"உளியிட்ட கற்சிலையில் உண்டோ வுணர்ச்சி

உலகத்தில் மூடர்களுக்கு உண்டோ ஞானம்

புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம்

போகாது மூடர்க்கென்று யாடாய் பாம்பே.'

Advertisment

(பாம்பாட்டிச் சித்தர்)

கமலமுனிவர்: தமிழ்மக்களின் வம்சமூலவனே, தமிழ் சித்தர்களின் ஆசானே, அகத்தியர் பெருமானே, தங்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன்.

இந்த பூமியில் பிறந்து வாழும் மனிதன்முதல் அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாய் இருப்பது உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும்தான் என்று, உடல், உயிர்பற்றி சுருக்கமாகக் கூறினீர்கள். இனி ஆன்மாபற்றி தெளிவுபடுத்துங்கள்.

Advertisment

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, உயிரினங்களில் "ஆன்மா' என்பது உருவமானது அல்ல; உருவமற்றதுமல்ல. ஆன்மா உடலின் உள்ளேயும் இல்லை; வெளியிலுமில்லை. நிலையானதுமல்ல. ஒரு சக்தியால் உருவாக்கப்படுவதுமல்ல. ஆன்மா, அவ்வப்போது தோன்றும் உணர்ச்சிகளால் உருவாவது என்பதே உண்மை.

கமலமுனிவர்: ஆன்மாவை உருவாக்கி செயல்படவைப்பது உணர்ச்சிகள் என்றால், அந்த உணர்ச்சிகளை உருவாக்குவது எது?

அகத்தியர்: ஆன்மா உயிரினங்களின் உள்ளும் புறமும் என இரண்டு இடங்களிலும் உருவாகி செயல்படுகிறது. அவரவர் உடலினுள்ளே பசி, தாகம், வலி என இன்னும் பல உணர்வுகள் உண்டாகும். இது மனிதன் முதலான எல்லா உயிரினங்களுக்கும் உண்டாகும் பொதுவான உணர்ச்சிகளாகும். இவற்றை எந்த உயிரினமும் தவிர்க்க முடியாது. இதனையே நிர்ணயிக்கப்பட்ட, மாற்றமுடியாத, இயற்கை நிர்ணயித்த விதி என்று கூறுவார்கள்.

இரண்டாவது நிலை, இந்த பிரபஞ்சத்தின் வெளிப்புறத்திலிருந்து ஆன்மாவை செயல்படச் செய்யும் நிலையாகும். இந்த நிலை உயிரினங்களின் கண்கள், காதுகள், நாக்கு, மூக்கு ஆகியவற்றால் ஏற்படுத்தப்படும் உணர்ச்சிகளால் உருவாக்கப்படுவது. இவை நிலையாக இராது. அவ்வப்போது இந்த உணர்வுகளிலிருந்து ஆன்மாவின் செயல் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

கமலமுனிவர்: ஆசானே, முகத்திலுள்ள உறுப்புளால் ஆன்மா செயல்படும் முறையைக் கூறுங்கள்.

அகத்தியர்: ஒரு காட்சியையோ, பொருளையோ அல்லது வேறு எதனையோ நமது கண்களால் காணும்போது, அந்த பிம்பம், கண்களிலுள்ள பார்வை நரம்புகள்மூலம் மூளைக்குச் சென்று, அந்தப் பொருளின் நிலையைப் பதியவைக்கும். அதன்பின் மூளை அதன் தன்மையைப் பற்றி புரியச் செய்யும். மூளையில் அந்தப் பொருளைப் பற்றி விருப்பு, வெறுப்பு என்ற இரு உணர்வுகள் உண்டாகும். விருப்பமான உணர்வேற்பட்டால் அந்தப் பொருளை எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்ற எண்ணம் உருவாகி, நன்மை- தீமை பாராமல் அதனை அடைய ஆன்மா செயல்படத் தொடங்கிவிடும். அதனை அடையும்வரை ஆன்மாவின் கவனம் அதன்மீதே இருக்கும்.

