"ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்துபெற்று

பையலென்ற போதேபரிந் தெடுத்துச் செய்யவிரு

கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பிற் காண்பேன் இனி.'

Advertisment

(பட்டினத்தார்)

அகத்தியர்: பகுத்தறிவு தமிழ் சித்தர் பெருமக்களே, அகத்தியன் என் தலைமையின்கீழ், இந்நிலப்பரப்பின் தென்பகுதியாம் திராவிட தேசத்தைச் சேர்ந்த, அறிவிற் சிறந்த, அனுபவத்தில் அனைத்தையும் அறிந்த, அட்டமகா சக்திபெற்ற, சித்தர்கள் அனைவரும் ஒன்றசேர்ந்து, இந்த தென் பொதிகை மலையில், தனக்கு நிகரில்லாத, உலக மொழிகளுக்கு எல்லாம் தாயாக விளங்கும், நமது தமிழ் மொழிக்கு, சங்கம் அமைத்து, இந்த பூமியில் உருவாகி வாழும் அனைத்து உயிரினங்களின் உடல், உயிர், ஆன்மா, இவைகளின் தோற்றம், வாழ்வு, மறைவு இவை மூன்றைப் பற்றி ஆய்வுசெய்து, பல நடைமுறை உண்மைகளை அறிந்து, புரிந்து, தெளிந்து, வாழ்வியல் வழிமுறைகளை, மக்களுக்குக் கூறி, அவைகளைக் கடைப்பிடித்து நல்ல வாழ்வினை அவரவரே, அமைத்துக்கொள்ள வழிகாட்டி வருகின்றோம். இத்தமிழ்ச் சங்கத்தின் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றோம். இத்தமிழ்ச் சங்கத்தை நாம் தோற்றுவித்ததே, நமது தாய்மொழியாம் தமிழ்மொழியை வளரச் செய்வதும், அதனை அழிந்துவிடாமல் காப்பதும், திராவிட நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் அனைத்தும், அனைவரும் சமமாக பெற்றிடவேண்டும் என்ற நோக்கத்தினைக் கொண்டுதான்.

காளிமைந்தன் காகபுசுண்டர், ஒரு மனிதக் குழந்தை உடல் தாயின் கர்ப்பத்தில் எவ்வாறு உருவாகின்றது என்று ஆய்வுசெய்து, தான் அறிந்த உண்மைகளை இத்தமிழ்ச் சங்கத்தில் கூறிவருகின்றார். நேற்றைய தினம் ஆண், பெண் தாம்பத்திய உறவால், பெண் கர்ப்பம் அடையும்- அவளின் கர்ப்பகால நாட்களைப் பற்றிக் கூறியதை அறிந்தோம். இனி பெண்ணின் கர்ப்பத்தில் கரு வளர்ச்சிபெற்று, உடல் உருவாகும் கால நிகழ்வு பற்றி இன்று அவர் கூறுவதை அறிவோம். பிரளயம் கண்டவரே, புசுண்டரே, இன்று ஒரு பெண்ணின் கருவறையில், பெண் ஒரு குழந்தையை எப்படி உடல் உருவாக்கி, தன்னுள் வளர்த்தெடுத்து, இந்தப் பூமியில் பிறப்பிக்கின்றாள் என்பதைப் பற்றி, நீங்கள் ஆய்வில் அறிந்த உண்மைகளைத் தொடர்ந்து கூறுங்கள்.

Advertisment

ss

காகபுசுண்டர்: அண்டத்தில் உள்ளது அனைத்தையும் அறிந்தவரே, இந்த மண்ணுலகில் ஒரு மொழி அழிந்தால், அந்த மொழி பேசும் மக்கள் இனமும் அழிந்துவிடும் என்று எதிர்கால நிகழ்வு பற்றி சிந்தித்து, தாங்கள் உருவாக்கிய தமிழ்மொழி அழிந்துவிடாமல் இருக்க, அகத்தியன் மொழியாம் தமிழுக்கு, சங்கம் அமைத்து பகுத்தறிவுகொண்ட 18 சித்தர்களை, தமிழ்மொழியை பாதுகாக்கும் பாதுகாவலர்களாக, செயல்படச் செய்து, தமிழ்மொழி அழியாமல், வளர்ச்சி அடைய வழிவகுத்துள்ளீர்கள். இந்த பூமி உள்ளவரை, தமிழ்மொழியும், தமிழினமும் அழிந்துவிடாமல், பாதுகாத்து, காப்பாற்றி வளர்ப்பவர்கள் அனைவரும், சித்தர் பெருமக்களாகிய, உங்கள் ஆசியாலும், அருளாலும் உயர்ந்த உன்னத நிலை வாழ்வை அடைவார்கள். தமிழைக் காப்பாற்றுபவனே தமிழின மக்களின் தலைவன் ஆவான். சித்தர்களின் தாய்மொழியாம் தமிழை வளர்ப்பவன், சித்தர்களின் அருளைப்பெற்றுப் பிறந்தவன்.

