தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில், "எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்'' என்கிறார்.

அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்தி படுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.

ஆயிரக்கணக்கான ஆண்டு கள் பழமைவாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை.

Advertisment

44

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.

அன்னதானத்தால் ப்ரா ணனையும், ப்ராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் ச்ரத்தையையும், ச்ரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத் தையும், மனத்தால் சாந்தியை யும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும், ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்கு சமமாகும்.

"அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கர ப்ராணவல்லபே ஞானவைராக்ய ஸித்யர்த்தம் புகூம் தேஹி ச பார்வதீ' கர்ணன் வாழ்ந்த காலத்தில், தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்து தானத்திற்கே பெயர் பெற்றவன்.

அவன் இறந்து சொர்க்கம் சென்றபொழுது, கர்ணனுக்கு அங்கு அடங்காப்பசி ஏற்பட்டது.

அதற்கான காரணம் குறித்து சொர்க்க லோகத்தின் தலைவனிடம் கேட்டான்.

அதற்கு சொர்க்கலோகத்தின் தலைவனோ, "கர்ணா நீ பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் பொன்னும், பொருளும் மணியும் ஏன் உன்னுயிரும் தானமாக கொடுத்து புகழ் பெற்றவன்.

ஆனால் வாழ்நாளில் யாருக்கும் நீ அன்னதானம் செய்யவில்லை, தானத் திற்கெல்லாம் தலையாய தானமான அன்னதானம் செய்யாததால் தான் உனக்கு இந்த அடங்காப்பசி உண்டாயிருக்கிறது'' என்றார்.

இந்த புண்ணிய பூமியில் ஆதரவற்றோருக்கு அன்னமளிப்பவன் மாபெரும் செல்வந்தராக வாழ்வான். தானம் செய்வதற்கு பணம் முக்கியமே அல்ல.

நல்ல மனம்தான் வேண்டும். சிலர் தானம் செய்வது எள் முனை அளவு கூட வெளியில் தெரியாது. மன நிறைவுக்காக ஏழை எளியவர்களை, ஆதர வற்றோர்களை தேடித் தேடி போய் உதவி செய்து கொண்டே இருப்பார்கள்.

கோவில்களில் அன்னதானம் திருவிழாக் கள் சமயங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நித்தியபடி மதியம் இரவு இரு வேளையும் அன்னதானத்தை சிறப்புற நடத்தி வருகிறார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்திசர்களில் ஒருவரான ராஜா தீக்ஷிதர் இயன்றோரிடம் பெற்று இல்லாதோர்க்கு உணவு அளிக்கும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அவரை அவர் நடத்தும் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னசாலையில் சந்தித்தோம் மிகவும் பரபரப்பாக வரும் பக்தர்களிடம் "வாங்க நடராஜர் கோவில் அன்னதானம் சாப்பிட்டு போகலாம்'' என அழைத்து தட்டில் பரிமாறிக் கொண்டிருந்தார். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

உங்களைப் பற்றி...?

நான் சிதம்பரம் பொது சபாநாயகர் கோவில் தீக்ஷிதர்.

என் பெயர் ராஜா தீக்ஷிதர். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக தில்லைவாழ் அந்தணர்கள் வழி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் இன்றி பொதுமக்களுக்கும் நித்தியபடி அன்னதானம் வழங்கும் பணி எத்தனை ஆண்டு காலமாக செய்து வருகிறீர்கள்?

2018 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவில் பொது சபையில் ஒரு அன்னச் சத்திரம் நிறுவ வேண்டும் என்று இயன்றோரி டம் பெற்று இல்லாதவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு மனு கொடுத்தேன். அதை ஏற்றுக்கொண்டு பொது நிர்வாகம் எனக்கு அனுமதி அளித்ததின் பேரில் இப்பணியைச் செய்து வருகிறேன்.

அன்னதானம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்த எண்ணம் எப்படி உங்களுக்கு உருவானது.?

சிதம்பரம் என்றாலே அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அல்லவா.... சிதம்பரம் கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் நிறைய சத்திரங்கள் உண்டு. அதில் பொதுமக்களுக்கு பக்தர்களுக்கும் மதிய உணவு இரவு உணவு என அன்னதானம் செய்த காலங்கள் உண்டு.

ஆனால் அவைகள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து வணிக நிறுவனங்களாக மாறி விட்டது. இப்பொழுது சத்திரங்களே கிடையாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் பசியால் பலர் வாடுவதைப் பார்த்து தான் எனக்கு இந்த யோசனை வந்தது. நான் அடிக்கடி திருவண்ணாமலை செல்வதுண்டு ஒருமுறை திருவண்ணாமலைக்கு சென்று அங்கு தியானத்தில் அமர்ந் தேன். அப்பொழுது சுவாமி அசரீரியாய் வந்து நீ நினைத் ததை செய் என்று கூறியது போல் ஒரு உணர்வு. உடனே கோவில் நிர்வாகத்திடம் மனு கொடுத்தேன். அதற்கு அனுமதியும் கொடுத்தார்கள்.

இன்று வரை மதியம், இரவு என குறைந்தது 500 பேருக்கு மேல் பசியாறிச் செல்கின்றனர்.