ஒரு பொருளைப் பற்றிய வெறுப்பு மூளையில் உருவாகிவிட்டால், அதைப் பற்றிய சிந்தனை, அப்போதே மூளைப் பதிவிலிருந்து அகற்றப் பட்டுவிடும். ஆன்மா அதைப்பற்றிய கவலைப்படாது. அதனை அடைய எந்த முயற்சியையும் செய்யாது.

காதுகளால் ஒரு ஓசையைக் கேட்கும் போது, அந்த ஒலி காதுகளிலுள்ள இந்திரிய நரம்புகளின் வழியாக, மூளைப் பகுதிக்குச் செல்லும். அந்த சப்தம் இனிமையாக இருந்தால், மூளையின் கட்டளையால் ஆன்மா, அதனை ரசிக்கத் தொடங்கிவிடும். அந்த இசையில் ஆன்மா லயமாகிவிட்டால், அதனைத் திரும்பத் திரும்பக் கேட்கத் தொடங்கிவிடும். இது ஓசையால் ஆன்மா செயல்படும் நிலை.

siddhar

காதுகளால் கேட்கப்படும் ஓசை மூளையில் பதிவானவுடன், மூளை அதனை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், இதுபோன்ற சப்தம் எங்கே, எப்போது கேட்டாலும் வெறுப்பைத் தரும். அந்த ஒலியை எழுப்புபவர்மீது வெறுப்பையும் கோபத்தையும் உண்டாகும்.

உண்ணும் உணவின் சுவை நாக்கில் பட்டவுடன், நாக்கிலுள்ள பஞ்சு போன்ற மெல்லிய நரம்புகளின் வழியாக, அந்த உணவின் ருசி மூளையில் சென்று பதிவாகும். உணவின் சுவை மூளைக்குப் பிடித்திருந்தால், அதன்மீது விருப்பம் அதிகமாகி, அந்த உணவை நிறைய உண்ணவேண்டுமென்று ஆன்மா செயல்பட்டு ஆவலுடன் இருக்கும்.

உணவின் சுவையை மூளை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்தால், அந்த உணவைக் கண்டவுடன் வெறுப்பு ஏற்படும். அந்த உணவு வேண்டாமென்று கட்டளையிடும். மூளையின் கட்டளையை ஏற்காமல், பிறர் வற்புறுத்தலுக்காக சாப்பிட்டால் உடனே அந்த உணவை வெளியேற்றிவிட மூளை வேகமாக இயங்கி வாந்தியை உண்டுபண்ணும் அல்லது உள்ளிருந்து அந்த உணவால் நோய் (அலர்ஜி) உருவாக்கிவிடும்.

மூக்கின்மூலம் சுவாசிக்கும் காற்று, மூக்கிலுள்ள நுண்ணிய நரம்பு இந்திரியங்கள் வழியாக மூளையின் பகுதியைச் சென்றடைந்தவுடன், அந்த காற்றின் வாசனையை மூளை ஏற்றுக்கொண்டுவிட்டால், அதனை ஆழ்ந்து ரசித்து சுவாசித்து ஆன்மா செயல்படும்.

காற்றின் மணத்தை மூளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அதனை வெறுத்து, அந்த காற்று மூக்கின் உள்ளே செல்ல முடியாமல் மூளை மூக்கைப்பிடித்து அடைத்துக்கொள்ளச் செய்துவிடும்.

இந்த பிரபஞ்ச வெளியில் பார்க்கும் பொருளாலும், உண்ணும் உணவாலும், காற்றின் மணத்தாலும், கேட்கும் ஓசைகளாலும் மனிதன் முதலான உயிரினங் களுக்கு உண்டாகும் உணர்ச்சிகளே ஆன்மா இயங்க காரணமாகின்றது. இந்த உறுப்புகளின் இயக்கம் இல்லையென்றால், மூளைப்பகுதி செயல்படாது. மூளை செயல்படவில்லையென்றால் ஆன்மா செயல்படாது.

