"கூட்டுவதும் கூட்டிப் பிரிப் பதுவும்
காட்டுவதும் காட்டி மறைப் பதுவும்
ஒவ்வொன்றையும் ஆட்டுவதும் ஆட்டி
அடக்குவதும்
முன்னமைந்த கர்மவினை கணக்கின் படியே.'
(சிவானந்த போதம்)
அகத்தியர்: இந்த பூமியில் பிரளயம் உண்டாகி உயிரினங்கள்முதல் அனைத்தும் அழியும் காலத்தையும், மனிதர்கள் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் நன்மை- தீமைகளுக்குக் காரணமான முற்பிறவி கர்மவினைக் கணக்கினையும் அறிந்தவரே, காகபுசுண்டரே, ஒரு மனிதனுக்கு பாவ- சாப கர்மவினை, விதி நிலை யாரால் எந்த செயல்களைச் செய்வதால், எப்போது உண்டாகிறது? என்பதைப் பற்றி இன்று இந்த பகுத்தறிவு சித்தர்கள் சபையில் கூறுங்கள். நீங்கள் கூறுவதைக் கேட்க, நானும் சித்தர் பெருமக்களும் ஆவலாக உள்ளோம்.
காகபுசுண்டர்: தமிழ்மொழியை உருவாக்கி அதற்கு இலக்கணம். வகுத்த வரே, தமிழ்மக்களின் தலைவரே, தமிழ் மொழியறிவு, தமிழ் மக்களுக்கு நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறை, முன்னோர் வழிபாட்டு முறைகளை வகுத்துத்தந்து, தமிழின மக்களை பகுத்தறிவைக்கொண்டு நல்வாழ்வை வாழச் செய்தவரே, அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடிக்கு என் பணிவான வணக்கம்.
ஆசானே, உங்களின் பகுத்தறிவு போதனையாலும், வழிகாட்டுதலாலும் அறிவு தெளிவுபெற்ற பல ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களில் நானும் ஒருவன். இம்மண்ணுலகில் பிறந்து வாழும் ஒவ்வொரு மனிதனும், தன்வாழ்வில் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வுகளுக்கு உண்டான, காரண காரியத்தை எனது அனுபவ அறிவினால் ஆய்வுசெய்து அறிந்து தெளிவுபெற்ற உண்மைகளை இந்த திராவிட சித்தர்கள் சபையில் கூறுகிறேன்.
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் உடல், உயிர், ஆன்மா என்ற மூன்றின் கூட்டுச் சேர்க்கையினால் பிறந்து, வாழ்ந்து, இறக்கிறான். உயிர் பிறப்பைத் தருகின்றது; உடல் செயலைத் தருகிறது; ஆன்மா எண்ணம், குணம், சிந்தனைகளைத் தருகிறது. வாழ்க்கையின் முடிவில் இறப்பின்போது, பிறப்பின் முதன் முதலில் உண்டான உயிர் உடலைவிட்டு நீங்குகிறது. உயிர் போனபின்பு உடல் செயல்படும் நிலையை இழக்கிறது. ஆன்மா செயல்படாமல் தடைப்படுகிறது.
ஒரு மனிதன் இறந்தபின்பு, தாய்- தந்தையால் உருவாக்கப்பட்ட உடல் அழிகிறது. ஆனால் உயிர், ஆன்மா ஆகிய இரண்டும் அழியாது. இவை அவரவர் செய்த வினைகளைத் தீர்த்து முடிக்கும்வரை பல பிறவிகள் பிறக்கச் செய்து, நிழல்போல் தொடர்ந்து வந்து நன்மை- தீமைகளைத் தந்து அனுபவிக்கச் செய்யும்.
இந்த பூமியில், ஒவ்வொரு மனிதனும் பல பிறவிகள் பிறக்கிறான். முற்பிறவிகளில் தன் வாழ்வில் செய்த ஒவ்வொரு செயல்களுக்குத் தகுந்த பலனை, அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்துவாழ்கிறான். முற்பிறவி வாழ்க்கை காரணம்; இப்பிறவி வாழ்க்கை காரியம் என்பதே உண்மை. ஒரு மனிதன் தன் வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகளை, உயர்வு- தாழ்வு கர்மவினைகளை, விதியை அவன் மட்டுமே தன் செயல்கள்மூலம் உருவாக்கிக்கொண்டு, அனுபவித்து தீர்க்கிறான்.
