றைவன் பூமியை பிரபஞ்சத்தில் உருவாக்கும்போது கொள்கை, கோட்பாடு இரண்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கி னான். "ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை' என்பதே இதன் அடிப்படைத் தத்துவம்.

கொள்கையென்பது (Policy) இயல்பு. கோட்பாடென்பது கொள்கைவழி செயல் படுத்தப்படும் நீட்சியே. கொள்கையென்பது தன் நிலையில் உறுதியுடன் செயல்படுவது. கோட்பாடென்பது நிலைப்பாட்டில்- செயல்பாட்டில் நெறிமுறைகளுடனும் ஒழுங்கைச் சார்ந்தும் செயல்படுவது.

சமத்துவமென்பது கொள்கை. அதாவது இயற்கை. இதிலுள்ள உட்பிரிவுகள் சமதர்மம், சமாதானம், சமபங்களிப்பு, சமூகநீதி, சம நோக்கு, சமூகவியல். இவையெல்லாம் இயற்கையுள் இறைவன் வகுத்த அடிப் படைக் கொள்கையான சமநிலையாகும். அனைத்தும் அனைவருக்கும் என்பதே சமமாகும். அதன் செயல்பாட்டில் மனித ஈடுபாடென்பது சுய ஒழுக்கமும், அதற்கான நெறிமுறைகளும் (அறநெறி) ஆகும்.

ஆயிரம் கோடி வைத்திருப்பவரும் சரி;

Advertisment

aa

நூறு கோடி வைத்திருப்பவரும் சரி; ஒரு சாதாரண சாமானியனும் சரி- இறை தரிசனத் திற்கு கோவிலுக்குள் சென்று கடவுளிடம் தங்களின் விருப்பம் நிறைவேற கோரிக்கை, விண்ணப்பங்களுடன் நிற்கிறார்கள்- ஒரு பிச்சைக்காரனைப்போல. ஆனால் இவர் களெல்லாம் கோவிலுக்குள் செல்லும் முன்பாக, அந்த கோவில் வாசல்களில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்களோ (இந்த வார்த்தையை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை; இறைவன் முன்பாக அனைவரும் பிச்சைக்காரர்களே) இறைவனைப் பார்த்து, "இறைவா, உள்ள போற இந்த மனுஷன் வெளியில வரும்போது இன்று வயிறார உண்பதற்கு எனக்கு நிறைய பிச்சை போடணும்; அவனுக்கு நல்ல புத்திய கொடு' என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

கோவிலின் உட்புறமாக இருக்கட்டும்- வெளிப்புறமாக இருக்கட்டும்- மனித இனங் களின் பல பிரிவுகளாக இருக்கட்டும்- அவரவர் தேவைகள் வெவ்வேறு என்றிருந்தா லும் கோரிக்கை ஒன்றுதான். இங்கே கோரிக்கைகள், விண்ணப்பங்கள் வைப்பவர்கள்தான் வித்தியாசப் படுகின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு, அவரவர் தேவை மட்டுமாகவே இருக்கிறது. இங்கே சேவையை எப்படி எதிர்பார்க்கமுடியும்?

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது பழம்பெரும் துணை நடிகை "ரங்கம்மா பாட்டி' வறுமையின் காரணமாக இறந்த செய்தியைக் கேள்வியுற்றேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத் திலிருந்து நடித்துக்கொண்டிருந்த ஒரு நடிகையின் இறுதிக்காலம் இவ்வளவு கொடுமையானதாக முடிந்துவிட்டது. இங்கே முன்னணி, நடிக- நடிகையரின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. ஒரு நடிகையின் மரணம் பஞ்சத்திலும், பட்டினியிலும் முடிந்துவிட்டது. வருமான வரியை ஏமாற்றும் பலரும் ஒரு தனி மனிதனின் பசிப்பிணியைப் போக்க மன மில்லாமல், மைக்கின் முன்னால் சமத்துவ மும், ஜீவகாருண்யமும் பேசிக்கொண்டிருக் கின்றனர். மழை பொதுவானது; நெருப்பு பொதுவானது; பிரபஞ்சமும் பொதுவானது.

ஆனால் நிலமும் உணவும் சுயநலமாகிவிட்டது.

வருமான வரியைக் கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்குக் கட்டுபவரும் இருக்கிறார், வரியைக் கட்டாமல் ஏமாற்றுபவரும் இருக்கி றார். தெருக்கோடியில் உட்கார்ந்துகொண்டு ஒருவேளை உணவுக்காகப் பிச்சை எடுப்பவ ரும் இருக்கிறார்.

அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கிறவர் சமதர்மம் பேசுகிறார். ஆனால் தெருவோரத் தில் இட்லிக்கடை வைத்திருக்கும் பாட்டி, அருகில் அவள் வைத்திருக்கும் இட்லித் தட்டையே பார்த்துக்கொண்டிருக்கும் நாயின் பசியை உணர்ந்து அதற்கு இரண்டு இட்லியை வைக்கிறாள். அன்றிலிருந்து நாய் பாட்டியின் சம்பளமில்லா பாதுகாவலனாக மாறிவிடுகிறது. இங்கே நாயின் நன்றியுணர்ச்சி யுடன்கூடிய அன்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பணம் வைத்துள்ளவர் மேலும் பணம் பணம் என்று ஓடுகிறார். பணமில்லாத ஏழை பசி பசி என்று பசியைத் தீர்க்க பணத்தை நோக்கி ஓடுகிறார். மொத்தத்தில் மனித சமூகம் சமநிலை இல்லாத மனதுடன் சமாதானமில்லாமல் எல்லாரும் எதற்காகவது ஓடிக்கொண்டே இருக்கிறார் கள். உடம்பைப் பற்றியோ, அதில் குடியிருக் கும் உயிரைப் பற்றியோ பலரும் சிந்திப்ப தில்லை. இங்கே ஒரு பாடலைப் பார்க்கலாம். 1972-ஆம் ஆண்டு வெளியான அகத்தியர் படத்தில் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் எழுதிய பாடல் வரிகள்...

