ஒருமுறை மேகநாத சுவாமியை, வருணனும், சூரியனும் வணங்கி நின்று தங்களுக்கு சாபநிவர்த்தி தரவேண்டுமென வேண்டி நிற்க, அவர்களுக்கு மேகநாத சுவாமி சாப நிவர்த்தி தந்தருளினார்.
இதற்கிடையில் சூரியனுடைய பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயாதேவியும் மேகநாதரிடம் "எங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்' என்று வழிபட்டனர். அதற்கு இறைவன் "நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத் திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, பூஜை செய்துவாருங்கள். உங்களுக்கு புத்திர பாக்கிய பலன் கிடைக்கும்' என்ற வரத்தை அளித்தார்.
அதன்படியே சூரியன், உஷா தேவி, சாயாதேவி மூவரும் இத்தலத்தில் சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர்.
இதை அடுத்து சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மன் பிறந்தார். அதேபோல் சூரியனுக்கும், சாயாதேவிக்கும் சனீஸ்வரர் பிறந்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம் இது. இவர்கள் கூடிய காரணத்தினால் இவ்வூர் "கூடியலூர்' என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி "கொடியலூர்' ஆயிற்று என்கிறார்கள். திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கு திசையில் உள்ளது "கொடியலூர், ஹயக்ரீவர் கூறியபடி திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்தார். அங்கு அன்னையை மனதுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடினார்.
இதனால் அவருக்கு அம்பாளின் பேரருள் கிடைத்தது. அதன்பின் அவர் சிவபூஜை செய்ய வேண்டுமென்று எண்ணினார்.
அதற்காக அவ்விடத்தில் இருந்து சற்று மேற்கே உள்ள கூடியலூர் என்ற கொடியலூருக்கு வந்தார். இத்தலத்தில் அவர் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். இங்குள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் "அகத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். தாயார் லலிதாம்பிகையை நினைத்து அவரையும் இங்கு அகத்தியர்பிரதிஷ்டை செய்தார்.
தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள் தரும் அம்மைக்கு "ஆனந்தவல்லி' எனவும் பெயரிட்டார்.
தொடர்ந்து இறைவனையும், இறைவியையும் நினைத்து தவம் இருந்தார். எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு, எம வதையும், சனி உபாதையும் நீங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்தார். அதன்படியே அருள்வதாக இறைவனும், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார்.
திருமீயச்சூர் ஆலயத்தில் லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில், மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்துவருகிறாள். கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சிதந்து அருளாசி வழங்குகிறாள். அன்னை ஒரே எல்லையில் திருமீயச்சூரில் அமர்ந்த கோலமாகவும், கொடியலூரில் நின்ற கோலமாகவும் இருந்து அருள்செய்வது மற்றொரு சிறப்பு.
ஒருங்கே அவதரித்த தலம்
இத்தலத்தின் தென்புறத்தில் எமதர்மராஜனும், வடபுறத்தில் சனிபகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பம்சமாகும். இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங் களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்பாலிக்கிறார்கள்.
இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்பப் பெறலாம் என்பது நம்பிக்கை.
ஏழரைச்சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. இந்த ஆலயத் திற்கு வந்து எள் தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
ஸ்ரீ மங்கள சனீஸ்வர பகவான், ஸ்ரீ எமதர்ம ராஜன் அவதரித்த இந்த திருத்தலம் நவகிரக ஸ்தலமாகவும் மற்றும் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தலம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகும்.
இத்தனை சிறப்புவாய்ந்த இத்திருத் தலத்திற்கு கும்பாபிஷேக விழா வரும் 11-9-2025 அன்று நடைபெறுகிறது. அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மங்கள சனீஸ்வரர், ஸ்ரீ எமதர்ம ராஜர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேக நிகழ்வில் தருமை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரளம் என்ற ஊர்.
இங்கிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டரில் திருமீயச்சூர் திருத்தலமும், அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது.
த.உ.எஸ்.பி