திருவிழா காலங்கள் தைப்பூசம் போன்ற முக்கிய நாட்களில் மூன்று வேளையும் ஏன் காலை 6 மணி தொடங்கும் அன்னதானம் இரவு பத்து மணி வரை தொடர்ந்து செயல்படும். அந்த நடராஜர் கருணையால் இயன்றோர்கள் உதவி செய்ய இப்பணியை சிறப்பாகச் செய்து வருகிறேன். எல்லாம் அவன் செயல்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும், மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதிலும் எங்கள் பங்கு மிகப் பாராட்டுக்குரியதாக இருந்தது. பசியில் யாரும் இருக்கக்கூடாது என்பதே எங்களின் நோக்கம். அதேபோல் இயற்கைச் சீற்றத்தால் இக்கட்டான சூழ்நிலை வரும்போது அவர்களுக்கு உதவி செய்வதும் எங்கள் முதல் நோக்கம்.

அரசாங்கம் நிர்வகிக்கும் கோவிலைவிட பொது தீட்சிதர்கள் நிர்வகிக்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுத்தம் சுகாதாரம் இதில் முதலிடத்தில் உள்ளதே எப்படி?

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. இறைவனுக்கு மட்டுமே அடிமை .அந்த எண்ணம் எங்கள் மனதில் எப்பொழுதுமே மேலோங்கி நிற்கும். இறைவனுக்கு பயந்து மட்டுமே நாங்கள் சேவை செய்கிறோம்.

அவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். அரசு நிர்வகிக்கும் கோயில் முதல் தனியார் நிர்வகிக்கும் கோயில் வரை பல இடங்களில் கட்டணம் வசூல் செய்து சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கிறார்கள்.

ஆனால் ஒரு பைசா கூட செலவு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய முடியுமா. முடியும் அது சிதம்பரத்தில் மட்டுமே சாத்தியம். எல்லோருக்கும் ஒரே இடம் எல்லோருக்கும் ஒரே தரிசனம். வருமானம் எங்கள் நோக்கம் அல்ல, வரும் பக்தர்களின் நலனே எங்கள் நோக்கம் என்பதால் தான் கோவிலை எங்களால் சிறப்பாக வழிநடத்த முடிகிறது. இந்த நடராஜர் கோவிலுக்கு இன்று நிரந்தர வருமானமும் கிடையாது. அரசாங்க உதவியும் கிடையாது. கோவில் இடங்களை அனுபவித்து வருபவர்களும் எந்த உதவியும் செய்வதில்லை. பக்தர்களே தங்களால் இயன்றதை கொடுத்து இக்கோவிலை சிறப்பாக செயல்பட வைத்துள்ளார்கள். பல கட்டளைதாரர்கள் உண்டு. இயன்றோர்கள் உதவுகிறார்கள். இறைப்பணியில் ஈடுபட வருகிறார்கள். அது ஒன்றே இக்கோவிலின் மூலதனம். கோவிலில் உண்டியல் கிடையாது. சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட்டும் கிடையாது. பக்தர்கள் தட்டில் காணிக்கை போடுவதை வைத்து தான் எங்கள் வாழ்வாதாரமே. இறைவன் ஒரு நாளைக்கு எவ்வளவு படி அளக்கிறானோ அதுதான் இறைவன் எங்களுக்கு அளித்த வருமானம். எங்களைப் பொறுத்தவரை சித்தர்கள் மனம் நோகாமல் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் எந்த சர்ச்சையும் ஏற்படக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம் இனியும் இருப்போம்.

சிதம்பரம் கோவில் நிர்வாகியை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

தற்போது 450லிக்கும் மேற்பட்ட தலைமை தீட்சிதர்கள் உள்ளோம். ஆதிகாலத்திலிருந்தே யார் கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்பதை எல்லா தீட்சிதர்கள் பெயர்களையும் எழுதி நடராஜருக்கு அபிஷேகம் செய்யும் குடத்தில் உள்ளே பெயர் எழுதிய சீட்டுக்களை போட்டு குடஓலை முறையில் தேர்வுசெய்வோம். நடராஜரின் பாதத்திற்கு கீழே உள்ள திருவிளக்கு முன்னால் வைத்து பூஜித்து குடத்தை குலுக்கி கோவிலுக்கு வரும் ஒரு பொது மனிதர் (பக்தரை) ஒருவரை அழைத்து அவரை தேர்வு செய்ய சொல்வோம். அவரும் ஒரு சீட்டு எடுத்துக் கொடுப்பார். அதில் யார் பெயர் வருகிறதோ அவர் தான் ஒரு வருடத்திற்கு கோவிலின் வரவு செலவு கணக்கு மற்றும் நகை பாதுகாப்பு அனைத்திற்கும் பொறுப்பு அவரே நிர்வாகி இந்த முறையை நீதிமன்றமே ஏற்றுக் கொண்டு விட்டது.

சிதம்பரம் கோவிலின் சிறப்பான விஷயம் குறித்து கூறுங்களேன்...

நமது பாராளுமன்றத்தின் பெயர் ராஜ்யசபா. சிதம்பரம் நடராஜர் தாண்டவம் ஆடும் சபையின் பெயர் ராஜசபை, ராஜசபாவின் நிர்வாகி சபாநாயகர். இந்த ராஜய சபையின் வீற்றிருக்கும் நடராஜரின் பெயரும் சபாநாயகர். எல்லோருமே சிதம்பரம் நடராஜர் கோவில் என்றுதான் கூறுவோம் ஆனால் இதற்கு வரலாற்றுப் பெயர் சபாநாயகர் திருக்கோவில் என்பதுதான் எனக் கூறி முடித்தார்.