டந்த பகுதியின் தொடர்ச்சியாக, தேவேந்திர சங்க வகுப்பையும், அருணகிரி நாதரின் முதல் பாடலையும், தத்துவ விளக்கங்களையும் நாம் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

இந்திரியங்களின் செயல்களால் வரும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் நேரும் துன்பம், நல்வினை மற்றும் தீவினையெல்லாம் கெட்டழியுமாறு வரமளிக்கும் அம்பிகை, காலாந்தரி. இவள் காலங்களை கடந்து நிற்பவள், சிவகாம சுந்தரியாக பிரளய காலத்தில் சிவனின் தாண்டவத்தில் படைப்பு லயமாவதைப் பார்ப்பதையும் குறிக்கும். எல்லா உயிர்களின் இதயக் குகையிலும் இருப்பவள், கருப்பு வண்ண மையைப் பூசியிருப்பவள்.

நஞ்சை உமிழும், எரிகின்ற நெருப்பைப் போன்ற நிறைய பெரிய படங்களைக் கொண்ட, உயர்ந்த ரத்தினங்களைக்கொண்ட (அல்லது) நாக ரத்தினங்கள் கொண்ட படத்தையுடைய, சர்ப்பங்களை தம் கைகளில் வளையல்களாக அணிந்திருப்பவள். மரகத நிறத்தவள். இந்த இடத்தில் தசமகா வித்தையின் மாதங்கியின் குறிப்பு வருகிறது. மேலும் பொன்வண்ணமான ஆடைகளை அணிபவள்- காசாம்பரி - பொன்வண்ண ஆடை- கஞ்சுளி- சட்டை என்னும் இடங்களில் மற்றுமொரு தசமகா வித்ததையான பகளாமுகி தேவியின் உருவம் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

"கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி

Advertisment

கவுரிக மலைகுழை காதார்ந்த

செழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு.' (11)

"கரைபொழி திருமுக கருணையி லுலகெழு

Advertisment

கடனிலை பெறவளர் காவேந்திய

பைங்கிளி மாசாம்பவி தந்தவன்.' (12)

திருவடிகளை நினையாதவர்களின் உயிரையுண்ணும் பைரவி, அவளே பொன்வண்ணமான கௌரி; கமலை என்று சொல்லப்படும் தாமரைமீது அமர்ந்துள்ள திருமகள்; செங்கழுநீர் தோய்ந்த மலர்களை மாலையாக உடையவள்; குழைகளை அணிந்த காதுகளை உடைய தேவி.

இந்த வரியில் இரண்டு தசாமகா வித்தை ஸ்வரூபங் களான பைரவி மற்றும் கமலாத்மிகா ஆகிய தேவதா ஸ்வரூபங்களை உணர்த்தியிருக்கிறார் அருளாளர். இங்கு பைரவியைப் பற்றிப் பார்க்கும்பொழுது நாம் சற்று அபிராமி அந்தாதியின் 77-ஆம் பாடலைப் பார்க்கவேண்டும்.

"பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்

உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா

வயிரவி, மண்ட-, மாலினி, சூலி வராகி என்றே

செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.'

அபிராமி பட்டர் அம்பிகையைப் பாடும் பொழுது, உயிரவி உண்ணும் உயர்சண்டி , காளி என்று கூறுகிறார். அருணகிரிநாதரோ உயிரவி உண்ணும் பைரவி என்று போற்றுகிறார்.