ஆசானே, ஒவ்வொருவரும் இந்த பூமியில் ஒரு தாய்- தந்தைமூலம் பிறக்கிறார்கள் மற்றும் சகோதரன், சகோதரி, மனைவி, மகன், மகள் என்று தங்களுக்கென்று ஒரு குடும்பமாக இணைந்து வாழ்கிறார்கள். இந்த குடும்ப உறவுகளுக்கிடையே ஒவ்வொருவரும் பகைமை, பொறாமைகொண்டு, செய்யும் தீமைகளால்தான் அதிகமான பாவ- சாபப் பதிவுகளை அடைகிறார்கள். மேலும் இந்த சமுதாயத்தில் மற்றவர்களுக்குச் செய்யும் கெடுதல்களாலும் பாவ- சாபங்களைத் தனக் குத்தானே உருவாக்கிக்கொள்கிறார்கள்.
அகத்தியர்: மனிதர்கள் தங்கள் குடும்ப உறவுகளுக்கும், தான் வாழும் சமூகத்தில் மற்றவர்களுக்கும் என்னவிதமான செயல்களைச் செய்வதால் கர்மவினைப் பதிவுகள், விதிப்பலன் உண்டாகின்றன என்பதை விளக்கமாகக் கூறுங்கள்.
(வாசக அன்பர்களே, சித்தர்களின் ஜீவநாடி ஓலையில், காகபுசுண்ட ரிஷி, பாவ- சாப நிலை, அதனால் வாழ்வில் அனுபவிக்கும் பலன்களைப் பற்றிக் கூறியுள்ளதை ஆதாரமாகக்கொண்டு விளக்கத்தைக் கூறுகிறேன். வாசகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இப்பிறவி நடைமுறை வாழ்வில் அனுபவிக்கும் பலன்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு முற்பிறவியில் உண்டான கர்மவினையையும், அதனால் அனுபவிக்கும் சிரமங்களுக்குக் காரணத்தையும் அறிந்துகொள்ளுங்கள்)
காசுபுசுண்டர் (ஜீவநாடி ஓலைபலன்):
"நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
நடுவாக வந்தவிடம் பாராத் தோஷம்
கூடியே பிறந்தவிடம் காணாத் தோஷம்
குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடிய வித்தோடே சேராத் தோஷம்
வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
கும்பியுங் கற்சிப்பியும் அறியான் பாவி.'
அகத்தியர்: புசுண்டமுனிவரே, உங்களின் இந்தப் பாடலுக்கான விளக்கத்தை பாமர மக்களும் அறிந்து, புரிந்து தெரிந்துகொள்ளும்படி கூறுங்கள்.
காகபுசுண்டர்: இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது தந்தை உண்ணும் உணவின்மூலம் அவன் உடலில் இரண்டுமாத காலம் விதையாக வளர்ந்து, முதிர்ச்சியடைந்து விந்தாக உருவாகி, தாயும் தந்தையும் புணர்ந்து உறவுகொள்ளும்போது, தந்தையின் விந்து தாயின் கர்ப்பத்திலுள்ள கருமுட்டையுடன் இணைந்து கருவாகி வளர்ந்து உருவம் பெற்று, கர்ப்ப காலக் கணக்கு நாட்கள் முடிந்தவுடன், தாயின் வயிற்றிலிருந்து இம்மண்ணுலகில் ஒரு குழந்தையாகப் பிறக்கிறது.
ஒரு குழந்தை முதன்முதலில் உருவாவது ஆணிடமிருந்துதான்.
மரம் செடி, கொடி, தாவர விதைகள் மண்ணில் விழுந்து முளைத்து வளர்ந்து, மற்றொரு தாவரமாக எப்படி உருவாகி றதோ, அதுபோன்றுதான் தந்தையின் விந்து விதையாகவும், அந்த விந்தினைத் தன் கர்ப்பத்தில் தாங்கி, ஒரு குழந்தை யாக வளர்ந்து உருவாக்கும் தாய் பூமி சக்தியாகவும் உள்ளனர்.
மண்ணுலகில் பிறக்கும் ஆண்- பெண் என்ற இரு பிரிவுக் குழந்தைகள், ஆண்களின் விந்தில்தான் இனம் பிரிந்து உருவாகிறது. விந்தில் ஆண்மூலக் கூறு விந்தணுக்கள் அதிக எண்ணிக்கையில், வலிமை பெற்றிருந்தால், பெண்ணின் கர்ப்பத்தில் சேர்ந்து ஆண் குழந்தை பிறக்கும்.
ஆணின் விந்தில் பெண்மூல அணுக்கள் அதிக வலிமையுடன், அதிக எண்ணிக்கையில் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்.
