"தாடி வளர்த்துச் சடை வளர்த்து நல்ல
சந்யாசி யென்றொரு வேடமிட்டே
ஓடித் திரியும் விளையாட்டை யிங்கே
ஒப்புவ தாரடி ஞானப்பெண்ணே.'
(ஞானக்கும்மி)
அகத்தியர்: காளி மைந்தன் புசுண்டரே, இந்த மண்ணுலகில் பிறந்து வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும், தங்களின் குடும்ப உறவுகளுக்குச் செய்யும் தீமைகளால்தான் பஞ்ச (ஐந்து) மகா பாவ வினைகளை தனக் குத்தானே உருவாக்கிக்கொண்டு, அந்த முற்பிறவி பாவங்களுக்குரிய தண்டனைகளை அனுபவித்து நிவர்த்திசெய்து முடிக்க, பல பிறவிகள் இந்த பூமியில் பிறக்கிறார்கள். முன்செய்த தீவிணைகள் மூண்டு, பிறவித் தொடர்ச்சியை உண்டாக்கி வைக்கிறதென்று கூறினீர்கள்.
இந்த தமிழ்ச் சங்கத்தில் ஒரு ஆண் தன்னைப்பெற்ற தந்தைக்குச் செய்யும் கொடுமைகளால், தந்தை (பித்ரு)மூலம் சாபம் பெறுகிறான் என்று கூறினீர்கள். ஆண்களுக்கு மட்டும்தான் இந்த பஞ்சமகா பாவங்கள் பாதிப்பைத் தருமா? பெண்களுக்கு இந்த தோஷங்கள் சிரமங்களைத் தராதா? பெண்களுக்கும் பித்ரு தோஷம் பாதிப்பைத் தருமென்றால், பித்ரு சாபம் உண்டாகும் வழிமுறைகளையும், வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்களையும் பற்றி தமிழ்ச் சித்தர்கள் சங்கமமாகியுள்ள இந்த சபையில் கூறுங்கள்.
காகபுசுண்டர்: இந்த பூமியில் பிறந்து வாழும் மனிதர்கள், விலங்குகள், மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங் களின் அகத்தில் மறைந்துள்ள குணம், செயல்கள் என இயல்புகளை அறிந்து கூறியவரே, தாவரங்களில் மறைந்துள்ள தன்மை, மருத்துவ குணங்களையும் அறிந்து கூறியதால் "அகத்தியர்' என்ற காரணப் பெயரைப் பெற்றவர் நீங்கள். இப்புவியில் பிறக் கும் எல்லா மனிதர்களிடத்தும். சாதி, மதம், இனம் என பேதம், பிரிவினை பாராமல், அனைவரையும் தன் மைந்தர்களாக் கருதி, அவர்கள் கர்மவினை நீக்கி, நோய் விலக்கி, நீண்ட ஆயுளுடன் நல்வாழ்வு வாழ வழிகாட்டிய என் ஆசானே, அகத்தியர் பெருமானே, உங்கள் பாதம்தொட்டு வணங்கிறேன்.
ஆசானே, பெண்களுக்கும் பித்ரு (தந்தை) சாபமுண்டு. அவர்களுக்கு சாபம் எந்தவிதமான செயல்களால் உண்டாகிறதென்ற தங்கள் வினாவுக்குரிய விடையைக் கூறுகிறேன்.
மனித இனத்தில் ஆண்- பெண்ணென்று இரு பிரிவாகப் பிறக்கிறார்கள். இவர்கள் ஒன்றுபோல் பிறந்து, பூமியில் மனித இன விருத்தியை இருபாலரும் இணைந்து பிறப் பிக்கிறார்கள்.
ஆண்களுக்கிருக்கும் அனைத்து அறிவும், உணர்ச்சிகளும், உணர்வுகளும், செயல்திறமையும், ஆசை, பாசம், கோபம், வீரம், விவேகம், பொறாமை என இன்னும் அனைத்தும் குணங்களும், அனைத்தையும் அனுபவிக்கும் உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு.
