றவை நேசிக்க தெரியாதவனுக்கு ஊரை நேசிக்க தெரியாது. குடும்பத்தை நேசிக்க தெரியாதவனுக்கு, குடிமக்களை நேசிக்க தெரியாது. பாசத்தின் அடிப்படை தெரியாத வனுக்கு பக்தி செய்யத்தெரியாது. அனுசரிக்க தெரியாதவனுக்கு அன்பு செய்யத் தெரியாது.

பாசமும் அன்பும் இல்லாதவனுக்கு கருணை காட்டத்தெரியாது. பக்திசெய்வதற்கும், சிவப் பரம்பொருளால் உருவாக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளுக்கும், இயற்கைக்கும் இயல்பாகவே ஒரு அடிப்படை தொடர்பு இருக்கிறது. அதுவே மிக உயரிய கருணை யாகும். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஆறறிவுக்கு குறைவான உயிரினங்கள் பிற உயிர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றது. ஆறறிவு என்று சொல்லும் மனித இனமோ பிற உயிரை துச்சமென கருதி போர் எனும் பெயரில் படு பாதகமான உயிர் கொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. எப்படி வாழவேண்டும்? என்ற சுய அறிவு மழுங்கி ஏதோ வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு துயரச்செய்தி நமது காதில் விழுகிறது. தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பலநூறு பனை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகி காய்ந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி நமது மனதை மிகவும் பாதித்தது. பாதிப்படையச் செய்தது. ஏனென்றால், பனையின், அதாவது பனைமரத்தின் தன்மையை உணராத மனித ஜென்மங் கள், மிகப்பெரிய எவரா லும் கொள்ளையடிக்க முடியாத மிக உயர்ந்த செல்வமான அறிவை இழந்து கொண்டிருக் கிறது. பனைமரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? வேறு என்ன தெரிந்துகொண்டோம்? மருத்துவ மேதை, வாழ்வியல் சித்தர் திருவள்ளு வர் தாம் இயற்றி அருளிய திருக்குறளில் இரண்டு மிக முக்கியமான மரங்களைப் பற்றி குறிப் பிட்டிருக்கின்றார். ஒன்று பனைமரம். மற்றொன்று மூங்கில் மரம். முதலில் பனை மரத்தைப்பற்றி பார்ப்போம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாகக் கொள்வர் பயன்தெரிவார்.

ஒருவன் தினை அளவாகிய சிறு உதவியையே செய்தான். ஆயினும், அதன் பயனை அறிந்தவர், அதனைப் பனை அளவான பேருதவியாகக் கருதுவார்.

Advertisment

ss

அதையும் தாண்டி பனையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். பனை மரம் மழைக்காலத்தில் நீரை சேமித்துக் கொள்ளும். சேமித்த நீரில் முதலில் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். பிறகு அருகில் உள்ள செடிகொடிகளையும் செழிப் பாக வைத்துக்கொள்ளும். இதையெல்லாம் தாண்டி தனக்கு கீழே பூமிக்கு அடியில் உள்ள பல்வேறு நுண்ணுயிரிகளுக்கும் உதவிசெய்யும். இதையெல்லாம்விட பேரிடர் எனும் சுனாமி காலத்தில் மிகப்பெரிய ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கும். பனைமரம் சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடு கின்றார்கள். மேலும் பனை மரமானது பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. பதநீர், பனை வெல்லம், பனம் (பணம்) கற்கண்டு, பனங் கிழங்கு என்று உணவாகவும் மருந்தாகவும் பயன் படுகிறது. வெயில் காலத்தில் விசிறியாகவும் பயன்படுகிறது. உணவு உண்ணும் தட்டாகவும் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குடி யிருக்கும் வீட்டிற்கு மேற்கூறையாகவும் பயன் படுகிறது. பனையானது பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் செய்யும் பொரு ளாகவும் இருக்கிறது. பனை மக்களின் வாழ்வாதாரம் ஆகவும் விளங்குகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பனைமரம் ஒரு சுயநலமற்ற பொதுநலவாதி யாக இருக்கிறது. இதன் பயனை அனுபவிக் கும் மனிதனே சுயநலவாதியாக இருக்கிறான்.

சுயநலம் உள்ளவரிடம் பண்பும் இருக்காது.

