இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றானதும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை அடுத்து ஆண்டுதோறும் அதிக பக்தர்கள் வந்து தரிசிக்கும் பெருமைமிக்கதும், முப்பெரும் தேவியரும் (துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி) அரூபமாகக் காட்சியளிக்கும். சிறப்பு மிக்கதுவுமாக விளங்குவது ஜம்மு காஷ்மீரிலுள்ள கத்ரா வைஷ்ணவிதேவி குகைக்கோவில்.
மூலவர்: வைஷ்ணவிதேவி (முப்பெரும் தேவியர்).
தீர்த்தம்: கங்கா நதி.
ஊர்: கட்ரா.
மாநிலம்: ஜம்மு காஷ்மீர்.
தல வரலாறு
தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால், சிவனின் சொல்லையும் மீறி பராசக்தி யாகத்திற்குச் சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால், அன்னை கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள்.
அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலைக் கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது திருமால் சிவனின் கோபத்தைத் தணிக்க, சக்தியின் உடல்மீது தனது சக்கராயுதத்தை எறிந்தார். அது உடலைத் துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு உடல்பாகமும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றுதான் ஜம்மு வைஷ்ணவிதேவி கோவிலாகும்.
ஜஸ்துமல் என்னும் தேவி உபசாகருக்கு வைஷ்ணவிதேவியே மகளாகப் பிறந்தாள். அழகும் அறிவும்கொண்டு சிறப்பாக வளர்ந்த வைஷ்ணவிதேவி மங்கைப்பருவம் எய்தினாள். அவளது அழகில் மயங்கிய பைரவன் என்னும் அசுரன் அவளைத் துரத்தினான். அசுரனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தேவி குகையில் போய் ஒளிந்துகொண்டாள். அங்கே அவளுடைய சுய சொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, அசுரனை குகைக்கு வெளியே வதம்செய்தாள். அவனது உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி அருகிலுள்ள மலையிலும் போய் விழுந்தது.
அசுரன் இறக்கும் தறுவாயில் தவறுக்கு வருந்தி தேவியிடம் மன்னிப்பு கேட்டான். அவன் வேண்டுதலுக்கு மனமிரங்கிய தேவி, "குகைக்கோவிலை நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு நீ முக்தியடைவாய்' என்று வரமளித்தாள். இன்றும் பக்தர்கள் குகைக்கோவிலை அடைந்து உள்ளே செல்கிறார்கள். திரும்பி வரும்போது பைரவகாடிக்குச் சென்று அசுரனை வழிபட்டுத் திரும்பு கிறார்கள். அன்று வைஷ்ணவிதேவி அசுரனுக்கு அஞ்சி ஒளிந்திருந்த குகையே இன்று வைஷ்ணவிதேவி கோவிலாக விளங்குகிறது.
புராண வரலாறு
திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது, முப்பெரும் தேவியரும் ரேமா (லட்சுமி), உமா (காளி) வாணி (சரஸ்வதி) ஆகிய வடிவம்கொண்டு வைஷ்ணவி தேவியை உருவாக்கினர். ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூடமலை உச்சியிலுள்ள குகையில் தோன்றினாள்.
அவள் மனித அவதாரம் எடுக்க முடிவுசெய்தாள்.
அதன்படி இந்தியாவின் தெற்கு பாகத்தில், நீண்டநாட்களாக குழந்தைப் பேறு கிடைக்காமல் வாழ்ந்துவந்த ரத்னாகர்சாகர்- சம்ரிதிதேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணவிதேவி பிறந்தாள்.
குழந்தைப் பருவத்தில் அன்னை திரிகுடா என அழைக்கப்பெற்றாள். விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர், குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதியதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு ஒன்பது வயது நிரம்பியதும், அவள் கடற்கரை அருகே கடுந்தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டாள். திரிகுடா, இராமன் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டாள். இராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது பார்வை ஆழ்ந்த தியானத்திலிருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின்மேல் விழுந்தது.
திரிகுடா இராமனிடம் தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு கூறினாள். இராமன் அவளிடம், இந்த அவதாரத்தில் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே கணவனாக இருக்க உறுதிபூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவளை மணந்துகொள்வதாக வாக்களித்தார். அதேசமயத்தில் இராமன் திரிகுடாவிடம், வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள திரிகுடா மலைத் தொடரிலுள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை நவராத்திரியின்பொழுது, இராமன் இராவணனுக்கு எதிரான போரில் வெற்றிகாண்பதற்காக நோன்பு மேற்கொண்டாள். இந்தத் தொடர்பை நினைவு கூர்வதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.
இராவண வதம் நடந்தபிறகு அயோத்தியின் அரசராகப் பதவியேற்றுக்கொண்ட இராமன், ஒரு முதியவர் ரூபம்கொண்டு திரிகுடாதேவிமுன் தோன்றி தன்னை மணந்துகொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தாள். பின்னர் உண்மை உருவில் வெளிப்பட்ட இறைவன், இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும், கலியுகத்தில் தான் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவளைத் திருமணம் செய்துகொள்வதாகவும் வரமளித்தார்.
பக்தர்களுக்கான சேவைகள்
பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவை மலையில் நடந்து பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக, ஒவ்வொரு ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு இலவச கழிப்பிடங்களும், ஓய்வெடுக்க மண்டபங்களும், தாகம், பசிநீக்கிக்கொள்ள கடைகளும் உள்ளன. மலைக்கோவில் பாதையில் இரவுநேரப் பயணத்தின்போது உறங்குவதற்கும் மூன்று இடங்களில் வசதி செய்துள்ளனர். உயரமான மலை என்பதால் பிராணவாயு குறைவாக இருக்கும். எனவே நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கோவில் நிர்வாகம் ஆங்காங்கே மருத்துவ வசதிகளுடன்கூடிய முதலுதவி மையங்கள் அமைத்துள்ளனர். மலைக்கோவிலுக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது.
