"மெய் வாய்கண் மூக்குசெவியெனு மைந்தாட்டை
வீறும் சுவையொளி யூரோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
ஏகவெளிக் குள்ளேயோக வெளிக்குள்ளே.'
(இடைக்காடர்)
இடைக்காடர்: தமிழ்மொழியின் மூலவரே, தமிழின் காவலரே, தமிழ் மக்களின் ஆசானே, சித்தர்கள் பரம்பரை யின் முதல்வரே, சித்தாந்த கொள்கைகளை வகுத்தளித்த ஆசான் அகத்தியருக்கு வணக்கம். ஆன்மாவைப் பற்றிய உண்மைகளைக் கூறிவரும் தாங்கள், இதுவரை ஆன்மாவை உருவாக்கும் உடலுறுப்புகளையும், உடலில் ஆன்மா தங்கி செயல்படும் பாகத்தையும் கூறினீர்கள். ஆன்மாவின் செயலால் மனித வாழ்வில் உண்டாகும் நிலையைப் பற்றிக் கூறுங்கள்.
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, உயிரினங்களின் இயக்கத்திற்கும், இந்த பூமியில் உயிரினங்கள் அழியாமல் பிறந்து கொண்டே வருவதற்கும், மனிதர் வாழ்வில் உண்டாகும் உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவரவர் ஆன்மாவின் செயல்பாடுகள்தான் காரணம்.
இடைக்காடர்: ஆசானே, ஆன்மா மனிதர்களுக்கு மட்டும்தான் உண்டென்று நினைத்தேன். ஆனால் தாங்களோ இந்த பூமியில் வாழும் மற்ற உயிரினங்களான விலங்குகள், பறவைகள், ஈ, எறும்புமுதல் புழுவரை அனைத்து உயிரினங்களுக்கும் உண்டென்றும், அவையும் ஆன்மாவின் செயலால்தான் எதனையும் செய்கின்றன என்றும் கூறுகிறீர்கள். அதன் விளக்கம்?
அகத்தியர்: மனிதர்களுக்கு உண்டான ஆசை, கோபம், மோகம், பாசம், பசி, தாகம் போன்ற அனைத்தும் அவற்றுக்கும் உண்டு. மனிதர்கள் அனைத்தையும் கண்களால் பார்த்து அடையாளம் காண்பது- மனிதன் தன் பசி தீர்க்க தனக் குத் தேவையான உணவினைத் தேடி உண்பது- தாம்பத்தியத்தால் தன் இனத்தை உருவாக்கிக்கொள்வது- சப்தங்களைக் கேட்பது- சுவாசித்து உயிர் வாழ்வது- நோயினால் தாக்கப்படுவது- தான்பெற்ற குழந்தைகளுக்கு உணவு தந்து வளர்ப்பது என இதுபோன்று மனிதன் செய்யும் அனைத்து செயல்களையும் எந்தவிதமான மாற்றமுமின்றி, மற்ற உயிரினங்களும் செயல்பட்டு வாழ்கின்றன. மனிதன் பூமியில் இறப்பது போன்று அவையும் இறந்துபோகின்றன.
விலங்கு, பறவைகளுக்கு மட்டுமல்ல; இந்த பூமியில் தழைத்து வளரும் மரம், செடி, கொடி, புல் போன்ற தாவரங்களுக்கும் ஆன்மா உண்டு என்பதையும் புரிந்துகொள் ளுங்கள். மனிதர்கள், தங்களுக்கு எது நன்மை தரும்- எது தீமை செய்யும் என அறிந்து வாழ்வதுபோல் அவையும் தங்கள் நன்மை- தீமைகளை அறிந்துகொண்டுதான் வாழ்கின்றன. பஞ்சபூதங்களால், உண்ணும் உணவினால் உருவாக்கப்பட்டு பூமியில் சுவாசித்து வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உடல், உயிர், ஆன்மா உண்டு.
