க்தி என்பது என்ன? நம்பிக்கை என்பது என்ன? மூடநம்பிக்கை என்பது என்ன? நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். நம்பிக்கை வாழவைக்கும். மூடநம்பிக்கை மனநோயாளியாக மாற்றிவிடும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். மறைபொருளாக இருக்கக்கூடிய பரம்பொருளைக் கண்டுபிடிப்பது முக்கியமல்ல அதை தேடிக்கொண்டிருப்பதும் அவசியமல்ல. அது நமது வேலையும் அல்ல. நீ, இறைவன், இயற்கை உனக்கு கொடுத்த வேலையை ஒழுங்காக செய்து கடமையாற்றுவதே நமது வேலையாகும். பஞ்சபூத பேராற்றலே மாபெரும் இறையாற்றல் என்றால் அது மிகையாகாது.

காற்று அதன் வேலையை செய்து கொண்டிருக்கிறது. நீர் (மழை) அதன் வேலையை செய்துகொண்டிருக்கிறது. நிலம் எனும் நல்லாள் (பூமி) அதன் வேலையை செய்துகொண்டு இருக்கிறது. நெருப்பு (சூரியன்) அதன் வேலையை செய்துகொண்டிருக்கிறது. ஆகாயம், வானம் என்று சொல்லப்படும் வெட்ட வெளி அதன் வேலையை செய்து கொண்டிருக்கிறது. இவை அனைத் தையும் தன்னகத்தே ஒருங்கிணைத்து ஒன்றாக செயல்படும் பிரபஞ்ச சக்தியே, பெரும் ஞான ஆற்றலாக வெளிப்படுகிறது. ஏனென்றால் அது அதன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. படைத்தவன், நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்கிறோமா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இறைவன் இயற்கையில் ஒளிந்துகொண்டு பிரபஞ்சத்தில் நடப்பவற்றை கவனித்துக் கொண்டே இருக்கின்றார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த பரம்பொருளின் அருளை நாம் பெறவேண்டும் என்றால், அதற்கு திருமந்திரச் சிற்பி திருமூலரின் வார்த்தைகளைப் பார்ப்போம்.

ss

"பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை

Advertisment

அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது

உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை

மற்று அண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.'

Advertisment

உயிருக்குத் துணையாக இருக்கின்ற பரம்பொருளை, இவ்வுலகிலுள்ள யாரும் குறையொன்றும் கூறாமல், அறவழி அல்லாத வேறுவழிகளிலே செல்லாது, அறவழியிலேயே நின்று, நீங்கள் ஒருவருக்கு ஒன்றைக் கொடுத்து உதவிய அந்த ஈகையே, அந்த கணமே- ஈசனின் அருளே உங்களுக்கு உற்ற உயிர்த்துணையாகும். பரம்பொருள் வாழும் உயிர்களின் பேரின்ப வீட்டை அடையவைக்கும் வழித்தடமும் இதுவேயன்றி வேறு எதுவுமில்லை.

133 அதிகாரங்களைக்கொண்ட திருக்குறளில், மருத்துவ ஞானி திருவள்ளுவர் தமது முதல் அதிகாரத்திலேயே கடவுள் வாழ்த்து என்று பிரதானப்படுத்தி பிரகடனப் படுத்துகிறார்.

"கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.'

அதாவது தூய அறிவினை உடைய இறைவனின் அப்பழுக்கற்ற திருவடிகளை ஒருவன் தொழாமல் இருப்பானானால் அவன் கற்ற கல்வியினால் ஆகக்கூடிய பயன் ஒன்றுமில்லை.

இப்படி ஒருவன் இறைவனை பற்றிக்கொண்ட பிறகு, அவன் ஈகையில் சிறந்து விளங்கவேண்டும். அதற்கு திருக்குறள் கூறும் உபாயத்தைப் பார்க்கலாம்.

"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.'

ஏழைகளுக்கு துன்பம் நேரும்போது, அவர்களுக்கு வேண்டிய ஒன்றைக் கொடுப்பதே ஈகை என்று சொல்லக்கூடிய மிக உயர்ந்த அறச்செயலாகும். அதைத் தவிர்த்து அதன் பயன்பாட்டை அறியாதவர்க்கு கொடுப்பதெல்லாம் கடன் கொடுக்கும் தன்மையைப் போன்றதாகும்.

இதன் உள்ளேதான் சமத்துவமும், சமூகநீதியும் ஒளிந்துகொண்டு இருக்கிறது. இது புரிந்தால் அதன் பெயர் பக்தி. இதனை புரியாமல் எதிர்த்தால் அது சமூக அநீதி. மிகக்கொடூரமான மூடநம்பிக்கை ஆகும். சமூகநீதி பற்றியும் சமத்துவம் பற்றியும் திருமந்திரச் சிற்பி தனது திருமந்திரத்தில் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

"கெடுவது மாவதுங் கேடில் புகழோன்

நடுவல்ல செய்தின்ப நாடவும் ஒட்டான்

இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்

படுவது செய்யிற் பசுவது வாமே.'

