"கங்கையிற் குளித்திட்டாலும்

கடவுளைப் பூசித்தாலும்

மங்குல்போல் கோடி தானம்

வள்ளலாய் வழங்கினாலும்

Advertisment

கங்கையில் லாத ஞான

தத்துவமுணர்ந் திட்டாலும்

பொங்குறு பாவம் செய்வோன்

Advertisment

போய்நரகடை வானன்றே.'

அழுகண்ணிச் சித்தர்: இந்த பூமியில் வாழும் மக்கள் ஆறறிவு மேம்பட்டு, ஏழாமறிவை அறியச் செய்தவரே, ஒருவன் "தன்னையறிந்து வாழ தனக்கொரு கேடில்லை' என்று, ஒவ்வொரு மனிதனும் நல்வாழ்வு அடைந்திட வழிகாட்டியவரே, நீரின் சுழல் எவ்வாறு ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருக்கிறதோ, அதேபோன்று மனதை அடக்கி ஒரே நிலையில் நிலைபெறச் செய்து, ஞானத்தை அடைய வேண்டுமென்று தன்னையறியும் ஞான அறிவுபெற வழிகூறியவரே, எங்கள் தமிழ்க்குல ஆசானே, உங்கள் திருப்பாதம் தொழுது வணங்குகிறேன்.

ஆசானே, தாவரங்களுக்கும் உயிர், உடல், ஆன்மா உண்டு; அவற்றின் விதைகளில் அவை மறைந்திருக்கின்றன. அவற்றைத் தீயிலிட்டு எரிப்பதால், அந்த செயலைச் செய்பவர்களுக்கு கொலைசெய்த பாவம் ஏற்படு மென்று கூறுகிறீர்கள். தாவரங் களைக் கொன்ற பாவத்திற்கு உண்டான தண்டனை பற்றிக் கூறுங்கள்.

அகத்தியர்: காடு, வனம், நந்தவனம், பூஞ்சோலைகள், பழத்தோட்டங்கள், மரம், செடி, கொடிகள், தானியப் பயிர்களை அழித்தும், தீயிட்டு எரித்தும் பாவம் செய்தவரின் அடுத்தடுத்த பிறவிகளில் கட்டிய வீடு, மனைகள், நன்செய்லி புன்செய் விவசாய நிலங்களில் பிரச்சினைகள் உண்டாகும். விவசாயம் விருத்தி, லாபம் தராது. பூர்வீக சொத்துகளில் வில்லங்கம், வியாஜ்ஜியம் உண்டாகும். முற்பிறவிகளில் தாவரங்களை அழித்தவன் இப்பிறவி வாழ்வில் தடுமாற்றங்களையும், தடைகளையும் அனுபவிப்பான். வளர்ச்சி குறைந்து கொண்டே வரும்.

அழுகண்ணிச் சித்தர்: தாவரங்களை அழித்ததால் உண்டாகும் பாவங்களுக்குரிய தண்டனைகளை ஒருவன் அடுத்துவரும் பிறவிகளில் அனுபவிப்பான் என்று கூறுகிறீர்கள். ஆனால் விலங்குகள், பறவைகள் தாவரங்களையும் தானியங்களையும் தின்றே உயிர்வாழ்கின்றன. அவற்றை உண்டு அழிப்பதால், அவற்றுக்கும் பாவத்திற்கான தண்டனை கிடைக்குமா?

ss

அகத்தியர்: இந்த பூமியில் இயற்கையின் படைப்பில் உருவான- உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. ஆனால், உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் அறிவின் கணக்கீடுபடி யும், உடல் வலிமை நிலையிலும் ஒன்றைவிட மற்றொன்று வலிமையானதாகப் படைக்கப்பட்டுள்ளன. பலமுள்ள உயிரினங்கள் தன்னைவிட பலம் குறைந்த பிராணிகளைக் கொன்று உணவாக்கிக்கொள்கின்றன. அவற்றுக்கு எந்தப் பாவமும் வராது.

அழுகண்ணிச் சித்தர்: ஆசானே, இந்த பூமியில் வாழும் உயிரினங்களின் அறிவு நிலையில் ஏற்றத் தாழ்வுகள், வித்தியாசம் உண்டென்று கூறுகிறீர்கள்.

அதனைப் பற்றியும் விளக்கவேண்டும்.

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இந்த மண்ணுலகில் மண், நீர், வெப்பம், காற்று ஆகிய பூதங்களின் கூட்டுச் சேர்க்கையால் உயிர், உடல் உருவாகி, ஆகாய சக்தியினால் ஆத்மா, கற்பனை, கனவுகள் உண்டாகி வாழ்கின்றன. இந்த முதல் நான்கு பூதங்களின் அம்சத்துடன் பிறந்த உயிரினங்களையும், அவற்றின் அறிவுத் திறனையும் கூறுகிறேன்; அறிந்துகொள்ளுங்கள்.

மண் சக்தியுடன் இணைந்தவை மரம், செடி கொடிகள், புல், பூண்டு உயிர்களாகும்.

நீர் சக்தியுடன் இணைந்து, மனிதன், பசு, ஆடு, மாடு போன்ற விலங்குகள், மிருகங்கள், கர்ப்பப்பையில் கருவாகி உருவாகிப் பிறக்கின்றன.