இங்கு இருவருமே அம்பிகையை நினையாதவர் உயிர் போகுமென்று கூற இரண்டு காரணங்கள் உண்டு. 1. விஞ்ஞான பைரவ தந்திரத்தின் சாரத்தில் பார்த்தல், மூச்சுப் பயிற்சிகளுடன் சேர்ந்த தியான முறைகளை காஷ்மீர சைவத்தின் அடிப்படையில், கடவுளை அல்லது பைரவரை உணர்வதற்கு 112 தியான முறைகள் வகுக்கபட்டிருக்கின்றன, இதில் ஏதாவதொரு முறையில் கடவுளை நினைந்து முக்தியடைவது இலக்காகிறது. பைரவரின் மனைவி பைரவி என்று போற்றபடுகிறாள். இங்கு மூச்சு ஓடும் சத்தமும், அந்த பயிற்சிகளால் குண்டலினி சக்தி மேலெழும் ஓசையே, அவளின் கணைக் கழலொலி என்று புரிந்துகொள்ளவேண்டும், இவ்வாறு யார் அவளை நினைக்கவில்லையோ அவர் களின் உயிரை அடுத்த பிறவிக்குத் தயார் செய்கிறாள் பைரவி.

2. மேலும் அபிராமி அந்தாதியை ஒப்பிட்டு நோக்கினால், அம்பிகை காளியாக மது கைடப வதம் செய்து பிரம்மனைக் காத்தது, மகாலட்சுமியாக மகிஷாசுரனை வதம் செய்தது, சண்டியாக சண்ட முண்டர்களை வதம் செய்தது, மகா சரஸ்வதியாக சும்ப நிசும்பர்களை வதம்செய்து தேவர்களைக் காத்த செயலையும் இந்த ஒரு வரி குறிக்கும். இவ்வாறாக தீயவற்றிலிருந்து தம் பக்தர்களை அம்பிகை காப்பாற்றவும் பைரவியாக உருவெடுக்கிறாள்.

இப்படிப்பட்ட அன்னையானவள் கௌரியாக (பொன் வண்ணம் கொண்ட பார்வதி) கயிலையில், கமலையாக அலை கடலிலும் அமர்ந்திருக்கிறாள். இங்கு பொன்வண்ணத்தவள், அலைமகள் என்று சொல்வது கடைசி மகா வித்தையான கமலாத்மிகா தேவியைக் குறிக்கும், மேலும் வேதத்தில் வரும் ஸ்ரீ சூக்தத்தில் வரும் வரிகளான "ஹிரண்ய வர்ணாம் ஹரினீம்,' "சுவர்ண ரஜதஸ்ர்ஜாம்,' "ஹிரண்மயீம்' போன்ற குறிப்புகளைக்கொண்டு மகாலட்சுமி யும் கமலாத்மிகாவும் வெவ்வேறு ரூபங் களல்ல என்று இந்த வரியில் அருளாளர் உணர்த்துகிறார்.

இவ்வாறு முதல் 11 வரிகளுக்குள்ளாகவே தசமகா வித்யைகளை அடக்கி, தேவேந்திர சங்க வகுப்பை ஒரு மிகப்பெரிய மந்திர வகுப்பாகவுமாக்கி, மகா சோடஷி மந்திரத் தைக் கொடுத்து ஸ்ரீ வித்தையின் சமயச்சார கொள்கைகளை அருணகிரிநாதர் நிறுவுகிறார்.

"கரைபொழி திருமுக கருணையில்

உலகெழு கடல்நிலை பெற வளர்

காவு ஏந்திய பைங்கிளி

மா சாம்பவி தந்தவள்.'

இவ்வாறாக இருக்கும் மாபெரும் தேவி யாகியவள், தம்முடைய திருமுகத்தில் எழுகின்ற கருணைகொண்டு ஏழு உலகங்கள், ஏழு கடல்கள் ஆகியவற்றைக் காக்கும் தொழிலைக் கொண்டிருக்கும் பசுமையான நிறம்கொண்ட கிளி, அவளே மா சாம்பவி. அவ்வாறான தேவி பெற்ற பிள்ளையான முருகன்-.

