சும்ப நிசும்பர் பற்றி வியாசர் கூறவும் ஜெனமேஜெயன் தேவியின் அடுத்த கட்ட மகாத்மியத்தை அறியத் தயாரானான்.
""சும்ப நிசும்பர் ஒருவரா அல்லது இருவரா?'' என்னும் கேள்வியையே முதலில் கேட்டான்.
""இருவரப்பா இருவர்... சகோதரர்கள் வேறு... எதைச் செய்வதாக இருந்தாலும் சேர்ந்தே செய்வர். சாப்பிடுவது, தூங்குவதில்கூட இணைபிரியமாட்டார்கள்.''
""இரட்டைப் பிறவிகளா?''
""ஆம்... அசுரப்பிறப்பாய் பிறந்துவிட்ட இவர்களுக்கு அசுரகுலமே இந்த உலகை ஆளவேண்டும் என்பதுதான் விருப்பம்.''
""ஒரு அசுரனுக்குக்கூட இம்மட்டில் மாறுபட்ட விருப்பங்கள் இருக்காதா?''
""அது எப்படி இருக்கமுடியும்? தேவர்களே மேலானவர்கள் என்று சொல்லும்போது மற்றவர்கள் கீழானவர்கள் என்று வந்துவிடுகிறதே? "நான் கீழானவனில்லை. உன்னை ஆட்டிப்படைத்து உனக்குமேல் நின்று காட்டுகிறேன் பார்' என்கிற முடிவால்தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆசைகள் உருவாகின்றன.''
""குருவே... இந்த சும்ப நிசும்பர்கள் மகிஷாசுரனிடம் பாடம் கற்கவில்லையா?''
""தவறிலிருந்து பாடம் கற்பவன் ஞானி. இவர்களுக்கும் ஞானத்துக்கும்தான் சம்பந்தமேயில்லையே?''
""அப்படியானால் இவர்கள் திருந்தவே இல்லையா?''
""அசுரர்களுக்கெல் லாமே ஒரே தீர்வுதான். அது போர்க்களத்தில் வெட்டுப்பட்டு சாவது...''
""இவர்கள் அம் மட்டில் எப்படி செயல் பட்டனர்?''
""சொல்கிறேன். இவர்கள் இருவரும் பாதாள லோகவாசிகள்.
அதுதான் அசுரர்களுக் கான உலகமாகவே அமைந்துவிட்டது.
அங்கே இருந்து தேவர்களை ஆட்டிப்படைக் கவே பூவுலகிற்கு வந்த னர். தேவர்களை நேருக்கு நேர் சந்திக்க திரானியில்லாததால் தவத்தில் ஈடுபட்டு வரசித்திக்கு முயன்றனர்.
ஒரு அசுரன் தவம் புரியத் தொடங்கி விட்டால் அவனது தவத்தைப்போல ஒரு தவத்தை யாராலும் புரியமுடியாது. சும்ப நிசும்பர்களும் கடும் தவம் புரிந்து பிரம்மனி டம் வரம்பெறத் தயாராகி விட்டனர். பிரம்மாவோ எல்லாருக்கும் சொல்வது போல், "இறவாத வரம் தவிர மற்ற எந்த வரம் வேண்டுமானாலும் நீ கேட்கலாம்' என்று கூறிட, "ஒரு பெண்ணா லன்றி யாராலும் எங்களுக்கு மரணம் நேரக் கூடாது' என்கிற வரத்தையே இவர்களும் கேட்டனர். பிரம்மாவும் அதை உடனேயே அருளிவிட்டார்'' என்று வியாசர் சொல்லி முடிக்கவும், ஜெனமேஜெயன் அதன் நிமித்தம் கேள்வி கேட்க வாய்திறந்தான். தன் சைகையாலேயே அவன் வாயைமூடச் சொன்னவர், ""நீ இப்போது என்ன கேட்பாய் என்று எனக்குத்தெரியும் ஜெனமேஜெயா...'' என்றார்.
ஜெனமேஜெயன் அவரை சற்று விக்கிப்போடு பார்த்திட, அவரே தொடர்ந்தார்.
""பெண்களாலன்றி என்று இவர்கள் வரம்கேட்கக் காரணம் யாது? மகிஷனும் இப்படித்தான் வரம் கேட்டான். இருந்தும் தேவியால் மடிந்தான். அதை அறிந்தும் ஏன் சும்ப நிசும்பர்கள் இவ்வாறு கேட்டனர் என்பதே உன் கேள்வி. சரிதானே?''