இடைக்காடர்: ஆன்மாவின் செயலால்தான் மனிதர்களுக்கு பாவ- சாபம், புண்ணியம் என்ற வினைப்பதிவுகள் உண்டாகின்றன என்றும், அந்த வினைப் பதிவுகளின் பாதிப்பினால்தான் மனிதனுக்கு ஒரு ஆன்மாவுக்கு பிறவி தொடர்கிறது என்றும் கூறுகிறீர்கள். பறவை, மிருகங்களுக்கும் ஆன்மா செயல்பாடு உண்டென்று கூறுகிறீர்கள். இவற்றுக்கும் பாவம்- சாபம்- புண்ணியம் உண்டா? இதைப்பற்றியும் விளக்கமாகக் கூறுங்கள்.
அகத்தியர்: ஒருவரின் எண்ணங்களே ஆன்மாவாகும். எண்ணம்தன் செயலாகும். செயலால் உண்டாகும் நன்மை- தீமைகளே பலனாகும். உயிரினங்களின் வாழ்வில் ஆன்மாதான் சுகம், துக்கம், இளமை, முதுமை, புத்தி, சித்தம், அகங்காரம், பகை, ஆசை, கோபம், மோகம், இரக்கம், நினைப்பு, மறப்பு, நல்லது- கெட்டது என இன்னும் அனைத்து மாக இருக்கிறது. இவை எல்லாமும் மனிதனின் குணங்களாகவும், செயல்களாகவும் உள்ளன. இந்த செயல்களால் உண்டாவதே பாவ- சாப- புண்ணிய கர்மவினைப் பதிவுகள்.
இந்த பூமியில் உண்மையில் பாவம்- புண்ணியம், நல்லது- கெட்டது என்று எதுவுமில்லை. எல்லாமும் ஒரே நிலை தான். இந்த பூமியிலுள்ள அனைத்தும், கடவுள், தெய்வம், மந்திரம் என்று எதையும் சார்ந்து உயிர் வாழமுடியாது. பூமியிலுள்ள ஒன்று, பூமியிலுள்ள மற்றொன் றைச் சார்ந்து அல்லது பயன்படுத்திதான் வாழவேண்டுமென்பது இயற்கை நிர்ணயித்த விதி. இதனை எந்த யுகத்திலும் எந்த சக்தியாலும் மாற்றமுடியாது.
இந்த மண்ணுலகில் மாமிசம் தின்று உயிர்வாழும் பிராணிகள் மற்றொரு உயிரான பறவை, மிருகங்களைக்கொன்று, அதனை உண்டுதான் உயிர்வாழ வேண்டும். இந்த மிருகங்கள், தன் உணவுக்காக மற்றொரு உயிரைக் கொல்வது பாவமல்ல. அந்த இனத் திற்கு நிர்ணயிக்கப்பட்ட இயற்கையின் விதியாகும்.
ஒரு பறவை தானியங்கள், பழங்களை உணவாக சாப்பிட்டு உயிர்வாழும். சில பறவை கள் புழு, பூச்சிகளை, வண்டினங்களைத் தின்று வாழ்ந்தாக வேண்டும் என்பதால், மற்றொரு உயிரான புழு, பூச்சிகளைக் கொல்வது அவற்றுக்குப் பாவமில்லை.
பூமியில் செழித்து வளரும் தாவரங்கள், செடி, கொடி, மரங்கள், புற்களுக்கும் உடல், உயிர், ஆன்மா உண்டு. இவையும் உயிரினம்தான். ஆடு, மாடு, மான், யானை போன்ற இன்னும் பல உயிரினங்கள், தாவரங்களைக் கொன்று தின்று உயிர்வாழ வேண்டுமென்பது அவற்றுக்கு இயற்கை நிர்ணயித்த விதி என்பதால், இந்த விலங்குகளுக்கும் பாவம் உண்டாவதில்லை.