அழிவு, ஆக்கம் இரண்டையும்

அருளிச் செய்பவன், குன்றாத புகழுடையப் பரம்பொருளான சிவபெருமானே ஆவான். நடுவு நிலைமை தவறி செய்பவர்கள் இன்பம் அடைய அவன் ஒருபோதும் விடமாட்டான். எனவே உரியவர்களுக்கு ஒன்றைத் தரவும், இல்லாதவர்களுக்கு இயன்றதைக் கொடுத்து உதவுவதையும் நினையுங்கள். மற்றவர் இன்பத்தைக் கெடுக்காதீர்கள். பிறர் இன்பம் கெட நினைப்பவன் மனிதன் அல்ல. மனிதன் எனும் வீட்டில் மிருகம் (மதம், இனம், பேதம்) எனும் கெட்ட சிந்தனைக்கு இடமில்லை.

இப்போது மனித ஆராய்ச்சி எனும் பெயரில் நமது எதிர்காலத்தை, மனித வளத்தை அடியோடு சீர்குலைக்கும் வேலையை, ஒரு கும்பல் தீவிரமாக ஈடுபட்டு, அதை செய்துகொண்டே இருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மனித குலத்தை மேம்படுத்தவும், மாசற்ற இயற்கையைப் பாதுகாக்கவும் உகந்ததாக இருக்கவேண்டும். ஒரு பொருளையோ அல்லது ஒரு புதியவகை தொழில் நுட்பத்தையோ கண்டுபிடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அது பயன்பாட்டுக்கு வரும்போது அதன் உறுதித் தன்மையும், அதனுள் ஏதேனும் கெடுதி இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து, அதன்பிறகு அது செயல்படுத்தப்பட வேண்டும். அதனால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகளும்- அதாவது கொடூரமான தீமைகள் பற்றிய தீவிரமான புரிதல்களும் ஆராய்ச்சியும் செய்யப்படவேண்டும். ஏனெனில் "தீதும் நன்றும் பிறர் தர வாரா' இது ஆன்றோர் வாக்கு. திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.'

துன்புறுத்தக்கூடிய தீவினைகள் தன்னை சேர்ந்து வருத்துவதை விரும்பாதவன், தீவினைகளை தான் பிறருக்கு செய்யாது இருக்கவேண்டும்.

எதிர்மறைக்கு உதாரணமாக, சில ஆண்டுகளுக்குமுன்பு நமது விஞ்ஞானிகள் குளோனிங் (ஈப்ர்ய்ண்ய்ஞ்) எனும் முறையைக் கண்டுபிடித்தனர். இது பெரிய விஷயமா எனும் கேள்வி எழுகிறது. இரட்டைப் பிறவி, நான்கு பிறவி என்பதெல்லாம் இயற்கையாக நிகழக்கூடிய ஒரு விஷயமாகும். அது மூலக்கூறுகளின் (டி.என்.ஏ) அடிப்படையில் இயற்கையாக நிகழக்கூடியது. அதனையே நமது மனித ஆராய்ச்சி மூலக்கூறு படியெடுப்பு என்ற பெயரில் ஒரு ஆய்வினை, அதாவது (உ.ச.ஆ ஈப்ர்ய்ண்ய்ஞ்) எனும் செயற்கை முறையை நிகழ்த்திக்காட்டி இருக்கின்றது.

அதன் அடுத்த கட்டம் உயிர் படியெடுப்பு (தங்ல்ழ்ர்க்ன்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈப்ர்ய்ண்ய்ஞ்) முறையாகும்.