மனித குல வாழ்க்கையில் ஆண்- பெண் பேதம் இயற்கையால் உருவாக்கப்படவில்லை. இதன் அடிப்படையில் பெண்களும் தங்கள் குடும்பத்து உறவுகளுக்குச் செய்யும் நன்மை- தீமைகளால் ஆண்களைப் போலவே அனைத்து பாவ- சாப- தோஷ பாதிப்புகளை அடைகிறார்கள். பெண்களும் தன் முற்பிறவி கர்மவினைப் பதிவுகளால்தான் பல பிறவிகள் பிறந்து வாழ்கின்றார்கள். ஊழ்வினைப் பதிவை ஆண்- பெண் பேதமின்றி அனுபவிக் கிறார்கள்.
தென்பாண்டி நாட்டில், பொதிகை மலைச்சாரலில், பொருநையாற்றின் கருணையால், வேளாண் தொழில்செய்து வாழும் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்குத் தெரியாதது ஏதுமில்லை. நெல்மணிகளை ஓரிடத்தில் விதைத்து, நாற்று வளர்ந்தவுடன், அந்த நாற்றுகளை வேறிடத்தில் பயிர்செய்து வளர்த்துப் பலன் பெறுவதுபோல், பெண்களின் வாழ்க்கை இருநிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது.
நெல் நாற்றுபோல் பெண்கள் பிறந்து வளரும் இடம் ஒன்று. பெற்றோரால் பேணி வளர்க்கப்பட்டு, பருவமடைந்தவுடன், நெல் நாற்றை வேறொரு இடத்தில் நடவு செய்வதுபோல், பெற்றவர்களே அந்தப் பெண்ணை, ஒரு ஆணுக்குத் திருமணம் செய்துவைத்து, தன் குடும்பத்திலிருந்து பிரித்து வேறொரு இடத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். தன்னைப்பெற்ற தாய்- தந்தையையும் குடும்பத்து உறவு களையும் பிரிந்து, தனது கணவனுடன் அவளுக்கென்று புதிதாக ஒரு குடும்பத்தை அமைத்துக்கொண்டு அவள் தனது இல்லற வாழ்க்கையை வாழத் தொடங்குகிறாள்.
பெண்களுக்கு பிறந்த வீட்டிலுள்ள உறவு களும் உரிமைகளும் அவள் பருவமடையும் வரைதான். பெண் பருவமடைந்து பக்குவ நிலையை அடைந்துவிட்டால், அவளைப் பெற்றவர்களே வேறொரு வீட்டில் பிறந்த ஆணுக்குத் திருமணம்செய்து அனுப்பி விடுவார்கள்.
பெண்கள் பிறந்த வீட்டில் தன் அறிவு, திறமை, இனவிருத்தி சக்தியை செயல்படுத்த முடியாது. கணவன் வீட்டில் அவன் உறவு களைத் தன் உறவாகக்கொண்டு, கணவன் வம்சம் விளங்க வாரிசுகளைப் பெற்றெடுத்து, குடும்பப் பொறுப்புகளையேற்று, தன் அறிவு, திறமையால் குடும்பத்தை செல்வம், செல்வாக்குமிக்கதாகச் செய்து, வாழவந்த வீட்டில் உண்டாகும் நன்மை- தீமைகளை அனுபவித்து, வாழ்வின் இறுதிவரையில் தன் சுகம் பாராமல், தன் கணவன், குழந்தைகள் சுகம் பேணி, குடும்பத் தலைவியாக வாழ்ந்து முடிக்கிறாள்.
ஒரு பெண் தன் திருமணத்திற்குப்பின்பு, அவள் கணவனின் தாய்- தந்தை அதாவது மாமனார், மாமியார் இவளை மருமகள் என்ற பெயரில் மற்றொரு மகளாக ஏற்றுக் கொள்கிறார்கள். திருமணத்திற்குப்பிறகு, கணவனின் பெற்றோரே, இவளுக்குத் தாய்- தந்தையாவார்கள். அந்தக் குடும்பத்தின் பொறுப்பு, கடமைகள் என அனைத் தையும் அவளிடம்தான் ஒப்படைக்கிறார் கள். மணமான பெண்கள் தன்னைப்பெற்ற தாய்- தந்தைக்குச் செய்யவேண்டிய கடமை களையும், அன்பு, பாசத்தையும், தன் மாமனார், மாமியாருக்குச் செய்து, அவர்களின் அன்பையும், நல்லாசியையும் பெற்று வாழவேண்டும்.