கமலமுனிவர்: இந்த தேசத்திலுள்ள சிலர் உயிர்தான் ஆன்மா வென்றும், இன்னும் சிலர் மனம்தான் ஆன்மா வென்றும், இன்னும் பலர் ஆன்மா உடம்பில் நெஞ்சுப் பகுதி இதயப் பகுதியில் இருக்கின்றது என்றும் கூறுகின்றார்கள். ஆனால் நீங்கள், ஆன்மாவின் செயல்பாடு அவரவர் மூளைப் பகுதியில்தான் உள்ளது என்று கூறுகிறீர்கள். இதனையும் விளக்கமாகக் கூறுங்கள்.

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இந்த கேள்விக்கு உண்டான பதிலை நாளை பகுத்தறிவு சபையில் கூறுகின்றேன். இன்று சபை கலையலாம்.

ஆன்மா

இந்த தேசம் ஒரு மதத்திற்கோ, ஒரு இன மக்களுக்கோ உரிமையானதல்ல. இந்த தேசம் பல நாடுகள், பல மதங்கள், சாதிகளைக் கொண்ட மக்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு மதம், இனமக்களும், தங்களுக் கென்று பண்பாடு, நாகரிகம், வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்கள் தங்கள் மதம், இனத் திற்கென்று வழிகாட்டியாக ஒரு குருவை ஏற்றுக்கொண்டு, அவர் கூறிய கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்ந்துவருகிறார்கள். இந்த தேசத்து மத குருமார்கள் ஆன்மாவைப் பற்றிக் கூறியுள்ளதை அறிவோம்.

வேதாந்திகள்: இவர்கள் எண்ணம் மட்டுமே ஆன்மா என்பார்கள்.

கூடஸ்தர்: பூமியில் உள்ளவற்றை அறிந்து, அவை மாயை என அனுபவத்தால் அறிவதே ஆன்மாவின் நிலை என்பார்கள்.

பாசுபத கபாலிக விரதர்: அன்றாடம் ஒருவன் அனுபவிக்கும் செயல்களையே ஆன்மாவின் செயல்கள், நிலைப்பாடு என்று கூறுவார்கள்.

சாங்கிய பதஞ்சலிகர்: அவ்வப்போது தோன்றும் எண்ணங்களும், செயல் களுமே ஆன்மா என்பார்கள்.

நியாய வைசேடிகர்: மனிதர்கள், எப்போதும் மனதில் சந்தோஷத்தைக் கொண்டிருப்பதும், சித்தத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டிருப்பதே ஆன்மநிலை என்பர்.

ஜைனர்: தேக சுகங்களைத் துறந்து வாழ்வதே ஆன்மாவின் நிலை என்பார்.

கவுளயாமள சாத்துவீகரி: இன்ப- துன்ப பேதமில்லாமல், இரண்டையும் சரிசமமாக பாவித்து வாழ்வதே ஆன்மநிலை என்று கூறுவார்கள்.

பௌகீகர்: சரீரம், அதனால் உண்டாக்கப் பட்ட களத்திரம், புத்திரர்களின் ரூபமே ஆன்மா என்பர்.

உலகவாசிகள்: தேகமே ஆன்மா என்பர்.

சார்வகர்: ஒருவர் இறந்துபோய் அவரின் சரீரம் அழிந்தபின்பும், ஞானத்தால் அதனைப் பார்த்தேன்- பேசினேன் என்ற நிலையே ஆன்ம ஞான நிலை; பஞ்சேந்திரியமே ஆன்மா என்பர்.

சார்வக ஏகதேசர்: உயிர் போன பின்பு உடல் இயக்கமில்லாமல் அழுகி அழிந்துபோவதால், உயிரே ஆன்மா என்பர்.