"அரணெடு வடவரை யடியொடு பொடிபட

அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய

செந்தமிழ் நூலோன்கும ரன்குகன்.' (13)

"அறுமுக னொருபதொ டிருபுய னபினவ

னழகிய குறமகள் தார்வேந்தபு யன்பகை

யாமாந்தர்கள் அந்தகன்.' (14)

நீண்ட அரண்போன்று வடக்கு திசையில் அமைந்துள்ள மலைகள் பொடிபடவும், அலை கடல் குலையவும் கூர்மையான வேல்வீசிய முருகன், செந்தமிழ் நூல்களுக்குடைய தமிழ்க் கடவுள்; என்றும் இளமையானவன்; இதயக் குகையில் இருப்பவன். அவன் ஆறுமுகங் களோடு, பன்னிரண்டு கரங்களும்கொண்டு, என்றும் புதியவனாய், அழகே உருவான குறமகளாம் வள்ளி சூடிய மாலையை அணிந்த தோள்களை உடையவன். பகை பாராட்டும் மாந்தர்களை அழிப்பவன்.

vva

"அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர

தமுமக லாமாந்தர்கள் சிந்தையில்

வாழ்வாம்படி செந்திலில்.' (15)

"அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை

அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர்

தேவேந்திர சங்கமே.' (16)

வலிமைமிகுந்த மதநீர் பாயும் மத்தகத் தைக்கொண்ட, வேடிக்கையான உருவம் கொண்ட, யானைமுகம்கொண்ட கணபதி, அவரை அனவரதமும்- எப்பொழுதும் மனதில், சிந்தையில் இருத்துபவர் உள்ளத்தில் தானும் சென்று அமரும் முருகன்.

திருச்செந்தூர் அதிபதியாக இருப்பவனும், பெரும்போர் புரிவதில் வல்லவனுமான முருகனைத் துதிக்கும் பெரியோர்களைத் தேடித்தேடி தேவேந்திரனும், ஏனைய தேவர்களும் வந்து வணங்குவார்கள்.

இந்தப் பாடலில் சக்தியைப் பாடி, விநாயகரைச் சொல்லி, அதன்பின் முருகனைப் பாடுவது, அம்பிகை வழிபாட்டில் ஒரு பூஜை முறையாக இன்றும் கடைப்பிடிக்கப் படுகிறது. ஸ்ரீ வித்யா உபாசனையில் சில சம்பிரதாயங்களில் அம்பிகை பூஜை முடிந்து, உச்சிஷ்ட கணபதி எனப்படும் விநாயகரின் மாறுபட்ட தோற்றம்கொண்ட தேவதையின் பூஜைசெய்து, அதன்பின்னர் முருகனை உருவ வழிபாடும், உருவமில்லாமல் நிர்குண பூஜை செய்யும் முறையே இந்த தேவேந்திர சங்க வகுப்பில் அருணகிரிநாதர் முக்கியமாக எடுத்துக்கொண்ட அம்சம்,

இந்த தேவேந்திர சங்க வகுப்பு அம்பிகை யின் மொத்த பூஜையையும் மந்திரங்களையும் விளக்கும் ஒரு பொக்கிஷமாக இருப்பதால் தான் வள்ளிமலை ஸ்வாமிகள் இதனை மந்திர வகுப்பென்று போற்றியிருக்கிறார்.

மந்திர உபதேசமான பிற்பாடே பூஜை கொடுக்கும் வழக்கம் ஸ்ரீ வித்யா மார்க்கத்தில் உண்டு. ஸ்ரீ வித்யா பூஜை முறைகளை எவ்வாறு அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில், முதல் பாடலாம் "முத்தைத் தரு' முதல் பல்வேறு பாடல்களில் கையாண்டுள்ளார் என்று நாம் இப்போது முதல் காண ஆரம்பிக்கலாம். பூஜையிலுள்ள ஒவ்வொரு செயலுக்கும் உள்ளார்ந்த தத்துவம் என்ன- அதை எதற்காக செய்யவேண்டும்- அந்த தத்துவங்களை அருளாளர் எவ்வாறு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார் என்று வரும் பகுதிகளில் நாம் பார்க்கலாம்.

