"மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும்

வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே'

என்னும் இந்த அற்புதமான அருணகிரிநாதரின் வரிகளைத் தனது ஒவ்வொரு சொற்பொழி விலும் கூறி இன்புறுவார் திருமுருக கிருபானந்த வாரியார். அப்படி என்ன சிறப்பான வரிகள் இவை?

நாம் ஒருவரிடம் பணம் வேண்டியோ அல்லது பொருள் வேண்டியோ ஒருமுறை செல்ல லாம்; இருமுறை செல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைந்து விடுவார். இது இயற்கையான ஒன்று. ஆனால் நமது குறைகளை ஒருவரிடம் கோடிமுறை சென்று சொன்னா லும் கோபப்படாமல் நமக்கு வேண்டியதைக் கொடுப்பராம்.

Advertisment

vv

அவர் யார்?

வேறு யாருமல்ல! கருணைக் கடவுளான கந்தசாமிதான்.

எந்த இடத்தில் சென்று கந்தனிடம் சொன்னால் நமது குறைகள் தீரும்? சோமநாதன் மடத்தில்... இன்று வழக்கில் இவ்வூர் 12 புத்தூர் என்று வழங்கப் படுகிறது.

வடமொழி வல்லு னர்களான திண்டிமக் கவிகள் பலர் வாழ்ந்த முள்ளண்டிரம் என்ற ஊருக்கருகில் இந்த 12 புத்தூர் அமைந் துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த 12 புத்தூரில் சோமநாத ஜீயர் என்னும் சிறந்த சிவனடி யார், மடம் ஒன்றை அமைத்து வாழ்ந்துவந்தார்.

அருணாசலேஸ்வரரைத் தனது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு, நியமம் தவறாது பூஜை செய்துவந்தார். அடியார்களுக்கு அருந்தொண்டாற்றி வந்த இவர் அரிய தவராஜனாக விளங்கினார்.

அவனி (உலகம்) புகழ்ந்த இவரது பெருமைகளைத் தனது திருப்புகழில் புகழ்ந்துள்ளார் அருணகிரிநாதர். அருணகிரிநாதரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் இத்தலத்தின் சோமநாத ஜீயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

vv

இவரது மடத்தில் முருகப் பெருமானை விசேடமான முறையில் பூஜைபுரிந்து வந்ததைத் தனதுத் திருப்புகழில் பாடிப் பரவியுள்ளார் அருண கிரியார். இங்கே கிடைத்த கல்வெட்டுகளின்மூலமே சோமநாத ஜீயரின் விவரங் கள் நமக்குத் தெளிவாயின.

கி.பி. 1348-ஆம் ஆண்டு வீர பொக்கண்ண உடையார் மகன் குமார கம்பண்ண உடையார் காலத்தில், ஸ்ரீ வித்யாபதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மடத்தின் பொறுப்பையும், காணி ஆட்சியையும், மனையையும் சோமநாத ஜீயருக்குக் கொடுத்து கௌரவித்துள்ளார்.

கி.பி. 1355-ஆம் ஆண்டு ஹரிஹர உடையார் காலத்தில் வித்யாபதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள், நித்திய பூஜை, திருவிழாக்கள் போன்றவை நடத்திட முழு சுதந்திரமும், நிலங்களும் சோமநாத ஜீயருக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.

மக்கள் செல்வாக்கையும், மகேசன் செல்வாக்கையும் ஒருங்கே பெற்ற இந்த சோமநாத ஜீயர் இவ்வூர் மக்களால் "ஐயன்' என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார். இதன்பொருட்டு பின்னாளில் இவ்வூர் ஐயன்புத்தூர் என்றே அழைக்கப்பெற்றது.

vv

கிழக்குப் பார்த்த திருக்கோவில். தெற்குமுக ராஜகோபுரம் ஒருகாலத்தில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. சுற்று மதில் காணப்படவில்லை.

முதலில் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். பின், சில படிகள்கொண்ட முகமண்டபம். இங்கே பிறைநிலவுடன்கூடிய காளையின் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். விஜய நகர அரசர்களின் சின்னம் இது.

