"புக்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை

மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

Advertisment

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்

பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்.'

1962-ஆம் ஆண்டு வெளிவந்த "அன்னை' எனும் திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலே இது. சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பே பணம்- மனம் எனும் இவ்விரண்டும் இருந்த நிலையை கவிஞர் தன் அனுபவத்துடன் அழகாகப் பதிவிட்டுள்ளார். இன்று அதன் கோரமுகம் தாண்டவமாடுகிறது.

Advertisment

இதைப்போன்று 1956-ஆம் ஆண்டு வெளிவந்த "மதுரைவீரன்' படத்தில் வரும் ஒரு பாடலைப் பார்க்கலாம்.

"ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா

எண்ணிப்பாருங்க... ஐயா எண்ணிப்பாருங்க

தேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்

கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்

சிறையில் கம்பி எண்ணணும்

பூட்டை உடைக்கும் புலியே

இதைநீங்க புரிஞ்சுகொள்ளுங்க.

காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை

கண்ணம் போட்டுப் பிழைப்பது தொல்லை

கனவில்கூட வேண்டாமய்யா நல்லா கேளுங்க.

ஊரை அடிச்சிப் பிழைக்கவும் வேண்டாம்

யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்

ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய்

வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க...'

பாடல் உணர்த்துவதைப் புரிந்துகொள்ள வேண்டும். திருடுவது, கொள்ளையடிப்பது, மக்களை ஏமாற்றுவது இவையெல்லாம் இழிசெயலாகும். ஒருவர் கேள்வி கேட்கின்றார். "பக்திக்கும் இதற்கும் என்ன தொடர்பிருக்கிறது?'

ara

இந்த பாடல்களுக்கும் பக்திக்கும் தொடர்பிருக்கிறது. மத துவேஷமோ, சாதிய பாகுபாடோ, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற எண்ணமோ, மொழி வேற்றுமையோ, ஆகமமோ, வேதமோ, கருத்து மோதல்களோ இருக்கும் மனிதன் செய்யும் பக்தி பக்தியல்ல. பிற உயிரையும் தன்னுயிர்போல நேசிப்பது, பொறாமை, வெகுளி எனும் குணங்களற்று, மனிதாபிமானம், மனித நேயம், சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுய ஒழுக்கமே மிகச்சிறந்த ஆன்மிகம். ஏனென்றால் இவ்வுலக வாழ்க்கையின்மீது ஆசைப்படும் உடலில் பொருந்தியிருக்கும் உயிர் நிலை யற்றது. இதைப் பற்றி திருக்குறள்-

"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப்படும்'

என்கிறது. பேசமுடியாதபடி நாக்குழறி, மேல்மூச்சு வாங்கி, விக்கல் வந்து உயிர் உடலை விட்டுப் போகுமுன் நல்ல அறச்செயல்களை விரைந்து செய்திடல்வேண்டும்.

"ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய் வாழவேணுங்க' எனும் பல ஏழை விவசாயி களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த சூழலில் ஒரு செய்தியைப் பார்த்தேன். பெருந்தொழில், பெருமுதலாளி களுக்கு கடன் தொகைக்கு வட்டி 6 சதவிகிதம் என்றும், விவசாயக் கடனுக்கு 24 சதவிகிதம் வட்டி எனும் தகவல் மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் பாரதி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே திருவள்ளுவர் தமது திருக்குறளில்-

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்'

என்கிறார். எல்லாரும் உண்ணுமாறு உழவுத்தொழிலைச் செய்து, அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உரிமையுடன் வாழ்பவராவார். மற்றவரெல்லாம் பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமைகளேயாவர்.

ஒருமுறை சர்தார் படேல் வெளி நாட்டிற்குச் சென்றிருந்தபோது அவரிடம், "உங்கள் "கல்ச்சர்' என்ன?'' என்று கேட்கப் பட்டது, அதற்கு அவர் "எங்கள் "கல்ச்சர்' அக்ரி கல்ச்சர்'' என்று பதிலளித் தார்.

இதை இங்கே பதிவிடவேண்டிய அவசியம் என்ன? ஒரு பாடலைப் பார்க்கலாம்.

"பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும்போதும் அழுகின்றாய்

ஒருநாளேனும் கவலையில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே...

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்

முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்

மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்...'

இப்போது இயற்கை சிரிக்கும்படியாகவே மனிதனின் நிலை இருக்கிறது. இன்றைய நிலவரப்படி உலகெங்கிலும் நான்கு நிமிடத் திற்கு ஒரு பட்டினிச்சாவு நடந்துகொண்டி ருக்கிறதென்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்

றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதி இன்றிருந்தால் அவர் கண்களில் ரத்தமே வழிந்திருக்கும். இப்போது குறிப்பிட்ட சில மனிதர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள இந்த ஜகத்தினை அழிக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கின்றனர்.

