முனைவர் முருகுபாலமுருகன்
தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மகம்- 3.
சந்திரன்: பூரம்- 1.
செவ்வாய்: அஸ்தம்- 2.
புதன்: ஆயில்யம்- 1.
குரு : புனர்பூசம்- 1.
சுக்கிரன்: பூசம்- 1.
சனி: உத்திரட்டாதி- 1 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4.
கிரக மாற்றம்:
30-8-2025 புதன் சிம்மத்தில் மாலை 4.45 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம் : சிம்மம்
25-8-2025 காலை 8.29 மணிக்கு கன்னி
27-8-2025 இரவு 7.21 மணிக்கு துலாம்
30-8-2025 காலை 7.53 மணிக்கு விருச்சிகம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் பலமாக சஞ்சரிப்பதும், 11-ல் ராகு இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். புதன், சுக்கிரன் 4-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்ல முடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27, 28, 29.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்கள்மூலமாக ஒரு வளமான பலன் களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் அவர்களை முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நல்லது. சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் ஏற்ற மிகுந்த பலன்களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலங்கள் அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு எதிர் பார்த்ததைவிட சிறப்பான மதிப் பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்ற மிகுந்த பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கை பெற்று 2-ல் சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். புத்திர வழியில் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். செவ்வாய் 4-ல் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னசின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை அடைய காலபைரவரை வழிபாடு செய்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 30.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 12-ல் குரு சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். பண வரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். மறைமுக போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். தேவையில்லாத பயணங்களைத் தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு உடன் பழகக்கூடிய நபர்களால் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பாதிப்பு என்றாலும் அதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைபபெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 26, 27.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளலாம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்களை சில நேரங்களில் அனுசரித்துச்செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது அனுகூல பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 28, 29.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உடன் பிறந்தவர்களிடம் கோபப்படாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது ஏற்றமிகுந்த பலன்களை உங்களுக்குத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 30.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், 9-ல் குரு, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்களை நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் சக ஊழியருடைய ஒத்துழைப்பும் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு ராகுகால நேரத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 24, 28, 29.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தடைப்பட்ட காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிலும் பொறுமையோடு செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலங்களை அடையமுடியும். ஒருசில முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருந்தால் மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரியின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய வாய்ப்புகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதன் மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26, 27, 30.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, 7-ல் ராசியாதிபதி குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியனும், 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளா தார உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது குறையும். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். பூர்வீக வழியில் ஒருசில அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். ஏற்றமிகுந்த பலன்களை வரும் நாட்களில் அடைவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28, 29.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனிபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 6-ல் குரு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்யக்கூடிய நபர்களால் தேவையில்லாத நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருக்கக்கூடிய நபர்களால் சில இடர்பாடுகளை சந்திக்கக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று கவனத்தோடு நடந்து கொள்வது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உங்களது கோபத்தை குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் ஒருபுறம் கிடைத்தாலும் பராமரிப்பு செலவுகள் சற்று அதிகரிப்பதால் உங்களது கையிருப்பு குறையும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சினைகளில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். மாணவ- மாணவியர்கள் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 30.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எந்தவித நெருக்கடியும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் தற்போது குறைந்து ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். கிடைக்கும் சின்ன வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டால் அதன்மூலமாக ஒருசில வளர்ச்சியினை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் உங்களுக்கு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய காலமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25, 26.