கடந்த பகுதியில் காளி வழிபாட்டைப் பற்றிப் பார்த்தோம், இனி நாம் பைரவர் வழிபாடு, லம்போதரன், குரு மற்றும் பூஜையின் ஆரம்ப வழிபாடுகளைப் பார்க்கலாம்.
இரண்டாவதாக பைரவரை வழிபடுமாறு பூஜைமுறை சொல்கிறது. பைரவரானவர் ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தில், ஆத்மஞானத்தை அடைய இருக்கும் தடங்கல்களை நீக்கி, ஆனந்தத்தில் நிலைத்திருக்கும் நிலையினை அருளும் ஒரு கடவுளாக உருவகப் படுத்தப் படுகிறார். பைரவம் என்னும் நிலையே எங்கும் வியாபித் திருக்கும் ஒரு பொருளாகவும், எல்லாவற்றிலும் ஊடுருவி நின்றாலும் எதனிலும் சம்பந்தப்படாமல், செயல்களில் ஒட்டாமல் இருக்கும் நிலையை யும் குறிக்கிறது.
"திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத...'
சாதகனுக்கு எந்த திசையிலிருந்து தடங்கல் வந்தாலும் அங்கு பைரவரின் அம்சம் நின்று அந்த தடங்கல்களைத் தடுக்கும்விதமாக இந்தப் பாடலில் அஷ்ட பைரவர் களாக அருண கிரிநாதர் உருவகப் படுத்துகிறார். மேலும் இந்த வரியில் த்ரிகடக என்னும் பதமே நாம் சற்று ஆராயவேண்டிய இடம், திரிபுர பைரவியின் மந்திரமான "ஹசைம் ஹஸகரீம் ஹசைம்' என்னும் மந்திரத்தை, பைரவர்கள் எட்டு திக்கிலிருந்தும் ஓத, அந்த மந்திரத்தின் தாளத்திற்கேற்ப பைரவியின் நடனம் இருக்கிறதென்று அருளாளர் இந்த வரிகளில் விவரிக்கி றார்.
இந்த மந்திரமானது இடை, பிங்கலை மற்றும் சுஷும்னா நாடியைக் குறித்து, பைரவர்கள் எட்டு திக்கிலிருந்தும் ஓதுவது, எப்போதும் மந்திர ஜெபத்தின் உணர்வுகளிலேயே மனது ஒன்றியிருப்பதையே குறிக்கிறது. இவ்வாறு மந்திர ஜெபம் செய்யும் ஒருவரின் மனது எப்பொழுதும் சாந்த மாக இருக்கும். அவ்வாறான சாந்த நிலையே ஆன்ம தியானத்திற்கு உகந்த ஒரு நிலையாக இருப்பதால், பத்ர காளி யுடன் பைரவரை வணங்கி மேல் செல்லும் முறையாக ஸ்ரீ வித்யா மார்க் கத்தை வகுத்து வைத்துள்ளனர் குரு பரம்பரையிலுள்ள மகான்கள்.
எந்தவொரு செயலிற்கு முன்னும் கணபதியை வணங்கி ஆரம்பிக்கும் மரபு இருப்பதை, அருளாளர் முதல் பாட்டிலேயே கடைப்பிடித்து, மேலும் பூஜைமுறையில் கணபதி வழிபாடு முதலில் இருக்கவேண்டுமென்று காட்டியிருக்கிறார். முதல் வரியில் "அத் திக்கு இறை' என்று சொல்வதை நாம் தேவசேனையின் இறைவனான முருகன் என்றும் பொருள் கொள்ளலாம். அதே போல், "முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை' என்னும் வரியை லலிதா சஹஸ்ரநாமத்தின் "காமேஸ்வர முகா லோக கல்பித ஸ்ரீ கணேஷ்வரா' என்ற நாமத்தின் பொருளாகக்கொண்டு, கணபதியை ஆராதிக்கும் வாரியாகவும் எடுத்துக்கொள்ள எதுவாக இருக்கும்படி முதல் வரியை அருளாளர் அமைத்திருக்கிறார்.
