மிழ்நாட்டில் ஏழு திருச் சுற்றுக்களுடன் அமையப்பெற்ற திருக்கோவில் ஸ்ரீரங்கம். திருச்சுற்றுக்கள் அனைத்தும் இன்றும் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வேழு திருச்சுற்றுக்களும் தத்துவார்த்த அடிப்படையில், நம் உடம்பிலுள்ள ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்ரம் ஆகிய ஏழு தாதுக்களைக் குறிப்பதாகக் கூறுவர்.

Advertisment

உடம்பின் மையத்தில் உயிர் இருப்பதுபோல, கோவிலின் மையத்தில் அரங்கன் குடி கொண்டுள்ளான் என்பர். இதனை சப்தப்பிரகாரம் என்றும் அழைப்பர். இச்சுற்றுகள் அனைத்தும் உயர்ந்த கல் மதில் சுவரால் வளைத்துக் கட்டப்பட்டுள்ளன.  ஒவ்வொரு திருச்சுற்றின் நடுப்பகுதி, ஒரு கோபுரத்தைக் கொண்டுள்ளது. என்றாலும் அரங்க நாதர் பள்ளி கொண்டுள்ள கருவறையை ஒட்டி, மிக நெருக்கமாக, உள்ளடங்கிய நிலையில், திருச்சுற்று ஒன்று உள்ளது. இது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்களின் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக, பூட்டிய நிலையில் உள்ளது.  

Advertisment

இதனை "திரு உள்நாழி' என்று பொருள் தரும் "திருவுண்ணாழிச்சுற்று' என்ற சொல்லால் குறிப்பிடுவர்.

இத்திருச்சுற்றை தனித்த சுற்றாகக் கருதாமல், கருவறையின் உள்ளே உள்ள ஒரு பகுதியாகக் கருதியதால் இதனைத் தவிர்த்து ஏழு சுற்றுக்கள் என்றே கணக்கிடப்படுகின்றது.  

Advertisment

முதல் சுற்று: திருஉண்நாழி சுற்று கருவறையைச் சுற்றி சதுர வடிவில் இச்சுற்று உள்ளது. கருவறையை முறைப்படி வலம்வர வேண்டும் என எண்ணுபவர்கள் இச்சுற்றினைப் பயன்படுத்தினர்.  திருச்சுற்று என்பது மக்கள் பலமணி நேரம் காத்திருப்பதற்காக கட்டப்பட்டது அல்ல. இறைவன், தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கவும், தன் மக்களைக் கண்டு அருள் பாலிக்கவும், நடைபயின்று வருவதற்காக அமைக்கப்பட்டவை. "எது வினை, இடரிலை, இனிது நும் மனையும்'' 

என்று, இராமன் அயோத்தியில் உலா வரும்போது எதிர் வருவோரைக் கேட்டதாகக் கம்பன் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. முன்பு இக்கோவிலில் பிரம்மோற்சவம் நிகழும்போது, உற்சவரான நம் பெருமாள், பத்தாம் நாளில் இத்திருச்சுற்றில் சுற்றிவந்து கருவறையை அடைவாராம் ஆனால் இது தற்போது வழக்கத்தில் இல்லை.

விபீடணனிடமிருந்து ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்றுக்கொண்ட தர்ம வர்மா, இக்கோவிலின் தொடக்க கால கட்டுமானப் பணியை மேற்கொண்டதால் இத்திருச்சுற்றுக்கு தர்ம வர்மா திருச்சுற்று என்று பெயரிடப்பட்டது.  இட்சுவாகு குலதனம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்க விமானத்தைச் சுற்றிவருவதால் இதற்கு "விமான பிரதட்சணம்' என்றும் பெயர். 

கருவறையின் கருமணி: தர்மவர்மா திருச்சுற்று கருவறையை உள்ளடக்கியது ஆகும். இக்கருவறையில் பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் அரங்கன், பாம்பணையில், கிடந்த கோலத்தில், அருள்புரிகின்றான். 

இத்திரு உருவம் சுதையாலானது.  15 அடி நீளம் கொண்டது.  இதனை புனுகுச்சட்டம் பூசி பாதுகாத்து வருகின்றனர். எனவே கருமை நிறம்மிகுந்த ஒளியுடன் காணப் படுகிறது.  இவ்வாறு ஆண்டுக்கு இருமுறை மூலவர் திருமேனிக்கு புனுகு சாற்றுகின்ற தைலக்காப்பு வைபவம் நடைபெறுகிறது.  ஆனி மாதம்,  கேட்டை நட்சத்திரத்தன்றும்,  ஆவணி மாதம் திரு பவித்திர உற்சவத் தன்றும் இந்நிகழ்வு நடைபெறும்.