"நட்டு வைத்தகல் தேவரும் பொய்

நான் மறைகளும் பொய்

கட்டி வைத்த புராண இதிகாச

கதைகளும் பொய்

Advertisment

எட்டுதிக்கு தேவரும் பொய்

ஏழிரண்டு லோகமும் பொய்

மட்டில்லாத ஜோதி நம்

Advertisment

மனத்துள்ளே விளங்குமே.'

(சிவ வாக்கியர்)

கமலமுனிவர்: தமிழ் மக்களின் ஆதிபகவானே, உலகமக்கள் அனைவருக்கும் அறிவு போதனைசெய்து, பூரண ஞானம்பெற வழிகாட்டும் வழிகாட்டியே, இந்த பூமியில் உண்மை எது? பொய் எது? நிலையானது எது? நிலையற்றது எது? இயற்கையின் மாற்றமுடியாத விதி எது? பூமியில் எது எது அழியும்? எது அழியாது என்று உரக்கச் சொல்பவரே, உங்கள் பாதம் பணிகிறேன். ஆன்மா பற்றிய உண்மைகளைத் தொடர்ந்து கூறுங்கள்.

அதைக்கேட்க ஆவலாக உள்ளோம்.

அகத்தியர்: இத்தமிழ்ச் சங்கத்தில் கூடியுள்ள சித்தர் பெருமக்களே, இந்த பூமியில் வாழும் ஜீவராசிகளின் உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட்டு உயிரினங்களை செயல்படவைக்கின்றன. அதனதன் இனங்களை உருவாக்கி, தன் இனம் அழியாமல் விருத்தி செய்துகொள்கின்றன. இதில் உடல் பகுதி தாயின் கர்ப்பத்தில் உருவாகி, உடல் வளர்ச்சியடைகிறது. கருவறையை விட்டு வெளியில் வந்து பூமியில் பிறந்த பின்பு, அந்தக் குழந்தையின் உடம்பிற்குள் உயிர்க்காற்று நுழைந்து சேர்கிறது. ஆனால் ஆன்மா மட்டும் உடல் வளர்ச்சியடைய அடைய, அவரவர்க்குத் தனித்தன்மையுடன் உருவாகி, அவரவரை செயல்படுத்தி வாழச் செய்கிறது.

ss

இந்த மண்ணுலகில் மனிதர்கள் ஒன்று போலவே பிறந்தாலும், அவரவரின் ஆன்மா வின் செயலைப் பொருத்தே ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் நன்மை- தீமைகளை அனுபவித்துவாழ்கிறான். ஒருவனின் ஆன்மாவின் செயல்பாடே அவன் வாழ்வில் உயர்வு- தாழ்வென மாறுபாடுகளை உண்டாக்கி வைக்கிறது என்பதே உண்மை.

ஒரு மனிதனுக்கு, ஆன்மாவின் இயக்கம் இல்லையென்றால், அவன் சரீரம் இயங்காது. உடல் இயங்கவில்லையென்றால் சித்தம் இயங்காது. சித்தம் இயங்கவில்லையென்றால் எண்ணங்கள் தோன்றாது. எண்ணங்கள் இல்லையென்றால் அவனுக்கு உணர்ச்சிகள் இருக்காது. உணர்ச்சிகள் இல்லாதநிலை, அசைவற்ற பிணம் போன்ற நிலையாகும்.

உடல் வாழ உயிர் வேண்டும். உயிர் தங்க ஒரு உடல் வேண்டும். உடலும், உயிரும் செயல்பட்டு இயங்க அங்கு ஆன்மா வேண்டும். ஆன்மாவினால் உருவாக்கப்படும் எண்ணங்களும் உணர்ச்சிகளும்தான் உடல், உயிரை இயக்கி செயல்படவைக்கும்.

கமலமுனிவர்: ஆசானே, உடலிலுள்ள உறுப்புகள் அனைத்தும் அதனதன் இடத்திலிருந்து செயல்படுகின்றன.

அதுபோல் உடலில் ஆன்மா இருக்கும் இடம் எது? ஆன்மாவை இயக்கும் உறுப்புகள் எவை?