பெண்கள், தாய்- தந்தைபோல் மதித்துக் காப்பாற்றவேண்டிய மாமனார்- மாமியாரை மதிக்காமல், வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் தேவைகளையறிந்து சேவை செய்து காப்பாற்றாமல், நேரத்திற்கு உணவிடாமல் அவர்கள் பசியும், பட்டினியுமாய் உணவை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவர்களைப் பார்க்கவைத்து தானும், தன் கணவன், குழந்தைகளுடன் அறுசுவை உணவை உண்டு வாழும் பெண்களுக்கு பித்ரு சாபம், தாய் சாபம் உண்டாகும்.
கணவனின் வயது முதிர்ந்த பெற்றோரை கவனியாமல், அவர்களை சுமையாக எண்ணி வீட்டைவிட்டு வெளியேற்றுவது அல்லது அனாதைபோல் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவது போன்றவற்றைச் செய்யும் பெண்களுக்கு பித்ரு சாபம் பற்றிக் கொள்ளும்.
பிறருக்கும்போதே, பித்ரு தோஷத்துடன் பிறந்துள்ள பெண்களின் இப்பிறவி வாழ்க்கையில், தன்னைப்பெற்ற தாய்- தந்தையாலும், தந்தைவழி உறவுகளாலும் பெரிய நன்மைகளை அடையமுடியாது. இவளின் தந்தை இளம் வயதிலேயே இறந் திருக்கலாம். அல்லது இவளையும், இவள் தாயையும் விட்டுத் தந்தை பிரிந்து செல்லலாம்.
பித்ரு சாபமுள்ள பெண்கள், தான் வாழவந்த வீட்டில், மாமனார், மாமியாரால் பெரிய நன்மைகளை அடையமுடியாது. இவள் கணவனின் தந்தை, கணவனின் இளம் வயதிலேயே இறந்திருக்கலாம். திருமண கால சமயத்தில் மாமனாரோ மாமியாரோ இல்லாத கணவன் அமையக்கூடும்.
மாமனார் வீட்டிலிருந்து, இவள் கணவனுக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்துகள், கணவனும் இவளும் அனுபவிக்க முடியாமல் போகும். திருமணத் திற்குப்பின்பு மாமனார்- மாமியார் மற்றும் குடும்ப உறவுகளுடன் சேர்ந்து வசிக்க முடியாமல் தனிக்குடித்தனம் சென்று வசிக்க நேரிடும். பித்ரு தோஷமுள்ள பெண்ணும் அவள் கணவனும் மட்டுமே சுயமாக உழைத்து சம்பாதித்து வாழும் நிலை அமைந்துவிடும்.
முற்பிறவிகளில் பெண்கள் தான் வாழவந்த வீட்டில் தன் மாமனார்- மாமியார்க்கு செய்த கொடுமைகளும், குற்றங்களும், நம்பிக்கை துரோகமும், பாவங்களும் இப்பிறவியில் பித்ரு தோஷமாக செயல்பட்டு இதுபோன்ற பலன்களை கணவன் வீட்டில் அனுபவிக்கச் செய்துவிடும்.
ஆசானே, ஆண்கள் தங்கள் தந்தைக்குச் செய்யும் கொடுமைகளால், மட்டும் பித்ரு தோஷத்தை அடைவதில்லை. இவனின் வம்சம் விளங்க வாரிசுகளைப் பெற்றெடுத்துத் தந்து, இவனுக்கு சுகம் தந்து, குடும்பப் பொறுப்பினை ஏற்று, பெற்ற தாய்க்குப்பின் இவனை கவனமாக இருந்து காப்பாற்றும் மனைவியின் பெற்றோர்களான மாமனார்-
மாமியாருக்குச் செய்யும் கொடுமை, பாவங்களாலும் ஆண்களுக்கு பித்ருதோஷம், தந்தை சாபம் உண்டாகும்.