பக்தி உதட்டில் மட்டுமே இருக்கிறது. அது உள்ளத்தில் இருந்தால் மட்டுமே அறம் செழிக்கும். கண்முன்னே ஒருவன் பட்டினி யால் வாடும்போது, அதைத்தவிர்த்து செய்யும் எந்த அபிஷேகமும் பலனைக் கொடுக்காது.

மூவாயிரம் வருடம் பழமையான கோவில் இருக்கிறது. கோவிலுக்குள் சுவாமியும் இருக்கிறது. சுவாமி இருக்குமிடத்தில் சக்தியும் இருக்கிறது. கோவிலுக்கு கும்பிடப் போகிறவரிடம் சுய ஒழுக்கமும், மனிதாபிமானமும் இருக்கிறதா? இவையிரண்டும் இல்லாமல் இறைவனுக்குப் பகட்டாக செய்யும் வழிபாடு பைசாவுக்கு பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். திருமந்திரம் கூறுவதைப் பார்க்கலாம்.

"போற்றிசைத் தும்புகந் தும்புனி தன்அடி

தேற்றுமின் என்றும் சிவனடிக்கே செல்வம்

ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை

மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.'

துதித்துப் போற்றிப் புகழ்ந்து இசைபாடி, குறையில்லா நிறையுடைய தூயவனான இறைவன் திருவடியை தினந்தோறும் மறவாது மனத்தில் இருத்தித் துதிப்பதில் உறுதியாக இருங்கள். "ஈட்டிய செல்வமெல்லாம் சிவன் சேவைக்கே உரியது' என்று நினையுங்கள். தன்னிடமுள்ள செல்வமெல்லாம் தம் உடைமை, தம் உரிமை என்று நினைத் தும் மன மயக்கத்தை விட்டொழித்து நிற்பவர்களை இறைவனும் நெருங்கிவந்து நல்லருள் புரிவான்.

உலகின் தலைசிறந்த பெரும் பணக்காரர் கள் பட்டியலில் சுமார் நூறு பேர் இருக்கிறார் கள். இவர்கள் தலைமுறை கடந்து வசதியான வாழ்க்கைக்கு சொந்தம் கொண்டாடுகின் றனர். ஆனால் அது அவர்கள் கையில் இல்லை.

உயர்வு எப்படியோ, அப்படியே தாழ்வும். அதில் முதல் பத்து பணக்காரர்களிடமுள்ள சொத்துகளும், பொருட்களும், கரன்சியும் அளவிட முடியாது. ஆனால் பாருங்கள்- நான்கு நிமிடங்களுக்கு ஒரு பட்டினிச் சாவு.

இது ஏனென்றால், நாம் அனைவரும் இயற்கை தத்துவத்தை மறந்துவிட்டோம். சூத்திரங்கள் படி (Formula) நாம் வாழ்ந்துகொண்டிருக்கி றோம்.

இன்னுமொரு கொடுமை- நகைச்சுவை வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த துணை நடிகர் ஒருவருக்கு சிறுநீரகங்கள் (Kidney) பழுதடைந்துவிட்டன. அரசாங்கம் அவருக்கு உதவிசெய்து இலவச சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறது. திரைத்துறையில் முதல் இருபது இடங்களில் இருக்கும் முன்னணி நாயகனும், நாயகியும் கோடிக்கணக்கில்- குத்துமதிப்பாகக்கூட கணக்கிடமுடியாத அளவிற்கு பொருள், பணம் என்று வைத்துள்ள னர். ஈட்டிய பொருளை நாம் தானமோ, தர்மமோ செய்யச் சொல்லவில்லை. தனது துறை சார்ந்து ஒருவர் பாதிக்கப்படுகிறார்.

அவர் உயிர் காப்பாற்றப்படுவது கடவுள் கையில் இருக்கிறது. ஆனால் அந்த நடிகருக்கு சக நடிகர்கள் பொருளுதவி செய்து அவரது குறைந்தபட்ச சந்தோஷத்திற்காவது வழி செய்யலாமே. சில திரைத்துறையினர் உதவி செய்துள்ளனர். ஆனால் கோடீஸ்வரர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

திரைத்துறையில் ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை ஒரு ஐடி துறையில் உள்ளவரோ அல்லது ஒரு விவசாயத்தொழில் செய்பவரோ தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்டாலும் சம்பாதிக்க இயலாது. இதற்கெல்லாம் காரணமென்ன?

அன்பு, கருணை, அறம் இவற்றின் அடிப் படைத் தத்துவம் புரியாதது ஒருபுறம் என்றால், அந்த அறம் சார்ந்த கல்வியை ஆரம்பத்திலிருந்து போதிக்காமல்விட்டது மாபெரும் தீங்காகும்.

