டந்த பகுதியில் திருப்புகழும், ஸ்ரீ வித்யா பூஜையின், திக் பந்தனம் வரையிலும் பார்த்தோம். இந்தப் பகுதியில் பூஜையின் மற்ற அங்கங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பூஜையின் தத்துவம்

திக்பந்தனம் முடிந்தபின்பு, பூஜைசெய்யும் சாதகன் தானும் அந்தப் பூஜை செய்யும் தெய்வமும் வேறுவேறல்ல என்ற நிலையில் அமர்ந்து பூஜையை ஆரம்பிக்கவேண்டும். இந்த பாவனையே சாதகனை ஒருநாளில் சிவ சாயுஜ்ய நிலைக்குக் கொண்டுசென்று விடுகிறது, பாவனையை மையமாக வைத்தே ஸ்ரீ வித்யா மார்கத்தில் பாவனோபநிஷத் என்ற உபநிஷத், சாதகர்களை அம்பிகை யிடம் அழைத்துச்செல்லும் ஒரு கருவி யாகவும், முக்திக்கு வழிகாட்டும் சாதன மாகவும் இருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா வும் "யத் பாவம் தத் பவதி' என்ற வாக்கியத் தின்மூலம் இதையே உணர்த்துகிறார். ஆகையால் பாவனையென்பது பூஜையின் போது மிகவும் முக்கியமாகப் படுகிறது.

அருணகிரிநாதர் "மூளும்வினை சேர' என்ற திருப்புகழில் இதே கருத்தை முன் வைக்கிறார். நாம் அதை பின்வருமாறு காண்போம்.

Advertisment

"அண்டர் தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற

மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற... துளதாகி'

தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு அரிதாகிய பொருளாகி, எல்லா இடத்திலும் அறிவதற்கு இசைவாக அமைந்த பொருளாகி நிற்கும் உன்னை-

Advertisment

"நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட

வாசியன லூடு போயொன்றி வானின்க

ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப... அமுதூறல்'

தினமும், அதிவேகமாகக் காற்றைக் (பிராண வாயுவை) கொண்டு, மூலாதாரத்தின் கனல் மேலெழ, வாசியை (பிராண வாயுவை) அதனோடு சென்று பொருத்தி. அங்கேயே அசையாமல் நின்று-.

"ஆகாயத்தில் இருக்கும் சந்திரன்

தன் அமிர்தகலையைப் பொழிய,

அந்த பொழிவை நாடி

நாடியதன்மீது போய்நின்ற ஆநந்த

மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி

நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற... தொருநாளே'

அந்த அமிர்தப் பொழிவையும் தாண்டி, அதற்குமேலுள்ள ஆனந்த வெளியில் சென்று, அங்கு நீவேறு நான் வேறு என்ற நிலையை ஒருநாள் தருவாயோ.

இந்த வரிகளில் அருணகிரிநாதர், சாதகன் தன்னுடைய உடல் தாண்டி, பிராண வாயுவின் உதவியுடன், குண்டலினி சக்தியினை எழுப்பி, சோமசக்கரத்தைத் தாண்டி, சஹஸ் ராரத்தில் அத்வைத அனுபவம் ஏற்படுவதையும் குறித்து, ஸ்ரீவித்யா ஆராதனா முறையில் தத்வ சோதனம் செய்து சாதகன் திவ்ய தேகம் கொண்டு அம்பிகையை ஆராதிக்கும் நிலையினையும் இந்த வரிகள்மூலம் பொருந்தி வருவதை நாம் காண முடிகிறது.

vv

லலிதா சஹஸ்ரநாமத்தில் "சுதா சாரபி வர்ஷிநா', "ஷட் சக்ரோபரி ஸம்ஸ்திதா', "சஹஸ்ராராம்புஜா ரூடா' போன்ற நாமங்கள் இந்தப் பூஜை யின் பாவனையிலியே வரவேண்டும் என்பதை சாதகனுக்குத் தெளிவு படுத்தவே, பூஜையில் சாதகனே சிவம் என்கிற பாவனையைக்கொண்டு பொருத்தியிருக்கி றார், தந்திர சாஸ்திரத்தை வகுத்த சிவப்பரம் பொருள்.

அஞ்சலி பூஜையின் அடுத்த அங்கமாக, ஒன்பது ஆவாரணங்களிலும் உள்ள யோகினிகளுக்கு மொத்தமாக அஞ்சலி செலுத்தும் செயல் சொல்லப்படுகிறது. இங்கு யோகினிகள் என்று சொல்லப்படும் தேவதைகள், சித்தத் தின் பல்வேறு நிலைகளாக உருவகப்படுத்தப் படுகிறார்கள். சித்தத்தின் சாதாரண நிலை யிலிருந்து மிகவும் உயர்ந்த அல்லது தெளிவு படுத்தப்பட்ட நிலையினை அடைவதே பூஜையின் லட்சியம். எவ்வாறு ஒரு பாடத் தில் என்ன படிக்கப் போகிறோமென்று முதலிலேயே தெரிந்து அதனை கற்கிறோமோ, அதே போல் சித்தத்தின் முதல் நிலையில் தொடங்கி எங்கு செல்லவேண்டுமென்று தெரிந்து கொண்டு அடுத்த செயல் செய்வதே இந்த பூஜையின் தத்துவம். இந்த யோகினிகளையும் அவர்களுடைய நிலைகளையும் நாம் பின்வருமாறு காண்போம்.