மிருகங்கள், வனவிலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கு கொலை செய்த பாவம் உண்டாகாது. ஏனென்றால், இவை ஐந்தறிவு உள்ளவை. இவை நாள் முழுவதும் உணவைத் தேடும் முயற்சியில் மட்டுமே இருக்கும். வேறு எதற்கும் ஆசைப்படுவதில்லை. தன் வயிறு நிரம்பி, பசி இல்லையென்றால், இவை மற்றொரு உயிரைக் கொல்வதில்லை. நாளைக் குத் தேவையென்றும், தன் வாரிசுகளுக்குத் தேவையென்றும் எதனையும் சேமித்து வைத்துக்கொள்வதில்லை. பறவைகள், மிருகங்கள் ஒவ்வொன்றும், தனக்குத் தேவையான உணவைத் தங்கள் முயற்சியால் தேடி உண்டு உயிர்வாழ்கின்றன. இவை ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ்வதால் பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் என எதுவும் பற்றாது!
இந்த பூமியில் பிறந்து வாழும் அனைத்து உயிரினங்களிலும் மனிதர்களுக்கு மட்டும் தான் ஆறறிவு உள்ளது. மனிதர்கள் தானியங் களை உண்டு உயிர்வாழ வேண்டுமென்பதே இயற்கை நிர்ணயத்த விதி. ஆனால் தானியங்களைத் தவிர மற்ற உயிரினங்களான விலங்குகள், பறவைகள் போன்ற அனைத் தையும் வேட்டையாடி, வதை செய்து, கொன்று தின்று வாழ்கிறான்.
மனிதன் தன் கோபம், பொறாமை குணத்தால், தன் இனத்தைச் சேர்ந்த மற்ற மனிதர்களையும் கொல்கிறான். கடவுள், தெய்வம் என்ற பெயரால் பூஜை, ஹோம, யாகங்களில் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை பலியிட்டுக் கொன்று விடுகிறான். தன் உடலில் உண்டாகும் நோய்கள் குணமாவதற்கும், இன்னும் பல வகையில் தனது தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டுமென்றும் மனிதனே உருவாக்கிய தெய்வங்களுக்குப் பிரார்த் தனை செய்துகொண்டு, பலியிட்டுக் கொன்று விடுகிறான். ஆறறிவைப் பயன்படுத்தி சிந்தித்து செயல்பட்டு வாழவேண்டிய மனிதன், பகுத்தறிவால் சிந்தித்துப் பாராமல், கடவுள், தெய்வம் பற்றிய உண்மையை உணராமல் பல உயிர்களைக் கொல்வதால், இவனுக்கு கொலைப்பாவம் உண்டாகி வம்சத்தைத் தொடர்ந்து பாதிக்கச் செய்யும்.
பசு, ஆடு போன்ற வீட்டு விலங்குகள் தன் கர்ப்பத்தில், அதன் சிசுவை உருவாக்கி, கன்று பிறந்தவுடன் அதற்கு உணவு தேவையென்று தன் ரத்தத்தையே கொஞ்சம் கொஞ்சமாக பாலாக மாற்றி தன் மடியில் சேர்த்துவைத்து, தன் கன்று பிறந்தவுடன் அதற்கு உணவாகத்தந்து காப்பாற்றும். மனித இனத்தில் ஒரு பெண்ணும் இதே போன்றுதான். தான் கர்ப்பம் தரித்த வுடன், தனக்குப் பிறக்கப்போகும் குழந் தைக்காக தன் ரத்தத்தையே பாலாக்கி தன் மார்பில் சேமித்து வைக்கிறாள்.
மனிதன், விலங்கிடையே தாய்மையில் பேதமில்லை.
பசு, தன் கன்றின் உணவிற்காக- தன்னுள் உருவாக்கும் பாலை, பிரார்த்தனை என்ற பெயரால் கல்லிலும், மண்ணிலும், நீரிலும் ஊற்றி, வீணாக்கி விடுகிறார்கள். கன்றிற்காக இயற்கை தந்த பாலைக் குடித்து, அது பசியாறவிடாமல், அந்த கன்றினை பசியும் பட்டினியுமாய் வாழச்செய்து, கன்றின் உயிரைக் கொன்ற பாவத்தைத் தேடிக்கொள்கிறான். ஒரு பசுவின் பாலை, பாலில்லாமல் பசியால் வாடும் குழந்தைக்குக் கொடுத்து ஒரு உயிரை காப்பாற்றினால் அது புண்ணியம். இந்த செயல் வம்சத்தை வாழவைக்கும். கல், மண், நீரில் ஊற்றுவது பாவம். இது வம்சத்தையே பாதிக்கும்.