இங்கு கணபதியாகப்பட்டவர், சந்தோஷ மான மனோநிலையைக் குறிக்கும் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறார்,
அதற்கு ஆதாரமாக "பத்தித் திருநகை' என்னும் பதம் பயன்படுத்தப் படுகிறது, ஸ்ரீ வித்யா மார்க்கத்திலும் கணபதி ஆனந்த நிலையின் எல்லையைக் குறிக்கிறார். பயமில்லாமல் ஒரு சாதகன் எப்போதும் ஜெபத்தில் ஈடுபடும்பொழுது ஆனந்த நிலையை எய்துகிறான். அந்த நிலையை அடைய ஏதுவாக இருப்பது சக்தி உபாசனை யில் பத்ரகாளி, பைரவர் மற்றும் கணபதி. இந்த மூவரையும் முறையே பூஜை அறைக் குள் செல்வதற்குள் பூஜிக்கவேண்டும். அவ்வாறே முதல் திருப்புகழே அமைந்திருப்பது, அருண கிரிநாதர் உபாசனா தர்மத்தை அறிந்திருப் பவர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
இந்த மூன்று தெய்வங்களை வணங்கிய பின், சாதகன் குருவினை வணங்கி, அவரே ஆன்மஞானத்தின் வித்தை, சாதகனின் மனதில் பீஜ மந்திரங்கள்கொண்டு ஊன்றுகிறார் என்ற உண்மை புலப்படும்படியாக, "ஸ்வரூபன நிரூபண ஹேதவே ஸ்ரீ குருவே நமஹ' என்று பூஜிக்கப்படுகிறார். அருணகிரிநாதரும் இதே பொருளில் "முத்திக்கு ஒரு வித்துக் குருபர என ஓதும்' என்று, குருவாக வந்த முருகப் பெருமான் மந்திரம் ஓதி தம்மை ஆன்மிக வாழ்வில் தீக்ஷை செய்த விதத்தைப் பதிவு செய்திருக்கிறார். மேலும் 'குரு பர' என்னும் பதத்தைப் பயன்படுத்தி, முருகனே குரு பரம்பரையின் ஆதிகுருவாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ஸ்ரீ வித்யா மார்க்கத்தில் குரு பாதுகா மந்திரம் கூறி வழிபட்டே, பூஜையை ஆரம்பிக்க முடியும். அவ்வாறே இங்கும் குருவாக முருகனைக் கூறி, தீக்ஷையான செயலைக் கூறி, மந்திரத்தைக்கொண்டு வழிபடுகிறார் அருணகிரிநாதர். குரு பாதுகா மந்திரமே மஹாவாக்கியமான "தத்வமசி' என்ற பதத்தைக் குறிக்கிறது. இங்கு "த்வம்' சாதகனின் குருவையும், "தத்' பரமகுருவையும் (குருவின் குரு), "அசி' பரமேஷ்டி குரு வையும் (பரமகுருவின் குரு) குறிக்கும். இவ்வாறிருக்கும் குரு பரம்பரையாக முருகன் தானே இருப்பதைக் குறிக்கவே "குருபரன்' என்னும் ஒரு வார்த்தையில் இந்த தத்துவத்தை அடக்கியிருக்கிறார் அருணகிரிநாதர்.
கன்ட பூஜா
பூஜையின் ஆரம்பத்தில், மணிக்கு பூஜைசெய்வதே கன்ட பூஜா எனப்படுகிறது. இது எதற்காக என்றால், மணியோசை அல்லது அந்த நாதமானது ஓங்காரத்தில் பரப்ரஹ்மத்தோடு மனது ஒன்றுவதைக் குறிக்கிறது. சாதகன் வெளிப்புற பூஜையாக காரியங்கள் செய்தாலும் அவை யாவும் அவனை ப்ரஹ்மத்தின் அருகில் கொண்டுசெல்லும் செயலாகவே அமைகிறது.
இந்தத் தத்துவத்தை விளக்குமாறு கீழ்க்கண்ட திருப்புகழ் பாடல் அமைகிறது.
"காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே
ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்தி லந்த மருள்வாயே
தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.'
இங்கு காமியம் என்னும் சொல் ஆசையை மட்டும் குறிக்கவில்லை. நாம் உலகவாழ்வில் ஒரு ஆசையின் வெளிப்பாடாகவோ, ஒரு எண்ணம் ஈடேறவோ பல காரியங்களைச் செய்கிறோம். அதில் தெய்வங்களை பூஜிப்ப தும், வேண்டுதல்களை மனதில்கொண்டே! இதற்கு சான்றாக நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் பலனை எதிர்பார்த்தே. நவகிரகங்களை கோவில்களில்சென்று தரிசித்து பூஜை செய்வது, புத்திர பாக்கியம்வேண்டி நாக வழிபாடு, சந்தான கோபால் மந்திர ஜெபம் செய்வது, திருமணம் ஈடேற ஸ்வயம்வர பார்வதி, கந்தர்வ ராஜ பூஜை, ஹோமங்கள் செய்வது, எதிரிகள் மற்றும் கடனிலிருந்து விடுபட பைரவ மற்றும் முருக வழிபாடு செய்வது என்று, நாம் செய்யும் அனைத்து செயல்களும் ஒரு காமிய வழிபாடாகவே இருக்கிறது. ஆனால் பூஜை வழிமுறையோ நம்மை முக்தி மார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் முறையாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.