""ஆம் குருவே...''
""அசுரர்கள் பெண் ஜென்மங்களை மிக பலவீனர்களாகக் கருதினர். அவர்கள் ஒருபோகப் பொருள் போன்றவர்கள். அவசியப்படும் தருணங்களில் பிள்ளைகளைப் பெற்றுத்தரவேண்டியது அவர்கள் கடமை. மற்றபடி ஆணுக்கு அடங்கிக்கிடப்பதே பெண் ஜென்மம். சுருக்கமாகச் சொல்வதானால் அடிமைகள்.''
""இது மிகக்கொடுமையான எண்ணம். என் தாயை- என் சகோதரியை நான் அடிமையாகக் கருதுவேனா என்ன?''
""நீ நினைக்கமாட்டாய். ஆனால் ஒரு அசுரன் அவ்வாறே நினைப்பான். நம்மில் யாராவது அப்படி எண்ணினாலும் அது அசுர நினைப்பே...''
""பிறகென்னவாயிற்று?''
""இந்த சும்ப நிசும்பர்கள் வரையில் தேவி ஒரு நாடகம் நடத்தத் தீர்மானித்தாள்.''
""எப்படி?''
""தேவர்கள் அவ்வளவு பேரையும் தங்களது அடிமையாக்கி, இந்திரனையும் இந்த தேவலோகத்தைவிட்டே ஓடச்செய்தான் சும்பன். நிசும்பன் துணை நின்றான். பின் இந்திரன் இருக்கையில் சும்பன் ஒரு நாளும், நிசும்பன் ஒரு நாளுமாய் அமர்ந்து ஆட்சி செய்தனர். தேவர்களும் கதறி அழுத நிலையில் இறுதியாக அம்பிகையைத்தான் சரணடைந்தனர்.''
""இதை நானும் எதிர்பார்த்தேன். நீங்கள் சொல்லப்போகும் இந்த சும்ப நிசும்ப வதம் எப்படி இருக்குமென்று என்னால் யூகிக்க முடிகிறது. திருந்தவே திருந்தாத அசுரர்கள்... அவர்களை அழிக்க தேவியால் மட்டுமே இயலும் என்பதே தேவருலகின் நிலை! பிரம்மாவும் வரம் தராமல் இருக்கப்போவதில்லை.
அசுரர்களும் தவறிழைக்காமல் வாழப்போவதில்லை. தேவிக்கும் அவர்களை தண்டிப்பதுதான் பொழுது போக்கு. நான் சொல்வது சரிதானே?''
""இதுவரை நான் சொல்லிவந்த வரலாற்றை வைத்து நீ இப்படித்தான் கூறுவாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் சும்ப நிசும்பர் வரலாற்றில் நிறைய வேறுபட்ட சங்கதிகள் உண்டு.''
""அப்படியா?''
""ஆம்; சும்பனும் நிசும்ப னும் மகிஷன்போல நடந்துகொள்ளாமல், புத்திசாலித்தனமாக பிருகு முனிவரையே தங்கள் குருவாக வரித்து, அவரைக் கொண்டு அசுர சாம்ராஜ்யத்தையே உருவாக்கினர்.''
""தேவர்களின் ரிஷியான பிருகுவைக் கொண்டா?''
""ஆம்... கோபக்கார பிருகு முனிவரையேதான்...''
""அவர் எப்படி சம்மதித் தார்?''
""அவரை மதித்துத் துதிக்கையில் அவரால் என்ன செய்யமுடியும்?''
""அப்படியானால் அவர் புத்தி கூறலாமே...''
""அங்கேதான் அவர் சாதுர்யமாக நடந்துகொண்டார். அவரால் அவர்களைத் திருத்த முடியவில்லை. ஆனால் தேவர்களை சித்ரவதை செய்யாமல் தடுத்து நிறுத்த முடிந்தது.''
""சித்ரவதையா... இதென்ன கொடுமை?''
""அதுதான் அசுரர்களின் பெரும் ஆயுதம். தேவர்களுக்கு உயிர் பிரியாது. அதனால் அவர்கள் சித்ரவதை வலி தாளாமல் கதறுவார்கள்...''
""இதற்கு அவர்கள் இறவாவரம் பெறாமலே இருந்திருக்கலாம்.''