அண்மைச் செய்தி- இந்தோனேசியாவில், கிழக்கு ஜாவா மாகாணத்தில் நடந்து கொண்டிருந்த கால்பந்து போட்டியில் நடந்த கலவரத்தில் 187 பேர் உயிரிழந்து விட்டார்கள். என்ன கொடுமை இது? இதில் ஒரு ஆறுதலான செய்தியும் உண்டு. தென்கொரியாவில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாபெரும் நெல் விளைச்சல் உண்டாகியிருக்கிறது. அதன் காரணமாக அரிசி விலை மிகக்குறைந்துவிட்டது என்ற செய்தி மகிழ்ச்சியாக உள்ளது.

பூமிப் பந்து 80 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இங்கே இன்னும் பல இடங்களில் தண்ணீர் இருந்தும், விளைநிலங்களை விவசாயப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முயற்சிக்காமல், வேறு எதையெதையோ செய்துகொண்டும், கண்டுபிடித்துக்கொண்டும் இருக்கிறோம்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நாம் குறைந்து மதிப்பிடவில்லை. ஆனால், அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இன்றைய கண்டுபிடிப்பு, நிலவில் பயிர் வளர்க்க முடியும் என்பதுதான். இதன் சாத்தியக்கூறுகளை உங்களின் பகுத்தறிவின்மூலம் புரிந்துகொள்ள முடியும். நமது விவசாய பூமியில் பல விளைநிலங்கள் வீணாகக் கிடக்கின்றனவென்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

இயற்கை வளங்களை பெருக்கினால் மண்வளம் காக்கப்படும். மண்வளம் பாதுகாக்கப்பட்டால் வானம் சிரிக்கும்; இயற்கை செழிக்கும்; மனித வளம் மேம்படும். இதற்கு ஒரே தீர்வு அறம் செய்வதே கருணைக்கு வழிகோலும். கருணையே இறையை இயற்கையாகக் காட்டும். எல்லா வளமும் இங்கே இருக்கிறது. இயற்கையுள் இருக்கும் இறைவனைப் புரிந்துகொண்டால் வளங்கள் நம்மைத் தேடிவரும்.

ஆகவே நமது துன்ப வலைகள் அறுபட வேண்டுமென்றால் ஈசனை பரம்பொருளைத் துதிக்கவேண்டும். அன்புகொண்டு அறம் செய்யவேண்டும். திருமந்திரச் சிற்பி கூறியுள்ளதைப் பார்க்கலாம்.

"அன்புறு சிந்தையின் மேல்எழும் அவ்வொளி

இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன

துன்புறு கண்ணி ஐந்தொடும் துடக்கற்று

நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.'

உள்ளன்பு கொண்டு பணிவோர் உள்ளத்தில் ஓங்கி ஒளிசெய்யும் சோதி சிவ ஒளியாகும். அது உயிர்களுக்குப் பேரின்ப பெருவாழ்வு தர விரும்பி, அருட்பார்வை கொண்ட திருவிழிகள் உடைய பராசக்தியுடன் சேர்ந்து அருள்புரிய திருவுளம் கொள்ளும். அதனால், ஆன்மாக்களை சிக்கவைத்துத் துன்பம் தரும் ஐம்புலன் இம்சைகளாகிய வலைகள் அறுபட்டுப் போகும். எனவே உள்ளன்புடன்கூடிய நினைவோடு எம் பெருமானை- சிவபெருமானைத் தேடி உணருங்கள்.

மகாத்மா காந்தியின் சொற்களை நினைவு கூர்வோம். "மனிதனாக இருப்பதல்ல மனிதம். மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம்.' எவ்வளவு உயர்ந்த வார்த்தைகள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். மேலும் திருமூலர் கூறியுள்ளதைப் பார்க்கலாம்.

"பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை

அற்றும் உரையான் அறநெறிக்கு அல்லது

உற்று உங்களால் ஒன்றுள் ஈந்தது வேதனை

மற்று அண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.'

உயிர்த்துணையாக இருக்கின்ற பரம் பொருளை, இவ்வுலகில் குறையொன்றும் கூறாமல், அறவழி அல்லாது வேறு வழிகளில் செல்லாமல் அற வழியிலேயே நின்று, நீங்கள் ஒருவருக்கு ஒன்றைக் கொடுத்து உதவிய அந்த ஈகையே, அருளே, அறத் தன்மையே உங்களுக்கு உற்ற உயிர்த் துணையாகும். இதுவே பரம் பொருள் வாழும் உயிர்கள் பேரின்ப வீட்டை யடைய வைத்துள்ள வழித்தடமாகும்.

எனவே எல்லா உயிர்களித்தும் அன்பு கொண்டு அறம் செய்வோம். ஈசன் சிவ பெருமானின் அன்புக்கும் கருணைக்கும் உற்றவர்களாக மாறுவோம்.