ழங்காலத்தில் இந்தக் கொற்றவை தெய்வத்தை, வேட்டை சமுதாயத்தினர் வணங்கி வந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகளாய் மறையூர், கிரிக்கியூர் போன்ற இடங்களில், பாறை ஓவியங் களில் கொற்றவை தெய்வத்தை வரைந் துள்ளனர்.

எருமைத்தலை அரக்கர்களின் வெற்றி!

அந்த ஓவியங்களில் கொற்றவை என்ற தாய் தெய்வத்தைச் சுற்றிலும் மான் களை வரைந்துள்ளனர். கொடைக்கானலி-ல் கண்டறியப்பட்ட மிகப்பழமையான ஓவியத்தில், வேட்டுவர்கள் கொற்றவை தெய்வத்திற்கு பலியிடுவதற்காக, மலையாடுகளை ஊர்வலமாக அழைத் துச் சென்றது வரையப்பட்டுள்ளது. ஆகவே, பழங்காலத்தில் கொடூரமான வேட்டைத் தொழில்களில் ஈடுபட்ட வர்களும் கொற்றவையை வணங்கியிருக் கின்றனர். இந்த ஆதிதெய்வம் பிற்காலத் தில், எருமைத் தலையுடன் இருக்கும் அரக்கனைக் கொல்வதுபோன்ற போர்க் காட்சியோடு சித்தரிக்கப்பட்டுள்ளதை வரலாற்று ஆசிரியர்கள், "வேட்டை சமுதாயத்தினருக்கும் ஆடு, மாடு வளர்க்கும் முல்லைநில சமுதாயத்தினருக்கும் இடையே அடிக்கடி சிறு போர்களைப்போன்ற சண்டைகள் நடந்து வந்திருக் கின்றன. அதில், முரட்டு சுபாவம் மிகுந்த வேட்டைக் குழுவினர் களின் வெற்றியைக் குறிப்பிடும் வண்ணம், ஆநிரை மேய்ப்பவர்கள் எருமைத் தலையுடன் கூடிய அரக்கனாகச் சித்தரிக்கப்பட்டு, வேட்டை சமுதாயமே அப்போரில் வெற்றி கொள்வதாகச் சித்தரித்துள்ளனர்'' எனக் கூறுகிறார்கள்.

பராசக்தியே வேள் நெடுங்கண்ணி!

Advertisment

இதன் பிற்கால நீட்சியாகத்தான், எருமைத் தலையின்மீது நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட துர்க்கையம்மன் சிலைகளை, பெரிய கோவில்களில் தனிச் சந்நிதிகளிலும், கருவறை மாடங்களிலும் வைத்து வணங்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இதே தெய்வம், கையில் குழந்தையை ஏந்திய நிலையிலும், இடுப்பில் குழந்தையை வைத்திருப்பவளாகவும், பழங்காலத்து தாய் தெய்வமான இசக்கியம்மன் வழிபடப்பட்டிருக்கிறாள். இந்த இசக்கி யம்மனும் பழமையான வழிபாட்டு தெய்வமே!

god

இன்று, விஜயாபதி என்னும் கடற்கரை ஊரில் மிகப்பழமையான இசக்கியம்மன் கோவில், மணல் வெளியில் தில்லை மரத்தோப்புக்கு நடுவே உள்ளது. இந்தச் சிலையில், காட்டுவாசிகளின் கோரப்பற்கள் அச்சுறுத்தும் நிலையில் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசக்கியம்மனை, போகர் சித்தரின் சீடராகக் கருதப்படும் கோரக்கர், "கடற்கரைப் பகுதியில் வானில் கையில் குழந்தை எந்திய நிலையில் வேள் நெடுங்கண்ணியாகக் காட்சி தந்தாள் அன்னை பராசக்தி...'' என வர்ணிக்கிறார்.

இந்தத் தெய்வமே, பின்னாளில் வேளாங்கண்ணி யாக வணங்கப்படுகிறாள் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். பெண்ணாதிக் கத்தை அடக்கிய ஆணாதிக்க சிவனெல்லாம் திரிபே!

இசக்கியம்மனை வழிபட்ட பழங்காலத்திலி-ருந்துதான், பெண் தலைமையேற்று நடத்தும் பெண்ணாதிக்க சமுதாயம், தன் ஆண் குழந்தைகளுக்கு தன்னுடைய ஆதிக்க நிலையைக் கொடுத்தது. அதன்பின்புதான் தமிழகத்தில் ஆணாதிக்க சமுதாயம் உருவானதற்கு அடையாளமாக இவ்வழிபாடு நடந்துள் ளது என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் தங்களது கருத்துகளாக முன்வைத்துள்ளனர்.