அதாவது உயிர் படியெடுப்பு என்பது ஒரு முழுமையான உயிரியை, உயிரினத்தை அதன் ஜீன் (ஓங்ய்ங்) பண்புகளை உடையதாய் படியெடுத்து, அதனைப் போன்று மறு பதிப்பு செய்த உயிராக படைப்பது. நல்லவேலையாக சமூகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் இந்த ஆராய்ச்சியானது விலங்கினங்களோடு நின்றுவிட்டது. இது மனித இனத்தில் நடந்தால் அதோடு மனித இனத்தின் நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் முடிந்துவிடும். இப்போதுதான் இந்தப் பிரச்சினை முடிவடைந்த சில வருடங்களில் மீண்டும் ஒரு புதிய கண்டுபிடிப்பை நமது ஆறாவது அறிவு நிகழ்த்தி இருக்கின்றது. அந்த கண்டுபிடிப்பின் பெயர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) ஆகும். நம் மனதில் (அதாவது யாரோ ஒருவருடைய மனதில்) உருவாகும் சிந்தனைகளை, எண்ணங்களை அல்லது நினைவுகளை (நேர்மறை அல்லது எதிர்மறை) அப்படியே பதிவுசெய்து, அதனை ஒரு நுண் கணிப்பொறி சில்லு (ஙண்ஸ்ரீழ்ர் ஈர்ம்ல்ன்ற்ங்ழ் ஈட்ண்ல்) ஆக மாற்றி, அதனை உணர்வுள்ள யாரோ ஒருவருடைய மூளையோடும் தொடர்புபடுத்தி விடமுடியும். இல்லையெனில் அதனை ஒரு ஆர்டிபிசியல் ரோபோவை பயன்படுத்தி இத்தொழில் நுட்பத்தை செயல்படுத்த முடியும். இது மனித குலத்தை அடியோடு சீர்குலைத்துவிடும். இதற்கு மருத்துவ ஞானி தனது திருக்குறளில் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.'

ஒருவன் பிறருக்கு கேடு தரும் செயலை மறந்தும்கூட எண்ணக்கூடாது. அவ்வாறு எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு தரும் செயலை அறக்கடவுள் எண்ணி செயல்படுத்திவிடும். இயற்கையில் இருக்கும் இறைவன் இவர்களின் செயற்கை ஆட்டத்திற்குமுடிவு கட்டிவிடுவான். அப்போது பிரபஞ்சமும் அதில் இயங்கிக்கொண்டிருக்கும் பூமிப்பந்தும் தன்னை நெறிமுறையோடு சீர்படுத்தி அதற்கு சொந்தமான நேர்மறை ஆற்றலுடன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

ஒருவன் உளன்புடன்கூடிய பக்தியில் இருக்கும்போது அவனை நோய்களும் அணுகாது. பக்தி என்பது தூய்மையான சிந்தனை உடைய நல்ல எண்ணம் ஆகும். இன்று சமுதாயத்தில் பணத்தில், பொருளில், ஏன் உணவில் கூட சமத்துவம் இல்லை. ஆனால் நோயில் இந்தியா முழுவதும் சமத்துவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். இன்று இந்தியாவில் சுமார் 14 கோடி பேர் நீரிழிவு நோயால் (உண்ஹக்ஷங்ற்ண்ஸ்ரீ) பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 20 கோடிபேர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இப்படி நோயாளிகள் நோயின் தன்மையால் நோய்வாய்ப்பட்டிருப்பதில் சமத்துவத்தை நோக்கி விரைந்து பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து வயல்வேளை பார்த்தவனுக்கு நீரிழிவு நோய் வரவில்லை. நாள் முழுவதும் சுமைதூக்கியவனுக்கு மூட்டுவலியோ முதுகுவலியோ வரவில்லை. இன்று உலக அளவில் நடந்துகொண்டிருக்ககூடிய பல்வேறு ஆராய்ச்சிகள் "இந்த வைரஸ் இருக்கிறது, அந்த வைரஸ் இருக்கிறது, இந்தக் கிருமி இருக்கிறது, புதிய கிருமி உருவாகிவிட்டது' என்று பல்வேறு வகையான வைரஸ்களையும் கிருமிகளையும் கண்டறிந்து பட்டியலிடுகிறது. இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது! இந்த நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்தை ஏன் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை? இங்கு ஒவ்வொருவரும் முழுக்க நிஜ வாழ்க்கையில் நடித்துக்கொண்டிருக்கிறார் கள். கையில் இருக்கும் இயற்கை மருந்தை இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ஏன் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலவில்லை? எல்லாம் கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு சரியாக வரும்.

ஏனென்றால் நமது உணவை அழித்து, சுற்று சூழலையும் அழித்து, மழுங்கச் செய்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிட்டார்கள். இந்த மானிட உடலின் அதிசயத்தையும் அதன் பெருமையையும் உணராமல் பக்தியைப் பற்றி பேசுவதும், சமத்துவம் பற்றி பேசுவதும், சமூகநீதி பற்றி பேசுவதும், மதத்தைப் பற்றி பேசுவதும் யாருக்கும் எந்தப் பயனையும் கொடுக்கப்போவதில்லை. ஏனென்றால் மானிட உடலானது ஒரு மாபெரும் பொக்கிஷம் ஆகும். அதன் உள்ளேதான் இறைவன் இயற்கையாக இருக்கிறான். இதனை உணரவில்லை என்றால் மகிழ்ச்சியாக இயங்க முடியாது. இருக்கவும் முடியாது. உண்மையான, அப்பழுக்கற்ற ஒழுக்கமான நிலையே, சிந்தனையே, செயலே உன் மனநிலையையும் உனது உடல்நிலையும் சமநிலையில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கருவியாகும். அதனால்தான் திருமந்திர சிற்பி திருமூலர் ஊன்உடம்பு ஆலயம், உள்ளம் பெரும் கோவில் என்று உரைத்திருக்கின்றார்.