கண்ட பூஜை எவ்வாறு நம்மை நாத பிரம்மத்தில் லயிக்க வேண்டுமென்ற தத்துவத்தை வைத்திருக்கிறதோ அவ்வாறே இந்தத் திருப்புகழில் "காமியத்தில் அழுந்தி' என்னும் சொற்கள்மூலம் அருணகிரிநாதர் நம்மை பலன் எதிர்பார்த்து செய்யும் காரியங்களில் மனதை செல்லவிடாமல், "ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி' என்னும் வரிமூலம் நாதத்தில் மனது நிலைநிற்க அருளுமாறு கூறுகிறார். எவ்வாறு பூஜை செய்யும்பொழுது, மணிக்கு செய்யும் பூஜையின்மூலம் நாத தத்துவத்தை நிலைநிறுத்தி, ஆசையின் பொருட்டு ஒரு பூஜை செய்யவேண்டாமென்று கூறப் பட்டதோ, அதே பொருள்படுமாறு "காமியத்து அழுந்தி இளையாதே' என்னும் வரியையும், "ஓம் எழுத்தில் அன்பு மிகஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே' என்னும் வரிகளிலும் நாம் அறிய முடிகிறது. "ஓவியத்தில் அந்தம்' என்னும் பதத்தின்மூலம் தியான மார்க்கத்தை வலியுறுத்துகிறார் அருளாளர். ஓவியத்தில் அந்தம் என்ற வார்த்தைகள், தியான நிலையில் சகுன வழிபாட்டைத் தொடங்கினாலும், அதன் அந்தமான நிர்குண வழிபாட்டில் மனம் ஒன்றும் வரத்தைக்கேட்டு, தியானமே முக்திக்கு ஒரே மார்க்கம் என்று வலியுறுத்து கிறார்.
கண்ட (மணி) பூஜைக்கு அடுத்தபடியாக செய்யவேண்டியது, சங்கல்பமாகும். இந்த பூஜையை இன்னார், இன்ன தெய்வத் திற்கு, இன்ன காரியத்தை வேண்டி செய்கிறேன் என்றும், தம் சக்திக்கு ஏற்றவாறு அதை செய்வதாகவும் ஒரு உறுதி எடுத்துக்கொள்வதே சங்கல்பமாகும், இவ்வாறு உறுதி எடுத்துக்கொண்டபிறகு, அந்த பூஜையை உறுதி எடுத்துக் கொண்டபடியே செய்து முடிக்கவேண்டியது சாதகனின் கடமையாகிறது. உதாரணமாக, நாம் அர்ச்சனை செய்யும்பொழுது 108, 300, 1,000 நாமங்கள் கொண்டு அர்ச்சனை செய்வதாக சங்கல்பம் செய்தால், அதே எண்ணிக்கை கொண்டுதான் அர்ச்சனை முதலிய வழிபாடுகள் செய்யவேண்டும். 1,000 நாமங்கள் சங்கல்பம் செய்துவிட்டு வெறும் 16 நாமங்களை அதற்கு ஈடாக பூஜையில் செய்தால், பலனும் அதற்குத் தகுந்தாற் போல்தான் வரும். அதுமட்டுமல் லாமல் நாம் எடுத்த உறுதியிலிருந்து தவறுகிறோம்.
இந்த சங்கல்பம் செய்யும்பொழுது, நாம் நம்முடைய பெயர், நட்சத்திரம், ராசி, பூஜைசெய்யும் வருடம், இடம், திதி, யோகம், கரணம், ருது என்று காலக் கணக்கையும் சேர்த்துதான் சொல்வோம். இவ்வாறாக கால தேச வர்த்தமானத்தைச் சொல்வதே, அந்த வரையறையை தாண்டி பிரம்மத்தில் நிலைபெறவே. இந்த சங்கல்பத்தில் கூறும் இடம், காலம் போன்றவற்றை தாண்டி, இவற்றுள் எல்லாம் இருக்கும் பேருண்மையை அறிய அருள்வாயே என்று அருளாளர் "அதல விதல' எனத்தொடங்கும் பாடலில் உணர்த்துகிறார்.
"அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள்
விண்டுவென அங்கிபாநு.'
அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் ஆகிய ஏழு உலகங்களும், பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம் ஆகிய தேவர்கள் வசிக்கும் உலகங்களும்-
"அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு
நின்றதொரு சம்ப்ரதாயம்.'
ஏழு கடல்களும், எட்டு திக்குகளும், அங்கேயுள்ள மலைகளும், அக்னி, சூரியன், சந்திரன் ஆகியவர்களோடு சேர்ந்த மந்திரங்களும், வேதமும், அதனுள் சொல்லப்பட்ட தத்துவங்களும் என எல்லாவற்றினுள்ளும் இருக்கும் ஒரு பொருளை-
"உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனி-
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி
டும்படியை வந்துநீமுன்.'
என் உள்ளத்தில் எழுமாறு அஞ்ஞானம் அகன்று, என் இதயத்தில் அந்த அனுபவ ஞானம் வருமாறு நீயே அருள வேண்டும் என்று அருளாளர் வேண்டுகிறார்.
இவ்வாறு திருப்புகழில் வெளியில் தெரியாத தத்துவங்கள் மிகவும் விரிந்திருப்பதை நாம் மேலும் பூஜா தத்துவங் களின் வாயிலாகக் காணலாம்.
(தொடரும்)