""இப்போது சொன்னாயே...
இதற்காகவே இப்படியெல் லாம் நடந்தது என்றால் மிகை யில்லை.''
""நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு...''
""தேவர்கள் அசுரர்களுக்கு அமுதம் தராமல் அவர்கள் மட்டும் உண்ணப்போயே இந்த நிலை. எதை அசுரர்கள் பெரிய விஷயமாகக் கருதினார்
களோ அது உண்மையில் பெரியதல்ல... அமுதம் இதையே மறைமுகமாக உணர்த்துகிறது.
இந்த உலகில் எல்லாமே மாறுதல்களுக்குரியது. மாறவேண்டும். மாறினால்தான் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும். இல்லாவிட்டால் தேங்கின குட்டையாகி மனம் சலிப்படைந்துவிடும்.''
""நல்ல பாடம். நீங்கள் சும்ப நிசும்பர்களிடம் வாருங்கள். அடுத்து அவர்கள் என்ன செய்தனர்?''
""சும்பனும் நிசும்பனும் தங்களை இந்த உலகின் ஏகபோக சக்கரவர்த்திகளாய் அறிவித்துக்கொண்டனர். அப்படியே திரும்பிய பக்கமெல்லாம் அசுர சாம்ராஜ்யத் தைத் தோற்றுவித்து, உலகம் அசுரர்களுக்குச் சொந்தமானது.''
""உண்மையாகவா?''
""ஆம். இவர்களின் தளபதிகளாய் சண்ட முண்டர் என்கிற இருவரை நியமித்தனர். இவர்கள்தவிர ரக்தபீஜன் என்று ஒருவன். இவனை சாதுர்யமாகவே கொல்ல வேண்டும். இவன் உடம்பிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்தினாலும், சிந்திய அந்தத் துளியிலிருந்து ஒரு ரக்தபீஜன் வந்துவிடுவான்.''
""என்ன விந்தை இது?''
""விந்தைதான். மேலும் தாமிரலோசனன் என்று ஒருவன். இவனைக் கொல்வதும் லேசான விஷயமில்லை. எல்லாருமே ஒவ்வொரு வரசித்தி பெற்றவர்களாயிருந்தனர்.''
""நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சும்ப நிசும்பர்கள் மட்டுமின்றி சண்டமுண்டன், ரக்தபீஜன், தாம்ரலோசனன் என்று ஒரு பெரிய கூட்டமே உள்ளதே. இவர்களையெல்லாம் அழிப்பதும் சிரமமாயிற்றே?''
""நாம் அப்படித்தான் சொல்வோம்; எண்ணுவோம். ஆனால் நம்மோடு அவர் களையும் சேர்த்துப் படைத்த அந்த ஜெகன் மாதாவுக்கு தெரியாதா யாரை எப்படி சம்ஹரிக்க வேண்டுமென்று...''
""நீங்கள் சொல்லும் தேவிமகாத்மியத்தில் எனக்கு பெரிய புதிராகவும், விடைகாண முடியாததாகவும் இருப்பது ஒன்றே ஒன்றுதான். இறந்தாலும் பரவாயில்லை; நேர்வழியில் செல்லக்கூடாது என்பவர் களாகவே ஏன் எல்லா அசுரர்களும் உள்ளனர்?
நேர்வழியில் செல்லும்போதும் ஆணவத் தாலும், மதி மயக்கத்தாலும் தேவர்கள் ஏன் தவறு செய்கின்றனர் என்பதும்தான்.''
""விடையையே நீ கேள்வியாகக் கேட்டுள்ளாய் ஜெனமேஜெயா. மனிதன் என்பவன் மனதை அடக்குபவனே! சொல்லப்போனால் அடக்கியாள முடிந்தவனே மனிதன். ஆனால் இம்மட்டில் பெயரளவிலேயே எல்லாரும் உள்ளோம். இதில் நீ என்போன்ற ரிஷிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நூற்றுக்கு தொண்ணூறு சதம் மனதை அடக்கமுடியாமல் அதன்போக்கில் போய் தவறிழைத்துவிட்டுப் பின் திருந்துகிறவர்களாகவே உள்ளனர். இதுவே வாழ்வின் இயல்பென்றாகிவிட்டது.''
