை வெட்டிவிட்டு கோர்ட்டில் காட்டலாம். ஆனால் நான் இப்படிநடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துதான் ரகசியமாக அந்த வீடியோ கேசட்டை வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதைக் கோர்ட்டில் காட்டி நிரூபிப்பேன்.

நக்கீரன்: முடிவாக இந்த வழக்கு குறித்து என்ன சொல்கிறீர்கள்?

கே.பி.ஆர்: மூன்றரை வருடங்கள் ஒடி விட்டது. ஆகையால் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனே ஜெயலலிதா வழக்கைச் சந்திக்க வேண்டும். தனக்கிருக்கும் பொறுப்புகளையும் அதிகாரத்தையும் காரணம் காட்டி வழக்கை தாமதம் செய்யக்கூடாது. காரணம், அவரைப்போலவே எனக்கும் பலவேலைகள் இருக்கிறது. இந்த வழக்கை நான் சந்திக்கத் தயாராக இருப்பது மட்டுமல்ல, எக்காரணம் கொண்டும் வழக்கில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

என்னைப் போலவே ஜெயலலிதாவும் உறுதியுடன் நின்று உடனே குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்து வழக்கை விரைவில் முடிக்க ஒத்துழைப்பார் என நம்புகிறேன்.

தீபன் பேட்டி:

மீண்டும் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கும் எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வல ராணுவ டிரக் ஜெயலலிதா விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஜானகி அம்மாளின் தம்பி மகன் தீபனும் ஒருவர். சம்பவத்தன்று நடந்த விவரங்கள் பற்றி நம் நக்கீரன் முதல் இதழில் பேட்டி அளித்திருந்தார் தீபன்.

அந்தப் பேட்டி மீண்டும் இதோ-

தீபன்: சார்,எனக்கு அந்த அம்மா (ஜெயலலிதா) மேலே எந்தக் கோபமோ, பகையோ கிடையாது.இன்னும் சொல்லப் போனால் ...நான் அந்த அம்மாவை சினிமாவில் பார்த்திருக்கிறேனே தவிர நேரில் முதல் தடவையாகப் பார்த்ததே ‘சாச்சா’ (எம்.ஜி.ஆரை அப்படித்தான் அழைக்கிறார்)வோட இறுதிஊர்வலத்தன்னைக்குதான்.

அப்படி இருக்கையில் எனக்கு ஏன் அந்த அம்மாமேலே வெறுப்பு வரப் போகுது? சம்பவம் நடந்த அன்னைக்கு ‘அவுங்க’ தான் அத்துமீறி நடந்துகிட்டாங்க.

சாச்சாவோட உடம்பு இருக்கற மிலிட்டரி டிரக்குல செருப்புக்காலோட ஏற வந்தாங்க. அதைப் பார்த்ததும் என் மனசு அப்படியே நொறுங்கிப் போயிடுச்சு. அது மட்டுமில்ல...அவர் உடல் மேலே பெரிய தேசியக்கொடி வேறபோர்த்தியிருந்தாங்க. அந்தக் கொடி டிரக் முழுக்க பரவி கிடந்துச்சு. அதையும் செருப்புக் காலோட மிதிச்சுக்கிட்டே டிரக்கில அந்த அம்மா ஏறவந்ததும் நான் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். என்னையே அறியாம அவுங்க கையைப் பிடிச்சு கீழே இறக்கினேன்.

அந்த அம்மாவோட முரட்டுத்தனமான பிடிவாதமும் என்னோட உணர்ச்சி வசப்பட்ட தடுப்பும் ஏதோ ஒரு ஆக்ஸிடென்ட் மாதிரி நடந்து போயிடுச்சு" என்றார்.

அனைத்துக்கும் கிளைமாக்ஸ் காட்சி 1௦.9.91 அன்று மாலை 3.3௦ க்கு நடந்தது. அதாவது ஜெயலலிதாவின் தந்தி புகாரில் கூறியுள்ளபடி முதல் குற்றவாளியான தீபன் 1௦.9.91. அன்று மாலை எழும்பூர் பத்தாவது குற்றவியல் நீதிபதி முன்பு தனது வக்கீலுடன் தானாக வந்து ஆஜரானார். நீதிபதியோ அனைத்துக் கோப்புகளையும் பரிசீலித்து ஒரு அதிர்ச்சி தரும் தகவலைக் கூறினார்.

