நாம் பிறவி எடுத்துள்ள மனித நிலையை முழுமையடையச் செய்யும் விதமாய் அமைந் திருப்பது வழிபாடு. இறைப்பேற்றைப் பெறவும், முக்தியடையவும் தேவையான இறைநம்பிக்கையை மட்டுமல்ல; நடைமுறை வாழ்வியலுக்கும், வாழ்க்கைமுறைக்கும் தேவையான தன்னம்பிக்கையையும் வழிபாடு நமக்குத் தருகிறது.

ஆலயத்தின் கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் இறைவனை லட்சியமாகவும், நம்மை நாமாகவும்- அதாவது லட்சியத்தைச் சென்றடைய நினைக்கின்ற வெற்றி யாளராகவும் நினைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நாம் நாமாக இருப்பதில்தான் வழிபாடு ஆரம்பமாகிறது. வெற்றிக்கான முதல்படியும் இதிலிருந்தே தொடங்குகிறது.

ஆலயத்திற்கு வந்ததும் பெரிய மதில் சுவர் அதை மற்றவற்றிலிருந்து தனித்துக் காட்டும். அப்படி தனித்திருக்கப் பழக வேண்டும். தனித்திருத்தல் என்பதும், தனிமையில் இருத்தல் என்பதும் வெவ்வேறானவை. தனித்திருத்தல் சிந்திக்கத் தூண்டும். சிந்தனை செயல்பட வைக்கும். ஆனால் தனிமை யில் இருத்தல் விரக்தியைத் தூண்டும். பல தற்கொலை களுக்குத் தனிமை காரணமாக இருக்கிறது. செயலற்ற தனிமையில் இல்லாமல், ஆலயத்தைப்போல தனித்திருத்தல் வெற்றியினை நம்வசம் வரவைக்கும்.

கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் இருக்கும் பலிபீடத்தில் நம்முடைய கீழான எண்ணங்களை பலியிடு வதைப்போல, நம்முடைய எதிர்மறை எண்ணங்களை பலிகொடுத்துவிட வேண்டும். விழுந்து வணங்கும்போது கீழான எண்ணங்களை விட்டுவிட்டு மேலான எண்ணங்களுடன் எழுவதைப் போல, எதிர்மறை எண்ணங்களை பலி கொடுத்த நாம் நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்பிக்கொள்ள வேண்டும். அப்படி நிரப்பிக்கொண்டவர்களே சாதித்தனர். சரித்திரம் படைத்தனர்.

Advertisment

pillaiyar-god

கொடிமரம், தெய்வ வாகனம் ஆகியவை இறைவனை நோக்கி இருப்பதைப் போல, நம் மனமானது எப்பொழுதும் லட்சியத்தை நோக்கியே நினைக்க வேண்டும். "நினைத்தல்'- அதாவது "பாவனை செய்தல்' பக்தியின் அடிநாத மாய் இருப்பதைப்போல, வெற்றி என்ற பல அடுக்குக் கட்டடங்களுக்கு எண்ணங் களே அஸ்திவாரமாய் நிற்கின்றன. எண்ணங்களால் பெறும் உயர்வை- "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு'

என்கிறது வள்ளுவம்.

இவற்றை அடுத்திருக்கும் பிராகாரங் கள் ஒவ்வொன்றையும் ஐம்புலன்களையும் அடக்கிக் கடந்துவந்தால் கர்ப்பகிரகத்தை அடைய முடிவதைப்போல, சரியான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களை யும் பெற்றுத் தெளிவான திட்டமிடலுடன் முன்னேறிச் சென்றால் லட்சியத்தை எட்ட முடியும். பல லட்சியங்கள் வெற்றி பெற்றதற்கு மட்டுமல்ல; தோல்வியடைந்ததற்கும் திட்டமிடல்கள் மட்டுமே காரணமாக இருந்திருக்கின்றன; இருந்தும் வருகின்றன. வெற்றிக்கான இலக்கின் பாதி திட்டமிடலில் இருப்பதை அறிந்தவர்கள் தங்களின் வாழ்வை அற்புதமாக்கிக் கொள்கின்றனர்.

மணிஓசை, சங்கநாதம், வேதமந்திரம், நறுமணப்புகை, வாசமிகு மலர், பிரசாதம் ஆகியவற்றின் மூலம் வேறெந்த சிந்தனையும் இல்லாமல் எண்ணங்கள் இறைவனை நோக்கியே இருக்கச் செய்வதைப்போல, தோல்விகளைக் கண்டு துவளாமல், விமர்சனங்களால் முடங்கிவிடாமல் எண்ணங்களை லட்சியத்தை நோக்கி மட்டுமே வைத்திருக்கவேண்டும்.

அப்படிச் செய்யும்போது, தீபாராதனையின் போது இறைவனைக் கண்டு மகிழ்வதைப் போல முயற்சியின்மூலம் நமக்குள் உறைந்து நிற்கின்ற லட்சியத்தை அடைந்து மகிழமுடியும். இப்படி தன்னம்பிக்கையை மட்டுமல்ல; சக மனிதர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலம்வருதல், அடிப்பிரதட்சணம் மூலம் உணர்த்தும் இறைவன் வழிபாடு சார்ந்த இதர நிகழ்வுகளான உற்சவம், திருக்கல்யாணம், திருவிழாக்கள்மூலம் கூடிவாழும் மாண்பைக் கற்றுத் தருகிறான்.

இதையெல்லாம் உணர்ந்து உயராமல், வெற்றிக்கு இறைவன் காரணமாய் இருப்பதைப்போல தோல்விக்கும் அவனே காரணம் எனச் சொல்லி சமாதானப்பட்டுக் கொள்கிறோம். எதுவுமே செய்யாமல் சோம்பேறியாய் உட்கார்ந்து கொண்டு "கடவுள் கண்ணைத் திறக்க மாட்டேங்கிறானே' என ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் கண் ணைத் திறக்க வேண்டியது கடவுள் அல்ல; நாம்தான்!

(முற்றும்)