""உண்மைதான்... எந்நிலையிலும் மாறாதவர்களாக மும்மூர்த்தியர்களும், தேவியுமே உள்ளனர் என்று கூறலாமா?''
""தனிப்பட்டமுறையில் அவர்கள் மாறுவதேயில்லை. ஏனெனில் அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்வே கிடையாது.
நம்மைப் படைத்து, நமக்கொரு வாழ்வைப் படைத்து, அந்த வாழ்வுக்குள் தங்களை இணைத் துக்கொண்டு வாழ்வதே அவர்கள் வாழ்வு என்றாகிறது.''
""இங்கே சும்ப நிசும்பர்களின் பிரதாபங்களைக் கூறுங்கள்.''
""இருவருமே கெட்டிக்காரர் கள். சாதுர்யமாக அசுர உலகை ஸ்தாபிதம் செய்துவிட்டனர். தேவர்கள் அடிமைகளாகிப்போயினர். கண்ணீர் வடித்தனர்.
இப்படி ஒரு நிலையில்தான் அம்பிகை சும்ப நிசும்பர்களை வதம்புரிய திருவுள்ளம் கொண்டாள்.
அவர்கள் வரசித்தி கெடாமல் அவர்களை அழிக்க அவள் தன்னையே மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது. எப்படித் தெரியுமா?''
""எப்படி?''
""அழகிய ஒரு மோகினியாக தன்னை மாற்றிக்கொண்ட தேவி, தன் அம்சமான காளிதேவியைத் தோழியாகப் பணித்துக்கொண்டாள். அப்படியே சும்ப நிசும்பர்களின் அரண்மனையை ஒட்டியுள்ள வனப் பகுதியில், அவர்கள் பார்வைபடும்படியான இடத்தில் ஒரு பெரிய மலர்வனம் அமைத்து, அதனுள் அழகிய குடிலொன்றும் அமைத்து அதில் இருவரும் விளையாடி மகிழ்ந்தனர்.
ஒருநாள் சும்ப நிசும்பர்களின் தளபதிகளான சண்டமுண்டர்கள் அந்தப் பக்கமாய் குதிரைமேல் வரவும், புதிதாகத் தோன்றியுள்ள மலர்வனம் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அப்படியே உட்புகுந்து பார்த்தபோது சொக்கிப்போயினர். அவர்கள் பார்க்கும்விதமாக தேவியும் காளியும் அங்குள்ள தடாகத்தில் நீந்தி விளையாடிக்கொண்டி ருந்தனர். சண்டமுண்டர்கள் அவர்கள் இருவர் அழகில் தங்களையே மறந்தனர்.
நெடுநேரம் நின்று கவனித்தவர்களை தேவியும் காணாதிருப்பாளா? அவர்களை அருகில் அழைத்து மிகக்கனிவாகப் பேசத் தொடங்கினாள்.''
"யார் நீங்கள்?'
"சரிதான். இது நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி. இது எங்கள் நாடு. இந்த வனமும் எங்கள் வனம்!'
"இந்த நாடும் வனமும் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் இந்த பூவுலகமே எனக்குச் சொந்தம்.'
"என்ன சொல்கிறாய் நீ? அது எங்கள் சக்கரவர்த்திகளான சும்ப நிசும்ப மகாராஜாக்களுக்கு மட்டுமே உரியது.'
"யார் அது சும்ப நிசும்பர்?'
"பேதையே... எங்கள் சக்கர வர்த்திகளைத் தெரியாதா உனக்கு... நீங்கள் இந்த நாட்டில் வாழ்வதே குற்றம்.'
"தவறாகக் கருதாதீர்கள். நாங்கள் ரிஷி புதல்விகள். வனம் கடந்து எதற்காகவும் வெளியே சென்றதில்லை. அதனால் நாட்டு நடப்பு எங்களுக்குத் தெரியாது.'
""அதனால் பரவாயில்லை. அழகா யிருப்பதால் உங்களை இதற்காக நான் மன்னிக்கிறேன். போகட்டும்... இனி நீங்கள் இப்படி இருக்கத் தேவையில்லை. நாடும் நகரமும் சுகபோக வாழ்வும் வளங்களும் எப்படி இருக்குமென்று காணப்போகிறீர்கள். அதற்கு இனி நாங்கள் பொறுப்பு...' என்று சண்டமுண்டர் இருபொருள்படப் பேசினார்கள்.''
(தொடரும்)