கடந்த பகுதியில் திருப்புகழும் ஸ்ரீவித்யா பூஜையின் கன்ட (மணி) பூஜைவரையிலும் பார்த்தோம், இந்தப் பகுதியில் பூஜையின் மற்ற அங்கங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆசன பூஜை
சங்கல்பம் முடிந்தவுடன் சாதகன் ஆசனத்தை விரித்து, அதனை "சௌ' என்னும் மந்திரத்தால் உருவேற்றி சுத்தப்படுத்தி, அமரவேண்டும். இவ்வாறாக அமர்ந்திருக்கும் நிலையில் சத்வ குணம் நிரம்பியவனாய், மனதை ஒருநிலைப் படுத்தி பூஜைக்குத் தயாரானவுடன், "ஆதார சக்தி கமலாசநாய நமஹ' என்று ஆசன பூஜையை ஆரம்பித்துச் செய்ய வேண்டும். இங்கு "ஆதார கமலாசனம்' என்று சொல்வது, குண்டலினி சக்தி இருக்கும் மூலாதாரம், பயணிக்கும் மற்ற ஆதாரங்களான ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விஷுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்களைக் குறிக்கும். இவை முறையே ப்ரித்வி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் மற்றும் மனத்தைக் குறிக்கும் சக்கரங்களாகவும், பஞ்சபூதக் கலவையோடு மனம் சேர்ந்து இந்த ஆதாரங்களை உயிர்ப்பிக்கிறது, மேலும் இந்த ஆதாரங்கள் ஜீவாத்மாவாக விளங்கும் சுஷும்னா நாடியினாலும் ஒளி சேர்க்கபடுகிறது. இடா நாடி சூரியனாகவும், பிங்கலை நாடி சந்திரனாகவும், மேற்கூறிய ஆறு ஆதாரங்களுடன் சேர்ந்து, அஷ்டமூர்த்தி வடிவாக, பரமேஸ்வரன் விளங்கும் இடங்களாக இருப்பதால், ஆசனத்தில் அமர்வதென்ற செயலே, பரமேஸ்வரனின் தரிசனத்தை இந்த ஆதாரங்கள் வழியாக அடைவதையே குறிக்கிறது, இவ்வாறு ஆசன பூஜையே சாதகனை இறைநிலை அடைய ஏதுவாக இருப்பதை நாம் காணமுடிகிறது. இந்த பூஜை தத்துவத்தை விளக்குமாறு "மூளும்வினை சேர' என்னும் திருப்புகழை நாம் இனி பார்க்கலாம்.
"மூளும்வினை சேர மேல்கொண்டிடா ஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி யதிபார...'
வினைகள் என்னைச் சூழ்ந்து, பஞ்சபூதங்கள் வடிவான இந்த உலகில், அவைகளால் உண்டான மயங்களினால், அறிவு மூடப்பெற்று அறமான செயல்கள் எதுவும் செய்யாமல்.
"மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற
மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற துளதாகி..:
மாயையான உலக வாழ்வுமீது அதிக ஆசைகொண்டு, தேவர்களும் தேடிக் கண்டுகொள்ளமுடியாத, மெய்யறிவி னாலும் ஆராய்ச்சியாலும் மட்டுமே அறியமுடியும் பொருளாய் நின்ற உன்னை, ப்ரஹ்மத்தை அறியும் அதி உயர்ந்த யோகத்தைப் பின்பற்றி மனம் அசையாது நின்று, உன்னோடு சேர்ந்து...
"நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன லூடு போயொன்றி வானின்க
ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப அமுதூறல்'
தினமும் அதிக சக்திகொண்ட பிராணனைக்கொண்டு, மூலாதாரத்தின் நெருப்பின்மீது அந்த பிராணனைப் பொருத்தி, ஆகாயத்தில் இருக்கும் சந்திரனின் அமுத கலையில் பெருகும் பொழிவை நாடி...
இந்த வரிகளில் அருணகிரிநாதர், குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாக தம், விசுத்தி, ஆக்ஞா சக்கரங்களைக் கடந்து, சோமச் சக்கரத்தில் பொருந்தி, அங்கிருந்து பெருகும் அமிர்தப் பொழிவை நாள்தோறும் ருசித்து, அதற்கும் மேலுள்ள ஆனந்த வெளியில் நிலைநிற்க வேண்டும் என்றும்-
"நாடியதன்மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே'
அவ்வாறு ஆனந்த வெளியில் நின்றால் மட்டும் போதாது; அங்கு நீயும் நானும் வேறுவேறாக இல்லாத, அத்வைத நிலையை உணரும் நிலையை ஒருநாள் தருவாயே.
"காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொனல் வாயு'
மேலும், இந்த நிலையை உணர்ந்த அருளாளர் பஞ்சபூதங்களாகவும், ஆறு ஆதாரங்களிலும் அம்பிகை இருப்பதைப் பின்வரும் வரிகளில் கூறுகிறார்.
ஆலகால விடத்தை உண்டவள், வேதம் சொல்லும் சரஸ்வதி, மதங்க முனிவரின் மகளாய் வந்தவள், மாதங்கி என்ற பெயர் கொண்டவள், நீலநிற தாரா என்ற சக்தியாகவும், நெடிய உருவம்கொண்ட காளியாகவும் வந்தவள், மார்க்கண்டேயரைக் காப்பாற்ற காலனைத் தன் இடது காலால் உதைத்த சாமுண்டி. இவளே பார், நீர், தீ, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய அனைத் திலுமுள்ள சக்தியாக இருப்பவள்.
"காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து தொழுமாது'
அவளே சஹஸ்ராரத்தில் ரிஷப வாகனத் தில் சிவனோடு இடபாகத்தில் அமர்ந்து வரும் மங்கையாகவும், சிவ- சக்தி ஐக்கியத்தைக் கூறும் விதமாகவும், பூஜையில் ஆசன பூஜையே சாதகன் ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் சேர்க்கும் விதமாக பாவிக்க ஏதுவாக இந்த வரிகளில் அருளாளர் உணர்த்துகிறார்.
இவ்வாறாக இருக்கும் அம்பிகையே காளியாகவும், சிவனின் நடனத்திற்கேற்ப ஆடுபவளாகவும், நித்தம் அன்புடன் பக்தர்கள் வந்து தொழும் அன்னையாகவும் இருப்பவள்.
"வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்
வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை யிளையோனே'
இவளே, இந்த படைப்பை முழுதுமாளும் துளசி மாலைகள், ஒளி பொருத்திய மணிகள் அணிந்த திருமாலின் பின்னே தோன்றியவள், அவ்வாறான உமை, மாதரசி தந்த சிவபெருமானின் இளைய மகனே என்று, சிவசக்தி ஐக்கியத்தின் முடிவே ஜீவ பிரம்ம ஐக்கியம். அதன்விளைவே முருகன் எனவும், பர பிரம்மத்தின் அனுபவமே முருகானுபவம் அல்லது கந்தர் அனுபூதி என்றும் அருளாளர் இந்த இடத்தில் கூறுகிறார்.
இவ்வாறாக ஆசன பூஜை என்பதே சாதகனைக் கரைசேர்க்க வேண்டுமளவில் செய்யவேண்டியதன் அவசியத்தை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
த்வீப பூஜை
இங்கு த்வீபம் அல்லது தீவு என்பது உடலையும், உடலுள் உறையும் ஜீவாத்மாவான சிவத்தையும் குறிக்கிறது. க்ஷேத்ரக்ஞன் என்று பகவத் கீதையில் சொல்லப்படும் ஆன்ம தத்துவமும் இதையே குறிக்கிறது. இவ்வாறாக இருக்கும் ஜீவனே, த்வீபநாதன் என்று அறியவேண்டும். இந்த பூஜையானது சூரியனுடைய பன்னிரண்டு கலைகளோடு சேர்த்துச் செய்யவேண்டும். ஆசன பூஜையில் ஜீவ ப்ரஹ்ம ஐக்கியத்தைப் பார்த்தபின்பு, இந்த இடத்தில் இது வெறும் சூரியனின் பன்னிரண்டு கலைகளுக்கான பூஜையென்று கொண்டாடமுடியாது, சஹஸ்ரார சக்கரத்திற்கு பன்னிரண்டு அங்குலத்திற்கு மேல் ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியம் ஏற்படுவதை மனதில் இருத்துவதே இந்த பூஜையின் தத்துவமாகும்.
இதற்கு ஆதாரமாக "நாடித் தேடி' என்ற திருப்புகழை நாம் பார்க்கலாம்.
"நாடித் தேடித் தொழுவார்பால்
நானத் தாகத் திரிவேனோ
உன்னை நாடி தேடி தொழுவார் தம் நான் அன்புடையவனாக இருக்க மாட்டேனோ'
"மாடக் கூடற் பதிஞான
வாழ்வைச் சேரத் தருவாயே'
மாடக்கூடல் என்று சொல்லப்படும் மதுரையின் ஞான வாழ்வை சேர மாட்டேனோ.
இங்கு மதுரை என்ற பதியே துவாதசாந்தம் என்று கூறப்படும். அம்பிகையை பரமேசன் வலியவந்து ஆட்கொண்ட இடமாதலால் அதுவுமொரு காரணமாக இருக்கிறது, மேலும் சக்தியின் கோலோச்சும் இடமாக இருப்பதும் தந்திர சாஸ்திரங்களில் மதுரையம்பதி தனக்கு இவ்வாறான பெயர் வரக் காரணமாக அமைகிறது.
"பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத தருள்வோனே'
தமிழால் பாட ஆசையோடு கேட்பவனே, பால்போலும் தேன்போலும் அருள்வோனே. இங்கு சூட்சுமமாக பாடல் விசுத்தியையும், காதல் அனாஹதத்தையும், பாலும் தேனும் மணிப்பூரகத்தையும் குறிக்கின்றன.
"ஆடற் றோகைக் கினியோனே
ஆனைக் காவிற் பெருமாளே'
ஆடும் மயிலிற்கு இனியோனே என்ற இடம் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைக் குறித்து, கடைசியாக ஆனைக்காவு என்ற இடமான திருவானைக்காவில் வாழும் பெருமானிடம் வேண்டுகிறார். ஆனைக்காவு என்ற பதம் மூலாதார சக்கரத்தையும் குறிக்கிறது, அதற்குக் காரணம், ஆனைக்காவு என்ற பதம் யானை இருக்கும் இடம் அல்லது கோவில் எனவும் கொள்ளலாம், மூலாதாரச் சக்கரத்தின் பிரதான தெய்வமாக கணபதி இருப்பதும், இந்தப் பாடல் ஆறு ஆதாரங் களோடு சேர்த்து துவாதசாந்தத்தையும் குறிப்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
தேஹ ரட்சை
பூஜைக்கடுத்த படியாக இருக்கும் செயல் தேஹ ரட்சை எனப்படும், உடலை பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்குமாறு செய்வதே ரட்சை எனப்படுவது. பிரம்மத்தை நோக்கி செல்லும் பயணத்தில் இடையூறுகள் இல்லாமல் இருக்கவும், தியான நிலையில் தடங்கல்கள் மற்றும் இடையூறு இல்லாமல் முன்னேறவும்தான் இந்த செயல் செய்யப்படுகிறது. இங்கு சாதகன் தன்னை நெருப்பு வளையத்திற்குள் இருப்பதுபோல நினைத்துக்கொள்வதும், திக்பந்தன மந்திரங்கள்மூலம் பத்து திசைகளிலிருந்து வரும் இடையூறுகளை நிறுத்திவைப்பதும், உடலை ந்யாஸங்கள் மற்றும் அஸ்திர மந்திரம் கொண்டு சுத்தப்படுத்துவதும் தேஹ ரட்சை எனப்படுகிறது.
இனி திருப்புகழில் இவ்வாறான பூஜை முறைகளின் தத்துவம் எவ்வாறு குறிப்பிடபட்டுள்ளன என்று பார்க்கலாம். "சினத்தவர் முடிக்கும்' என்ற திருப்புகழில், அருணகிரிநாதர் "திருப்புகழே சாதகர்களை நெருப்பாக இருந்து காக்கும்' என்று கூறுகிறார்.
"சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் சினமாக'
சினம், பகை, ஏளனம் ஆகிய தீய எண்ணங்களையும்-
"சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்'
வீண் பழிச் சொற்களால் வரும் எண்ணங்களால் நேரும் துன்பங்களை திருப்புகழ் நெருப்பாக இருந்து எரித்துக் காக்கும்.
"நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்'
நினைத்ததை எல்லாம் அளிக்கும், சாதகர்கள் மனதை உருக்கி ஆன்மிக வாழ்வில் நல்ல நிலைகளை அளிக்கும், அசுரர்களின் கருவறுக்கும் (அசுரர்கள் என்பது இங்கு தீய எண்ணங்கள், பதிவுகள்), அவை மீண்டும் மனதில் எழாமல் பார்த்துக் கொள்ளும்.
"நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்'
இவ்வாறு இருக்கும் திருப்புகழை ஓதினால், அது குண்டலினி நெருப்பிற்கு நெய்யாக இருந்து அதனைத் தூண்டி, கிரந்திகள் எனப் படும் முடிச்சுகளை (பொருப்பு) இடித்து, நல்வழிப்படுத்தும் திருப்புகழை ஓதும் செயல் தருவாய் என்று, தேஹ ரட்சைத் தத்துவத்தை இந்தப் பாடலில் அமைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.
திக்பந்தனம் என்ற, திசைகள் அனைத் திலுமிருந்து வரும் இன்னல்களைத் நீக்கும் வழியைப் பின்வரும் கந்தர் அலங்காரப் பாடலில் நாம் காணமுடியும்.
"தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத்
தனிவிடில் நீ வடக்கிற் கிரிக்கப்
புறத்துநின் றோகையின்
வட்டமிட்டுக்கடற்கப் புறத்துங்
கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்.'க்கப் புறத்துந் திசைக்கப்
புறத்துந் திரிகுவையே.'
(தொடரும்)