ப்ரகட யோகினி- விழிப்பு நிலை.

குப்த யோகினி- கனவு நிலை.

குப்ததர யோகினி- ஆழ்ந்த உறக்க நிலை.

சம்பிரதாய யோகினி- கடவுளை பற்றிய தேடலின் துவக்கநிலை.

குலோதீர்ன யோகினி- குருவை நாடும் நிலை.

நிகர்ப யோகினி- குருவின் உபதேசம் அடைந்த நிலை.

ரஹஸ்ய யோகினி- உபதேசத்தை மனதில் இருத்தி விசாரம் செய்யும் நிலை.

அதிரஹஸ்ய யோகினி- குருவின் உபதேசத்தின் பொருள் உணர்ந்து எப்பொழுதும் அந்த பொருளையே விசாரம் செய்யும் நிலை.

பரபராத்தி ரஹஸ்ய யோகினி- சவிகல்ப சமாதி நிலை

இந்த நிலைகளைக் கடக்க, பெரும்பாலும் சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற பாதைகள்மூலம் சித்தத்தின் கடைசி நிலையான கடவுள் நிலையினை அடைய முடியும் என்று சாஸ்திரங்களும் புராணங் களும், நமக்கு ஏற்கெனவே கூறிய செய்திகள் மூலம் அறிகிறோம். எந்த மார்க்கம் எடுத்தாலும் கடைசியில் ஞானம் அந்த மார்க்கத்தில் ஏற்பட்டு இறைதரிசனம் கிட்டுமென்பது நமக்கு பெரியோர்கள் கூறிய கருத்து. அருணகிரிநாதரும் இந்த நிலைகளைப் பற்றி தம் திருப்புகழில் பின்வருமாறு கூறுகிறார்.

"சரியையாளர்க்கும் அக் கிரியையாளர்க்கும் நல் சகல

யோகர்க்கும் எட்ட அரிதாய'

சரியை, கிரியை மற்றும் எல்லாவிதமான யோக மார்க்கங்களில் ஈடுபடுபவர்களுக்கும் எட்டாத- (இங்கு பல்வேறு யோகங்கள் என்று சொல்வது பல்வேறு மதங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளை அடையும் மார்க்கங்களையும் குறிக்கும்) அரிய பொருளாக-

"சமய பேதத்தினுக்கு அணுக ஒணா மெய்ப் பொருள் தரு பராசத்தியின் பரமான'

சமயங்களில் கூறப்பட்டுள்ள வழி களாலும் அணுகமுடியாத, சமயங்களில் பேதம் பார்த்தல் அல்லது என் மார்க்கமே சிறந்த மார்க்கம் என்று சொல்பவர்களுக்கும் அணுகமுடியாத, ஒரே மெய்ப்பொருளைக் காண்பிக்கும் பராசக்தி, தன்னிலும் பரமான சிவனோடு தாம் ஒன்றியிருக்கும் நிலையினை-

"துரிய மேல் அற்புதப் பரமஞானத் தனிச் சுடர் வியாபித்த' ...

துரிய நிலை தாண்டி, துரியாதீத நிலையில், சிவமே எங்கும் நிறைந்த ஓர் ஒளியாக இருப்பதை, ஜாக்கிரதை, ஸ்வப்னம், சுஷுப்தி ஆகிய நிலைகளைத் தாண்டி அறிந்துகொள்ள-

"நல் பதி நீடு துகள் இல் சாயுச்சியக் கதியை'.

அந்த இடமானது, எந்த ஒரு களங்கமும் இல்லாத ஒரு இடமாக இருப்பதும்- (இங்கு நீடு துகள் என்பது, பல ஜென்மங்களின் கர்ம வினைகள் ஒடுங்கிய அல்லது முற்றுப்பெற்ற நிலையினைக் குறிக்கிறது) அவ்விடம் ஜீவ ப்ரஹ்ம ஐக்கிய நிலையினை-

"ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று

அடைவேனோ'

என்றும் முடிவில்லாத, சொல்ல ஒண்ணாத நான் எப்போது அடைவேனோ-

இவ்வாறு இந்த திருப்புகழில்

அருணகிரிநாதர், யோகினிகளாக வகைப் படுத்தப்பட்ட அத்துணை நிலைகளையும் கடந்து, சவிகல்ப சமாதி நிலையினையும் தாண்டி, நிர்விகல்ப சமாதி நிலை அருளுமாறு வேண்டுகிறார்.