ஒரு திருமந்திரத்தை பார்ப்போம்.

"உயிரது வேறாய் உணர்வு எங்குமாகும்

உயிரை அறியில் உணர்வு அறிவாகும்

உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை

அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே.'

உயிரானது உடம்பிலிருந்து வேறாக, பெரும் உணர்வாக உடலெங்கும் பரவி நிற்கும். உயிரின் இயல்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டால், உணர்வு தொழில்படும் விதமும் புரியும். உடல் முழுவதும் இருப்பது உயிரல்ல. உடல் முழுவதும் பரவி நிற்பது உணர்வே. இந்த உணர்வோடு ஒன்றிக் கலந்திருக்கும் பெரும் பொருள் ஒன்று உள்ளது.

அதனைப் பலரும் அறிந்தார் இல்லை. அந்த பெரும் பொருள் எதுவென்றால், பிரபஞ்சம் முழுக்க பரந்து, விரிந்து, நிறைந்து, மறைந்திருக்கும் ஞானம் எனும் சிவப் பரம்பொருளே ஆகும்.

எனவே, உடல் உயிரோடு, உயிர் உடலோடு பொருந்தி இருக்கும் காலத்திலேயே நல்ல சிந்தனைகளோடும், நல்ல எண்ணங்களோடும், நல்ல செயல்களைப் புரிந்து மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிவப் பரம்பொருளின் அருளாசியினைப் பெறவேண்டும். ஆகவே சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிராக செயல்படுவதை விடுத்து சமநோக்குடன் செயல்படும் சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும். திருவள்ளுவர் கூறுவதை பார்ப்போம்.

மதம், சமயம், சமத்துவம், சமூகநீதி பற்றி அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் கூறுவதைப் பார்க்கலாம்.

"மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற தேவர் என்றும்

பதம் என்றும் பதம் அடைந்த பத்தர்

அனுபவிக்கப்

பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த

விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என் தனக்கே

வெட்ட வெளியா அறிவித்திட்ட அருள் இறையே

சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்கப் பொதுவில்

தனிநடஞ்செய் அரசே என் சாற்றும் அணிந்தருளே.'

மதங்கள் என்றும் சமயங்கள் என்றும் சாத்திரங்கள் என்றும் அவற்றில் சொல்லப் படுகின்ற தேவர்கள் என்றும், மேலும் அத்தேவர்கள் வாழ்கின்ற பதங்கள் என்றும், அந்தப் பதங்களை அடைகின்ற மெய் அன்பர்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்றும், பலப்பலவாக விரிக்கப்பட்ட விதங்களில் ஒன்றும் தெரியாமல் மயங்கிக் கிடந்த எனக்கு, அவை அனைத்தையும் வெட்ட வெளியாக்கி காட்டி அனைத் தும் சமமே என அருளிய இறைவனே! அழியாத நிலைப்பேறு பொருந்திய சுத்த சிவ சன்மார்க்கமாகிய பொதுவில், ஒப்பற்ற தெருக்கூத்து ஆடுகின்ற அரசே! யான் சாற்றுகின்ற சொல் மாலையை ஏற்று அருள்புரிவாயாக.

ஆகவே மனித சமுதாயம் பிரிவுகளும், பேதங்களும் பார்க்காமல் எல்லாம் எல்லாருக்கும் சமம் எனும் மேலான எண்ணம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உதயமாக வேண்டும். அப்போ மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது! எதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது! ஏனென்றால் எல்லாம் சிவமயமே.....

இதைப்பற்றி சங்ககாலப் புலவர் அவ்வையார் கூறி அருளியவை பார்க்கலாம்

"ஆகமமும் சிவனும் ஆசையும் தானாகி

ஏகமாய் நிற்கும் சிவம்.'

அதாவது உடலும், உள்ளமும் அதன் ஆசா பாசங்கள் எல்லாமும் சிவனே என்றாகி விட்டால், பிறகு சிவன்வேறு நாம்வேறு அல்ல. சிவனும் நம்முள் ஒருவனே ஆகி நம்மோடு கலந்து நிற்பான்.

மூடநம்பிக்கையை களைவோம்... பரமனை துதிப்போம்...

சிவப் பரம்பொருளின் பேரருளைப் பெறுவோம்.