பாரதப் போர் முடிந்தது.

பாண்டவர்கள் வென்றுவிட்ட நிலையில், அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்த கண்ணன் இழுத்துப்பிடித்திருந்த குதிரையின் லகானைத் தளர்த்திவிட்டு, தனக்குப் பின்புறம் தேரின்மேல் நின்றிருந்த அர்ஜுனனைத் திரும்பிப் பார்த்தான். போரில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற பெருமையோடு விஜயன் கம்பீரமாக வில்லைத் தோளில் மாட்டியபடி நின்றிருந்தான்.

"அர்ஜுனா! போர் முடிந்துவிட்டது. உனக்கு வெற்றியும் கிடைத்துவிட்டது. இனிமேலும் நீ காலம் தாழ்த்தாமல் தேரைவிட்டுக் கீழே இறங்கு...'' என்று கட்டளையிட்டான் கண்ணன்.

வெற்றிகண்ட அர்ஜுனனுக்கு இந்த இடத்தில் சற்று ஆணவம் வந்தது.

Advertisment

ff

அவன் கண்ணனைப் பார்த்து, "கிருஷ்ணா... போர் விதிமுறைப்படி, ஒரு தேரோட்டி முதலில் வெற்றிபெற்ற வீரனையோ அல்லது அரசனையோ கையைப் பிடித்து, பணிவுடன் தேரிலிருந்து இறக்கி விடுவதுதானே சம்பிரதாய முறை? அப்படியிருக்க தேரோட்டியான நீ, போரில் வெற்றி கண்ட என்னை கைப்பிடித்து இறக்கி விடாமல் "தேரிலிருந்து இறங்கு' என்று ஆணையிட்டுவிட்டு, நீ மட்டும் அப்படியே தேரில் அமர்ந்திருப்பது என்ன நியாயம்'' என்று கேட்டான்.

இதைக் கேட்ட கண்ணன், "அர்ஜுனா! நீ போரில் வென்றுவிட்டோம் என்ற ஆணவத்தில் இருக்கிறாய்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாமல் பேசுகிறாய். கிருஷ்ணன் சொல்கிறேன். நீ உன் ஆணவத்தை விட்டுவிட்டு தேரைவிட்டுக் கீழே இறங்கு'' என்றான். அர்ஜுனக்கு கோபம் வந்தாலும், கண்ணன் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டுமென்பதால் அவன் எதுவும் பேசாமல் அமைதியாக தேரைவிட்டு இறங்கினான்.

"அர்ஜுனா... நீ இந்தத் தேரின் அருகில் நிற்காதே... கொஞ்ச தூரம் தள்ளிப்போய்... அங்கே நில்'' என்று கூறி குதிரையின் சாட்டைக்குச்சியால் தூரமான இடத்தை நோக்கிக் காட்டி னான். அர்ஜுனனும் மறுப்பேதும் பேசாமல் தூரமாகப் போய் நின்றான்.

தேரில் அமர்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணன் தேரின்மேல் பறந்து கொண்டிருந்த கொடியை ஒருமுறை திரும்பி ஏறிட்டுப் பார்த்தான். காற்றில் பறந்துகொண்டிருந்த கொடி முன்புபோல் பறக்காமல் துவண்டு தொங்கியது. அடுத்து ஸ்ரீகிருஷ்ணன் தேரிலிருந்து கீழே குதித்தான். வேகமாக அர்ஜுனன் நின்ற இடத்திற்கு வந்து அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அதே நேரத்தில் தேர் குபீரென்று தீப்பிடித்தது. தேரின் முழுபாகங்களும் கொழுந்துவிட்டு எரிந்து, அப்படியே சாம்பலாகிவிட்டது.

இதைக்கண்ட அர்ஜுனன் அதிர்ந்துபோய் நின்றான். அப்போது ஸ்ரீகிருஷ்ணன், "அர்ஜுனா! இதுவரை உன் எதிரிகள் உன்மீது ஏவிய மந்திரக் கணைகளும், மாய அம்புகளும், நாகாஸ்திரமும் தங்களது சக்திகளை வெளிப்படுத்த முடியாமல் அடங்கிப் போய்க் கிடந்தன. காரணம், நான் தேரில் அமர்ந்திருந்ததாலும், சக்தி மிகக்கொண்ட அனுமன் தேர்க்கொடியில் இருந்ததாலும் அந்த மந்திர சக்திகள் செயலற்றுக் கிடந்தன. நானும் அனுமனும் தேரைவிட்டு விலகியதும், மாயமந்திர அஸ்திரங்கள் தம் கொடூரத்தை வெளிப்படுத்த, தேரில் தீப்பற்றிக் கொண்டது.

உனக்குமுன் நான் தேரைவிட்டு இறங்கி, அனுமனும் கொடியிலிருந்து நகர்ந்துவிட்டு, நீ மட்டும் தேரில் நின்றிருந்தால் உன் கதி என்னவாகியிருக்கும் அர்ஜுனா?'' என்றான் கண்ணன்.

அர்ஜுனன் ஆணவத்தோடு நடந்து கொண்டதை எண்ணி கூனிக்குறுகிப் போனான். அப்படியே கிருஷ்ணன் கால்களில் விழுந்தான்.

ஸ்ரீகிருஷ்ணனும் அர்ஜுனனை எழச்செய்து தன்னோடு அணைத்துக்கொண்டு, போர்க் களம் விட்டுச்சென்றான்.

ஆணவம் சில நேரம் நம் கண்களை மறைத்து விடும். அதனால் பின்னர் அவதிப்பட வேண்டிவரும். ஆணவத்தைவிட்டு, நம்மை நல்வழிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்ரீகிருஷ்ணனின் கீதையில் இந்த அறிவுரையும் ஒன்று.