நடைப்பயணத்தில் முதலில் பவித்ர கங்கா நதியைக் கடக்கவேண்டும். தன்னை நாடிவரும் பக்தர்களைப் புனிதப்படுத்துவதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக செவிவழிக் கதையுண்டு.
வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா, தன் பக்தர்களைப் பின்தொடர்ந்து அரக்கன் வருகிறானா என்று கண்காணித்து, காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது. அடுத்து வருவது அர்த்குமாரி. இங்கு, ஒரு குகை இருக்கிறது.
அங்குள்ள தேவகன்னிகை விக்ரகத்தை தரிசித்து, பின்னர் பயணத்தைத் தொடரவேண்டும்.
அங்கிருந்து நடந்தால், வைஷ்ணவி தேவியின் கோவிலுக்கு முக்கால் கிலோமீட்டருக்கு முன் கடைவீதி உள்ளது. இங்குதான் மாதாவை ஆராதிக்க மலர்களையும், நிவேதனங்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும். தேவியை தரிசிக்கும்போது, அங்குள்ள பூசாரி பக்தர்களுக்கு நாணயங்களைப் பிரசாதமாக வழங்குவார். அதை பத்திரமாக நம் வீட்டிலுள்ள பூஜையறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற மனதிடம் ஏற்படும்.
வரிசையில் நகர்ந்துசெல்லும்போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம்கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்தபடி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்தவெளி வரும்.
குகைக்கோவிலை நாம் அடைந்தவுடன் பிண்டி எனப்படும் கருவறை உள்ளது. அங்கு மூன்று சுயம்பு மூர்த்தங்கள் உள்ளன. அவற்றை தேவியின் மூன்று உருவங்களாக மிக கவனத்துடன் தரிசிக்கவேண்டும்.
2003-ல் ஜம்மு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால், இந்திய இராணுவம் முழு பாதுகாப்புடன் நம்மை கத்ரா நகருக்கு அனுப்பிவைக்கிறது. கத்ரா பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் பக்தர்கள் அனைவரும் வைஷ்ணவிதேவியை தரிசிக்க முதலில் தங்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்தப் பதிவுச்சீட்டு இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி உண்டு. கத்ரா பேருந்து நிலையத்தில் நாம் பதிவுசெய்தவுடன் ஒரு கிலோமீட்டர் தொலைவில் திரிகுடா என்ற மலைமுகப்பிலுள்ள இராணுவ சோதனை மையத்தில், நாம் கொண்டுசெல்லும் உடைமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கோவில் பாதையில் புகையிலையிலான பொருட்கள், தீப்பெட்டி, கத்தி, எளிதில் எரியும் வேதியியல் பொருட்கள் கொண்டுசெல்வதை கோவில் நிர்வாகம் தடைசெய்துள்ளது. மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் இரும்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு உணர்வுடன் கோவிலுக்குப் பயணிக்கலாம்.
மட்டக் குதிரையில் அமர்ந்து பயணித்தல் மற்றும் டோலி (நான்கு பேர் அமரும் இருக்கையுடன் தூக்கிச் செல்லுதல்) போன்றவை மூலமாகவும் செல்லலாம். வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் (வயது, பால் பாகுபாடின்றி) மனவுறுதியுடனும் பக்தியுடனும் நடந்தே வருகின்றனர்.
அனைத்து பரிசோதனைகளுக்குப்பின், மலைமீது நடக்க, முதலில் நீராடவேண்டிய நதி பாணகங்கா. இந்த புனித நதியில் நீராடியபின் மலை ஏறத் துவங்கலாம். மும்பை தொழிலதிபர் காலஞ்சென்ற குல்சன்குமார் பெயரில் மிகப்பெரிய அளவில் பாணகங்காவில் அன்னதானம் 24 மணி நேரமும் நடைபெறுகிறது.
இத்தலத்தின் நுழைவு வாயிலிலேயே நமது செல்போன், பேனா, மணிபர்ஸ், பெல்ட் போன்றவற்றை இலவச லாக்கரில் வைத்துவிட்டுத்தான் பவன் என்னும் வைஷ்ணவதேவி குகைக்கோவிலுக்குச் செல்லமுடியும். இந்திய இராணுவத்தின் (சி.ஆர். பி. எஃப்) கட்டுப்பாட்டில் ஆலயம் உள்ளது. எனவே நுழைவு வாயிலில் பக்தர்கள் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றனர்.
வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. அந்நாட்களில் திரிகுடா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
இங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துகின்றனர்.
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் 24 மணி நேரமும் வைஷ்ணவி மாதாவை தரிசிக்கலாம். இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லாமல் அரூபமாக அருள்பாலிக்கிறாள். மூலஸ்தானத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் அருள்பாலிக்கிறார்கள்.
காலபைரவர் கோவில் (பைரவநாத்) வைஷ்ணவிதேவி கோவிலுக்கு மேல் உள்ளது.
வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்கவேண்டிய சிறப்புமிக்க தலம். மனதில் நினைத்தால் வைஷ்ணவி தேவியே உங்களுக்கு வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவாள்.
வைஷ்ணவிதேவியைத் தரிசிப்பதற்கும், தங்குவதற் கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாகப் பதிவுசெய்து கொள்ளலாம்.
அமைவிடம்: வைஷ்ணவிதேவி மலைக் கோவில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கத்ரா எனும் நகரத்திற்கு அருகில், 13 கிலோமீட்டர் தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது.