நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம், மார்கழி மாதம், 30-ஆம் தேதி, 14-1-2026 புதன்கிழமை தேய்பிறை ஏகாதசி திதி, அனுஷ நட்சத்திரம்கூடிய சுப தினத்தில் பகல் 3.07 மணிக்கு ரிஷப லக்னத்தில் சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இதனை முன்னிட்டு விசுவாவசு வருஷம் தை மாதம் 1-ஆம் தேதி 15-1-2026 வியாழக்கிழமை துவாதசி திதி, கேட்டை நட்சத்திரம்கூடிய சுப தினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் அல்லது பகல் 1.00 மணிக்குமேல் 1.30 மணிக்குள் குரு ஓரையில் அல்லது பிற்பகல் 4.00 மணிக்குமேல் 6.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.
புது பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணமாக தயாரித்து பானையை சுற்றிக் கட்டி அவரவர் சம்பிரதாய முறைப்படி பொங்கல் வைக்கலாம். குலதெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது.
கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி, கிழங்கு வகை, மொச்சை, அவரை, பழ வகைகள் வைத்து நிவேதனம் செய்து, புஷ்பத்தை எடுத்துத் தூவி வணங்கி பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கு பொங்கலை வாழை இலையில் வைத்து உண்ண வைப்பது, பிறகு நம்முடைய மூதாதையர்களை நினைத்து காகத்துக்கு பொங்கல் வைப்பது உத்தமம்.
மாட்டுப் பொங்கல்
மறுநாள் 16-1-2026 வெள்ளிக்கிழமை யன்று காலை 6.00 மணிக்குமேல் 8.00 மணிக் குள் சுக்கிரன், புதன் ஓரையில் பகல் 1.00 மணிக்குமேல் 3.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் அல்லது பகல் 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் குரு ஓரையில் கோபூஜை செய்து, வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுப்பது நல்லது.
காணும் பொங்கல்
மறுநாள் காணும் பொங்கலாகும். இன்றையநாள் முழுவதும் உற்றார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உறவாடி உற்சாகமாக பொழுதுகளை கழிக்கலாம். மற்றவர்களுக்கு பொங்கல் இனாம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பதுமூலம் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/pongal-2026-01-09-16-58-06.jpg)