"உலகம் சமநிலை பெறவேண்டும்

உயர்வு தாழ்விலா நிலைவேண்டும்

நிறைவே காணும் மனம் வேண்டும்

இறைவா அதை நீ தரவேண்டும்

அறிவும் அன்பும் கலந்திடவே

அழகில் வையம் மலர்ந்திடவே

நெறியில் மனிதன் வளர்ந்திடவே

நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

உலகம் சமநிலை பெறவேண்டும்.'

எத்தகைய உன்னதமான வரிகள். இறைவன் வகுத்த கொள்கை சமத்துவம். தனிமனிதனிடம் ஒழுக்கம் சார்ந்த நெறிமுறைகளையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது. அன்பான அறமே சிறந்தது. இந்த உடலும் அதில் குடியிருக்கும் உயிரும் நிலையற்றது. திருமூலரின் திருமந்திரம் கூறுவதைப் பார்க்கலாம்.

"பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்

உண்டவப் பெண்டிரும் மக்களும் பின்செவார்

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது

மண்டி அவருடன் வழிநட வாதே.'

நல்வினை- தீவினைகளை நுகர்வதற் கென்றே, அனுபவிப்பதற்கென்றே பெற்ற இவ்வுடலானது ஒருநாள் பழையதாகி, வயது முதிர்ந்து தளர்ந்து விழுந்துவிட்டால், உயிருடன் இருக்கும்போது அவ்வுடலால் பயனடைந்த உலகத்தினரோ, ஏன்- மனைவி, மக்களேகூட அந்த உயிர்போன வழியே போக மாட்டார்கள். இறந்த உடலைத் தொடர்ந்து தாங்களும் இறந்துவிடமாட்டார்கள்.

அதேவேளையில் அந்த உயிர் வாழ்ந்த காலத்தில் செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணியச் செயல்கள்- அதாவது அறச்செயல்கள் மட்டுமே அந்த உயிருக்கு நிழலாக நெருங்கிச் செல்லும். மற்றவை எதுவும் கூடவராது. கூடவருவது செய்த பாவ- புண்ணியங்களின் விளைவுகளால் வரும் பலன்களே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, நாம் ஒவ்வொருவரும் அறத் தில் சிறந்து விளங்கவேண்டும். திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்று அது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.'

இளைஞர்களாக உள்ள ஒவ்வொருவரும், "பிற்காலத்தில் செய்வோம்' என்று காலம் கடத்தாமல், இளமைக்காலம் தொட்டே அறச் செயல்களைச் செய்து வரவேண்டும். அத்த கைய அறமே அவர் இறக்கும் காலத்தில் என்றும் இறவாத் துணையாக இருக்கும்.

ஆத்திச்சூடியில் ஔவையார் "இயல்வது கரவேல்' என்பார். அதாவது நம்மால் செய்ய முடிந்த நன்மைகளை ஒருபோதும் செய்யாமல் இருக்கக்கூடாது. இளம் வயதில் அறம் செய்வதில் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாக இருக்கும் ஒருவரைப் பற்றிப் பார்க்கலாம்.

தொலைக்காட்சியில் "குக் வித் கோமாளி' (ஈர்ர்ந் ஜ்ண்ற்ட் ஃர்ம்ஹப்ண்) எனும் நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒரு கலைஞன். அவர் பெயர் பாலா. ஒரு விருது வழங்கும் விழா நடைபெறுகி றது. அதில் இந்த பாலா தேர்வுசெய்யப்படுகி றார். அதற்குமுன்பு அவரைப் பற்றிய ஒரு முன்னோட்ட காணொளி காண்பிக்கப் படுகிறது. அதில் பாலா பத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் ஏழைக்குழந்தைகளின் கல்விச் செலவை கவனித்துக்கொள்கின்றார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு முதியோர் இல்லத்திலிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். இந்த பாலாவைப் பார்த்ததும் குழந்தைகள்முதல் முதியவர்வரை அப்படியொரு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர். இவர் செய்யும் உதவி சிறிதோ, பெரிதோ தெரியாது.

ஆனால் அவர் செய்யும் அறம் குழந்தை களிடமும் முதியவர்களிடமும் அன்பாக வெளிப்படுகிறது. பாலாவின் மாதச் சம்பளமோ 25,000-க்கு குறைவு. அறம் செய்ய பொருளுடன் அன்பான மனம் வேண்டும்.

அறம், பொருள் இரண்டிலும் ஒருவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு குறள் கூறும் கருத்தினைப் பார்ப்போம்.

"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.'

பொருட்செல்வம் இல்லாதவர்களுக்கு இவ்வுலக இன்பம் இல்லாததுபோல, அருட்செல்வம் இல்லாதவர்க்கு இறையரு ளுடன்கூடிய வீட்டுலக இன்பம் கிடையாது.

உழைப்பால் பொருளை ஈட்டுவோம். அதில் சிறிதேனும் அறம் வளர்ப்போம். அன் பெனும் மகிழ்ச்சியில் திளைத்து, அரனின் அருளாசியுடன் கூடிய அரவணைப்பில் வாழ்ந்து மகிழ்வோம்.