பாசமும் அன்பும் இருக்காது. பக்தியும் இருக்காது. இப்படி பனைமரத்தின் பண்புகளையும் பயன்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்தது மூங்கில் பற்றி திருக்குறள் கூறுவதை பார்க்கலாம்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளினை உடையவளுக்கு, உடம்பு மான் தளிர் நிறமாக இருக்கும். பற்கள் வெண் முத்து போன்று இருக்கும். இயல்பாக இவளுக்குள்ள மணம் நறுமணமாக இருக்கும். மை தீட்டிய கண்கள் வேல் போன்று கூர்மையாய் இருக்கும். இந்த திருக்குறளின் பொருளினை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு அது பெண்ணை வர்ணிப்பதை போன்று தோன்றும். நமது பார்வையில், பெண் என்பவள் ஒவ்வொரு குடும்பத்தின் அச்சாணி என்று நான் கருதுகிறேன். மூங்கில் மரமானது மிக மிகப்பெரிய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பன்மடங்கு கரியமல வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உள்ளிழுத்துக்கொண்டு (சுவாசித்து), சுற்றுச்சூழலை பாதுகாத்து, அதைவிட பன்மடங்கு ஆக்சிஜனை மனித இனத்துக்கு இலவசமாக வழங்கும் ஒரு உயரிய செயலை செய்து கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல், மூங்கில் அரிசி மிக உயரிய மருத்துவ குணங்களை உள்ளடக்கி யது. மூங்கில் அரிசியை நாம் மருந்தாக பயன் படுத்தும்போது அது மனித உடலின் உன் உறுப்புகளை, குறிப்பாக ராஜ உறுப்புகளை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும் ஒரு அரு மருந்தாகும். மூங்கில் மரங்களை நாம் வளமாக பார்த்துக்கொண்டால், அந்த மரமானது மனித குலத்தை நலமாக வாழ்விக்கும் மாமருந்தாகப் பயன்படும். மூங்கிலைப் போன்றே பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் சுவாசம் (ஆக்ஸிஜன்) என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படியானால் பெண்களை நாம் எப்படிப் போற்றவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே முக்கியமானது. சரி இவ்வாறு மரங் களைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம்.

ஏன் வந்தது. இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நீராதாரங்கள் வறண்டுபோகும். உலக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் அரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். மழைக் காலத்தில் உபரியாக வீணாக கடலில் கலக்கும் நீரை, அந்தந்த ஆறுகளுக்கு அருகில் உள்ள வீணாக கிடக்கும் தரிசு நிலங்களில் உள்ள ஏரிகளை, குளங்களை சீரமைத்து, இல்லை எனில் புதிதாக ஏரியோ, குளங்களோ அமைத்து வீணாகும் தண்ணீரை சேமிக்க ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். இங்கே ஒவ்வொரு பொருளையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பணம் இருந்தால் உணவை வாங்க முடியுமா? உணவு உற்பத்தியில் கவனம் வேண்டாமா? இன்று அமெரிக்காவில் புழுங்கல் அரிசிக் கும், பாசுமதி அரிசிக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணத்தைத் திண்ண முடியுமா? இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் அனைத்து விதமான உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்ய முடியும். யாருக்காவது அக்கறை இருக்கிறதா? என் புள்ள அமெரிக்காவில் இருக்கிறான்!

ஆப்பிரிக்காவில் இருக்கிறான்! என்ற பெருமை தான் இருக்கிறது.

இப்படியே போனால் பிச்சை எடுத்தால் கூட பசிக்கு உணவு கிடைக்காது! சிந்திக்க வேண்டாமா? அதற்கு நேரம் இருக்கிறதா?

இந்த சூழலில் பக்தி, மதம், மாச்சரியம் என்ற பெயரில் போலியான பக்தி வேசமே இங்கு விஷமாக இருக்கிறது? பனை மரமும், மூங்கில் மரமும் ஆறறிவுக்கு குறைவான உயிர்கள். இவை ஒவ்வொன்றும் பிரதி பலனை எதிர்பாராமல் மனித சமூகத்திற்கு மாசற்ற உதவியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஆறறிவு இதனைப் பற்றி கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? பல லட்சம் மைல்கள் தாண்டிச் சென்று சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறோம். வீடுகட்ட முடியும் என்று கண்டுபிடிக்கிறோம்.

