"நேமங்கள் நிட்டைகள் பேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணஞ் சாந்தி செபமந்ர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறுபூசி நலம் தேடி
சாமங்கடோறு மிவர்செய்யும் பூசனைகள் தாராது நலமே.'
(பட்டினத்தார்)
கோரக்கர்: அளவில்லா சக்திபெற்றவரே, உலகமக்கள் அனைவரும் உங்கள் போல் சக்திபெற ஆசானாக இருந்து அவ்வழிகளை போதிப்பவரே, உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
இத்தமிழறிவு சபையில் உடல், உயிர், ஆன்மா என இம்மூன்றையும் பற்றி தாங்களும், மற்ற சித்தர் பெருமக்களும் உண்மை நிலையை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கமாகக் கூறிவருகிறீர்கள். ஆசானே, உடல், உயிர், ஆன்மா ஆகிய இவற்றில் முதலில் தோன்றுவது எது? இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்றிணைந்து எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்கமாகக் கூறுங்கள்.
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இந்த பூமியில் உயிரினங்களின் உடல்தான் முதலில் தோன்றியது.
அதன்பின் உயிர்க்காற்று, உடலுக்குள் வந்து அசையும் நிலையைத் தந்தது. மூன்றாவதாக அந்த உடலுக்கு உரியவரின் எண்ணம், செயல் ஆகியவற்றின் நிலையைக்கொண்டு ஒவ்வொருவிதமாக ஆன்மா உருவாகி செயல்படுகிறது.
கோரக்கர்: ஆசானே இந்த உடல் எப்படி உருவானது?
அகத்தியர்: இந்த பூமியில் ஒரு ஆணும் பெண்ணும் உறவுகொள்ளும்போது, ஆணின் விந்தணுக்கள் பெண்ணுறுப்பிலுள்ள கருக்குழாய் வழியாக கர்ப்பப்பையை அடைந்து, அதிலுள்ள கருமுட்டையுடன் இணைந்து கருவாகி சிசுவாக உருவாகிறது.
கோரக்கர்: உயிரினங்கள், கடவுளால்தான் பூமியில் பிறப்பிக்கப் படுகின்றன என்று சிலர் கூறுகிறார்களே?
அகத்தியர்: இயற்கையின் நியதி, விதிபற்றிய உண்மை தெரியாமல், அவரவருக்குத் தோன்றுவதையெல்லாம் கூறிக்கொண்டு பிழைப்பவர்கள் சிலர் இதுபோன்று கூறுவது உண்மைதான்.
ஆனால், இயற்கையின் விதிப்படி, மனித இனத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் உறவுகொண்டுதான் தன் இனத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையை உருவாக்கமுடியும். கடவுள்தான் மனிதனைப் பிறப்பிக்கிறார் என்று கூறுபவர்கள்கூட, ஆண்- பெண் உறவால் பிறந்தவர்கள்தான்.
ஒரு காளையும், பசுவும் இணைந்துதான் தன் இனமாகிய கன்றுக்குட்டியை உருவாக்கமுடியும். மண்ணுலகில் வாழும் விலங்குகள், பறவைகள், பிராணிகள், புழு, பூச்சிகள் என் அனைத்தும், அதனதன் இனத்தில் ஆண்- பெண் சேர்க்கையால் பிறக்கின்றன. தன் இனத்தை விருத்தி செய்துகொள்கின்றன.
ஒரு தாவரம்கூட, தன்மலரின்மூலம் மகரந்த சேர்க்கைச் செயலால் கருக்கூடி, பிஞ்சாகி, காயாகி, கனியாக முற்றி, அதிலுள்ள விதைகளால் அதனதன் இனத்தை இந்த பூமியில் விருத்தி செய்துகொள்கின்றன.
இயற்கை உருவாக்கிய இந்த பிறப்பு முறை இந்த பூமியில் பரிணாம வளர்ச்சியால், உயிரினங்கள் தோன்றிய காலம்முதல் இன்றுவரை மாறாமல், வேறு சக்திகளால் மாற்றமுடியாத நிகழ்வாக தொடர்ந்து நடந்துவருகிறது. கடவுளை வணங்கி, யாரும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளமுடியாது. ஆண்- பெண் இணைந்துதான் ஒரு குழந்தையை உருவாக்கிப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
கோரக்கர்: ஆசானே, பெண்களின் கர்ப்பப்பையில் உருவாகிப் பிறக்கும் குழந்தையின் உடலுக்கு காது, மூக்கு, கண்கள், வாய் என ஒன்பது துவாரங்களில், எதன் வழியாக உயிரானது உள்ளே வரும்?