சித்தர் பெருமக்களே, "ஆணும், பெண்ணும் இணைந்தல்லோ அகாரம் வெளிப்படும்''. ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து தாம்பத்திய உறவு கொண்டால் மட்டும்தான், பெண்ணிடம் ஒரு குழந்தை உருவாகிப் பிறக்கும். ஆணின் விந்து இன்றி, வேறு எந்த சக்தியாலும், எந்த செயலாலும் ஒரு குழந்தையைப் பெறமுடியாது என்பதே இயற்கை நிர்ணயித்த மாற்றமுடியாத அடிப்படை விதி.

இந்த சித்தர்கள் சபையில், நேற்று கருகூடும் கர்ப்பகால நாட்கள் பற்றிக் கூறினேன்.

இன்று பெண்ணின் கர்ப்பத்தில், கரு வளர்ச்சி அடையும் காலநிகழ்வுகளைப் பற்றிக் கூறுகின்றேன்.

ஒரு பெண் கர்ப்பம் அடைந்த மூன்று மாத காலம். கொஞ்சம், கொஞ்சமாக கரு வளர்ச்சி பெறும். மூன்றுமாத காலம் வளர்ச்சி பெற்ற நிலையில், அந்தக் கருவைச் சுற்றி, மெல்லிய சவ்வினால், குடம்போன்று, ஒரு பாதுகாப்பு வீடு கட்டப்படும். அந்த சிசு வளரும் வீட்டில், நீர் நிரப்பப்படும். கர்ப்பப் பையில் உள்ள குழந்தை அந்த நீரில் பாதுகாப் பாக வளரும். சிசு வளரும் நீர் நிறைந்த வீட்டினையே "பனிக்குடம்' என்று கூறுவார்கள். குழந்தை பிறக்கும் வரை பனிக் குடத்தில் நீர் குறையாமல் வைத்துக் கொண்டால், சிசுசுப்பிரசவம் உண்டாகும்.

அகத்தியர் பெருமானே, நீங்களும் ஒரு தாயின் கர்ப்பத்தில், இதுபோன்று நீர் நிறைந்த கும்பத்தில் (குடம்) கருவாகி, சிசுவாகி, குழந்தையாகப் பிறந்தவர் என்பதால் தான் உங்களை கும்ப முனிவர் என்று அழைக் கின்றோம்.

மூன்றுமாத கால வளர்ச்சிக்குப்பிறகு, அந்தக் குழந்தை பனிக்குடத்தில் வளரும் போது, தாய் உண்ணும் உணவு, அவள் வயிற்றில் சேரமுடியாமல் தடை ஏற்பட்டு, வாந்தியை உண்டாகும். உடல் சக்தி குறைந்து தளர்ச்சி அடையும். அங்கமெல்லாம் அசதி அடையும். மூன்று மாதகாலம் இந்த நிகழ்வு உண்டாகும். இதனையே "மசக்கை காலம்' என்று கூறுவார்கள்.

குழந்தையின் உடல் உறுப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக, ஒவ்வொன்றாக உருவாகி, வளர்ச்சிபெற்று, 10-ஆவது மாதம் தாய் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தைப் பிறக்கும் நாட்கள் பேறுகால நாட்கள் ஆகும்.

அகத்தியர்: காளி மைந்தரே, தாயின் கர்ப்பத்தில் குழந்தை வளர்ச்சிப் பெறும் நிலையை இன்னும் விளக்கமாகக் கூறுங்கள்.

காகபுசுண்டர்: ஆசானே, அகத்தியர் பெருமானே, உயிரினங்களின் உடம்பில் ஆறுவிதமான சத்துகள் உண்டு. உண்ணும் உணவில் இருந்து, அந்த ஆறுவிதமான சக்திகளும் உருவாகி, ரத்தமாக மாற்றம் அடைந்து, அது சதையாகி, அதிலிருந்து, கொழுப்பாகி, அதிலிருந்து எலும்புகளிலும், அதன்பின்பு, மூளையிலும் சேருகின்றது. மூளையில் இருந்து, விந்தாக (சுக்கிலம்) மாறுகின்றது. ஒரு உழக்கு இரத்தம், ஒரு துளி விந்தாகின்றது. ஒரு தடவை ஒரு ஆண், பெண்ணிடம் உறவுகொள்ளும்போது, 30 துளிக்குமேல் விந்து வெளியேற்றப்படுகின்றது.

குழந்தை வளர்ச்சி

ஆண், பெண், தாம்பத்திய உறவுகொண்டு, பெண் கர்ப்பம் அடைந்தால், ஆணின் விந்து, பெண்ணின் கருப்பையில், ஏழுதினங்கள் நீர்க் குமிழி போன்றும், பதினைந்து நாட்கள் சென்றபிறகு பிண்ட வடிவமாயும், ஒரு மாத காலத்தில் கெட்டிப் பிண்டமாகவும், இரண்டாவது மாதத்தில் தலையும், மூளையும், உருவாகி. மூன்றாவது மாதத்தில் கால்களும், கைகளும், நான்காவது மாதத்தில் வயிற்றுப் பகுதியும், ஐந்தாவது மாதத்தில் முதுகெலும் பும், விலா எலும்புகளும், ரோமங்களும், 6-ஆவது மாதத்தில் கண்கள், மூக்கு, வாய், காதுகள் முதலிய உடல் உறுப்புகள் படிப்படி யாக உருவாகும்.