உபாசகர்: இறக்கும்போது, மனம் செயல்படாதபோது, பிராண வாயு நீங்கலால் மனமே ஆன்மா என்பர்.

கணிதவாதியர்: புத்தியில்லாமல் எதனையும் செய்துவிட்டு, செய்த காரியத்தினால் சிரமம் ஏற்பட்டு மனம் வருத்தப்படும். இதனால் புத்தியே ஆன்மா என்பர்.

பௌத்தர்: தேகத்திலுள்ள சகல இந்திரிய உறுப்புகளும் லயப்பட்டு ஒரு நிலையில் இருப்பதையே ஆன்மா என்பர்.

பட்டாச்சாரியர்: இந்த பூமியில் அனைத்தும் சூனியநிலையென்று அறிந்து கொள்வதே ஆன்மா என்பர்.

அந்தராளர், ஆகமஸ்தர்: சூட்சுமமான காற்று உடம்பில் சஞ்சரிப்பதால் அணுவில் அணுவாய் இருக்கும் காற்றே ஆன்மா என்பர்.

திகம்பரர்: உயிரினங்களின் உச்சி முதல் பாதம்வரை உடலில் அறிவு வியாபித்திருப்பதால், இந்த புருஷ ரூபமே ஆன்மா என்பர்.

தார்க்கீகர், பிரபாகரர்: ஆன்மா ஒரு நிலையான இடத்தில் இருந்தால் நசித்து விடுமென்பதால், ஆன்மா பரிபூரணமென்றும் கூறுவர்.

பாட்டர்: ஆன்மா உடம்பில் சடமாயும், செயலில் அறிவாகவும் இருப்பதால் சடசித்தமே ஆன்மா என்பர்.

சாங்கியர்: எதுவொன்று முழுமையானதாக உள்ளதோ, அதற்கு இரண்டு குணங்கள் இருக்கக்கூடாதென்பதால், ஆன்மா அறிவாகவும், உடலாகவும் இணைந்திருப்பதால், இவையிரண்டும் உண்டாக்கும் ஒரு நிலையான சுபாவ குணமே ஆன்மா என்பர்.

யோகியர்: இந்த உலகில் எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்துபவர் எவரும் கிடையாது. செயல்களை அதிகாரம் செய்து, செய்யவிடாமல் ஆக்கினை செய்து காப்பாற்றுபவர் என யாருமில்லாததால், பூமியில் பிறந்த உயிரினங்களுக்கு உறவுகள், மோட்சம் இல்லாததால், எல்லாருக்கும் அன்னியமாக உள்ள ஈஸ்வர சித்தமே ஆன்மா என்பர்.

பதஞ்சலி மதத்தார்: உயிரினங்களின் மனதில் அந்தர்யாமியாய் இருப்பதே ஆன்மா என்பர்.

தார்க்கீகர்: எந்த செயலுக்கும் காரணமில்லாவிட்டாôல், அதனைச் செய்து முடிக்கவேண்டுமென்ற எண்ணம், சங்கல்பம் இராது. அந்தக் கரணங்கள் ஒன்றுபட்டபோது இரணிய கர்ப்பனாக இருப்பதே ஆன்மா ஆகும்.

விஸ்வரூபம் (வைஷ்ணவம்): தூலத்தைவிட்டு, சூட்சுமமான சக்தி விலகி இராது என்பதால், கிருஷ்ணன் விஸ்வரூபமெடுத்து, எங்கும் வியாபித்திருப்பதால், விராட் விஸ்வரூபமே கிருஷ்ணனே ஆன்மா என்பர்.

இந்த பாரத தேசத்திலுள்ள பல மதத்தார் அவர்களின் குருமார்கள், ஆன்மாவின் நிலைபற்றி அவரவர் மனதில் தோன்றியபடி பலவகையாக கூறியுள்ளார்கள். இவர்கள் கூறியுள்ளதில் எது உண்மை என்று அறிவுள்ளவர்களே அறிவார்கள்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)