இந்த பூமியில் தாவரங்கள் விதைகள் மூலமே தங்கள் இனத்தை விருந்தி செய்து கொள்கின்றன. மனிதனின் விந்தினை, ஒரு பெண் தன் கர்ப்பத்தில் சுமந்து, ஒரு குழந்தையை உருவாக்குவது போன்று பாலூட்டி மிருகங்கள், தங்கள் கர்ப்பத்தில் ஒரு கன்றினை உருவாக்குவதுபோல், தாவரங்களின் விதைகளை மண் மாதா தன்னுள் கர்ப்பத்தில் தாங்கி, அதன்மூலம் மற்றொரு செடி, கொடி, மரத்தை உருவாக்கு கிறது. உண்மையில் இந்த தாவரங்களே மண்ணின் குழந்தைகள். பெற்ற தாயை பிள்ளைகள் காப்பாற்றுவதுபோல், இந்த தாவரங்களே தங்களின் இலை, தழைகளால் மண்ணைக் காப்பாற்றி, மழையை பூமியில் பொழியச் செய்து, எப்போதும் பூமியின் சக்தி குறையாமல் புத்துணர்ச்சியுடன் இளமையாக வைத்துள்ளது. தன்னைத் தாங்கி வளர்க்கும் பூமித் தாயை தாவரங்கள் காப்பாற்றிவருகின்றன.
இந்த பூமியில் பிறந்து வாழும் அனைத்து உயிரினங்களின் உடலானது, தாவரங்களின் தானியம், விதைகள், பழங்கள், கீரைகள், மூலிகைகளால்தான் உருவாகின்றது. தாவரங்கள் தரும் உணவு மூலமாகத்தான் உயிரினங்களுக்கு சக்தியும், விந்தணுக்களும் உருவாகின்றன. தாவரங்கள் இல்லையென் றால், இந்த பூமியில் உயிரினங்களே இருக்காது. தாவரங்கள் இல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இல்லாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.
மண்ணுலகில் மனிதர்கள், விலங்கு, பறவைகள் என அனைத்திற்கும் உடல் தந்து, உடலுக்கு சக்தியையும், வளர்ச்சியையும் தந்து, தன்னை உணவாகக் கொள்ளும் உயிரினமாகத் தன்னை மாற்றிக்கொண்டு, மற்றொரு உயிரை உருவாக்கும், தாவரங்களின் விதை களை தெய்வங்களுக்கு அர்பணிக்கிறோம் என்ற பெயரால், யாகங்களில் நெருப்பிலிட்டு எரியச் செய்து அழித்து விடுகிறார்கள்.
ஒவ்வொரு விதையும் ஒரு உயிர்தான். எத்தனை விதைகளை யாக நெருப்பிலிட்டு அழிக்கிறார்களோ, அத்தனை ஆயிரம் உயிர்களைக்கொன்ற பாவத்தை இவர்கள் அடைகிறார்கள்.
மனிதர்கள், தங்கள் பாவத்தைத் தீர்க்க, கடவுள் சிலைகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம், பழச்சாறு, மூலிகைசாறு போன்று இன்னும் பலவற்றை ஊற்றுவதாலும், யாகத்தீயில் தானியங்கள், தாவர விதைகள், மூலிகை வேரைப் போட்டு எரிப்பதாலும் அவர்கள் முற்பிறவிப் பாவங்கள் தீராது; அதிகமாகத்தான் ஆகும். பரிகாரம் என்ற பெயரால் உயிர்களைக்கொன்று பாவங் களை சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறார் கள்.
இன்று நேரம் அதிகமாகிவிட்டது. நாளைய சபையில், உங்களுக்கு உண்டான வினாக்களுக்கு பதில் கூறுகிறேன். இன்று தமிழ்ச்சபை கலையட்டும்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)