முருகனே அடியெடுத்துக் கொடுத்த பாடலான "முத்தைத் தரு' பாடலி-ருந்து நாமும் நம் பயணத்தைத் தொடங்கலாம்.

ஸ்ரீ வித்யா பூஜையில், சாதகன் மேற்கு வாயிலில் கிழக்கு நோக்கி உள் நுழையவேண்டும். மேற்கு வாயில் தர்மத்தையும், கிழக்கு திசை மோட்சத்தையும் குறிக்கும். தர்மத்தின்படி நடந்தால் மோட்சம் கிடைக்குமென்ற தத்துவத்தை விளக்கவே இந்த முறை வைக்கபட்டிருக்கிறது. அத்துடன் மட்டுமல்லாமல் பூஜையறைக்குச் செல்வதற்கு முன்னர் மூன்று தெய்வங்களை வணங்கவேண்டும் அவர்கள் முறையே பத்ரகாளி, பைரவர் மற்றும் லம்போதரன் எனும் கணபதி. இந்த மூவரையும் அருண கிரிநாதர் முதல் பாடலிலேயே வணங்கிதான் மற்றைய பாடல்கள் உதயமாகிறது.

பத்ரகாளியானவள் மனதின் பயமற்ற நிலையைக் குறிக்கிறாள், பயமற்ற நிலையில் மட்டுமே உண்மைப் பொருளை அறிந்துகொள்ளமுடியும். மனதின் பயத்தைப் போக்கியருளி, சாதகனை பிரம்மத்தின் அருகில் கொண்டுசெல்பவள் பத்ரகாளி. அதனால்தான் பூஜையின் முதலில் அம்பிகை பத்ரகாளி ஸ்வரூபத்தில் வணங்கப் படுகிறாள்.

இந்தப் பாடலில்- 'தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுகாட' என்ற பகுதியில்- "நிர்த்தப் பதம் வைத்துப் பைரவி' என்ற இடத்தில் காளி ஆடும் நடனத்தைப் போற்றி, அவள் பயமற்று கழுகுகளோடு சேர்ந்து பேய்களுமாடும் இடத்தில் தாம் ஆடிக்கொண்டிருப்பதைச் சொல்கிறார்.

இந்த பயமற்ற நிலையே ஆத்ம விசாரம் செய்ய உறுதுணையாய் இருக்கும்.

அதற்காகவே தாம் முருகனைப் பாடி, முருகனே குகனாகிய பரமாத்மாவாக தம்முள் இருப்பதை விசாரம் செய்து, அவனையடைய எடுக்கும் முயற்சியில் வரும் இன்னல்களைக் கண்டு பயம்கொள்ளாமல், எடுக்கும் முயற்சி வெற்றியடைய காளிதேவியை முதல் பாடலில் வணங்குகிறார்.

பழநி மலையில் முருகன், தம்மை விசாரம் செய்யும் சாதகனுக்காக அவனே மேற்குநோக்கி நின்று சாதகன் வரும் திசைநோக்கி எதிர்பார்த்துக் காத்திருக் கிறான். மேலும் பழநிமலை அடிவாரத்தில் மயில்வாகனத்தை தாண்டி படியேறும்முன்பு நாம் பைரவர், பத்ரகாளி, கணபதி ஆகிய மூவரையும் தரிசித்த பின்னர்தான் முருகனை நோக்கி முதல்படியே எடுத்து வைக்கமுடியும். பழநிமலைகூட தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு அர்த்த மேரு யந்திரம்போலவே தெரியும். இவ்வாறாக ஸ்ரீ வித்யா முறையின் ஆரம்ப தத்துவத்தை முதல் பாடலிலேயே வைத்திருப்பதை நாம் தெளிவாகவே காணமுடிகிறது.

(தொடரும்)