நடுவே வாயில். வாயிலுள் நுழைந்து உள்ளே செல்ல மகாமண்டபம். அதன் வலப் புறம் சோமநாத ஜீயர் மற்றும் அருணகிரி நாதருக்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. அருகே சோமநாத ஜீயரது வரலாற்றுக் கல்வெட்டு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட் டுள்ளது.

மகா மண்டபத்தையடுத்து அந்தராளம் மற்றும் மூலஸ்தானம். கருவறையுள் அருளே வடிவாய், அழகே உருவாய் அற்புதப் பொலிவுடன் திருக்காட்சியளிக்கிறார் ஸ்ரீவித்யாபதீஸ்வரர். வித்தைகள் பல கற்றிட இவரை சரணடைவதைவிட வேறென்ன வழியிருக்கிறது நமக்கு?

அரனாரை அடிபணிந்து ஆலய வலம்வருகையில், நிருதி மூலையில் தல கணபதியையும், அடுத்ததாக வள்ளி- தெய்வானையுடனான கந்தக் கடவுளையும் தனிச் சந்நிதிகளில் காண்கிறோம். சுவாமி கோமுகத்தருகே சண்டேஸ்வரர் சந்நிதி கொண்டுள்ளார்.

அருணகிரிநாதர் இங்கே முருகனை அகப்பகை மற்றும் புறப் பகை நீங்கிட வழிபட்டு, திருப்புகழ் பாடியுள்ளார். தென்முகம் பார்த்த அம்மையின் சந்நிதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அம்பிகையாக ஸ்ரீ அக்ஷரவல்- சிறிய வடிவில் நின்றவண்ணம் அபயமளிக்கின்றாள்.

அரசர் காலத்தில் சிறப்புற்றிருந்த இந்தக் கோவில் அந்நியர் படையெடுப்பாலும், இயற்கையின் சீற்றத்தாலும் முற்றிலும் சிதிலமடைந்து போனது. சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவின் பெருமுயற்சியால் கடந்த 2012-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

vv

இதற்குமுன் இந்த ஆலயம் 1810-ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது. இவ்வாலயக் கல்வெட்டுகள் அனைத்தும் மண்மூடி மறைந்திருந்தன. அதை வெளியே எடுத்துப் படியெடுத்தபோது பல அரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இது தவிரவும் மண்டப வெளிச்சுவர்களிலும் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

அரசுக்குச் சொந்தமான இவ்வாலயத்தில் தினமும் ஒருகால பூஜைமட்டும் நடைபெறுகிறது. இவ்வாலயத்தை ஊர் நிர்வாகத்தினர் உதவியுடன் எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.

எல்லா வித்தைகளுக்கும், கலைகளுக்கும் அதிபதியாகத் திகழும் இத்தலத்து வித்யாபதீஸ்வரரை தேனாபிஷேகம் செய்து வழிபட... கலைத்துறை யிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கலாம். எழுத்து வடிவாய்த் திகழும் இத்தலத்து அன்னை ஸ்ரீ அக்ஷரவல்லியை பசும்பாலால் அபிஷேகித்து வழிபட., எழுத்துத் துறையில் உள்ளோர் மேன்மையடையலாம். எழுத்துகளில் புதிய பரிமாணங்களை உருவாக்கலாம்.

அருணகிரிநாதர் புகழ்ந்த இத்தல கந்தனுக்கு தேனும், தினைமாவும் நிவேதனம் செய்து வழிபட்டு, வழக்குகளில் வெற்றியையும், சிக்கல்களில் தீர்வும் பெறலாம். பகையால் உண்டாகும் துன்பங்களிலிருந்தும் விடைபெறலாம்.

அறிவாற்றல் குறைந்த, திக்குவாய் உள்ள குழந்தைகளை இங்கு அழைத்துவந்து வழிபாடுகள் செய்ய, சிறந்த அறிவாற்றலும், இனிய குரலும் கிடைக்கப்பெறுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணி- ஆற்காடு சாலையிலுள்ள தாமரைப் பாக்கத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 12 புத்தூர்.