"அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்ட பூசை செய்கிறீர்

அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே

எங்குமோடி எங்குமெங்கும் ஈடழிந்து மாய்கிறீர்

செங்கல் செம்பு கல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே.'

Advertisment

(சிவவாக்கியர்)

சட்டைமுனி சித்தர்: இந்த உலகிலுள்ள மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் போன்ற அனைத்திலும், அவற்றின் அகத்தை யும் புறத்தையும் ஞான அறிவால் அறிந்தவரே! மூச்சுக்காற்றின் சக்தியைக்கொண்டு ஒரு மனிதன் தன்னையறிந்து செயல்பட்டு, அவன் அதில் மறைந்திருக்கும் மகா சக்திகளைத் தெரிந்துகொண்டு நல்வாழ்வு வாழ வழி காட்டிய அகத்தியர் பெருமானே, தங்களை வணங்குகிறேன்.

நேற்று சபையில் மூச்சுக்காற்று உடலினுள்ளே சென்று உள்ளுறுப்புகளை இயக்கி செயல்படுவதைக் கூறினீர்கள். மூச்சுக் காற்றிலுள்ள மண், நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவை ஒவ்வொன்றும் மற்றொரு பூதத்துடன் இணைந்து செயல்படும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும், அந்த மாற்றங்களால் உண்டாகும் நிகழ்வுகளையும், மேலும் உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்று கூறுகளாகப் பிரிந்து செய்யும் நன்மை- தீமை, ஆரோக்கியம்- நோய் ஆகியவை பற்றியும் அறிந்துகொள்ள விரும்புகிறோம். இதனைத் தெளிவாகக் கூறுங்கள்.

Advertisment

அகத்தியர்: சித்தர் பெருமக்களே, உங்கள் உள்ளிருந்து வெளிப்படும் இத்தகைய கேள்விகள் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. என்னால் வழிகாட்டப்பட்டு, அகத்தியன் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழும் தமிழ் மக்களுக்கே உரித்தான தனிப்பட்ட குணமிது. எவனொருவன் மற்றவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, அதில் தனக்கு நன்மை- தீமை எதுவென ஆராய்ந்து பாராமல், உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ளாமல் அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்கிறானோ, அவனே இந்த உலகில் மிகப்பெரிய பேதை.

இந்த அகத்தியனே கூறினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதைப் பற்றிய உண்மைகளை அனுபவத்தில் அறிந்து செயல்பட்டு வாழ்கிறவன்தான் இந்த உலகில் ஞானி. பிறர் சொல்வதைக் கேட்டு செயல்பட்டு வாழ்பவன் தன் வாழ்வில் எதனையும் அடையமுடியாது. சுகங்களை அனுபவிக்க முடியாது. பிறர் சொல்வதை நம்பி வாழ்பவன் தன் பொருள், குடும்பம், உறவு என அனைத்தையும் இழந்துவிடுவான்.

அகத்தியன் வகுத்த சைவ சித்தாந்தக் கருத்துகள், கொள்கைகள் யாவும் மனதி னுள்ளே இருந்து எழும்பிய கேள்விகளால் உருவானவை. சித்தர் பெருமக்களே, நமது பகுத்தறிவுத் தமிழ்ச் சபையில், இந்த பூமியில் இல்லாதது, மாயையானது, மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக ஒருசிலரால் உருவாக்கி உலவவிட்டதைப் பற்றி எந்த கேள்விகளையும் கேட்காமல், இயற்கையால் உருவாக்கப்பட்டவற்றையும், மனித வாழ்வை உயர்த்தும் வழிமுறைகளைப் பற்றியும் மட்டுமே நீங்கள் கேட்கிறீர்கள். உங்களை நினைத்துப் பெருமையடைகிறேன். இனி உங்கள் கேள்விகளுக்குத் தெளிவைக் கூறுகிறேன்.

இந்த பூமியிலுள்ள மனிதர்கள், உயிரினங் கள், தாவரங்கள் என அனைத்தின் சரீரங் களும் இரண்டு கூறுகளாக அமைந்துள்ளன. இதில் கண்களால் பார்க்கப்படும் உறுப்புகள் புற உறுப்புகள் என்றும், உடலினுள்ளே இருக்கும் கண்களுக்குப் புலப்படாத உறுப்புகள் அக உறுப்புகள் எனவும் கூறப் படுகிறது.

பார்வைக்குத் தெரியும் புறவுடல், தோல், கண்கள், காது, மூக்கு, வாய், பற்கள், நாக்கு, கைகள், கால்கள், விரல்கள், நகங்கள் போன்றவை புற உறுப்புகள். பார்வைக்குத் தெரியாத தசை, எலும்பு, நரம்பு, மூளை, இதயம், ஈரல், குடல், சிறுநீரகம் போன்றவை அக உறுப்புகளாகும்.