அந்த அளவுக்கு நமது விஞ்ஞானம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதே வேளை யில் பஞ்சபூத சக்தியில் ஒன்றான (மழை நீர்) மழை வரும்போது வீண் ஆகக்கூடிய விலைமதிப்பில்லாத மழைநீரை சேமிக்க எதையும் கண்டுபிடிக்கமுடியாதது ஏன்? யோசிக்க வேண்டாமா? கண்டுபிடிக்கத் தெரியவில்லையா? இல்லை, கண்டுபிடிக்க மனம் இல்லையா? விஞ்ஞான வளர்ச்சியும், அறிவியல் உபகரணங்களும் இல்லாத காலத்தில் பருவ மழையைத் துல்லியமாக கணித்தவனே விவசாயி. பருவ மழையைக் கணிக்கத் தெரியாதவன் விவசாயியாக இருக்க முடியாது. பக்திக்கும், மழைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மழையைப் பற்றி திருமந்திர சிற்பி திருமூலர் அருளிச்செய்ததை பார்க்கலாம்.

வான்நின்று அழைக்கும் மலைபோல் இறைவனும் தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார் ஆன்நின்று அழைக்கும் அதுபோல் என்நந்தியை நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.

தரிசாகக் கிடக்கும் வறண்ட நிலத்துக்கு வான்மழை அவசியம். அதை வாவென்று அழைத்தால் வராது. மழை பொழிய வேண்டுமென்றால் மேகம் கறுக்க வேண்டும். இறையருளும் அதைப் போன்றதுதான். இறைவன் தானே வலிய வந்து அருள்புரிவான் என்று நம்பி இருப்பர். அவன் அருளைப் பெறுவதற்கு முயற்சி செய்வதில் தயக்கம் காட்டுவர். பிரபஞ்ச பேராற்றல் தானே வலிய வந்தும் அருள் செய்வான். எப்போது? யார் யாருக்கெல்லாம்? பசிக்கும் சமயத்தில் பால் வேண்டிக் கன்றுக்குட்டி தாய்ப் பசுவை அம்மா... என்று அழைக்குமே, அதைப் போன்று பக்குவப்பட்ட ஆன்மாக்கள் சிவப்பரம் பொருளின் அருளைப் பெறவேண்டும் என்று அவனை நாடினால், அவனும் அப்படிப்பட்டவர்களுக்கு வலிய வந்து உதவுவான். எனவே நானும் என் இறைவனின் இந்தப் பரிபக்குவ ஞானம் பெறவே, "வா வந்தருள் செய்'' என்று உள்ளம் வருந்தி அழைக்கின்றேன்.

பக்தி செய்ய முதலில் மனம் விரும்ப வேண்டும். விரும்பிய மனதில் அந்த எண்ணம், அதாவது இறை சிந்தனை, இறை நினைப்பு இடையறாது நிலைபெற்று அதிலேயே இருக்கவேண்டும். இந்த எண்ணத்தில் மன உறுதி அதிகரிக்கும் போது அந்த இறை பேராற்றல் வலிய வந்து உதவி செய்யும். இதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. முதலில் குடும்பத்தை நேசிக்க வேண்டும். அப்போதுதான் உறவை நேசிக்கமுடியும். உறவை நேசிப்பவன் பிற உயிர்களை நேசிக்கமுடியும். இப்படி உயிர்களை நேசிக்கத் தெரிந்தவனுக்கு பக்தி செய்ய முடியும். இவ்வாறு பக்தி செய்பவனே இறைவனை நேசிப்பான். இறைவனை நேசிக்க உணவு முக்கியம். உணவு ஒழுங்காக இருந்தால்தான், உணர்வு ஒழுக்கமாக வேலை செய்யும். உணர்வு ஒழுக்கமாக இருக்கும்பொழுது தாய் மொழியும் உயர்ந்து இருக்கும். தாய்மொழி உயரும் பொழுது அது சார்ந்த இனமும் செழித்து வளரும். உணவு ஒழுக்கமானது இந்திரிய ஒழுக்கத்தில் உயர்த்தி இறை பக்தியில் ஆழ்த்தும். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உள்ளன்போடு உயர் பக்தி செய்வோம். பிரபஞ்ச பேராற்றலின் அருளோடு அளவற்ற சக்தி பெறுவோம்.