"நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தேள் உலகு'

இந்த பூமியில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் புகழை ஈட்டினால், வானுலகம் தேவரையல்லாது, அப் புகழ் ஈட்டியவரையே போற்றும் என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய தேவரையும் மிஞ்சிய புகழை, தன் மானுட சேவையால் ஈட்டியவர் ஐயா நல்லகண்ணு அவர்கள்.

Advertisment

வாழ்க்கையில் நூறாண்டுகள் வாழ்வதே சாதனை. அந்த நூறாண்டுகளும் மானுட குலத்துக்கு நன்மை மட்டுமே நினைத்து வாழ்வது மிகப்பெரிய சாதனை. அந்த நூறாண்டு மக்கள் சேவையுடன் தமிழக மக்களின் இதயங்களில் எல்லாம் குடிகொண்டிருந்த ஐயா நல்லகண்ணு அவர்கள், நம்மைப் பிரிந்து மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்றிருக்கிறார்.

Advertisment

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான நாள் 1925, டிசம்பர் 25.  நல்லகண்ணு ஐயா அவர்கள், அதற்கு ஒரு நாள் கழித்து 1925, டிசம்பர் 26-ல் பிறந்தார். 

இந்தத் தொடர்பே கம்யூனிசத்துக்கும் ஐயாவுக்குமான பந்தத்தைச் சொல்லப் போதுமானது.

Advertisment

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம் தாமிரபரணி பாயும் பகுதிகளிலே உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பஞ்சத்தைப் போக்க தாசில்தார் ஒரு உணவுக் கமிட்டியை ஏற்படுத்தி, கம்யூனிஸ்ட் கட்சியிடம் அதனை ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொடுத்தார். அந்த கமிட்டியில் மிராசு தாரர்கள் இருந்தனர். நல்லகண்ணு ஐயாவும் இருந்தார். பெரிய குடும்பன் என்ற தலித் பெரியவரும் இருந்தார். கமிட்டியில் இருந்தாரே தவிர பெரியவரை கமிட்டிக் கூட்டத்துக்கு அழைப்பதே இல்லை. 

பார்த்தார் நல்லகண்ணு, ஒரு கமிட்டிக் கூட்டத்துக்கு பெரிய குடும்பனை அழைத்துவந்து மிராசுதாரர்களுக்கு சமமாக நாற்காலிபோட்டு அமரவைத்தார். அதன்பிறகு மிராசுதாரர்கள் கமிட்டிக் கூட்டத்துக்கு வரவே இல்லை.

சிறையனுபவம் என்பது வெறுமனே தண்டனை அனுபவம் மட்டுமல்ல. நல்லகண்ணு ஐயா, சிறை வாழ்க்கையையும் வேறு மாதிரி மாற்றிவிட்டார். சிறையில் இருந்தபோது நல்லகண்ணுவும் மீனாட்சிநாதனும் ஆசிரியர்களாக மாறி கைதிகளுக்கு பாடம் கற்றுத்தந்து 9 பேரை இ.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றிபெறவைத்திருக்கிறார்கள்..

அந்தக் காலத்தில் விவசாய வேலை செய்யவருகிற அடித்தட்டு தலித் பெண்களை, மிராசுதாரர்கள் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. 

அச்சமயத்தில் நல்லகண்ணு உறுப்பினராக இருந்த செங்கொடி விவசாய சங்கம், மிராசுதாரர்கள் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்திருந்தால், அந்தப் பெண்களுக்கு சொத்து எழுதிவைக்கவேண்டும் என தீர்மானம் போட்டது. அதையும் மீறி அன்றைக்கு மிராசுதாரர்கள் தங்கள் வைத்திருந்த பெண்களுக்கு சொத்தை எழுதிவைத்துவிட்டு வைப்பாட்டிகளாக வைத்துக் கொண்டது என்று பதிவுசெய்கிறார் ஐயா நல்லகண்ணு. ஒரு மிராசுதார், ஒரு கட்சி நாம் என்ன செய்வது செய்யக்கூடாதென தீர்மானிப்பதா என்ற எரிச்சலில், இது விவசாயிகள் சங்கமாலி விபச்சாரிகள் சங்கமா என்று சுவரில் எழுதிவைக்க ஊர் மக்கள் ஒன்றுகூடி அந்த மிராசுதாரரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். 

nallakanu1

தோழர் நல்ல கண்ணுவின் கை, கால்களில் தடிப்புகள் காணப்படும். அதற்கு சிகிச்சை செய்து சரிசெய்ய தோழர் முத்தரசன், பாண்டிச் சேரியைச் சேர்ந்த புவனரட்சகன் எனும் தோல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். மருத்துவரும் பார்த்து விட்டு ஒரு ஊசி போடுகி றார். இந்தத் தடிப்புகள் இனி சரியாகிவிடுமா என மருத்துவரிடம் முத்தரசன் கேட்க, மருத்துவரோ, ஐயாவின் பிரச்சனைக்கு மருந்து அவரிடமே உண்டு என்கிறார்.

முத்தரசன் புரியாமல் பார்க்க, "நல்லகண்ணு தோழர், கோபம் வந்தால் வெளிப்படுத்துவதில்லை. அதன் விளைவுதான் இந்த தோல் தடிப்பு பிரச்சனை. கோபம் வரும்போதெல்லாம் அதை வெளிப் படுத்திவிட்டால் சரியாகிவிடும்' என்றார். தோழர் முத்தரசன், நல்லகண்ணு தோழரைப் பார்க்க, அவர் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகை புரிந்தார். எல்லா கோபத்தையும் எல்லா நேரமும் வெளிப் படுத்திவிடமுடியுமா என்ன?

ஆறடி மனிதர்கள், தங்கள் மோசமான பண்புகளால் உயரம் சுருங்கிப் போவதும் உண்டு. எல்லோரும் போற்றும் வகையிலான சிறந்த பண்புகளால் மலைச்சிகரங்களைவிட உயர்ந்துநிற்பதும் உண்டு.

ஐயா நல்லகண்னு அவர்கள், இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். 

நல்லகண்ணு ஐயாவின் 80 ஆவது பிறந்த நாள் விழாவில் கலைஞர் வாழ்த்திப் பேசும்போது, "கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் - சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு, வயதால் எனக்குத் தம்பி. தொண்டால் எனக்கு அண்ணன்' என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார். அதோடு, "தொண்டால் மூத்த அண்ணனை, வயதால் மூத்த இந்த அண்ணன் வாழ்த்துகிறேன்' என்றும் நகைச்சுவையோடு குறிப்பிட்டார். அத்தகைய  பெருமைக்கு உரியவர்தான் ஐயா நல்லகண்ணு.

ஒருமுறை ஐயாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. வழக்கம்போல் நேராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகிவிட்டார். இந்தத் தகவலை அறிந்ததும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேராக மருத்துவமனைக்குச் சென்று ஐயாவைப் பார்த்தார். அமைச்சரைப் பாரத்ததும் ஆர்வமாக எழுந்து உட்கார்ந்துகொண்ட ஐயா நல்லகண்ணு, தனக்கு கொடுக்கப் பட்டு வரும் சிகிச்சை குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் அமைச்சரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

"எங்க ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லை. அதனால் காலிப் பணியிடங்களைக் கொஞ்சம் நிரப்புங்க. ஜனங்க கஷ்டப்படறாங்க' என்று கேட்டார். இதைக்கேட்ட அமைச்சர், ஏற்கனவே அங்கேயுள்ள காலியிடங்களை நிரப்பினோம். மீதமிருக்கும் காலி இடங்களையும் உடனே நிரப்பிவிடுகிறோம் என்று அங்கேயே உறுதிகொடுத்தார். இப்படி உடல்நலம் இல்லாத நேரத்திலும் கூட, தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், ஊரைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நினைத்துக் கிடக்கும் தாயுள்ளம் ஐயாவுடையது. 

ஐயா நல்லகண்ணு அவர்கள்- 

 = சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். 

 = நாங்குனேரியில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார். 

 = பொதுவீதியில் செருப்பணிந்து நடக்கும் போராட்டம் நடத்தினார். 

 = கனிமவளக் கொள்ளைக்கு எதிராகவும் போராடினார்.

 = தாமிரபரணி மணலைக் காக்க நீதிமன்றத்திலும் போராடினார். 

 = விவசாயிகளுக்காகப் போராடினார். 

 = பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காகவும் போராடினார். 

 = ஊடக சுதந்திரத்திற்காகவும் அவர் பலமுறை போராடினார். 

-ஒடுக்குமுறை எங்கே தென்பட்டாலும் அங்கே சென்று, பாதிக்கப் பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.

ஐயா, எதையும் தனக்காக வைத்துக் கொள்ளாதவர், எதன்மீதும் ஆசை இல்லாதவர். அவருக்கு கட்சியே ஒரு கோடி ரூபாயைக் கொடுத்தபோது, இதைவைத்து நான் என்ன செய்யப்போறேன்? என்றபடி அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்ட துறவி  அவர். நமது தமிழக முதல்வர் கடந்த 2022-ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதோடு கொடுத்த 10 லட்ச ரூபாயையும் ஐயா கட்சிக்கே கொடுத்துவிட்டார். 

சான்றோர் பேரவை ஆனா ரூனா என்னும் அருணாச்சலம், ஐயா நல்லகண்ணு பேருந்து களில், கூட்டத்தில் நசுங்கிய படியே பயணிப்பதை அவர் கவனித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு காரை வாங்கித் தரவிரும்பியிருக் கிறார். உடனே ஒரு டவேரா காரை வாங்கி, கவிஞர் இள வேனில் மூலம் தோழர் மகேந்திரனைத் தொடர்புகொண்டு, ஐயாவிடம் காரை ஒப்படைக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதைக்கேட்டு திடுக்கிட்ட தோழர் மகேந்திரன், அன்பளிப்பாக அவர் எதைக்கொடுத்தாலும் ஏற்கமாட்டாரே என்று சொல்லியிருக்கிறார். 

அந்த நேரத்தில் ஐயாவின் பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கிலே நடந்திருக்கிறது. கலைஞர் தான் சிறப்பு விருந்தினர். உடனே மேடைக்குச்சென்ற ஆனாரூனா, கலைஞரிடம் விசயத்தைச் சொல்லியிருக்கிறார். கலைஞரும் அவர் ஏற்கமாட்டாரே என்று தயங்கியிருக்கிறார். பின்னர் ஐயாவுக்கு ஆனாரூனா கார் வாங்கியிருப்பது குறித்து மேடையிலேயே அறிவித்திருக்கிறார் கலைஞர். அடுத்து காரின் சாவியை தோழர் தா.பாண்டியனிடம் ஒப்படைத்திருக்கிறார்.

கடைசியில் அந்த கார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம்தான் ஒப்படைக்கப்பட்டது.

ஐயா நல்லகண்ணுவுக்கு ஒருமுறை உடல்நலக் குறைவு. சென்னை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற்றார். செய்தி, நாளிதழ்கள் வரை வந்துவிட்டது. செய்தியைப் படித்த பலர், "பொது மருத்துவமனையில் வைத்துப் பார்ப்பதைவிட தனியார் மருத்துவமனையில் வைத்துப் பார்த்தால் நல்லது.' என்று கூறி தனியார் மருத்துவமனையில் சேர்க்க, பத்திரிகை அலுவலகங்களுக்கு பணமும் அனுப்பியிருக்கின்றனர். இதற்குள் உடல்நலம் தெளிவாகி வீட்டுக்கும் வந்துவிட்டார் ஐயா. அதனால் பத்திரிகை நிர்வாகங்கள் பணத்தை அவர்களுக்குத் திருப்பி அனுப்பியதுடன், விஷயத்தை ஐயாவிடம் தெரிவிக்க, "என் மீது மரியாதை வைத்து பணத்தை அனுப்பிய உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்து விடுங்கள்' என்றார். 
 
ஐயாவின் அன்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல' குறிப்பாக எனக்கும் கிடைத்திருக்கிறது. அதுவும் 2003-ல் புதிதாக கொண்டுவரப்பட்ட பொடா சட்டத்தில் ஜெ. அரசால் கைதானேன். அந்த பொடா கைதுக்கு எதிராக எழுந்த கண்டனக் குரல்களில் ஐயாவின் குரல் வலுவானது. 

அந்தக் கைதுக்கு எதிராக எங்கள் அலுவலக ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் அலுவலக வளாகத்திலே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது, அலுவலகத்துக்கு வந்து பேசி, தைரியமூட்டி அந்த உண்ணா விரதத்தை முடித்துவைத்ததும் ஐயா நல்லகண்ணு அவர்கள்தான்.

இத்தகைய புகழ்மிக்க ஐயா நல்லகண்ணு, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவுடன் இருந்தார். 

மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் சென்றுவந்தார். காலனை தன் உயிரை எடுத்துச்செல்ல, அவர் எளிதில் அனுமதிக்கவில்லை. மருத்துவர்கள் துணையுடன் மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்தி, சிலமுறை வெறும் கையுடன் காலனை அனுப்பி வைத்த நிலையில், பிப்ரவரி 25-ஆம் தேதி அவனை வெறுங்கையோடு அனுப்பாமல், நமக்கு பிரியாவிடை அளித்து விடைபெற்றார்.

அவரது அஞ்சலி நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐயா நல்லகண்ணுவுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கவேண்டுமென உத்தரவிட்டதுடன், அஞ்சலி நிகழ்வுக்கு தனது பதவியையும் அதிகாரத்தையும் தூர வைத்துவிட்டு, அவர் மீதுள்ள பிரியத்துடன் சாதாரண மனிதராகச் சென்று மலர்வளையம் வைத்து, தானே கைகளை உயர்த்தி முழங்கி வீரவணக்கம் செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

மலர்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்வதால் குறிஞ்சியை அபூர்வ மலர் என்பார்கள். மனிதர்களிலும் குறிஞ்சி உண்டு. அத்தகைய குறிஞ்சி மலர்தான் ஐயா நல்லகண்ணு. அந்தக் குறிஞ்சியின் மனம் நம்மை விட்டு என்றென்றைக்குமாக அகன்றுவிட்டது.

அகலாத துயரத்துடன்...

நக்கீரன்கோபால்