பெண்ணின் கர்ப்பத்தில் இதுபோன்று, சரீரம் உருவானபின்பு, 7-ஆவது மாதத்தில், அந்த உடம்பில் உயிர்க் காற்று பிரவேசிக்கும். அப்போது குழந்தையின் உடம்பு, தலை கீழாய் திரும்பும். குழந்தை இப்படி திரும்புவது தாயினால் உணரமுடியும், அவளுக்குத் தெரியும். இந்த சமயம். தாய்க்கும், குழந்தைக்கும் தொடர்பை ஏற்படுத்தி, ஒரு குடல் குழந்தையின் உடலைச் சுற்றி இருக்கும். இதனை தொப்புள் கொடி என்று கூறுகின்றோம்.

(இந்த தொப்புள் கொடி குழந்தையின் உடலைச் சுற்றி இருக்கும் நிலையில், குழந்தை பிறந்துவிட்டால், அந்த குழந்தை கொடி சுற்றிப் பிறந்துவிட்டது- மாலை சுற்றி பிறந்துவிட்டது. அதனால் தாய்மாமனுக்கு ஆகாது என் றொரு மூடநம்பிக்கை இன்றைய நாளில் மக்களிடம் பரவலாக உள்ளது).

இந்த தொப்புள் கொடிமூலம்தான் அந்தக் குழந்தை தாயிடம் இருந்து, பூமியிலுள்ள உணவு, நீர், காற்றினைப் பெறுகின்றது. 8, 9-ஆவது மாதங்களில், அந்த குழந்தைக்கு தனது முற்பிறவி பாவ -சாப -புண்ணியம் பற்றிய எண்ணம் உருவாகும். ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது, அது தனது பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ- புண்ணிய செயல்களைப் பற்றியும், அப் பிறவியில் பிறருக்குச் செய்த தீமைகளால் தான்பெற்ற சாபத்தையும், அதேபோன்று மற்றவர்களுக்குச் செய்த செயல்களால் இப்பிறவியில் தான் அனுபவிக்கப் போகும் நன்மை, தீமைகளையும் அறிந்து சிந்தித்துக் கொண்டு இருக்கும்.

இப்பிறவியில், தனது ஜீவனத்திற்கு உண்டான தொழில், தனக்கு மனைவியாக அமையப் போகும் பெண் புத்திரர்கள், உறவு கள் நிலை, மதிப்பு, அவமானம், நோய், எதிரிகள், வாழும் இடம், மரண காலம், இவைகளை அனுபவிக்கப் போகும் நிலையென அனைத்தையும், இப்பிறவி வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி தன்னைப் பற்றி அறிந்து இருக்கும். இப்பிறவி வாழ்க்கை விதி. குழந்தை கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுவிடும். பிறந்த பின்பு நட்சத்திரம், ராசி, கிரகங்களால் தீர்மானிக்கப் படுவது இல்லை.

கர்ப்பத்தில் தாயிடம் இருக்கும்போது, தனது முற்பிறவி பாவ- சாப- புண்ணிய கர்மவினைகளையும் அதன் பலனாக இப்பிறவி வாழ்க்கையில் அனு பவிக்கப் போகின்றதையும் அறிந்திருந்த குழந்தை பூமியில் பிறந்தவுடன், பூர்வ ஜென்ம பதிவுகளை மறந்து, ஒன்றும் தெரியாத நிலையில் மாறி விடும். குழந்தை பிறந்த வுடன் தொப்புள் கொடியை அறுத்து, தாயும், குழந்தை யையும் தனித்தனியே பிரித்த பின்பு, தாயின் தொடர்பில் இருந்து விலகி, தனது முற்பிறவி பாவ- சாப- புண்ணியத்திற்கேற்ப பலன்களை அனுபவித்து இப்புவியில் வாழத் தொடங்கும்.

ஒரு பெண் குழந்தையைப் பெறும் பேறு காலநிலை, மரண பயமானது. பெற்ற பிள்ளைக்கு பாலூட்டி, சீராடடி, வளர்ப்ப வள் தாய்தான் மாந்தர்களுக்கு சரீரத்தைக் கொடுப்பவள் தாய். அந்த தாய்க்கு ஒருவன் செய்யும் பாவத்தினால், பாதிக்கப்பட்ட தாய் மனம் வெறுத்துவிட்ட சாபத்தால் அவன் வாழ்க்கையில் அனு பவிக்கும் பலன்களை அடுத்து அறிவோம்.

அகத்தியர்: புசுண்ட முனிவரே, தாய் சாபத்தினால, உண்டாகும் பாதிப்புகளைப் பற்றி நாளை அறிவோம். இன்று கலையலாம்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)