பெண் எவ்வாறு தன் மாமனாருக்கு "மகள்' என்ற உறவுநிலையைப் பெறுகிறாளோ, அதேபோன்றுதான், ஒவ்வொரு ஆணும் தனது திருமணத்திற்குப் பின்பு, தனது மாமனார்- மாமியாருக்கு மற்றொரு மகன் என்ற உறவுநிலையை அடைகிறான்.
ஆண்கள் வரதட்சணை, சீர்வரிசை, மனைவி பிறந்த வீட்டில், குடும்ப சொத்துகளில் பாகம் என பொருளாதாரவகையிலோ அல்லது வேறு எந்த நிலையிலோ, தன் மாமனா ருக்கு சிரமம், குடும்பத்தில் குழப்பங்கள், பகையை உருவாக்கி மனநிம்மதியில்லாத நிலையைத் தந்தால், அந்த ஆண்களுக்கும் மாமனார் மனம் வெறுத்துவிட்ட சாபத்தாலும் பித்ரு தோஷம் உண்டாகும்.
முற்பிறவிகளில் மாமனாரால் பித்ரு தோஷம் பெற்ற ஆண்களுக்கு இந்தப் பிறவியில், பெற்ற தந்தை இல்லாத பெண் மனைவியாக அமைவாள். அல்லது மாமனார் இருந்தாலும், மாமனார் வீட்டிலிருந்து எந்த நன்மைகளையும் அடைமுடியாது. மாமனர் வீடு பகையாகலாம்.
ஆண்கள் தங்கள் திருமண சமயத்தில் வரதட்சணை, சீர்வரிசை என எந்த எதிர் பார்ப்புமில்லாமல் ஒரு பெண்ணை மணந்து கொள்வதாலும், பெண்கள் தனது மாமனார், மாமியாரை மதித்து, அவர்களை பேணிக் காப்பாற்றி வாழ்ந்தாலும் இந்த பித்ரு சாபதோஷம் படிப்படியாக பாதிப்பினைத் தராமல் விலகும்.
ஆண்- பெண் இருபாலரின் திருமணத்திற்குப்பின்பு இவர்களின் மாமனார் வீட்டில் அன்பும், பாசமும், ஒற்றுமையும், மரியாதையும் சொத்துகளும் கிடைத்தால், இவர்களின் முற்பிறவிகளில் தனது மாமனார்-
மாமியாரை பெற்ற தாய்- தந்தைபோல் மதித்து, அவர்கள் மனம் நோகாமல் காப்பாற்றி பாதுகாத்தவர்கள். மாமனார்- மாமியார் வழங்கிய நல்லாசியால், அந்தப் புண்ணியம் இந்தப் பிறவியில் பெண்களுக்கு வாழவந்த வீட்டிலும், ஆண்களுக்கு மனைவிவழி உறவுகளாலும் நன்மைகளை அடையச் செய்துவிடும்.
(இன்றையநாளில் பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, இதுபோன்ற பலன்களைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ஆண்கள்- பெண்கள், இந்த தோஷம் நீங்க, ஆஸ்திக முறை யில் பணம் செலவுசெய்து, பூஜை, ஹோமம் புண்ணியத்தலம், தீர்த்த யாத்திரை, அமாவாசை திதி, தர்ப்பணம், விரதம், வழிபாடு களால் தீர்த்துக்கொள்ளமுடியாது. சித்தர்கள் கூறிய ஆன்மிக வழிமுறைகளைக் கடைப் பிடித்து, முறையாக முன்னோர் வழிபாடு களை, நிவர்த்திகளைச் செய்து பாவ- சாப- தோஷத்தைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.) அகத்தியர்: காகபுசுண்டரே, நான் கேட்ட வினாவுக்கு விளக்கமாக விடை கூறினாய்.
இன்று சித்தர் சபை கலையும் நேரம் வந்து விட்டது. மற்ற சாபங்களைப் பற்றி நாளை சபை யில் அறிவோம். இன்று சபை கலையலாம்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)