ஆண்- பெண்ணென்று குழந்தைகள் பிறப்பதற்கு, பெண்கள் காரணமல்ல. ஆணின் விந்திலுள்ள மூல அணுக்கள்தான் காரணம். மண்ணில் எந்தவிதையை விதைக்கிறோமோ, அந்த விதையின் தாவரத்தைதான் மண் வளர்த்துத் தரும். அதுபோன்றுதான் ஆணின் விந்துமூலம் ஆண்- பெண் என எந்த விதையணுக்கள் பெண்ணின் கர்ப்பத்தில் சேருகின்றதோ, அதனை வளர்த்துத் தருவது மட்டும் தான் பெண்ணின் கடமை. ஆண் குழந்தை பிறக்காததற்கு பெண் காரணமல்ல.
இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஆன்மவாகும். அந்த உயிரை எந்த சக்தி உருவாக்கி பிறக்கச் செய்கிறதோ அதுவே "பரமாத்மா' ஆகும். மனிதர்களை உருவாக்கிப் படைக்கும் அவரவரின் தாயும், தந்தையும்தான் அவரவரூக்குப் பரமாத்மா ஆவார்கள்.
"நாடியே யுகித்தவிடம் அறியாத் தோஷம்.'
ஒருவன் தனது முன்பிறவியில், தன்னை உருவாக்கி, தன் உழைப்பால் பொருள்தேடி, பெற்ற பிள்ளைக்கு பசியாற அன்னமிட்டு வளர்த்து, அறிவு, ஞானம் பெற கல்வி தந்து, தொழில், உத்தியோகம் அமைத்துவைத்து, வீடு, சொத்து, பொருள் தேடிவைத்து, திருமணம் முடித்து, தன் சுகத்தை இழந்து பேணிக் காப்பாற்றிய தந்தையின் வயது முதிர்ந்த காலத்தில், தந்தைக்கு உண்ண உணவு தராமல், பசியும் பட்டினியுமாய் பரிதவிக்கவிட்டு, தானும், தன் மனைவி, குழந்தைகளும் மட்டும் அறுசுவை உணவுண்டு வாழ்ந்த பாவம்.
பெற்ற தந்தையிடம் பகைமைகொண்டு எதிரிபோல் பாவிப்பது, மரியாதைக் குறைவாக மனம் நோகும்படி பேசுவது, தந்தை சம்பாதித்து சேமித்துவைத்த பணம், வீடு, சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற்றி, அவரை அனாதைபோல் தனியாகப் பிரித்துவைத்து கஷ்டப்பட வைத்தது.
இதுபோன்று இன்னும் பல கொடுமைகளைச் செய்தால், பெற்ற தந்தையே மனம் வெறுத்து கைம்மண் வாரிவிட்ட வாக்கு சாபம், இந்தப் பிறவியில் தீர்க்கமுடியாத பித்ரு தோஷமாக செயல்பட்டு பலவிதமான கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவிக்கச் செய்துகொண்டிருக்கும்.
முற்பிறவியில் தந்தைவிட்ட சாபம், பித்ருசாபம், பித்ருதோஷம், பித்ரு துவேஷம், பித்ரு சோகம் என இன்னும் பலவித பாவ- சாப- தோஷமாக மாறி பாதிப்பை தந்துகொண்டேயிருக்கும். ஒருவன் ஒரு பிறவியில் தனது தந்தைக்கு பல கொடுமைகளைச் செய்து, அதனால் தந்தைவிட்ட சாபம் அவன் வம்சத்தில் ஆறு தலைமுறைகள் தொடர்ந்துவந்து, வாரிசுகளின் வாழ்க்கையில் பாதிப்பு களைத் தந்துகொண்டிருக்கும்.
சுந்தரானந்தர்: காகபுசுண்ட முனிவரே, முற்பிறவியில், பெற்ற தந்தைக்கு பல கொடுமைகளைச் செய்து அதனால் தந்தையிடம் சாபம் பெற்று, பித்ரு சாப- தோஷத்துடன் பிறந்துள்ள ஒருவனின் இப்பிறவி வாழ்க்கையில் என்ன விதமான பலன்களை அனுபவித்து வாழ்வான் என்பதையும் விளக்கமாகக் கூறுங்கள்.
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இன்று சபை கலையும் நேரம் வந்துவிட்டது. நாளை சித்தர் சபையில் பித்ரு- சாப- தோஷமுள்ள ஒருவனின் வாழ்க்கையில் என்னவிதமான பலன்களைத் தந்து, அனுபவிக்கச் செய்யுமென்பதை அறிவோம். இன்று தமிழ்ச் சங்கம் கலையலாம்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)