அகத்தியர்: சித்தத்தால் எண்ணங்களை உருவாக்கி, ஆன்மாவை இயங்கச் செய்வதே தலையிலுள்ள மூளைப்பகுதிதான். இந்த உடம்பு ஒரு இயந்திரம். அதனை உடலிலுள்ள பல உறுப்புகள் இணைந்து செயல்பட்டு இயங்கச் செய்கின்றன. ஜீவராசிகளின் உடல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அமைந்துள்ளது. முதல் பிரிவு- தலை, முகமாகும். இரண்டாவது பிரிவு- கழுத்து, நெஞ்சு, வயிறு, தொப்புள், இடுப்பு வரையுள்ள பாகங்களாகும். மூன்றா வது பிரிவு- இடுப்பு, தொடை, கால்கள் மற்றும் கைகள் ஆகும்.

முதல் பிரிவான முகத்திலுள்ள மூக்கின்மூலம், இந்த உடம்பு இயங்கத் தேவையான உயிர்க்காற்றும், உடல் வளர்ச்சியும் சக்தியும் பெறத் தேவையான உணவும் நீரும் வாய்மூலம், உடம்பின் கீழ்ப்பகுதிக்குச் செல்கின்றன. உயிர்க்காற்று உடம்பின் இரண்டாவது பகுதியிலுள்ள இதய பாகத்திற்குச் சென்று சுவாச நிலையைத் தந்து, உடலுக்கு உயிரைத் தந்துகொண்டிருக்கிறது. உணவும், நீரும் வயிறு பாகத்திற்குச் சென்று சேர்கிறது.

பிரபஞ்ச வெளியில் நாம் கண்களால் காணும் காட்சிகளும், பிம்பங்களும் தலையிலுள்ள மூளைப்பகுதிக்குச் சென்று அதில் பதிவாகிவிடுகிறது. காதுகளின் வழியாகக் கேட்கும் ஓசைகளும் மூளையில் சென்று பதிவாகிவிடும். மூளையில் பதிவாகும் காட்சிகளும், பிம்பங்களும் ஆயுள்வரை அழிந்துவிடாமல் காட்சியாக அப்படியே இருக்கும். இது ஆன்மாவில் கலந்துவிட்ட நிலை. மூக்கினால் சுவாசிக்கும் உயிர்க்காற்றும், வாயினால் உண்ணும் உணவும் நீரும் வெளியேறிவிடும். உடலில் தங்காது. உணவும் நீரும், காற்றும் உயிரும் நிலையற்றவை.

கமலமுனிவர்: ஆன்மாவின் (மூளை) செயல்பாடு இல்லையென்றால் சரீரம் இயங்காது; செயல்படமுடியாத, இறப்பிற்குச் சமமான நிலையென்று கூறுகிறீர்களே, அது எப்படி?

ஒரு மனிதனின் உடம்பினுள்ளே உயிர்க் காற்று ஓடி உயிரைத் தந்து கொண்டிருந் தாலும், மூளையின் இயக்கம் இல்லையென் றால் உடலில் எந்த உறுப்பும் இயங்காது. ஒருவன் மூர்ச்சையடைந்து மயக்கநிலையில் இருக்கும்போது, உடலில் உயிர் இருக்கும்; சுவாசம் ஓடிக்கொண்டிருக்கும்; நாடித் துடிப்பு இருக்கும்; உடலில் சூடு குறையாமல் இருக்கும். ஆனால் கண்கள் பார்க்கமுடியாமல் மூடியிருக்கும். வாயினால் பேசமுடியாது. காதுகள் கேட்கும் திறனை இழந்திருக்கும். பசி, தாக உணர்வுகள் இருக்காது! முகத்தி லுள்ள இந்த உறுப்புகள் இயக்கம் இல்லை யென்றால், ஆன்மா இயங்காது.

மனிதர்கள், உயிரினங்களின் ஆன்மா, உடம்பின் உள்ளேயும் வெளியிலும் என இருவிதங்களில் செயல்படும்.

கமலமுனிவர்: மனிதனின் ஆன்மா உடலினுள்ளே, வெளியே என இரண்டு விதங்களில் செயல்படுமென்று கூறுகிறீர்கள். இதனைப் பற்றியும் விளக்கமாகக் கூறுங்கள்.