வெப்ப சக்தியால் உண்டாகும் வியர்வை யிலிருந்து ஈ, பேன், கம்பளிப்பூச்சி போன்ற புழுவகைகள் உற்பத்தியாகிப் பிறக்கின்றன.

காற்றின் சக்தியால் கோழி, வாத்து போன்ற அனைத்து பறவைகளும், பல்லி, ஓணான், எறும்பு போன்ற இன்னும் பல உயிரினங்களும் முட்டை மூலம் பிறக்கின்றன.

புல், பூண்டு, மரம் செடி, கொடிகள் போன்ற அனைத்து தாவரங்களும், ஓரறிவு உடையவை. இவை ஓரிடம்விட்டு ஓரிடம் இடம்பெயர்ந்து செல்லமுடியாத உயிரினம்.

சிப்பிகள், நத்தை, சங்கு, புழுக்கள் போன்றவை ஈரறிவு உடையவை.

கரையான், எறும்பு போன்ற பிராணி கள் மூவறிவு உடையவை. இவை தான் வசிக்க தனக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுவது, தன் இரையை எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்துக் கொள்ளும் எண்ணம், ஒற்றுமையாக இனம் சேர்ந்து பகையின்றி எதனையும் செய்துமுடிக் கும் குணம்கொண்ட இவை மூவறிவுள்வை.

நண்டு, தும்பி, வண்டு போன்றவை நான்கறிவு உயிரினங்கள்.

மிருகங்கள், விலங்குகள், ஆடு, மாடு போன்றவை ஐந்தறிவு உடையவை. தான் கர்ப்பம் தாங்கிப் பெற்ற குழந்தைகளுக்கு இரை தேடிவந்து, அவை சுயமாகத் தன் இரையைத் தேடும் காலம்வரை உணவளித்துக் காப்பாற்றும் குணம்கொண்ட இவை ஐந்தறிவு உள்ளவை.

ஆசை, பாசம், கோபம், ருசி, ஏமாற்றுதல், பொய் பேசுதல், உழைத்து வாழும் எண்ணம் இல்லாமல் பிற சக்திகள், பிற மனிதர்களை நம்பிவாழ்தல், பொருளாசை, மண்ணாசை, பொருள் சேர்த்தல், இழத்தல், உறவு, பகை என இதுபோன்று இன்னும் பலவழிகளில் இரு குணங்கள்கொண்டு வாழ்பவர் மனிதர்கள். இவர்கள் ஆறறிவுடைய பிராணிகள்.

விலங்குகள், பறவைகள் என ஓரறிவுமுதல் ஐந்தறிவுவரை உள்ள பிராணிகள், தங்கள் வாழ்வில் வயிற்றுப் பசிக்காக இரைதேடி உண்பது, தன் இனத்தை பூமியில் விருத்தி செய்துகொள்வது என்ற இந்த இரண்டு செயல்களைத்தான் செய்யுமே தவிர, வேறேந்த செயலையும் செய்து வாழ்வதில்லை; செய்யவும் முடியாது. இவற்றுக்கென்று வேறெந்த ஒரு நியதியையும் இயற்கை நிர்ணயித்து வைக்கவில்லை.

இனி உங்கள் கேள்விக்கு பதில் கூறுகிறேன். ஆடு, மாடு, மான், முயல் போன்ற இன்னும் பல உயிரினங்கள், தாவரங்களின் இலை, தழைகள், விதைகள், தானியங்களைத் தின்று உயிர்வாழ்கின்றன. இயற்கை இவற்றையே உணவாக நிர்ணயித்து வைத்துள்ளது. தாவரங்களை உண்பதால் இவற்றுக்கு பாவம் உண்டாகாது.

தாவரங்களை உண்ணும் இந்தப் பிராணிகளின் எச்சம், சாணம், சிறுநீர் போன்றவை தாவரங்கள் வளரும் மண்ணுக்கு வளம்தந்து, தாவரங்கள் நன்கு வளர்வதற்கு உதவுகின்றன. இந்தப் பிராணிகளின் எச்சம், கழிவுப் பொருட்கள் வேறெதற்கும் பயன்படாது. தான் உண்ணும் தாவரம், செடி, கொடி, புற்களுக்கு உரம்தந்து வளரச் செய்து, அவற்றைக் காப்பாற்றுகிறது. தாவரங்களை தின்ற பாவத்திற்கு பாவநிவர்த்தி செய்து தீர்த்துக்கொள்கின்றன. அதனால் தாவரங்களைக் கொன்ற பாவம் இவற்றுக்கு உண்டாகாது.

இன்று சித்தர்கள் சபை முடியும் நேரம் வந்துவிட்டது. மற்ற சந்தேகங்களுக்கு நாளை தமிழ்ச் சபையில் பதில்களை அறிந்துகொள்வோம். இன்று சபை கலையலாம்.

"நில்லென்ற பெரியோர்கள் பாசை யாலே

நீடுலகம் தன்னுள்ளே நாலு வேதம்

வல்லமையாய்ச் சாத்திரங்க ளிரு மூன்றாக

வயிறு பிழைக்க புராணங்கள் பதினெட்டாகச்

கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்

கட்டினாரவரர்கள் பாசை யாலே

தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி

தொடுத்தார்க ளவரவர்கள் பிழைக்கத் தானே'.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)