இக்காலத்துக்குப் பிறகுதான், வளமை, இனவிருத்தியைக் கொடுக்கக்கூடிய, காமத்தை ஆட்சிசெய்யும் கன்னி தெய்வமாய், கையில் கரும்பைக் கொண்டிருக்கும் காமாட்சி தெய்வம், குறிஞ்சி இன மக்களால் கும்பக்கரை பகுதிகளில் கொண்டாடப்பட்டது. கையிலிருக்கும் கரும்புக் கணுவின் நடுவே இருக்கும் சிறிய முளைப்பே, இந்த வழிபாட்டின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. இது இன வாரிசுகளை உருவாக்கும் அடையாளமாகவும், சிறந்த கருப்பை தாங்கிய கன்னித்தன்மைக்கு அடை யாளமாகவும், வளமையின் சின்னமாகவும் மருதநில மக்களால் பின்பற்றப்பட்ட தெய்வ வழிபாடாகும். பெருந்தெய்வ வழிபாடுகள் என வரும்போது, இந்த காமாட்சி தெய்வம் ஆணாதிக்க சமுதாயத்தின் தலைவரான சிவபெருமானை நோக்கித் தவமியற்றுவதாகக் கூறப்பட்டு, பின்னாளில் ஆரிய வழிபாட்டுடன் இணைக்கப்பட்டது.

இதுபோலவே, கொற்றவை தில்லைவனக் காளியாக மாற்றப்பட்டு, அதன் உக்கிர பெண்ணாதிக்கத்தை, ஆணாதிக்கக் குறியீடா கக் கருதப்பட்ட சிவபெருமான் அடக்கியதாகக் கூறப்பட்டு, ஆணாதிக்கம் மேலோங்கி நிற்கும் வகையில் திரிபு செய்யப்பட்டது. ஆரிய புராணங்களின் திரிபுகளால், சிவனுக்குள் அடங்கியுள்ள பலவகை பெண்சக்தி வடிவங் களாக, கொற்றவை தெய்வம் மாற்றப் பட்டு, இறுதியில் ஆரியர்கள் வணங்கும் மகிஷாசுர மர்த்தினியாக கொற்றவை தெய்வம் முழுவதுமாக மாற்றப்பட்டுவிட்டது.

பயிர்த் தொழிலி-ல் கன்னிப் பெண்ணுக்கே முதலி-டம்! குமரி, கௌவுரி என வளமையை மேம்படுத்தும் வழிபாடுகள், ஆதித்தமிழகளிடம் மிக அற்புதமாக இருந்துவந்துள்ளது. இந்தக் கன்னி வழிபாடுகள், உயிர்ப்பலி இல்லாத வேளாண் சமுதாய சடங்குகளாகவே இருந்துள் ளன. கௌரி விரதம் மிகச்சீரிய முறையில் செய்யப்பட்டு கன்னித்தெய்வ வழிபாடாகத் திகழ்ந்தது. கன்னித்தன்மையை அளப்பரிய சக்தியாக, ஆற்றலாக ஆதித்தமிழன் நம்பினான்.

விவசாய உற்பத்திக்கும், தாய்மைப் பேறுக்கும் பல சடங்குகளோடு கன்னிப் பூசைகள், ஆதிவேளாண் சமுதாயத்தினரால் கடைப் பிடைக்கப்பட்டு வந்தது. இப்பூசை செய்வத னால் இளமை, அழகு, தோற்றப் பொலிவு, மங்களம், நற்பண்பு, வளமை போன்றவை கைகூடி செழிப்புறும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்துள்ளது.

இவ்வாறு உருவான தெய்வம்தான் கன்னியாகுமரி அம்மன். ஆதிபாண்டிய மண் நீர்கொண்டபின், ஆற்றல்மிக்க கன்னித்தன்மை, யோக சக்தியால், கடல்நீர் தற்போதுள்ள நிலப்பரப்பிற்குள் வராமல் காப்பதற்காகவே இந்தக் குமரி தெய்வத்தை தென்கோடியில் வைத்து வணங்கத் தொடங்கினர் ஆதி மக்கள். இக்கன்னி தெய்வம்தான், பின்னா ளில் திரிபுரசுந்தரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இக்கன்னி வழிபாட்டில் பாவை நோற்றல், தை நீராடல், கௌரி விரதம் போன்ற சடங்குகள், பெண்களின் பேராற்றலைப் பெருக்குவதற்கும், வளமையை உருவாக்குவதற்கும் செய்யப்பட்ட முக்கிய சடங்கு முறைகளாகும். இவை யாவுமே, வேளாண் சமுதாய சடங்குகளாக இருந்து, பின் பொதுமைப்படுத்தப்பட்டது. விளைந்த பயிர்களை ஒரு கட்டாகக் கட்டி, அதனைத் தங்கள்வீட்டு குலதெய்வங்களாகக் கருதப்படும் வளரிளம் கன்னிப் பிள்ளைகளிடம் கொடுத்து, சில சடங்குகளைச் செய்யும் முறைக்குதான் கௌரி பூசை என்று பெயர். இது பழமையை ஊக்கப்படுத்தும் சடங்காகும். விளைந்த தானியப் பயிர் முடிச்சுக்கு கௌரி என்று பெயர். விவசாயத்தை ஆரம்பிக்கும்போது, விதை விதைப்பு நடைபெறுகையில், நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வீட்டின் கன்னிப் பெண்களிடம் கொடுத்து, குலதெய்வங்களுக்கு தானிய மரக்கால் முழுவதும் விதைகளை நிரப்பி, அதன் நடுவே வெற்றிலை ஒன்றை நட்டு, அதில் விளக்கும் ஏற்றி வழிபட்டுக் கொடுத்த விதை முளைத்து, அறுவடைசெய்த பலனை மீண்டும் கன்னிப் பிள்ளைகள் கையில் கொடுப்பதைத்தான் கௌரி என்று அழைத்தனர். எனவே, பயிர்த் தொழிலி-ல் இந்தக் கன்னிப் பெண்ணுக்கே முதலி-டம். முதல் விதையை குழகைபோட்டு விதைப்பதும் அவளே. முதல் அறுவடையை சில சடங்குகள் செய்து ஆரம்பிப்பவளும் அவளே. இது பன்னெடுங்காலந்தொட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துவருகிறது.

