தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயர் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது.
மேலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டமக்கள்தொகையுள்ள 5 மாநகராட்சி களில் தலா 4 என 20 முகாம்கள் நடத்தப்படும். 10 லட்சத்திற்கு குறைவான மக்கள்தொகையுள்ள 19 மாநகராட்சிகளில் தலா 3 என மொத்தம் 57 முகாம்கள் நடத்தப்படும். பரிசோதனை ஆவணங்கள் சம்பந்தபட்டோரிடம் வழங்கப்படும்.
முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டு மாலைக்குள் வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும். சிகிச்சை தேவைப் படுவோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
இத்திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமை யன்றும், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, பகுதி வாரியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, துண்டு பிரசுரங்கள் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
முகாமில் பெயர் பதிவு செய்பவர், பிற்காலங்களில் தமிழகத்தில் வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும், அவரது உடல்நல விவரங்களைக் கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுக்க உணவு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படும். முகாம்களில் உயர்சிறப்பு மருத்துவ நிபுணர்களும், 5 வகையான இந்திய மருத்துவ முறை நிபுணர்களும் இடம் பெறுவர்.
மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவ காப்பீட்டு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் போன்ற கூடுதல் வசதிகளும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.