ஒரு மரம் தன் இனத்தை அழிப்பதில்லை. பறவையினம், விலங்கினங்கள்கூட தங்கள் இனத்தை அழிப்பதில்லை. அவை தங்களுக்குப் பசிக்கும்போது உணவைத் தேடி உண்பதோடு சரி. சூழ்ச்சி, சதித் திட்டம் தீட்டுவது, பிறர் பொருளை அபகரிக்க திட்டமிடுவது, கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் இவற்றுக்கு ஆறறிவுக்கும் குறைவான அறிவே உள்ளது. ஆறறிவு படைத்த நாம் என்னசெய்கிறோம்? சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சில பாடல் வரிகளை இங்கு பார்க்கலாம்.
"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா.
இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா- வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா- தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா.'
எவ்வளவு பொருத்தமான வரிகள்! பகுத்தறிவு என்று பெருமை பேசும் மனித இனம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது? மனிதனை மனிதனே கொல்லும் அவலம் நிகழ்கிறது. உக்ரைன் போர் எப்படிப் போகுமென்று தெரியாது. இதைவிட கொடுமையாக வேறெதுவும் நடக்கலாம். காரணம் மனிதனுக்குள்ள பேராசை, வஞ்சகம், ஆணவம்... இன்னும் பல!
எண்ணங்களும் அதனால் விளையும் செயல்களுமே ஊழ்வினைக்குக் காரண மாகிறது.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.'
ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை வேறெவை உள்ளன? அதை விலக்குவதற்கு வேறொரு வழியை ஆராய்ந்தாலும், அதையும் தனக்கு வழியாக்கி முந்திக்கொண்டு வந்து நிற்கும் என்கிறார் வள்ளுவர்.
ஊழ்வினை என்பது ஒருவனால் செய்யப்படும் செயல்களால் உருவாவதே. இது நல்வினை- தீவினை என இருவகைப்படும். அப்போது ஆசைக்கும் வினைக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்னும் கேள்வி எழும்.
எண்ணம் நலமாக இருந்தால் செயல் நலமாக இருக்கும். செயல் நலமாக இருந்தால் அதனால் விளையும் பயன் மிகுந்த நலமாக இருக்கும். ஆசையைப் பற்றி திருமூலர்-
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே'
என்கிறார். மனிதர்களே, ஆசையை விட்டுவிடுங்கள்; ஆசையை விட்டுவிடுங்கள். அது ஈசனிடம்கொண்ட ஆசையாயினும் சரி- அதையும் விட்டுவிடுங்கள். ஏனென் றால் ஆசைகள் அதிகமானால் துன்பங்கள் அதைவிட அதிகமாகிவிடும். அவற்றை விட்டுவிட்டால் ஆனந்தம் தேடிவரும். பரம்பொருள் ஈசனிடம் அன்பு வைக்கலாம். பக்தி செலுத்தலாம். ஆசைப்படத் தேவையில்லை அல்லவா? மேலும் ஆசையென்பது கீழான மனநிலை; புறப்பற்றால் வருவது. அன்பே மனதின் உயர்பண்பு. அது அகப்பற்றால் வருவது.
அன்பு உயிர்வதை செய்யாது.
ஆனால் உக்ரைனில் என்ன நடக்கிறது?
அன்பு எவ்வாறு சிதைந்தது? எங்கு பார்த்தா லும் காதைப் பிளக்கும் வெடிச்சத்தங்கள். தீப்பிழம்புகள். திரும்பிய பக்கமெல்லாம் அழுகுரல்கள்! தலைவர் என்பவர்கள் பாதுகாப்பான அறை யில் அமர்ந்துகொண்டு கட்டளையிடுகிறார் கள். வீரர்கள் போர்க் களத்தில் தாக்குத லில் ஈடுபடுகின்றனர். முதலில் பாதிக்கப் படுபவர்கள் அப்பாவி மக்களும், பெண் களும், குழந்தைகளும்! அவர்தம் உடமை களும் தாக்குதலுக்கு ஆளாகின்றன. கிராமப்புறங்களில், "தாடி பற்றி எரியும்போது பீடி பற்றவைக்க நெருப்பு கேட்டானாம் ஒருவன்' என்று சொல்வார்கள். எங்கோ ஒரு நாட்டில் சண்டை. இதில் நாம் கவலைப்பட என்ன இருக்கிறது என்று எண்ணுகின்றனர். அதிகாலை நேரத்தில் பால் வண்டியிலிருந்த பால் பாக்கெட்டுகள் திருடப்படுகின்றன. அவை யாரோ ஒருவரின் கட்- அவுட்டுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுகின்றன. இது எத்தகைய இழிவான செயல்! எத்தனை ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க இந்தப் பால் உதவுமென்பதை நமது இளைஞர்கள் சிந்திக்கவேண்டாமா?
"தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்னும் பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வள்ளலார் பிறந்த இந்த மண்ணிலா இத்தகைய செயல்கள் நடக்கின்றன? "பிரதோஷ வழிபாடு செய்தால்- பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால் உன்னைப் பிடித்த அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும்' என்று ஒருவர் சொல்கிறார்.