ஏழு கன்னிமார் வழிபாடும் இதன் தொடர்ச்சியாக உருவானதுதான். பெண்ணானவள் பூப்படைந்தவுடன், அவள் அளவற்ற ஆற்றலைப் பெறுகிறாள் எனவும், அவ்வாற்றலை முறைப்படுத்தினால் அளவிடமுடியாத வளமை பெறலாம் என்பதுவுமே கன்னிமார் வழிபாட்டின் ரகசியம். கற்புடைமையைவிட ஒருபடி மேலாக, கன்னித்தன்மை வேளாண் சமுதாயத்தில் மதிக்கப்பட்டது. இவளே படைக்கும் சக்தியாக உருவெடுப்பாள் எனப் போற்றினார்கள்.

பெண்தெய்வத்தின் மான் வாகனம் சிங்கமானது!

சிலப்பதிகாரத்தில் பல பெண்தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன. அமரி, குமரி, கௌரி, சமரி சூலி-, நீ-லி, மாலவர் கிளங்கிளை, ஐயை, செய்யவன், வெய்யவாட்டடக்கைபாய்க் கலைப் பாவை, பைந்தொடிப் பாவை, ஆய்க்கலைப் பாவை, யருங்கலைப் பாவை, தமர் தொழவந்த குமரிக் கோலத் தமரிளங் குமரியு மருளினாள்.

இதில் 15 வகையான கன்னித் தெய்வங் களை பழந்தமிழர்கள் வணங்கி வந்ததா கக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெண் தெய்வங்களுக்கு வாகனங்களாக, பழங் காலத்தில் மான்களைக் காட்டியிருக்கின்றனர்.

அதன்பின் வடநாட்டு சிங்கங்களை வாகனமாகக் காட்டியுள்ள வழக்கத்தை, புராணக் கதைகளை உருவாக்கி, அவற்றை மெய்ப்பிப்பதற்காகவே செய்திருக்கிறார்கள். இதேபோல் வராகி, பிடாரி என்ற கன்னித் தெய்வங்கள், பழங்காலத்தில் சிறப்பான நிலையில் இருந்தன. இவற்றில் பிடாரியை சாமுண்டி என, அனேக இடங்களில் தற்போது வழிபடுகின்றனர்.

போருக்காக உபதேசிக்கப்பட்ட தாந்திரீக வழிபாடு!

பாரிவள்ளல் ஆண்டதாகக் கூறப்படும் பிரான் மலையில், பிடாரி தெய்வத்தை வடக்கு நோக்கியிருக்கும் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். அப்பகுதியிலுள்ள அனைத்து ஊர்களிலும் பிடாரியம்மன் வழிபாடு சிறப்புற உள்ளது. இதேபோல், வராகி பூசைகளும் சித்தர்களால் பெரிய அளவு செய்யப்பட்டு, அவை சிறந்துவிளங்கிய தமிழ் மன்னர்களின் உயிர்க்காப்பு சக்தியாகக் கொடுக்கப்பட்டது.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வராகியானவள், ராஜராஜசோழனுக்கு கருவூராரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு தாந்திரீக வழிபாடாக மன்னர்களுக்கு குருமார்களால் உபதேசிக்கப்பட்டு, அவற்றின் ஆற்றல்களைப் போரில் பயன்படுத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொண்டைமானூர் என்ற இடத்திலுள்ள மலையடிவாரத்தில், பாறைக் கீறல்களாகப் பெண் தெய்வக் (பெண் குறியீடு) குறியீடும், அரசருக்குரிய முத்தலைத் தண்டும் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் குறியீடுமூலம், அங்கிருந்த பழந்தமிழ் மக்கள் தாந்திரீக வழிபாடு மேற்கொண்டது தெரிய வருகிறது.

இதேபோல், ஹரப்பா நகரத்து அகழாய் வில், "சுகம்பரி' என்ற தாந்திரீக வழிபாட்டுக்குரிய குறியீட்டுப் பொருள் கிடைத்துள்ளது. அப்பகுதி களில் "வாமச்சாரம்' என்ற தாந்திரீக வழிபாடும் நடந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பழந்தமிழர் வழிபாட்டு முறைகள் தொடரும்...

தொடர்புக்கு

அலைபேசி: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்