இதேபோன்று தாவரங்களில் இலை, கிளை, பட்டை, பூ, காய், பழம் போன்றவை புற உறுப்புகளாகும். மரத்தின் உட்பகுதி, பழத்தின் சதைப்பகுதி, கொட்டை, விதை, பருப்பு போன்றவை அவற்றின் அக உறுப்புகளாகும்.

மனிதர்களின் உள்செல்லும் சுவாசக் காற்று எவ்வாறு உடலினுள் சில மாற்றங் களை அடைந்து செயல்படுத்துகிறதோ, அதேபோன்று பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தும் காற்றையே சுவாசித்து வாழ்வதால், அந்தக் காற்றும் அவற்றின் உறுப்புகளை இயக்கி உயிர் தந்து, வளர்ச்சி, இனவிருத்தி, முதுமை, மரணம் போன்றவற்றைத் தருகிறது.

இந்த உலகிலுள்ள அனைத்திற்கும் உயிர்தரும் ஆதாரம் காற்றுதான் என்பதால், அகத்தியன் முதலான அனைத்து சித்தர்களும் காற்றுதான் கடவுள் என்னும் உண்மையை அறிந்து அதனை வழிபட்டுவருகிறோம்.

இனி, நம் உடலில் ஐம்பூதங்களால் உருவாக் கப்படும் உறுப்புகளை அறிவோம்.

ss

மண்

மண்ணுடன் மண் சேர்ந்து உடல் உருவாகிறது. இறந்தபின் அவ்வுடலை எரித்தால் கிடைக்கும் சாம்பல் மண் கூறு. மண்ணில் புதைத்தாலும் அது மண் கூறாகும். மண்ணுடன் நீர் சேரும்போது மாமிசம், தசைப்பகுதி உண்டாகிறது. மண்ணுடன் நெருப்பு சேரும்போது தோல் உண்டாகிறது. தோல் தொடு உணர்ச்சியால் அனைத்தையும் அறியச் செய்கிறது. மண்ணுடன் காற்று இணையும்போது உடலில் நரம்புகள், எலும்புகள் உருவாகின்றன. மண்ணுடன் ஆகாயம் இணைந்து தலைமுடியை உருவாக்குகிறது.

நீர்

நீருடன் நீர் சேர்ந்து சிறுநீர் உருவானது. நீருடன் மண் சேர்ந்து உமிழ்நீர் (எச்சில்) உருவானது. நீருடன் நெருப்பு சேர்ந்து வியர்வை உருவானது. நீருடன் காற்று சேர்ந்து ரத்தம் உருவானது. நீருடன் ஆகாயம் சேர்ந்து சுக்கிலம் (விந்து) உருவானது.

நெருப்பு

நெருப்புடன் நெருப்பிணைந்து பசியை உருவாக்கியது. நெருப்புடன் மண் சேர்ந்து தாகத்தையும், நெருப்புடன் நீர் சேர்ந்து தூக்கத்தையும், நெருப்புடன் காற்று சேர்ந்து உடல்வலி, அயர்ச்சி, ஆயாசத்தையும், நெருப்புடன் ஆகாயம் இணைந்து உடல் சங்கமத்தையும் (தாம்பத்தியம்) உருவாக்கியது.

காற்று

காற்றுடன் காற்று சேர்ந்து வேகமாக ஓடும் செயலைத் தருகிறது. காற்றுடன் மண் சேர்ந்து நடக்கும் செயலைத் தருகிறது. காற்று, நீர் சேர்ந்து அமரும் தன்மையையும், காற்றுடன் நெருப்பு சேர்ந்து தத்தித் தடுமாறும் நிலையையும், காற்றுடன் ஆகாயம் சேர்ந்து படுத்திருக்கும் நிலையையும் தருகின்றன.

ஆகாயம்

ஆகாயத்துடன் ஆகாயம் சேரும்போது மோக உணர்வு உண்டாகிறது. ஆகாயத்துடன் மண் சேர்ந்தால் ஆசை உண்டாகிறது. ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேஷம், கோபம், பொறாமை போன்றவற்றையும், ஆகாயத்துடன் நெருப்பு சேரும்போது பய உணர்வையும், ஆகாயத்துடன் காற்று சேரும்போது வெட்கம், நாணம் போன்றவற்றையும் உருவாக்குகின்றன.