ஆனால் மனதை ஊனமாக வைத்துக்கொண்டு செய்யும் எந்தப் பிரார்த்தனையும் பலன் தராது.
"மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற'
என்கிறார் வள்ளுவர்.
ஒருவன் மனதளவில் குற்றமற்றவனாக இருக்கவேண்டும். அதுவே சிறந்த அறமாகும். மனத்தூய்மையற்ற எந்த ஒரு செயலும் அறமாகாது. அத்தனையும் வீண் ஆரவாரத் தன்மையுடையனவே ஆகும்.
மனம் மாசற்று இருக்கவேண்டும் என்பதற்கு, திருநின்றவூரில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் வரலாற்றை ப் படிக்கவேண்டும். அவர் தன் மனதுக்குள் ஒரு மாபெரும் சிவாலயத்தை உருவாக்கியதன் விளைவு, இன்று திருநின்றவூரில் இதயம் காக்கும் கடவுளாக இருதயாலீஸ்வரர் ஆலயம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. எம்பெருமான் சிவன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
நடந்துகொண்டிருக்கும் ரஷ்யா- உக்ரைன் போர், மூன்றாம் உலகப்போருக்கு காரணமாகக்கூட இருக்கலாம். வரலாற்றைத் திருப்பிப் பார்ப்போம். முதல் உலகப்போரின் முடிவில் 2 கோடி பேர் உயிரிழந்தனர்.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் 7 கோடி பேர் உயிரிழந்தனர். அதில் 15 லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
தற்போது 2020 மார்ச் மாதம்முதல் 2022 மார்ச்வரை உலக மக்கள் தொகையான 800 கோடி பேர்களை, கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் அச்சத்தில் உறைய வைத்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சம் பேர்.
அறிவுள்ள மனித இனம், பகுத்தறிவில்லாத பல உயிர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கிறது. இங்கு ஒன்றை நினைவு கூர்கிறேன்.
பேராசையின் விளைவைப்பற்றிப் பேசும்போது இவர்களை நினைக் காமல் இருக்க முடியாது. பேரரசன் அலெக்சாண்டர், மாவீரன் நெப்போலியன், கொடுங்கோலன் ஹிட்லர் என்று பட்டியல் நீள்கிறது. இறுதியில் இவர்கள் சாதித்தது என்ன?
இறக்கும் தறுவாயில் "சங்கரா சங்கரா' என்பதில் எந்த பயனுமில்லை. அன்பும் அறமும் தொலைந்துவிட்டால் வாழ்க்கை அர்த்த மில்லாததாகி விடும். கடந்தகாலத்தில் உயிரிழந்தவர்களால், உலகளாவிய 800 கோடி மக்கள் தொகையில் மனநிலையில் என்ன மாற்றம் வந்தது? ஒன்றுமில்லை. அடிப்படைக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, சமூகக் கல்வியைத் தொலைத்ததன் விளைவு, மனித இனம் உடலால் மட்டுமல்ல; மனதாலும் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டூருக்கிறது. நாம் நமது வரலாற்றை திரும்பப் பார்க்கவேண்டும்.
அதைப் புரிந்து உணர்ந்து தெளியவேண்டும். அப்போதுதான் அன்பின் உச்சத்தையும் அறத்தின் விளைவையும் நாம் உணர்ந்து கொள்ளமுடியும். அன்புப் பயிர் வளர்க்கவும் அறத்தில் சிறக்கவும் திருமந்திரம் கூறும் நல்லுரையைப் பார்க்கலாம்.
"ஆனை துரக்கில்என் அம்புஊடு அறுக்கில் என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனைப் பதியினில் எம்பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே.'
மதம்பிடித்த யானை துரத்திவந்தால் என்ன? கூர்மையான அம்பை செலுத்தி உடலை இரண்டாகப் பிளந்தால் என்ன? காட்டில் வாழும் புலிகள் கூட்டமாக வந்து சுற்றி வளைத்தால் என்ன? இதைப் பற்றியெல்லாம் அஞ்சாமல்-
கவலைப்படாமல் என் தலைவனா கிய இறைவன் சிவப்பரம்பொருள் என் சிந்தையில் பொருந்தச் செய்த ஞானமெனும் உழவினைச் செய்து, அருள் விளையும் அன்புப் பயிரை வளர்ப்பேன்.
பயிர் விளைச்சல் பெருக நிலத்தை உழுது பண்படுத்த வேண்டும். இங்கே நிலம் என்பது உடலை- மனதைக் குறிக்கிறது. இறையுணர்வால் மனம் பண்பட்டால் அன்பு பயிர் வளர்ந்து அருள் கிடைக்கச் செய்யும். இதுவே ஞான உழவு என்பதாகும்.
மனித இனம் தனது இனம் அழிவதற்குக் காரணமான ஆசையை விட்டொழிக்க வேண்டும். அதற்கு அரனைத் தொழுதல் வேண்டும். அவன் சகலத்திற்கும் அரணாக இருப்பான். அன்பே சிவம்!