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, இந்த உடலுக்கு உயிர் வந்தது எப்படி என்பதைப் பற்றிக் கூறுகிறேன்; கேளுங்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்ததால் உருவான கரு, பெண்ணின் கர்ப்பப்பையில் 270 நாட்கள், தாயின்மூலம் உணவு, நீர், சுவாசம் ஆகியவற்றைப் பெற்று வளர்ந்து, இந்த பூமியில் அசைவற்ற நிலையில் தசைப் பிண்டமாகப் பிறக்கும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன், சிசுவுக்கும் அதன் தாய்க்கும் தொடர்பினை உண்டாக்கி உறவைத் தந்த தொப்புள் கொடியைத் துண்டித்தவுடன், இந்த பிரபஞ்சத்தில் காற்று மண்டலத்திலுள்ள அதன் முந்தைய பிறவி உயிர்க்காற்று மறுபடியும் குழந்தையின் தொப்புள் கொடியிலுள்ள துவாரம் வழியாக அதன் உடலினுள்ளே நுழைந்து செல்லும்.
அந்த உயிர்க்காற்று குழந்தையின் இதயத்தை அடைந்து அதனை இயங்கச் செய்து, உடலினுள்ளே இருக்கும் 72,000 நாடிகளில் உட்புகுந்து, ஒன்பது துவாரங் களையும் திறந்து, ரத்தம், தசையுடன் கலந்து உடலை இயங்கச் செய்கிறது. உடலுக்கு உயிர் தொப்புள் கொடி வழியாகத் தான் உள்ளே வரும்.
(இன்றைய நாளிலும் மருத்துவமனைகளில், ஒரு குழந்தை பிறந்து அது அசைவற்ற நிலையிலிருந்தால், தொப்புள் கொடி வழியாக நுழைந்த உயிர்க்காற்று மேல்நோக்கிப் பாய்ந்துசென்று இதயத்தை அடைய தடை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும் பிடித்து தலைகீழாகத் தொங்கவிட்டு லேசாகக் குலுக்குவார்கள். இதனால் தடுத்து நிறுத்தப்பட்ட காற்று தடை நீங்கி இதயத்தை அடைந்து, குழந்தை சுவாசித்து உடல் அசைந்து செயல்படத் தொடங்கும்.
உயிர்க்காற்று உடலினுள்ளே வந்தவுடன், ஒன்பது துவாரங்களும் திறந்து செயல்படத் தொடங்கும். ஆனால் உயிர்க்காற்று உள்சென்றவுடன், தொப்புள் கொடியை முடிச்சுப்போட்டு கட்டிவிடுவார்கள். உடலின் ஒன்பது துவாரங்கள் திறக்கும்; ஒரு துவாரம் மூடப்படும்.)
கோரக்கர்: அகத்தியர் பெருமானே, தாங்கள் உயிரைப் பற்றிக் கூறியதில் ஒரு சந்தேகம் உள்ளது. அதைப் பற்றியும் விளக்கம் தரவேண்டுகின்றேன்.
அகத்தியர்: கோரக்கரே, தங்கள் சந்தேகம் என்ன?
கோரக்கர்: ஆசானே, ஒரு குழந்தை பிறந்த தும், அதன் முந்தைய பிறவி உயிர்க்காற்று அதன் தொப்புள் கொடி வழியாக அந்த சிசுவின் உடலில் புகுந்து அதற்கு உயிர் தருமென்று கூறினீர்கள். இந்தப் பிறவியில் ஒரு குழந்தைக்கு அதன் முற்பிறவி உயிர் எங்கிருந்தது? எப்படி வருமென்பதே சந்தேகம்.
அகத்தியர்: ஒவ்வொரு மனிதனும் அறிந்துகொள்ளவேண்டியதுதான் உங்கள் சந்தேகம். பகுத்தறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கேள்விகள், தேடல்கள் உண்டாகும். இன்று சபை கலையும் நேரம் வந்துவிட்டது. அதனால் உங்கள் சந்தேகங்களுக்கு நாளை பதில் கூறுகிறேன். இன்று சபை கலையலாம்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)