இவை புற உறுப்புகளில் ஐம்பூதங்கள் உண்டாக்கும் செயல்களாகும். இனி ஐம்பூதங் களும் உடலினுள் இருக்கும் அக உறுப்பு களில் ஒன்றுடன் ஒன்றுசேர்ந்து செய்யும் நிலைகளைக் காண்போம்.

மண்

மண்ணும் ஆகாயமும் இணைந்து பேச்சை உண்டாக்குகின்றன. மண்ணும் காற்றும் இணைந்து பாதங்களை இயக்குகின்றன. மண்ணும் நெருப்பும் இணைந்து செயல் வேகத்தைத் (அவசரம்) தருகின்றன. மண்ணும் மண்ணும் சேர்ந்து மலம், சிறுநீரை வெளியேற்றுகின்றன. மண்ணும் நீரும் இணைந்து குய்யத்தின் செயல்பாட்டைத் தருகின்றன.

நீர்

நீரும் ஆகாயமும் சேரும்போது ஓசை எழுகிறது. நீரும் காற்றும் சேரும்போது தொடு உணர்வு உண்டாகிறது. நீரும் நெருப்பும் சேரும்போது பார்வைத்திறன் கிடைக்கிறது. நீரும் நீரும் சேரும்போது உடலில் நீர்சக்தி ஏற்படுகிறது. நீரும் மண்ணும் இணையும்போது தசைப்பகுதி செயல்படுகிறது.

நெருப்பு

நெருப்பும் ஆகாயமும் சேரும்போது காதுகள் செயல்படும். நெருப்பும் காற்றும் சேரும்போது உடலின் அனைத்து பாகங்களும் செயல்படும். நெருப்பும் நெருப்பும் இணையும்போது கண்களும், நெருப்பும் நீரும் இணையும் போது நாக்கின் சுவையும், நெருப்பும் மண்ணும் இணையும்போது மூக்கும் (சுவாசம்) செயல்படும்.

காற்று

காற்றுடன் காற்றிணைந்தால் உடலின் அனைத்து பாகங்களும் செயல்படும். காற்றுடன் மண் சேரும்போது இதயம், உயிர்சக்தி செயல்படும். காற்றுடன் நீர் சேரும்போது உடலில் குதப்பகுதியும், காற்றுடன் ஆகாயம் சேரும்போது தொப்புள், குண்டலினி சக்தியும், காற்றுடன் நெருப்பு சேரும்போது தொண்டையும் செயல்படும்.

ஆகாயம்

ஆகாயமும் ஆகாயமும் இணையும்போது பார்வை, அறிவு செயல்படும். ஆகாயமும் காற்றும் சேர்ந்தால் தொண்டையும், ஆகாயத்துடன் நெருப்பு சேர்ந்தால் மார்பு உறுப்புகளும், ஆகாயத்துடன் நீர் சேர்ந்தால் மூக்கு, பித்தம் ஆகியவையும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இதயமும் செயல்படும்.

இவ்வாறு பிரபஞ்ச வெளியிலிருந்து காற்று, உணவு, நீர், வெப்பம் ஆகியவைமூலம் உடலினுள் செல்லும் ஐந்து பூதங்களின் சக்திகளும், உடலினுள்ளே இருக்கும் ஐம்பூத சக்திகளுடன் இணைந்து உயிரையும் சக்தியும் தந்து சரீரத்தை இயங்கச் செய்கின்றன. இதனால்தான் "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது' என்கிறோம்.

சட்டைநாதர்: ஆசானே, தங்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பதை விளக்கமாகக் கூறவேண்டும்.

அகத்தியர்: இந்தப் பிரபஞ்சவெளியில் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இடி, மின்னல், புயல், பூகம்பம் என அனைத்தும் பஞ்சபூதங்களால் உருவாக்கப்படுகின்றன. அனைத்து செயல்களும் மனிதன் முதலான எல்லாவற்றிலும் உணர்ச்சியாகவும் குணமாகும் உள்ளது என்பதே இதன் பொருளாகும்.

சித்தர் பெருமக்களே, இன்று இத்துடன் சபையை முடித்துக்கொள்வோம். சட்டை நாதரே, தங்களின் கேள்விக்கு நாளை தமிழ்ச் சபையில் விளக்கம் கூறுகிறேன்.

"செய்தமிழ் தனையறிந்த பதினெண் பேரை

செம்மையுடன் காண்பதற்கு மூலம் கேளு

சைதன்ய மானதொரு தன்னைப் போற்றி

சதாகாலம் ஓம் சிங் ரங் அங் சிங் என்று

மெய்தவறா பூரணமாய் உருவே செய்தால்

சித்தாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்

உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால்

உத்தமனே சகல சித்துக் குதவியாமே.'

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)