அதாவது மூன்று வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட புகார் கடந்த வருடம் 1.3.91 அன்றே அப்போதிருந்த நீதிபதி மூலம் தள்ளுபடி செய்யப்பட்டு ‘வழக்கு காலாவதி’ ஆகிவிட்டது. அதனால் மேற்கொண்டு அவ்வழக்கின் மீது ஒருநபரை ரிமாண்ட் செய்ய தன்னால் முடியாது என்பதுதான்.

என்னவோ ஏதோ என்று தானாக சரணடைய வந்த தீபன் சந்தோசத்துடன் திரும்பி விட்டார். தீபன் விவகாரம் கோர்ட்டுக்கு வந்த அன்று தி.மு.க. தொண்டர் ஜாலியாகப் பாடிய பாட்டு ‘‘நினைத்தது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது அம்மா பொண்ணு’’..என்ற பாடல்தான்.

ஜெ மீது திமுக வழக்கு!

கே.பி.ஆரின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் ராஜாஇளங்கோவைச் சந்தித்தோம். ‘‘ஜெயலலிதாவின் தந்தி புகாரில் எனது கட்சிக்காரர் கே.பி.ஆரின் பெயர் கிடையாது.மேலும் முதலில் பதிவுசெய்த வழக்கின் பிரிவுகள் 341,323,354 இன் படி மூன்று வருடங்களில் வழக்கு காலாவதி ஆகிவிடும். அதனால்தான் கொடுங்காயம் ஏற்படுத்தியதாக ஒரு பிரிவைச் சேர்த்து (325) அதற்காக 323 ஐ 325 ஆக மாற்றி (இதற்கு ஏழுவருடக் காலக்கெடு உண்டு) தனக்கு வேண்டப்பட்ட டாக்டர் ஒருவரிடமும் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது.

கோர்ட்டில் குற்றவாளியை ஆஜர்படுத்தும் போது ‘குற்றப்பத்திரிகை, டாக்டர் சர்ட்டிபிகேட், மேல் விசாரணை செய்ததாகக் கூறப்படும் நபரின் (ஜெயலலிதா) ஸ்டேட்மென்ட் இம்மூன்றும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.ஆனால், தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கூறிய எதையும் தாக்கல் செய்யாமலேயே போலீசாரின் வழக்கு குறிப்பேட்டை வைத்து கைது செய்ததாகக் கூறப்பட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாங்கள் கோப்புகள் எதையும் பார்க்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது.ஆனால் தற்போது தீபன் விவகாரத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிட்டது.எந்தவித அடிப்படைக் காரணமும் இல்லாமல் ஒரு முன்னாள் எம்.எல்.ஏவை வருமானவரி கட்டும் ஒரு முக்கிய நபரை இப்படி இருபத்தி நான்கு மணிநேரம் காவலில்வைத்து ஒரு கிரிமினல் குற்றவாளியைப் போல் ஜட்டியுடன்இரவு முழுவதும் லாக்கப்பில் அடைத்து வைத்ததை போலீசார்களும் அவர்களைத் தூண்டியவர்களும் எந்தவிதத்தில் நியாயப் படுத்தப் போகிறார்கள் என்பதை நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன்.

‘‘சட்டவிரோதமாகக் காவலில் வைத்தது, மானபங்கப்படுத்தியது, துர்நோக்கத்தோடு முகாந்திரம் இன்றி வழக்கு தொடர்ந்தது போன்ற மூன்றுக்கும் சேர்த்து வழக்குப்போடுவேன்.வெற்றியும்பெறுவேன்’’ என்றார் ராஜா இளங்கோ.

நமது சட்ட ஆலோசகரும் முன்னாள் சபாநாயகருமான பி.ஹெச். பாண்டியனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "குற்றவியல் நடைமுறைச் சட்டம் 358 CRPC படி அடிப்படையில்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியாது. மேலும் இ.பி.கோ.211 இன்படி பொய்யான குற்றச்சாட்டு கூறி கெட்ட நோக்கத்துடன் ஒருவர்மீது வழக்குதொடரப்பட்டால் மேற்படி கைது செய்யத் தூண்டியவர்களுக்கு அபராதமோ அல்லது இரண்டு வருட தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ கொடுக்கப்படலாம். போலீசாரைத் தூண்டிவிட்டு கே.பி.ராமலிங்கத்தை கைதுசெய்யக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கு நீதிபதி பாரபட்சமல்லாத முறையான தீர்ப்பை வழங்குவாரா?" என்றார்.

admk App exclusive jayalalitha
இதையும் படியுங்கள்
Subscribe