இதே கருத்தினை "தங்க மிகுந்த முலைக்க டாமலை' என்ற திருப்புகழில் பின்வரும் வரிகளில் அருணகிரிநாதர் பதிவு செய்கிறார்.

"மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி

செங்கை முடிக்கவே அருள்

வந்து தரும்படி நித்தமாடிய பெருமாளே'

மந்திரம், தந்திரம் ஆகிய மார்க்கங்களில் முதிர்ச்சிபெற்று, முக்தி நிலைக்கு எய்தும் யோகிகள் அஞ்சலிசெய்து தங்களின் கைகளைக் கூப்பி வணங்கவே, அவர்களுக்கு அருள்தர தாமே வந்து அவர்கள்முன் ஆனந்த நடனத்தை (ஆனந்த நிலையைத் தந்தருளிய) ஆடிய பெருமாளே.

பூத சுத்தி

பூத சுத்தி என்பது, பூஜைக்கு முன்பாக சாதகன், தன்னுடைய உடலின் பல்வேறு பாகங்களில் மந்திரங்களைக்கொண்டு தெய்வ சக்தி உடலுள், உள்ளத்தில் நிறைந் திருப்பதை உணரவேண்டி, மந்திர பூர்வமாக, தெய்வங்களை தன் உடலில் நிலைநிறுத்தச் செய்வதே பூதசுத்தி எனப்படும். இந்த செயலே ந்யாஸம் என்றும் வழங்கப்படும், ந்யாஸம் என்றால் நிலை நிறுத்துவது என்பது பொருள். உடல், மனம், செயல் ஆகியவற்றை ஓரிடத்தில் நிறுத்துவதற்குத் துணையாக இருப்பதே ந்யாஸம் ஆகும்.

பூஜையில் அமரும் சாதகன் தன் உடலை, "ஹ்ர: அஸ்த்ராய பட்' என்ற மந்திரத்தின்மூலம் சுத்தி செய்யவேண்டும். பிரபஞ்சம் முழுவதுமே ப்ரஹ்ம மயம் என்ற எண்ணத்தை சாதகனின் மனதில்கொண்டு வரவே இந்த மந்திரம் பயன்படுத்தபடுகிறது.

இங்கு அஸ்திரம் என்பது, அஞ்ஞானத்தை அழித்து, சாதகனை சாயுஜ்யம் நோக்கிச் செல்லும் எண்ணமே என்பதைச் சொல்லவும், ஹ்ர: என்ற சொல் ஹ், அ, ர, அ என்று நான்காக விரிந்து, நான்கு வேதத்தையும் குறிக்கிறது.

நான்கு வேதங்களின் மகா வாக்கியங் களான, "அஹம் ப்ரஹ்மாஸ்மி, தத்வமஸி, அயமாத்மா ப்ரஹ்மா, பிரஞ்ஞானம் ப்ரஹ்மா' ஆகியவற்றின் சாரமாகவும், எவ்வாறு இவையனைத்தும் ஒரே குறிக்கோளை அந்த ப்ரஹ்ம ஞானத்தை அடைவதென்று இருக்கிறதோ, அவ்வாறே அந்த எண்ணத்தைப் பிரதிபலித்து ஞானத்தை அடைய அஸ்திர சப்தம்கொண்டு, சாதகனை அழைத்துச்செல்கிறது.

அதாவது இவையனைத்தும் சாதகனை உடலிலேயே, உள்நோக்கிப் பார்க்கச்செய்யும் ஒரு குறியீடே தவிர, வெளியில் செலுத்தும் அஸ்திரமல்ல.

அருணகிரிநாதரும் "உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்' என்ற திருப்புகழில் கடைசி வரியில் முருகன் பத்மாசனத்தில் அமர்ந்து வேல் செலுத்தியதாக சொல்வார். போர்க்களத்தில் பத்மாசனம்கொண்டு சண்டை செய்வது புதிதாக இருந்தாலும், சற்றே ஆராய்ந்தால், பத்மாசனம் கொண்டமர்ந்து அஸ்திர மந்திரம் பிரயோகம் செய்து, ப்ரஹ்ம ஞானத்தை அடைய அஞ்ஞான இருளை அழிப்பதால், பின்வரும் வரிகளில் முருகன் இந்த காரியத்தைச் செய்ததாக குறிப்பிடுகி றார்.

"அங்க நான் மறை சொ(ல்)லும்

பங்கயாசனம் இருந்து அம் கை

வேலு உறவிடும் பெருமாளே'

அங்கங்களைக்கொண்ட, அங்கங்கள் பலகொண்ட வேதங்களைச் சொல்லும் பத்மாசனத்தில் இருந்து, வேலைத் தம் கையிலிருந்து செலுத்தும் பெருமாளே என்று கூறுவது, ஒரு சாதகன் பத்மாசனத் தில் அமர்ந்து அஞ்ஞானத்தை அழிக்க அஸ்திர மந்திரம் பிரயோகம் செய்வது போலும் இருப்பது நாம் சிந்திக்க வேண்டியது.

(தொடரும்)