அகத்தியர்: ஒருவன் தன் காதுகளால் ஓசையைக் கேட்பது, கண்களால் காட்சி ரூபங்களைப் பார்ப்பது, நாக்கினால் உண்ணும் உணவு, நீர் ஆகியவற்றிலுள்ள ருசி, சுவையை அறிவது, மூக்கினால் சுவாசித்து வாசனை அறிவது, வாயினால் பேசுவது, கைகளால் ஒரு பொருளைத் தொடுவது, பிறரிடமிருந்து வாங்குவது, பிறருக்குக் கொடுப்பது, எடுப்பது, உணவை எடுத்து உண்பது, குறிகளால் சிறுநீர் கழிப்பது, சுக்கிலம், சுரோணிதம் ஆகியவற்றை வெளியேற்றி ஆனந்தப்படுவது, மலத்துவாரம் வழியாக மலத்தை வெளியேற்றுவது, தோலினால் தொடுவுணர்ச்சியை அறிவது என இந்த செயல்களை உடம்பினுள்ளே இருந்து ஆன்மா செயல்படுத்தும். மேலும் உடம்பில்படும் அடிகள், காயம், நோய் உபாதைகளால் உண்டாகும் வலி, சிரம பாதிப்பு களை ஆன்மாதான் (மூளை) அனுபவிக்கிறது. உடலில் உண்டாகும் உணர்ச்சிகளை, உபாதைகளை உடம்பு அனுபவிப்பதில்லை. உடம்பினுள்ளே இருக்கும் ஆன்மாதான் (மூளை) அனுபவிக்கும். இந்த உணர்வுகளை மூளை தன்னுள் பதிவுசெய்துகொண்டு, இந்த அனுபவங்களைப் பிற்கால வாழ்வில் உண்டாகாமல் தடுத்துக்கொள்ள வழியையும் உருவாக்கிக்கொள்ளும்.

இடுப்பிற்குக் கீழுள்ள கால்கள், உடம்பின் தேவைகளையும் உணர்வு களையும் மூளையால் அறிந்து, மூளையிடும் கட்டளைகளை ஆன்மா செயல்படுத்தும். இவை மூளையின் உத்தரவுகளை ஏற்று செயல்படும் ஏவல் கருவிகளாகும். எப்போதெல்லாம் மூளை சரியாக செயல் பட்டுக்கொண்டிக்கிறதோ, அப்போதெல் லாம் ஆன்மாவும் சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். எப்போதெல்லாம் மூளை சரியாக வேலை செய்யவில்லையோ, அப்போதெல்லாம் ஆன்மாவும் சரியாக செயல்படாது. இதனையே மூளைக் கோளாறு, மனநிலை பாதிப்பு என்று கூறுகிறார்கள். மூளை சரியான நிலையில் செயல்படாதபோது செய்யும் செயல்களால் தான் மனிதர்கள் செய்யும் செயல்களில் சிரமம், தடைகள், வறுமை, நோய் போன்ற பல துண்பங்களை அனுபவிக்கிறார்கள்.

இதனை அனுபவ அறிவால் அறிந்துதான்- ஆன்மா தலையிலுள்ள மூளைப் பகுதியில் தான் உள்ளது; நெஞ்சிலுள்ள இதயப் பகுதி யில் இல்லையென்று கூறுகிறேன்.

இந்த பூமியிலுள்ள அனைத்து மக்களின் உடம்பானது, எலும்பு, நரம்பு, மாமிசம், கொழுப்பு, ரத்தம், தோல், வாதம், பித்தம், கபம் போன்றவற்றால் ஒன்றுபோலவே உருவாக்கப்பட்டுள்ளது. உடலின் தோற்றம், செயல்பாடுகள், உணர்ச்சிகளில் எந்தவிதமான வேறுபாடு வித்தியாசமும் கிடையாது. அதேபோன்று உயிரின் நிலையிலும் வேறுபாடில்லை. உடலினுள்ளே ஆன்மாவின் செயலிலும் வித்தியாசமும் கிடையாது! இந்த உடலுக்கும் உயிருக்கும் மதம், ஜாதி, இனம் என எந்த வேறுபாடும் பேதமும் இல்லை. எல்லாரும் சமம்.

நாளை பகுத்தறிவு சங்கத்தில், ஒருவரின் ஆன்மா, வெளிப்புறத்தில் செயல்படும் நிலையைக் கூறுகிறேன். இன்று சபை கலையலாம்.

"மந்திரஞ் சொல்லுவார் தன்மதியறி யார்

தனி மந்திரஞ் சொல்லுவார் தம்மையறி யார்

மந்திரஞ் செபிப்பார்கள் வாழ்க்கை வீட்டினுள்

மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்

அந்தரஞ் சென்றுமே வேர் பிடுங்கி

அறிவென்னும் ஞானத்தால் உருண்டைச் சேர்த்தே

இந்த மருந்தினைத் தின்பீ ராகில்

இனிபிறப் பில்லையென் றாடாய்ப் பாம்பே.'

-பாம்பாட்டிச் சித்தர்

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)